வியாழன், 24 ஏப்ரல், 2014

விநாயகர் அகவல் (ஔவையார் அருளியது)

ஒரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.


ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.


புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார். இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. 72 வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.


அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?


'வி' நாயகன்' என்னும் பதம் 'தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத' பரம்பொருளின் தன்மையைக் குறிக்கும். அனைத்து வழிபாடுகளும் - யாகங்களும் - பூஜைகளும் இப்பெருமானின் ஆசியோடு அன்றோ தொடங்கப் பெறுகிறது! அனைத்து தொடக்கங்களின் தொடக்கமும் இப்பெருமான் அன்றோ!!


ஒரு ஆன்மா முக்தி நிலையை அடைய, ஆறு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் என்னும் ஏழாம் சக்கரத்தை அடைதல் வேண்டும். முதல் சக்கரமான மூலாதாரத்தின் உபாசன தெய்வம் 'ஸ்ரீவிநாயக மூர்த்தி'. 'சைவமோ - வைணவமோ' விநாயகக் கடவுளின் திருவடி தொழுதால், ஒரு நொடியில் நம்மை முக்தி நிலையான 'கைலாயம் - வைகுந்தம்' முதலிய பதங்களில் சேர்ப்பித்து அருளுவார்.


விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வோம். ஆனைமுக இறைவனின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.

கருத்துகள் இல்லை: