வியாழன், 24 ஏப்ரல், 2014

*51 சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (முக்கிய சிவ புராண நிகழ்வுகள்

*பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரரான சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

*எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். சில தொடர் நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

*ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.

*இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் பேசுகிறது. இத்தலத்தில் 'அம்பிகை தன் தெய்வ உடலை மாய்த்துக் கொண்ட ஹோம குண்டத்தை' இன்றும் தரிசிக்கலாம். இறைவனின் கருணையால் ஆட்டின் தலையுடன் மீண்டும் உயிர்த்து எழுந்தான் தட்சன்.

*சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.

*இறைவனின் இருப்பை உணரவும், தர்மங்களை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே. ஆன்மாக்கள், முதலில் இறைவனை மறுப்பதும், அறியாமையால் எதிர்ப்பதும், பின்னர் ஞானம் பெற்றுப் பணிவதும் காலகாலமாக நடந்து வரும் போராட்டம். ஆட்டின் தலை அஞ்ஞானத்தைக் குறிப்பது. ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது இந்நிகழ்வின் உட்குறிப்பு.

கருத்துகள் இல்லை: