சனி, 7 செப்டம்பர், 2019

மரண பயத்தை வெல்!
மரணத்தைவிட கொடியது மரண பயம். மரணம் ஒரு முறைதான் மனிதனைக் கொல்கிறது. ஆனால் மரண பயம் ஒவ்வொரு கணமும் அவனைக் கொன்று கொண்டிருக்கிறது. எனவே மரண பயத்தை விடுமாறு இந்தக் கடைசி அத்தியாயத்தில் எமதர்மன் அறிவுரை கூறுகிறான். ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்று அனைத்து உயர் அனுபவங்களுக்கும் இது முதற்படியாக அமைவது இங்கே விளக்கப்படுகிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பது நசிகேதனின் கேள்வி. அதற்கு மரணத்திற்குப் பின்னால் ஆன்மா இருக்கிறது. உண்மையில் நீ ஆன்மா, மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. உனக்கு மரணம் இல்லை என்று பல கோணங்களில் இதுவரை எமதர்மன் கூறியதைக் கண்டோம்.

நமக்கு மரணம் இல்லாததால் நாம் தைரியமாக மரணத்தை எதிர்கொள்ளலாம் அதற்கு ஒரு படியாக வாழும்போதே மரண பயத்தை விலக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி கற்றுக்கொள்வது?

அதற்கு மூன்று அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு கூறுகிறார் எமதர்மன்.

மூன்று உண்மைகள்(1-4)

வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்

1. ஊர்த்வமூலோ வாக்சாக ஏ÷ஷாச்வத்த ஸனாதன
ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருதமுச்யதே
தஸ்மின் லோகா ச்ரிதா ஸர்வே
தது நாத்யேதி கச்சன ஏதத்வை தத்

ஏஷ-இந்த; அச்வத்த-அரச மரம்; ஸனாதன-பழமையானது; ஊர்த்வ மூல-மேலே வேர் உள்ளது; அவாக் சாக-கீழே கிளைகள் உடையது; தத் ஏவ-அதுவே; சுக்ரம்-தூயது; தத்-அதுவே; ப்ரஹ்ம-இறைவன்; தத் ஏவ-அதுவே; அம்ருதம்-அழிவற்றது; உச்யதே-சொல்லப்படுகிறது; தஸ்மின்-அதில்; ஸர்வே-எல்லா; லோகா-உலகங்களும்; ச்ரிதா-சார்ந்திருக்கின்றன; தத் உ-அதனை; கச்சன-எதுவும்; ந அத்யேதி-கடந்திருக்கவில்லை.

பொருள் : இந்த அரச மரம் பழமையானது, மேலே வேரும் கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே.

தலைகீழாக நிற்கின்ற ஓர் அரச மரத்திற்கு வாழ்க்கை ஒப்பிடப்படுகிறது (இத்தகைய உவமை கீதையிலும்(15.1.3) வருகிறது. அங்கே இன்னும் விரிவாக ஆராயப்படுகிறது.) எப்போது ஒரு பொருள் தலைகீழாகத் தெரியும்? பிரதிபலிக்கும்போது. ஆற்றின் கரையில் நிற்கின்ற மரத்தின் பிரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்க்கும் போது மரம் தலைகீழாக நிற்பதுபோல் தோன்றும். அதன் வேர்ப் பகுதி மேலேயும், கிளைகள் கீழேயும் இருப்பதாகத் தெரியும். பிரதிபிம்பம் உண்மையல்ல.

இங்கே வாழ்க்கை ஒரு தலைகீழான மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதாவது வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம். எனவே இது உண்மையல்ல. அதாவது வாழ்க்கையில் காண்பது உண்மையல்ல, தலைகீழ்த் தோற்றம். இதன் பொருள் என்ன?

வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல, பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம், மரணத்தைக் கண்டு நடுங்குகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு வேண்டாம் என்கிறார்கள், மரணத்தைக் கண்டு சிரிக்கிறார்கள். மரணத்தை நேசிக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்; துறவு என்பது மரணத்தை நேசித்தல். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். துறவி மரணத்தை நேசிக்க வேண்டும். அது போலவே, உலகம், அதன் உறவுகள், அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை, நிலையானவை என்று நம்புகிறோம், ஆனால் உண்மை அதுவல்ல.

அப்படியானால் உண்மை என்ன?

ஆற்று நீரில் மரம் தலைகீழாக தெரிகிறது. அதன் உண்மையை உணர வேண்டுமானால் அந்தப் பிரதிபிம்பத்தை விட்டுவிட்டு, அந்தப் பிரதிபிம்பத்திற்கு ஆதாரமான மரத்தைப் பார்க்க வேண்டும். அதுவே உண்மை. அது போலவே வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் வாழ்க்கைக்கு ஆதாரமான இறைவனை நாட வேண்டும்.

வாழ்க்கை-மரத்தையே இறைவனாகக் கூறுவது மந்திரம். வேத, உபநிஷதக் கண்ணோட்டத்தின் அடிப்படையை இங்கே காண்கிறோம். ஒருமை உணர்வு என்பது வேத ரிஷிகளின் அனுபூதியாக இருந்தது. அவர்கள் எங்கும் ஒரே உணர்வுப் பொருளையே கண்டனர். வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மா, கடவுள் அனுபூதி என்று எது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதால் பயனில்லை. இந்த எல்லா நிலைகளும் வாழ்க்கையைச் சார்ந்துள்ளன என்பதையே எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன என்று மந்திரம் கூறுகிறது. அதுவே நீ தியானப் பகுதி இது.

இறைவனே தலைவர்

2. யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரம்ருதாஸ்தே பவந்தி

இதம்-இங்கே; யத் கிம் ச-எந்தெந்த; ஜகத்-உலகங்கள் உண்டோ; ஸர்வம்-அனைத்தும்; ப்ராணே-பிராணனில்; நி:ஸ்ருதம்-வெளிப்படுகிறது; ஏஜதி-இயங்குகிறது; மஹத் பயம்-பெரும் பயம்; உத்யதம்-உயர்த்திய; வஜ்ரம்-வஜ்ராயுதம்போல்; ய-யார்; ஏதத்-இதனை; விது-அறிகிறார்களோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன; பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பதுபோல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்கள் ஆகின்றனர்.

பிராணனால்தான் அனைத்தும் இயங்குகின்றன என்பது பற்றி 2.1.7 விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம். இறைவனின் சக்தியாகிய அந்தப் பிராணன் எவ்வாறு இயங்குகிறது? இறைவனிடம் உள்ள பயத்தால் என்கிறது இந்த மந்திரம்.

வஜ்ராயுதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று, இடி; மற்றொன்று, விருத்திராசுரனை அழிப்பதற்காக ததீசி முனிவரின் எலும்பிலிருந்து செய்யப்பட்ட ஆயுதம். இரண்டும் பேராற்றலின் சின்னங்கள். இறைவன் பேராற்றலின் வடிவமாக உள்ளார் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனை நாட வேண்டும் என்று கண்டோம்(1). அந்த இறைவன் பேராற்றலின் உறைவிடம், அனைத்திற்கும் தலைவர் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

பயம் ஓர் அடிப்படை உணர்ச்சி

3. பயாதஸ்யாக்னிஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய
பயாதிந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம

அஸ்ய-அவர்மீதுள்ள; பயாத்-பயத்தினால்; அக்னி-அக்கினி; தபதி-எரிக்கிறது; ஸூர்ய-சூரியன்; தபதி-சுடுகிறது; இந்த்ர: ச-இந்திரனும்; வாயு ச-வாயு தேவனும்; பஞ்சம-ஐந்தாவதான; ம்ருத்யு-மரண தேவனும்; பயாத்-பயத்தினால்; தாவதி-ஓடுகின்றனர்.

பொருள் : இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கிறது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால்தான் தன் தொழிலைச் செய்கின்றான்.

எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான். அவனுக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டவன் என்ற உணர்ச்சி இருக்கும்போது ஒருவன் கண்ணும்கருத்துமாக வேலை செய்கிறான். இயற்கைச் சக்திகள் அனைத்தும் அவ்வாறு செயல்படுவதாக இங்கே கூறப்படுகிறது. தாங்கள் தவறினால் தண்டிப்பதற்காக ஒருவர் உயர்த்திய ஆயுதத்துடன் நிற்கிறார் என்ற பயத்துடன் இயற்கை சக்திகள் வேலை செய்கின்றன.

பொதுவாக இறைவனை அன்பு, இனிமை, மென்மை, கருணை போன்ற அமைதியான குணங்களின் இருப்பிடமாகத்தான் கருதுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. பயங்கரம், கொடுமை போன்ற பண்புகள் உலகில் நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. அவையும் இறைவனிலிருந்தே வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இறைவனின் ஆதிக்கம் இல்லாத இடங்களும் இருப்பதாக ஆகிவிடும். எனவே பயங்கரம் போன்ற பண்புகளையும் சேர்த்து இறைவனைக் காணும்போதுதான் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவோம். படுபயங்கரத்தின் உறைவிடமாக ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூப தரிசனம் வாழ்க்கையின் இந்த மறுபக்கமே(ஸ்ரீமத் பகவத்கீதை(11.1.44). காளி, நரசிம்ம மூர்த்தி, ருத்திரன் போன்ற பயங்கர வடிவில் தெய்வத்தை வழிபடுவதன் உண்மை இதுவே.

இவ்வாறு மரணபயம் முதலான அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை முழுமையாக இறைவனை நோக்கித் திருப்புமாறு இந்த மந்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த உண்மைகள் உணர்வதன் விளைவு

4. இஹ சேதசகத் போத்தும் ப்ராக் சரீரஸ்ய விஸ்ரஸ
தத ஸர்கேஷு லோகேஷு சரீரத்வாய கல்பதே

இஹ-இங்கே; சரீரஸ்ய-உடம்பு; விஸ்ரஸ-விழுவதற்கு; ப்ராக்-முன்பு; போத்தும்-உணர்வதற்கு; அசகத் சேத்-முடியுமானால்; தத-இல்லாவிட்டால்; ஸர்கேஷு லோகேஷு-உயிரினங்கள் உள்ள உலகில்; சரீரத்வாய-உடலைப் பெற; கல்பதே-நேர்கிறது.

பொருள் : இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியாமானால் அகக் காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது.

அகக் காட்சியின் படிகள்

வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அகக் காட்சி தெளிவு பெறுகிறது. ஆன்ம அனுபூதியை நாடி ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்கள் முதலில் சந்திப்பது இருளையே, குழப்பத்தையே. குரு ஒருவரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடும் போது இந்த குழப்பங்கள் விலகுகின்றன. மனம் பக்குவம் பெறப்பெற அகவுலகக் காட்சி தெளிவாகிறது; புறவுலகை விட அகவுலகம் உண்மையானதாகத் தெரியத் தொடங்குகிறது. இவ்வாறு அகக் காட்சி தெளிவு பெறுவதை இந்த மந்திரம் நான்கு படிகளாகக் கூறுகிறது.

5. யதாதர்சே ததாத்மனி யதா
ஸ்வப்னே ததா பித்ருலோகே
யதாப்ஸு பரீவ தத்ருசே ததா கந்தர்வலோகே
சாயாதபயோரிவ ப்ரஹ்ம லோகே

ஆதர்சே-கண்ணாடியில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; ஆத்மனி-புத்தியில்; ஸ்வப்னே-கனவில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; பித்ருலோகே-பித்ருலோகத்தில்; அப்ஸு தண்ணீரில்; யதா-எவ்வாறோ; பரிஇவ-தெளிவற்று; த்தருசே-காணப்படுகிறதோ; ததா-அவ்வாறு; கந்தர்வ லோகே-கந்தர்வ லோகத்தில்; சாயா தபயோ; இவ-நிழலும் வெயிலும்போல்; ப்ரஹ்மலோகே-பிரம்ம லோகத்தில்.

பொருள் : புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்போல் தெளிவற்றும், பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக் காட்சி வாய்க்கிறது.

1. கந்தர்வ லோகம்: இதுபோன்ற உலகங்கள் போகங்களுக்கு உரியவை. பூமியில் ஏராளம் நற்பணிகள் செய்தவர்கள் தங்கள் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காகச் செல்கின்ற உலகங்கள் இவை.

சுகபோக நாட்டங்களிலிருந்து விடுபடாத நிலைக்கு இந்த உலகங்கள் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளன. மனம் சுகபோகங்களை நாடுகின்ற நிலையில் ஆன்மா பற்றி உண்மைகள் தெளிவற்றதாக உள்ளன. நீரில் தெரிகின்ற பிம்பம் ஒரு சிறிய அலை எழுந்தாலும் எவ்வாறு தெளிவற்றுப் போய்விடுகிறதோ, அவ்வாறே இந்த நிலையில் இருப்பவனின் விவேகம், லட்சிய நாட்டம் போன்றவை சிறிய எதிர்மறை எண்ணங்களாலும் கலங்கிவிடுகின்றன.

2. பித்ரு லோகம்: இறந்தவர்கள் வாழும் உலகம் இது. உடம்பு வீழ்ந்த பிறகு உள்ள நிலை இது. சாதனைகளின்மூலம் உடம்பிலிருந்து தன்னைப் பிரித்தறியத் தெரிந்த ஒருவனின் நிலைக்கு உதாரணமாக இது கூறப்படுகிறது. இங்கே ஆன்மா பற்றிய உண்மைகள் கனவுக் காட்சிகள் போல் உள்ளன. கனவுக் காட்சிகள் அந்த நேரத்திற்கு முற்றிலும் உண்மைப்போல் விழித்தபிறகு உண்மையற்றவை என்றும் தெரிபவை. அதுபோல், உடம்பு வேறு, தான் வேறு என்பதை அனுபவரீதியாக உணராதவன் சில நேரங்களில் அக உலகத்திற்கும் சில நேரங்களில் புற உலகத்திற்குமாக ஊசலாடுகிறான். இரண்டும் அந்தந்த நேரங்களுக்கு உண்மைபோலவே தெரிகின்றன.

3. புத்தி: புத்தி பற்றியும் அதன் விழிப்புபற்றியும் ஏற்கனவே(1.3.3.9) விரிவாகக் கண்டோம். புத்தி விழிப்புற்ற நிலையில் அவனுக்கு அக உண்மைகள் அழுக்கற்ற கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம்போல் தெளிவாக உள்ளன. இருந்தாலும் கவனமில்லாமல் இருந்தால் கண்ணாடி அழுக்குற வாயப்பு உள்ளது. எனவே புத்தி விழிப்புற்ற நிலையில் இருப்பவனும் கவனமாக இருக்க வேண்டும்.

4. பிரம்ம லோகம்: பிரம்ம லோகம், கைலாசம், வைகுண்டம் போன்றவை தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதப்படுபவை. சாதனைகள்மூலம் இறைநிலை பெற்றவர்களுக்கு உவமையாக இங்கே கூறப்பட்டுள்ளது. நிழலும் வெயிலும் என்ற உவமை நேரடியாக பொருந்துவதல்ல. இறைநிலை அல்லது ஆன்ம நிலை என்பது எந்த உவமையாலும் விளக்கப்பட முடியாதது. எனவே கோடி காட்டுவதுபோல் ஓர் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது.  நிழலும் வெயிலும் எதிரிடையானவை. நிழல் இருப்பதால் வெயிலும், வெயில் இருப்பதால் நிழலும் தெளிவு பெறுகின்றன. அவ்வாறு துல்லியமாக தெளிவாக ஆன்மக் காட்சி கிடைப்பதாக இங்கே கூறப்படுகிறது.

சாதனை முறை : 6-8

அகக் காட்சி தெளிவுற்று, மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்ட பிறகுதான் உண்மையான ஆன்மீக சாதனை ஆரம்பிக்கிறது. இந்த மூன்று மந்திரங்கள் சாதனைபற்றி கூறுகின்றன. புலன்களைபற்றிய உண்மையை அறிவதிலிருந்து சாதனை தொடங்குகிறது.

6. இந்த்ரியாணாம் ப்ருதக் பாவம் உதயாஸ்தமயௌ ச யத்
ப்ருதக் உத்பத்யமானானாம் மத்வா தீரோ சோசதி

இந்த்ரியாணாம்-புலன்களின்; ப்ருதக்-தனி; யத்-எந்த; பாவம்-தன்மை; உதய அஸ்தமயௌ ச-எழுச்சி மற்றும் ஒடுக்கத்தையும்; ப்ருதக் -தனியாக; உத்பத்ய மானானாம்-உண்டானவதையும்; மத்வா-பகுத்தறிகின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

ஐந்து புலன்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளை அடிப்படையாகப் பெற்றுள்ளன. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது.

காது-ஆகாசம்-ஒலி
மூக்கு-வாயு-மணம்
கண்-அக்கினி-ஒளி
நாக்கு-தண்ணீர்-சுவை
உடம்பு(தோல்)-பூமி-ஸ்பரிசம்

இவ்வாறு ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன. விழிப்புநிலையில் எல்லா புலன்களும் செயல்படுகின்றன. கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கிவிடுகின்றன.

புலன்களின் ஆரம்பமும் சரி, செயல்படுகின்ற நேரமும் சரி, ஒடுக்கமும் சரி எல்லாம் ஜீவனுடன், பிராணனுடன் சம்பந்தப்பட்டவை; ஆன்மாவுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவை. புலன்களின் செயல்பாட்டிற்கும் ஆன்மாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. இந்த உண்மையை அறிபவன் புலன்களின் செயல்பாட்டால் கலங்குவதில்லை; தான் ஆன்மா என்பதில் நிலைபெற்று நிற்கிறான் அவன்.

7. இந்த்ரியேப்ய பரம் மனோ மனஸ ஸத்வமுத்தமம்
ஸத்வாததி மஹானாத்மா மஹதோ வ்யக்தமுத்தமம்

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; மன-மனம்; பரம்-வலிமையானது; மனஸ-மனத்தைவிட; ஸத்வம்-புத்தி; உத்தமம்-வலிமையானது; ஸத்வாத்-புத்தியைவிட; ஆத்மா-ஆன்மா; அதிமஹான்-மிக மேலானது; மஹத-மேலான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; உத்தமம்-மேலானது

பொருள் : புலன்களைவிட மனம் வலிமையானது. மனத்தை விட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா மிக மேலானது. மேலான ஆன்மாவைவிட மாயை மேலானது.

8. அவ்யக்தாத் து பர: புரு÷ஷா வ்யாபகோலிங்க ஏவ ச
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து அம்ருதத்வம் ச கச்சதி

அவ்யக்தாத் து-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-மேலானவர்; வ்யாபக-எங்கும் நிறைந்தவர்; அலிங்க; ஏவ ச-எந்த அடையாளமும் இல்லாதவர்; யம்-யாரை; ஜ்ஞாத்வா-அனுபூதியில் உணர்வதால்; ஜந்து-மனிதன்; முச்யதே-விடுபடுகிறான்; அம்ருதத்வம் ச-மரணமிலாப் பெருநிலையையும்; கச்சதி-அடைகிறான்.

பொருள் : அவ்யக்தத்தைவிட இறைவன் மேலானவர். அவர் எங்கும் நிறைந்தவர். (இவர்தான் என்று சுட்டிக்காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.

புலன்களின் செயல்பாடு தனியானவை அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7 மற்றும் 8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன 1.3.10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.

இறையனுபூதி : (9-16)

இறைவனை உணர்ந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப்பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

இந்தக் கண்களால் காண முடியாது

9. ந ஸந்த்ருசே திஷிட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷúஷா பச்யதி கச்சனைனம்
ஹ்ருதா மனீஷா மனஸா பிக்ல்ருப்தோ
ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி

அஸ்ய-அவரது; ரூபம்-உருவம்; ஸந்த்ருசே-காணக்கூடியதாக; ந திஷ்ட்டதி-இல்லை; ஏனம்-அவரை; கச்சன-யாரும்; சக்ஷúஷா-கண்களால்; ந பச்யதி-காண்பதில்லை; ஹ்ருதா-இதயத்திலுள்ள பொருளால்; மனீஷா-விழிப்புற்ற புத்தியில்; மனஸா-மனத்தின் தொடர்ந்த முயற்சியால்; அபி க்ல்ருப்த-உணரப்படுகிறார்; ய-யார்; ஏதத்-அதனை; விது-அறிகிறாரோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இறைவனுடைய உருவம் புறத்தில் காணக் கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.

மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன.

1. புறத்தில் காணக்கூடியதல்ல; 2. கண்களால் காண்பதில்லை: இந்தக் கருத்துக்களை ஏற்கனவே(2.2.14-15)கண்டோம்.

3. ஆன்மாவால் காணப்படுகிறது. உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.

4. புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இதுபற்றியும் ஏற்கனவே (1.3.6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.

5. மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) நாம் ஜீவன் என்ற நிலை மாறி நாம் ஆன்மா என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்மா நிலையில் இறைக் காட்சி கிடைக்கிறது.

இறையனுபூதி ஓர் ஓய்வுநிலை

10. யதா பஞ்சாவதிஷ்ட்டந்தே ஜ்ஞானானி மனஸா ஸஹ
புத்திச்ச ந விசேஷ்ட்டதி தாமாஹு பரமாம் கதிம்

யதா-எப்போது; பஞ்ச-ஐந்து; ஜ்ஞானானி-புலன்களும்; மனஸா ஸஹ-மனமும்; அவதிஷ்ட்டந்தே-ஓய்வுநிலையில் இருக்கின்றனவோ; புத்தி:ச-புத்தியும்; ந விசேஷ்ட்டதி-முயற்சியற்று இருக்கிறதோ; தாம்-அது; பரமாம் கதிம்-மிக மேலான நிலை; ஆஹு-சொல்லப்படுகிறது.

பொருள் : எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது.

எந்தச் செயலுமற்ற நிலை மிக மேலான நிலையாகச் சொல்லப்படுகிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. சோம்பிக் கிடப்பதையும் தூக்கத்தையும் இதனுடன் குழப்பிடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண மனிதர்களிடம் புத்தி விழிப்புறவில்லை என்பதை ஏற்கனவே பல இடங்களில் கூறியுள்ளோம் எனவே புத்தி விழிப்புற வேண்டும். அப்போதுதான் புலன்களும் மனமும் ஓய்வு நிலையை அடையும். அதன் பிறகு செயலற்ற நிலை உண்மையில் வாய்க்க முடியும். அக விழிப்புணர்வு ஏற்பட்டு, மனமும் புலன்களும் நமக்கு வசப்பட்ட பிறகே இந்த நிலைபற்றி யோசிக்க வேண்டும். அதற்கு முன்னால் செயலற்ற நிலைக்காக முயற்சிப்பது தவறான முயற்சியாகும்.

தன்னுணர்வு நிலை

11. தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம்
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ

இந்த்ரியதாரணாம்-புலன்கள் வசப்பட்டு; ஸ்திராம்-நிலையாக நிற்கின்ற; தாம்-அந்த நிலை; யோகம்-யோகம்; இதி-என்று; மன்யந்தே-கருதப்படுகிறது; ததா-அப்போது; அப்ரமத்த-தன்னுணர்வு உடையவனாக; பவதி-ஆகிறான்; ஹி-ஆனால்; யோக-யோக நிலை; ப்ரபவ-அப்யயௌ-வளர்வது, வீழ்வது.

பொருள் : புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது.

தன்னுணர்வு என்றால் என்ன? இதனை சத்வ நிலை என்று கீதை விளக்குகிறது(ஸ்ரீ மத் பகவத்கீதை, 14.11) புலன்கள் எதுவும் தங்கள் பாதையில் திரியாமல், அதே வேளையில் தூக்கத்திலும் ஆழ்ந்துவிடாமல் சுற்றி நடக்கின்ற அனைத்தையும் அறிந்த வண்ணம் உணர்வுபூர்வமாக நிற்கின்ற அமைதி நிலை இது. புலன்கள் என்பவை மனத்தின் வாசல்கள், இவ்வாறு வாசல்கள் அடைபட்டுவிட்ட இந்த நிலையில் மனத்தை எங்கு செலுத்தினாலும் அது ஆழமாகச் செல்ல முடியும். படிப்பு, ஆராய்ச்சி, ஆன்மீக சாதனைகள் போன்றவற்றை இந்த நேரம் செய்தால் விரைவில் வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையை சுவாமி விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறுகிறார்; உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை யெல்லாம் மேலானதோ அவை  அத்தனையும் வரும் என்கிறார் அவர்.

புத்தி விழித்தெழுந்து, அந்த நிலையில் மனத்தை எதில் செலுத்தினாலும் அதில் பல அரிய விஷயங்களைச் சாதிக்க முடியும். விஞ்ஞானம், கலை என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் உன்னதங்களைக் காண முடியும். ஆனால் ஆன்மீகத்தில் சாதிக்க வேண்டுமானால் புத்தியும் மனமும் செயலற்றதாக வேண்டும் என்பதை முந்தின மந்திரம் வலியுறுத்தியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோக நிலையை அடைந்து, அதன்பிறகு நாம் எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற முடியும். ஆன்மீகம் அல்லது உயர் வாழ்வு வேண்டுமானால் மனத்தையும் புத்தியையும் புறத்தில் செல்ல விடாமல் அகத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

மற்றொரு கருத்தும் இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த யோக நிலை என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது. அதாவது புத்தி விழித்தெழுந்த நிலையை அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. ஒருமுறை யோக நிலை வாய்த்தாலும் தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைய நேரும்.

விளக்க முடியாத நிலை: 12-13

12. நைவ வாசா ந மனஸா ப்ராப்தும் சக்யோ ந சக்ஷúஷா
அஸ்தீதி ப்ருவதோன்யத்ர கதம் ததுபலப்யதே

வாசா-வாக்கினாலோ; மனஸா-மனத்தினாலோ சக்ஷúஷா-கண்களாலோ; ப்ராப்தும்-அடைவதற்கு; ந சக்ய: ஏவ-முடியாது; அஸ்தி-இருக்கிறது; இதி-என்று; ப்ருவத-சொல்பவன்; அன்யத்ர-வேறொருவர்; கதம்-எப்படி; தத்-அதனை; உபலப்யதே-அடைவது.

பொருள் : வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. இருக்கிறது என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?

அன்பு, பாசம் போன்றவற்றை அனுபவிக்காத மனிதர்கள் இருக்க முடியாது ஆனால் அறிவினால் அவற்றை விளக்க இயலாது, இதயத்தால் அவற்றை உணர மட்டுமே முடியும். அதுபோலவே இறைவன், ஆன்மா போன்ற உண்மைகளையும் சாதாரண அறிவினால் அடைய இயலாது. கடவுள் ஒருவர் இருக்கிறார் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, என்பதையெல்லாம் நூலறிவு போன்ற எந்த அறிவின் துணையும் இன்றி இயல்பாகவே உணர்ந்து யார் இறைவனை நாடுகிறானோ அவனே வெற்றி பெறுகிறான்.

13. அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன சோபயோ
அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன ப்ரஸீததி

அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; தத்வ பாவேன-உண்மை நிலையில்; உபலப்தவ்ய-உணர வேண்டும்; உபய-இரண்டுள்; அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; உபலப்தஸ்ய-உணர்பவனுக்கு; தத்வ பாவ-உண்மைநிலை அனுபூதி; ப்ரஸீததி-இயல்பாக வாய்க்கிறது.

பொருள் : இந்த உண்மை இருக்கிறது என்று முதலில் அறிய வேண்டும், பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். இருக்கிறது என்ற நிலையில் ஆழமாக உணரும்போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

பாவனையே தெய்வப் பேருணர்வின் வாசல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஓர் உண்மையை அடைய வேண்டுமானால் அதனை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அதைப்பற்றி கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் தியானிக்க வேண்டும்(ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய பிருஹதாரண்யக உபநிஷதம், 2.4.5, 4.5.6)

மரணமிலாப் பெருநிலை : 14-15

14. யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹ்ருதி ச்ரிதா
அத மர்த்யோ ம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸமச்னுதே

ஹ்ருதி-மனத்தை; ச்ரிதா-சார்ந்திருக்கும்; யே ஸர்வே-எல்லா; காமா-ஆசைகளும்; ப்ரமுச்யந்தே-விலகுகின்றனவோ; அஸ்ய-அவனது; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத-அவனது; அத-பிறகு; மர்த்ய;-மனிதன்; அம்ருத-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அத்ர-இங்கேயே; ப்ரஹ்ம-இறைநிலையை; ஸமச்னுதே-அடைகிறான்.

பொருள் : மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்; இங்கேயே இறைநிலையை அடைகிறான்.

எப்போது ஆசைகளை விட முடியும்? முந்தின மந்திரம் கூறிய, இருக்கிறது என்ற கருத்து ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நம்மில் நிலைபெறும்போது. ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவிக்கொண்டிருப்பது மனத்தின் இயல்பு. வெளியில் அது அலைபாயாமல், ஆசை வசப்பட்டு பொருள்களின் பின் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உள்ளே அது நிலைபெற ஓர் இடம் வேண்டும். அந்த இடம் புற உலகத்தைவிட உண்மையானது, இன்பமானது, இனிமையானது என்பதை மனம் நம்ப வேண்டும். அப்போது மட்டுமே அது புற ஆசைகளை விடும். அதனால்தான் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை மீண்டும்மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது.

15. யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய
அத மர்த்யோம்ருதோ பவதி ஏதாவத்யனுசாஸனம்

ஹ்ருதயஸ்ய-மனத்தின்; ஸர்வே-எல்லா; க்ருந்தய-முடிச்சுகளும்; யதா-எப்போது; ப்ரபித்யந்தே-அவிழ்கின்றனவோ; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத:-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அனுசாஸனம்-உபதேசம்; ஏதாவத் ஹி-இவ்வளவுதான்.

பொருள் : மனத்தின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். உபதேசம் இவ்வளவுதான்.

ஆசைகள் மட்டுமல்ல; மனத்தில் இன்னும் எவ்வளவோ உள்ளன. உணர்ச்சிப் போரட்டங்கள், உணர்ச்சிக் சிக்கல்கள் என்று எத்தனையோ விஷயங்கள் மனத்தில் உள்ளன. அவை அனைத்தும் சரியாக வேண்டும். மனம் தூய்மை பெறுவது தான் ஆன்ம வாழ்வின் அடிப்படை என்பதை ஒரு சத்தியப் பிரமாணம் போல் சொல்வதற்காக உபதேசம் இவ்வளவு தான் என்று கூறுகிறான் எமதர்மன்.

16. சதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய
தாஸாம் மூர்தானமபி நி ஸ்ருதைகா
தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி
விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே பவந்தி

ஹ்ருதயஸ்ய-இதயத்தின்; நாட்ய-நாடிகள்; சதம் ச ஏகா-நூற்றொன்று; தாஸாம்-அவற்றுள்; ஏகா-ஒன்று மூர்தானம்-உச்சந்தலையை; அபிநி; ஸ்ருதா-பிளந்து செல்கிறது; தயா-அதன் வழியாக; ஊர்த்வம்-மேலே; ஆயன்-செல்பவன்; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; ஏதி-அடைகிறான்; அன்யா-மற்றவை; உத்க்ரமணே-வெளியேறுவதில்; விஷ்வக்-பல திசைகளாக; பவந்தி-ஆகின்றன.

பொருள் : இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்.

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம் உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போது சரி, ஆழ்ந்த மனக் கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும் சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.

இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்பட்டுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்குப் புலனாகாதவை. இவற்றுள் ஒன்று உச்சந்தலை வழியாக செல்கிறது. உச்சந்தலையில் பிரம்ம ரந்திரம் உட்பட இந்த உடம்பில் பதினொரு துவாரங்கள் இருப்பதாக ஏற்கனவே(2.2.1) கண்டோம். இந்த பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள் ஏதாவது ஒன்றில் நினைவுபெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளற்ற யோகியால் மட்டும் பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அங்குஷ்ட்டமாத்ர புருஷ வித்யை

17. அங்குஷ்ட்ட மாத்ர புருஷோந்தராத்மா
ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸன்னிவிஷ்ட்ட
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண
தம் வித்யாச்சுக்ரமம்ருதம் தம் வித்யாச்சுக்ரமம்ருதமிதி

புருஷ-உடம்பில் உறைகின்ற; அந்தராத்மா-ஆன்மா; அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவுடையது; ஜனானாம்-மக்களின்; ஹ்ருதயே-இதயத்தில்; ஸதா-எப்போதும்; ஸன்னிவிஷ்ட்ட-உள்ளது; தம்-அதனை; முஞ்ஜாத்-முஞ்சைப் புல்லிலிருந்து; இஷீகாம் இவ-ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல்; ஸ்வாத் சரீராத்-சொந்த உடம்பிலிருந்து; தைர்யேண-பொறுமையுடன்; ப்ரவ்ருஹேத்-பிரிக்க வேண்டும்; தம்-அதனை; சுக்ரம்-தூய்மையானது; அம்ருதம்-அழிவற்றுது. இதி-என்று; வித்யாத்-அறி.

பொருள் : உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள்.

நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய உபதேசத்தைப் பொறுத்தவரை கடைசி மந்திரம் இது. கட உபநிஷதம் அங்குஷ்ட்ட மாத்ர புருஷ வித்யை, நாசிகேத வித்யை என்ற இரண்டு முறைகளை போதிப்பதாக ஏற்கனவே கண்டோம். பெருவிரல் அளவுடைய ஒளிப் பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவை எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும் இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை அந்தக்  கருத்தை வலியுறுத்தி உபதேசித்தை நிறைவு செய்கிறான் எமதர்மன்.

ஆன்மா, அதை உணர்வது போன்றவை அவ்வளவு சுலபமானவை அல்ல. சாதனைகளின் விடா முயற்சியும். உடனடியாக பலன் தெரியாத நிலையில் பொறுமையும், பலர் இதனைச் சாதித்திருக்கிறார்கள் என்னாலும் முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும். அதனை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.

நிறைவு

18. ம்ருத்யுப்ரோக்தாம் நசிகேதோத லப்த்வா
வித்யாமேதாம் யோகவிதிம் ச ச்ருத்ஸ்னம்
ப்ரஹ்ம ப்ராப்தோ விரஜோபூத் விம்ருத்யு
அன்யோ ப்யேவம் யோவிதத்யாத்மமேவ

ம்ருத்யு ப்ரோக்தாம்-எமதர்மனால் சொல்லப்பட்ட ஏதாம்-இந்த; வித்யாம்-வித்யையையும்; க்ருத்ஸ்னம்-எல்லா; யோக விதிம்-யோக விதிகளையும்; லப்த்வா-ஏற்றுக்கொண்டு; நசிகேத-நசிகேதன்; விரஜ-தூயவனாகி; விம்ருத்யு-மரணமற்றவன் ஆனான்; அத-பிறகு; ப்ரஹ்ம-இறைவனை; ப்ராப்த-அபூத்-அடைந்தான்; அன்ய: அபி-மற்றவர்களும்; ஏவம்-இவ்வாறு; வித்-அறியும்போது அத்யாத்மம் ஏவ-இறை நிலையையே அடைகிறார்கள்.

பொருள் : எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான் பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டதுடன் நசிகேதன் நின்றுவிடவில்லை. அதனைப் பின்பற்றினான். மனத்தைத் தூய்மைப்படுத்தினான், மரணமற்ற நிலையை அடைந்தான்; இறுதியாக இறைவனை அடையப் பெற்றான். இந்தப் பேறு ஒருவருக்கு மட்டும் உரியதல்ல; பின்பற்றுகின்ற யாரும் இதனை அடையலாம். பின்பற்றிப் பாருங்கள் என்று ஒரு சவால் போல் இந்த மந்திரத்தைக் கூறுவதுடன் உபநிஷதம் நிறைவுபெறுகிறது.

இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே த்ருதீயா வல்லீ

இதி காடோபநிஷத் ஸமாப்தா

இவ்வாறு கட உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: