சனி, 7 செப்டம்பர், 2019

16. பிரகலாத சரித்திரப் பிரச்னை

பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத் காரணமான பிரமம் என்ற பொருளையும் தங்களிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். ஆனால் தைத்ய புங்கவனான பிரகலாதனே; அக்னியும் ஆயுதங்களும் அழிக்கமாட்டாமற் போயின என்றும் சமாகித சித்தனான அந்தத் தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும் மரணமடையாதிருந்தான் என்றும் அந்தப் பிரகலாதாழ்வானின் பெருமைகளையெல்லாம் நீங்களே புகழ்ந்து கூறினீர்கள்! ஆகையால் தத்துவஞானமும் பகவத் பக்தியுமுடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். அந்த மகதர்மிஷ்டனை; அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் புடைத்தார்கள்? பாரங்களால் கட்டிச் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? திக்கஜங்களைக் கொண்டு அவனை ஏன் அவர்கள் துன்புறுத்த வேண்டும்? அவனை ஏன் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள்? அவனை ஏன் அக்கினியில் போட்டு எரித்தார்கள்? அவன் மீது ஏன் சர்ப்பங்களை கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது ஆச்சரியமல்ல! ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவின் சரணாவிந்தங்களிலே சித்தத்தை நிலைபெற வைத்தவனை நிக்கிரகிக்க வல்லவன் இந்த ஜகத்திலேயே இல்லையே? ஆனால் தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன், ஸ்ரீகேசவனை ஆராதனை செய்து அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுவும் விஷ்ணு பக்தரான பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் அத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள்? இவற்றையும் பிரகலாதாழ்வானின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிற÷ன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

கருத்துகள் இல்லை: