சனி, 7 செப்டம்பர், 2019

13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்

துருவ சரித்திரத்தை பராசரர் கூறிவிட்டு அந்த வமிசத்தின் வரிசையையும் கூறலானார். அருந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயணனுடைய கிருபையினால் சர்வ உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்பவளை திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு சிஷ்டி, பவியன் என்ற பிள்ளைகள் இருவர் பிறந்தார்கள். அவர்களில் சிஷ்டி என்பவன், சுச்சாயை என்பவளைத் திருமணம் செய்து கொண்டு ரிபு, ரிபுஞ்சயன், ரிப்பிரன்; விருகலன், விருக தேஜசன் என்னும் பிள்ளைகள் ஐவரைப் பெற்றான். அவர்களில் ரிபு என்பவன் பிரகதீ என்ற மனைவியிடத்தில் சாட்சுஷன், சர்வதேஜசன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் சாட்சுஷன் வருண சந்ததியில் பிறந்தவரும் வீரணாப் பிரஜாபதிக்கு மகளுமான புஷ்கரணியிடத்தில் ஆறாவது மநுவந்தரத்துக்கு அதிபதியான மநுவைப் பெற்றான். அந்த மநுவுக்கு வயிராசன் என்ற பிரஜாபதியின் மகளான நட்வளை என்பவளிடத்தில் ஊரு பூரு, சதத்தியும்னன், தபஸ்வி, சத்தியவான், சுசி, அக்கினிஷ்டோமன், அதிராத்திரன், சுத்தியும்னன், அபிமன்யு என்னும் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஊரு என்பவன், அக்கினியின் குமாரியை மணந்து மகா தேஜசுடைய அங்கன் சுமனசு, சுவாதி, கிரதி அங்கிரசு, சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கனுக்கு மிருத்து புத்திரியான சுநீதை என்பவளிடத்தில் வேனன் என்பவன் பிறந்தான். மகாமுனிவர்கள் புத்திரார்த்தமாக அந்த வேனன் என்பவனது வலது கையைக் கடைந்தனர். அப்போது அதனிடமிருந்து பிருது என்பவன் பிறந்தான். அவன் பிரஜைகளின் நன்மைக்காக தேனு ரூபம் தரித்த பூமியிலிருந்து வேண்டிய பொருள்களைக் கறந்து கொடுத்தான்! இவ்வாறு பராசரர் கூறிவரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! வேனனுடைய வலது கரத்தை மகரிஷிகள் கடைந்தார்களே. அதிலிருந்து பிருது என்பவன் எப்படித் தோன்றினான்? அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார்.

பராசரர் கூறலானார்: மைத்ரேயரே! மிருத்துவுக்கு முதல் மகளான சுருதை என்பவள், அங்கன் என்னும் அரசனுக்கு மனைவியாகி வேனன் என்ற புதல்வனைப் பெற்றாள். அந்த வேனன் மிருத்துவின் தோஷத்தினால் குணவீனனாய்ப் பால்யம் முதல் துஷ்ட சுபாவமுடையவனாகவே இருந்தான். அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டது முதல் யாரும் இன்று முதல் யக்ஞங்களைச் செய்ய வேண்டாம். தானங்கள் கொடுக்க வேண்டாம் ஓமங்கள் செய்யவேண்டாம். நானே யக்ஞங்களுக்கு அதீஸ்வரன்! என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று பறையறைவித்தான். அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் அந்த அரசனிடம் சென்று, அரசே! நாங்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் இதமான தீர்க்க சத்திர யாகம் செய்து, யக்கிய ஈசுவரனான ஸ்ரீஹரியை ஆராதிக்கிறோம். அதனால் உனக்கும் யக்ஞ பாகத்தில் பங்கு கிடைக்கும். யக்ஞ புருஷனான ஸ்ரீமந்நாராயணன், நாங்கள் செய்யும் வேள்வியினால் திருவுள்ளம் உவந்து, உனக்குச் சகல பீஷ்டங்களையும் வழங்கியருள்வான். எவனது ஆட்சியில் யாகாதி சத்கருமங்களாலே யக்ஞேசுவரனான புரு÷ஷாத்தமன் பூஜிக்கப்படுவானோ அந்த அரசனுக்கு அவ்வெம்பிரான் சகல மனோரதங்களையும் அருள்வான்! என்று நயமாகக் கூறினார்கள். அதற்கு மன்னன் வேனன், என்னைவிட அர்ச்சிக்கத் தகுந்தவன் வேறு யார் உண்டு? யக்ஞேசுவரன் என்று நீங்கள் கூறும் அந்த ஹரி என்பவன் யார்? பிரேமா, விஷ்ணு, சிவன், இந்திரன், யமன்! வருணன், குபேரன், வாயு, அக்கினி, சந்திரன்! சூரியன், பூமி என்ற தேவர்களும், மற்ற சுபானுக்கிரக ஆற்றலுடைய யாவரும் அரசனுடைய சரீரத்திலேயே இருக்கின்றனர். ஆகையால் மன்னவனே சர்வதேவ சொரூபி என்று சாஸ்திரங்கள் கூறுவதை அறிந்தே நான் கட்டளையிட்டான். ஆகவே, கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். மங்கையர் தங்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதே முக்கிய  தருமம் என்பது போல், அரசனாகிய என்னுடைய ஆக்ஞையை ஏற்று நடப்பதே உங்களுக்குத் தர்மமாகும் என்றான். அரசே! யக்ஞங்கள் செய்ய எங்களுக்கு அனுமதியுங்கள். தர்மத்தை நாசஞ்செய்ய வேண்டாம். சராசராத்மகமான பிரபஞ்சங்கள் எல்லாம் வேள்விகளிலே ஓமஞ்செய்யும் அவிசினாலேயே செழிப்படைகின்றன! என்றார்கள் ரிஷிகள். அவர்கள் கூறியதற்கு வேனன் இணங்காமல் பிடிவாதமாகவே இருந்தான். அதனால் முனிவர்களுக்கு கோபம் பொங்கியது. அவர்கள், இவன் ஆதியந்தமில்லாதவனும் ஜகத்பிரபுவும் யக்ஞ புருஷனுமான ஸ்ரீயப்பதியை இகழ்கிறான் அல்லவா?  இவன் ராஜ்ய பரிபாலனத்துக்குத் தகுந்தவனல்ல; இந்தத் துராத்மாவைக் கொன்றாலும் நமக்குப் பாவம் வராது! என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு, மந்திரங்களால் சுத்தி செய்யப்பட்டிருந்த குச தர்ப்பைகளாலே அந்த அரசனை அடித்தார்கள். அவன் பூர்வத்திலேயே; சர்வேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவையும் அவனது மகிமையை விளக்கும் வேதத்தையும் அவனது ஆராதனையான யாகத்தையும் நிந்திப்பதாகிய அக்கினியால் தகிக்கப்பட்டிருந்ததால் முனிவர்களின் தருப்பைப் புல்லின் அடிபட்டவுடனே உயிர் இழுந்து கீழே விழுந்தான்.

அந்த சமயத்தில் நான்கு திசைகளிலும் ஏராளமான துன்பும் தூசியும் பறந்து ஆகாயம் எங்கும் வியாபித்தது. அதைக் கண்ட மகரிஷிகள் அங்கிருந்த மக்களைப் பார்த்து; இந்தத் தூசி என்ன காரணத்தால் உண்டாயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு ஜனங்கள், உங்களால் பூமண்டலம் அராஜகமானதினால் அனேக ஜனங்கள் ஆங்காங்கே பிரவேசித்துப் பிறருடைய திரவியங்களை அபகரிப்பதற்காக வேகமாய் வருகிறார்கள். அத்தகைய கள்ளர்களின் கால்பட்ட வேகத்தினால் தூளிப்படலமாகிய இந்தத் தூசியும் தும்பும் தோன்றியது? என்றார்கள். அதைக்கேட்ட முனிவர்கள் ஆலோசித்து, ஒரு புத்திரனை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்து அபுத்திரனான வேனனது தொடையைக் கடைந்தார்கள். அப்போது அதிலிருந்து எரிந்த கட்டையைப் போன்ற கறுப்பு நிறமும் விகாரமான முகமும், குட்டையான உடலும் கொண்ட ஒரு மனிதன் தோன்றி, முனிவர்களை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நிஷீத (உட்கார்) என்று சொன்னார்கள். அதன் காரணமாக அவன் நிஷாதன் என்ற பெயரைப் பெற்றான். விந்தியமலை வாசியரான வேடர்கள் அவனது பரம்பரையில் உண்டானார்கள். ஆகையால் அவர்கள் நிஷாதர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாக மன்னன் வேனனின் பாபங்களெல்லாம் ஒருங்கே திரண்டு புருஷாகாரமாகப் பிறந்தன. அன்று முதல் நிஷாத ஜாதி உலகத்தில் உண்டாயிற்று. அதன் பிறகு முனிவர்கள் வேனனுடைய வலதுகையைக் கடைந்தார்கள். அந்தக் கையிலிருந்து அக்கினியைப் போல் ஜொலிக்கும் திவ்ய தேஜோவிராஜிதனும் மகாப் பிரதாபம் கொண்டவனுமான ஒரு குமாரன் தோன்றினான். பிருது மாமன்னன் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்பட்டது, அவன் பிறந்ததுமே ஆகாயத்திலிருந்து அசகவம் என்ற ஒரு வில்லும் திவ்வியமான பாணங்களும் விழுந்தன. அவற்றை பிருது கைக்கொண்டான். அவன் தோன்றியதுமே சகல பூதங்களும் பெருமகிழ்ச்சியடைந்தன. வேனனும் சற்புத்திரன் உண்டானதால் புத்து என்ற நரகத்திலிருந்து நீங்கிச் சொர்க்கத்தையடைந்தான். அப்போது சமுத்திரங்களும் நதிகளும் பிருதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நன்னீரையும் திவ்விய ரத்தினங்களையும் கொண்டு வந்து வணங்கி நின்றன. பிரமனும் ஆங்கிரசர் என்னும் தேவதைகளோடும் சகல பூதங்களோடும், வந்து வேனனுடைய மகனான பிருது சக்கரவர்த்தியைச் சகல பூமண்டலங்களுக்கும் அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தான். அப்போது பிருது சக்கரவர்த்தியின் வலது கையில், சக்கரம் இருப்பதை பிருமா பார்த்து, இவன் நாராயண அம்சமுடையவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார். மைத்ரேயரே! எவருடைய வலது ஹஸ்தத்தில்; விஷ்ணு சின்னமான சக்கரரேகை காணப்படுமோ அவர்கள் தேவர்களாலும் வெற்றி பெறக்கூடாத பராக்கிரமமுடையவர்களாய்; மாமன்னர்களிலே உயர்ந்தவராய் விளங்குவார்கள்.

இவ்விதம்; பிருது சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டு, முறைப்படி ஆட்சி செலுத்தி வரும்போது, அவனது தகப்பனான வேனனுடைய உபத்திரவத்தினால் வருந்திய மக்கள், இவனது நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பிரஜைகளைக் காத்து, அவர்களுடைய அன்பைப் பெற்றதால்; அவன் அவனிராஜன் என்று வழங்கப்பட்டான். அவன் தேரில் ஏறிப் புறப்படும்போது சமுத்திரங்கள் இரையாமல் ஸ்தம்பித்தன. பர்வதங்கள் எல்லாம் அவனுக்கு வழிவிட்டு நின்றன. அவனது விருதுக்கொடிகள் கிளைகளிலே படுமே என்ற பயத்தினால் உயர்ந்த மரங்கள் தணிந்து நின்றன. பூமி உழாமலே விளைந்தது. நினைத்த மாத்திரத்திலேயே பயன்கள் சித்தித்தன. பசுக்கள் வேண்டும் அளவு பாலைச் சுரந்தன. இலை மடிப்புக்களில் எல்லாம் தேன் நிறைந்திருந்து பிரும்மாவைக் குறித்துச் செய்த வேள்வியிலே, இந்தப் பிருது மாமன்னன் தோன்றியவுடனே, அந்த யக்கியத்தின் சுத்தியா காலத்தில் சூதனும் மாகதனும் தோன்றினர். இப்படிப் பிறந்த சூதமாகதர்களைப் பார்த்து மகாமுனிவர்கள், பிரதாப சாலியான பிருது மன்னனை அவனது குணகர்ம வரலாறுகளைச் சொல்லித் துதியுங்கள்! இவன் துதிப்பதற்குத் தகுந்தவன் என்று கட்டளையிட்டார்கள். சூதமாகதர் தயங்கி, முனிவர்களே! இவர் இப்போது தானே பிறந்தவர்? ஆகையால் இவரது குணங்களையும் புகழையும் நாங்கள் அறியோமே! எதைச் சொல்லி, நாங்கள் இவரைப் புகழ்வோம்? என்று கேட்டார்கள். அதற்கு முனிவர்கள், இவன் சக்கரவர்த்தியும் மிக வலிவுடையவனுமாகி, உலகத்துக்கு இதமான பல செயல்களைச் செய்வான்! ஆகையால் இவனுக்கு இனிமேல் விளங்கத்தக்க குணங்களைப் பற்றித் துதி செய்யுங்கள்! என்றார்கள். அதைக்கேட்டு, பிருது சக்கரவர்த்தியும் தன்னுள்ளே தனக்குத்தானே நினைக்கிறான். உலகத்திலே சற்குணங்களினால் மன்னனுக்குப் புகழும் பெருமையும் உண்டாகும். இம்முனிவர்கள் என்னைத் துதிக்கச் சொன்னதே நான் சற்குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்கான ஓர் உபதேசமாகும். ஆகையால் நான் குணவான் ஆவேன். இம்மாகதர்கள் கீர்த்தனஞ்செய்யும் குணங்களை ஏற்று, இவர்கள் காட்டும் துர்க்குணங்களை விட்டு விடுகிறேன் என்று சித்தமாக இருந்தான்.

அப்போது சூதமாகதர்கள் அந்த அரசகுமாரனான பிருதுவை இந்த மகாராஜகுமாரன் சத்தியசீலன்; தானசீலன்; பிரதிக்ஞையை நிறைவேற்ற வல்லவன்; செய்யத்தகாத காரியத்தைச் செய்யக் கூசுபவன். ஜெயசாலி பொறுமையுள்ளவன் நட்புக்குணமுடையான், மகாப் பிரதாபவான், துஷ்டர்களைத் தண்டிக்கும் குணமுடையவன், இனிய பேச்சுத் திறனுடையான்; பூஜிக்க தகுந்தவரைப் பூஜிப்பவன்; யாகசீலன்; பிராமண பக்தன்; யோக்கியரிடத்தில் அன்புடையவன். சத்துரு மித்துருக்களிடம் சமபுத்தியோ பட்சபாதமற்று சகல விவகாரங்களையும் தீர்ப்பவன்! என்று நல்ல குரலோடு நன்றாகத் துதி செய்தார்கள். சூதனும் மாகதனும் இவ்வாறு எடுத்துக் கூறிய சற்குணங்களையெல்லாம் பிருது மன்னன் தன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு; அக்குணங்களுடன் ஆட்சி செய்து; பலவிதமான யாகங்களை நடத்தி அதிக தட்சணை கொடுத்து வந்தான். அவனது தந்தை வேனன் மடிந்ததால்; பூமி அராஜகமாயிற்று. அதனால் பிருது மன்னனது ஆட்சியின் ஆரம்பத்திலே; பிரஜைகள் அனைவரும் பசியால் வருந்தியவர்களாய் அரசனிடம்; சென்று அரசே! நீர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே; பூமண்டலம் அராஜகமாகி சகலவோஷதி வர்க்கங்களையும் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விட்டது. ஆகையால் இப்போது ஆகார வசதியில்லாமல் பிரஜைகள் பசி வாதையால் அழிந்து வருகின்றனர். அன்ன பானங்களைக் கொடுத்து எங்களை ரட்சிப்பதற்காகவே பிரம்மா உங்களைப் படைத்து எங்களுக்கு வழங்கினார். ஆகையால் பசியால் பீடிக்கப்பட்ட எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று முறையிட்டார்கள். அதைக் கேட்ட பிருது மன்னன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அசகவம் என்ற வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பூமியை எதிர்க்கச் சென்றான், அப்போது பூமாதேவியானவள்; பசுவின் ரூபத்தைத் தரித்து பயந்து ஓடினாள். மன்னனும் அவளை விடாமல் பின் தொடர்ந்து சென்றான். அதனால் பூதேவி பிரம்மலோகம் முதலிய உலகங்களுக்கும் ஓடிச்சென்று எங்கும் அடைக்கலம் அடைய முடியாமல் வில்லும் கையுமாய்த் தன்னைத் துரத்திவரும் வேந்தனை நோக்கி; பிருது மன்னனே! பெண் வதையினால் பாதகம் சம்பவிக்கும் அல்லவா, அதையறிந்தும் ஏனிப்படிச் செய்கிறாய்? என்று கேட்டாள். வசுந்தரையே! துஷ்டகாரியஞ் செய்பவரை வதைப்பதால் பலருக்கு நன்மையுண்டாகுமானால் அப்படிப்பட்ட வதையைச் செய்வதால் புண்ணியம்தான் உண்டாகும்! என்றான் பிருது.

அரசே! பிரஜைகளுக்கு இதமுண்டாவதற்காக என்னை அழித்தால், சதுர்வித பூதசாதங்களுக்கும் ஆதாரம் என்ன? என்றாள் பூமிதேவி. உற்று அவளை பிருது நோக்கி வசுந்தரா என்னுடைய ஆக்ஞையை மீறி துர்விநீதையாய் நடக்கிற உன்னை என்னுடைய அம்புகளால் சங்கரித்து எது யோக சக்தியினால் சகல பிரஜைகளையும் தரிக்கிறேன்! என்றான். அதைக்கேட்ட பூதேவி பயத்தால் நடுங்கி, பிருதுவை வணங்கி அரசே! உபாயத்தினால் சகல காரியங்களும் சிந்திக்குமேயல்லாமல் வேறு வகையால் சித்திக்காது. ஆகையால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். கேட்பாயாக உலகத்தில் உண்டான ஓஷதி நிகரங்களையெல்லாம் நான் என்னுள்ளேயே அடங்கும்படி கிரகித்திருக்கிறேன். ஆகையால் அவை என்னிடம் க்ஷீரரூபமாக இருக்கின்றன. வேண்டுமானால் பால்ரூபமாக இருக்கும் அந்த ஓஷதிகளை உலக நன்மைக்காக நான் வழங்குகிறேன். தகுந்தவொரு கன்றையுண்டாக்கிக் கொடுப்பாயாக. அந்தக் கன்றினிடமுள்ள அன்பினால் பால் ரூபமாகவுள்ள ஓஷதிகளைக் கறக்கச் செய்வேன். நான் கொடுக்கும் க்ஷீரங்கள் ஜகமெல்லாம் வியாபிக்கும் பொருட்டு தடையாகவுள்ள மலைகளையெல்லாம் விலக்கி; என்னை மேடுபள்ளமில்லாமல் நிரவவும் என்றாள். பிருதுவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லித் தன்னுடைய வில்லின் நுனியால் அவற்றைப் புறத்தே தள்ளி பூமண்டலத்தைச் சமமாகச் செய்தான். மைத்ரேயரே! பூர்வ காலத்தில் மலைகள் எல்லாம் மிகவும் நெருங்கி முழுவதும் பரவியிருந்ததாலே பூமண்டலத்தில் நகரப்புரங்களும் கிராமங்களுமாகிய குடியிருப்புகள் பிரிவு படாமல் இருந்தன. பயிர்த்தொழிலும் பசு வளர்ப்பும் வாணிபமும் இல்லை. பிருது மன்னன் முடிசூட்டிக் கொண்டது முதல் இவ்வேறுபாடுகள் உண்டாயின. எங்கெங்கே பூமியானது மேடு பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்குமோ அங்கங்கே, புரங்களையும் கிராமங்களையும் அந்த அரசன் ஏற்படுத்தி, அவற்றில் பிரஜைகளை வசிக்கச் செய்தான். பூர்வத்தில் கந்த, மூல பலாதிகளே பிரஜைகளுக்கு ஆதாரமாக இருந்தன. ஜகம் அராஜகமானபோது அவைகளும் கிடைப்பது கஷ்டமாயிற்று. ஆகையால் பிருது மன்னன் சுவாயம்புவமனுவைக் கன்றாக்கி தனது ஹஸ்தத்தை பாத்திரமாகச் செய்து, தேனுரூபிணியான பூமியினிடத்தில் சகல ஸஸ்யங்களையும் கறந்தான். அதனால் பிரஜைகள் மகிழ்ச்சியடைந்து, அவன் உண்டாக்கிய ஆகாரத்தினால் பலத்தையும் சக்தியையும் பெற்று சுகமாக இருந்தார்கள். அவன் கொடுத்த அன்னத்தால் தான் இன்றளவும் பிரஜைகள் ஜீவித்திருக்கின்றனர். பிருது மன்னன் பூமிக்குப் பிராணனைக் கொடுத்ததால் தந்தையானான் அந்தக் காரணத்தாலேயே பூமிக்கு பிருத்வி என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு தேவதைகளும், முனிவர்களும், தைத்தியர்களும், ராக்ஷசர்களும், கந்தருவர்களும், நாகர்களும், பிதுர்க்களும், விருட்சங்களும், பிருது மன்னனின் கருணையால் தத்தமது சாதிக்கான பாத்திரத்தையும் கன்றையும் கறப்பவனையும் உண்டாக்கி, தங்களுக்குரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள். சகல பூததாரணியாயும், எல்லாவற்றையும் உண்டாக்குபவளாயும், காப்பவளாயும், ஸ்ரீமகாவிஷ்ணுவின் பாதாம்புயத்தில் பிறந்தவளுமான பூமாதேவி என்னும் பிருதிவி முன்புபோல் சகல பூதங்களுக்கும் இஷ்டங்களைக் கொடுக்கத் துவங்கினாள். மைத்ரேயரே! இவ்விதமான வேனன் மன்னனின் குமாரனான பிருது சக்கரவர்த்தி புகழுடையவனாய் விளங்கினான். எவன் இத்தகைய பிருது மாமன்னனுடைய சரித்திரத்தைப் படிக்கிறானோ, படிக்கக் கேட்கிறானோ, அவன் பாவந்தீர்ந்து, துர்ச்சொப்பன பயமில்லாமல் சுகமாக இருப்பான்!

கருத்துகள் இல்லை: