சனி, 7 செப்டம்பர், 2019

21. தனு முதலியோர் வமிச வரலாறு

மைத்ரேயரே! இத்தகைய புகழ்மிக்க பிரகலாதனனுக்குச் சிபிபாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கப் பலிச் சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இது நிற்க, இரணியாட்சனுக்குச் சர்ச்சுரன் சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வமிசமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வமிசங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள் தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டையென்பவளும், வைசுவாநாதனுக்கு உபதாநவி அயசிரை புலோமை காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். அவர்களில் புலோமை, காலகை என்பவர்கள் மரீசிக்கு மனைவியாயினர். அவர்களுக்கு புலோலமர், காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன் சல்லியன் நபன் வாதாவி இல்லலன், நமுசிககிருமன், அந்தகன், நரகன், காலநாபன் ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்விதமாகத் தனுவென்பவனின் வமிச்தி மகாபலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பவுத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் சொன்னது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வமிசத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்குக் காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை கிருத்தரி, சுசி என்ற ஆறுபெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுகிக்குக் கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்குச் செம்போத்துகளும், கிருத்திரிக்கு கழுகுகளும்; சுகிக்குத் தண்ணீர்ப் பறவைகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும் ஒட்டகங்களும் பிறந்தன. இது தாம்பரையின் வமிச விபரமாகும். இனி, விந்தைக்குக் கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களைப் புசிப்பவனாய் கடூரமான ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தோனாய் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷச்சுவாலையோடும் தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் விளங்குவார்கள்.

குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்த குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்க அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகாபலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் சொன்னேன். அவர்களுடைய புத்திர பவுத்திராதி சந்ததிகளோ எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும். இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்த, அதில் சதுர்முகப் பிருமன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது பிரஜா சிருஷ்டி செய்தவிதத்தை விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனான சதுர்முகன் நூதன சிருஷ்டி செய்ய காலம் பெறாமல் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவசுவத மனுவந்தரத்திலே நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். இவர்களும் அப்படியே செய்தனர். இது நிற்க. தேவர் தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய்ப் போனதால், திதி என்பவள் புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். அவர் அதனால் மகிழ்ந்து திதியை நோக்கி, பெண்ணே! உனக்கு பிரியமான வரத்தைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு இந்திரனைச் சங்கரிக்கத் தக்கவனான  ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதைக் கேட்டதும் காசிபமுனிவர் அவளைப் பார்த்து எனது பிரிபுத்தினியே; உனக்கு இந்திரனை சங்கரிக்கத்தக்க மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் சுசியாய்க் கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். இப்படியிருக்க இந்தச் செய்தியை இந்திரன் அறிந்தான். உடனே அவன் சூழ்ச்சி செய்து அந்த ரிஷிபத்தினியின் அருகில் வந்து இருந்து; அவளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவளது கர்ப்பத்தை சிதைக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்க சிலநாள் குறைய நூறு ஆண்டுகள் நிறையும் காலத்தில் ஒருநாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்தாள். அப்போது இந்திரன் அவள் சுத்தமில்லாமல் அசுசியாக இருப்பதையறிந்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு; அவள் வயிற்றிலே சூட்சும ரூபத்துடன் சென்று அந்தக்கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துண்டித்தான். அப்போது அந்தச் சிசு, பெருஞ்சப்தத்துடன் ரோதனம் செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறி கோபங்கொண்டு அந்த ஏழு துண்டுகளையும் மறுபடியும் எவ்வேழாகத் துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள்.

கருத்துகள் இல்லை: