சனி, 7 செப்டம்பர், 2019

274 சிவாலயங்கள் அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்

மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் : கிருதபுரீஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
ஆகமம் பூஜை  : காரண ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநெய்த்தானம்
ஊர் :  தில்லைஸ்தானம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்,தேவாரப்பதிகம்

 பறையும்பழி பாவம் படுதுயரம் பலதீரும் பிறையும் புனல்அரவும் படுசடை எம்பெருமானூர் அறையும் புனல் வருகாவிரி அலைசேர் வடகரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே. திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 52வது தலம்.  
      
திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் - 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 4362-260 553. 
     
தகவல் : கிழக்குநோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகரம் விசாலமானது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

பெருமை : அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,"ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே' என பாடுகிறார்.  ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர். காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.  இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார். இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டு திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், ""இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்,''என வேண்டினார். இறைவன் அசரீரியாக,""நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்கு கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்,''என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது.
--------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: