சனி, 7 செப்டம்பர், 2019

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

கருத்துகள் இல்லை: