சனி, 7 செப்டம்பர், 2019

6. ஆன்ம அனுபூதி

அறிவைத் தேடி புறப்பட்ட 6 சாதகர்கள் பிப்பலாத முனிவரிடம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த விடைகளுமே இந்த உபநிஷதம், முதலில் (1-3 அத்தியாயங்கள்) உலகம். அடுத்தது(4) மனிதன், அடுத்து(5) ஓங்கார சாதனை என்று அவர்களின் கேள்விகள் படிப்படியாக அமைந்துள்ளது.

இந்த 6-ஆம் அத்தியாயம் ஆன்ம அனுபூதி பற்றி கூறுகிறது.

பதினாறு பகுதிகள் உடைய நபர்: 1-4

1. அத ஹைனம் ஸுகேசா பாரத்வாஜ பப்ரச்ச
பகவன் ஹிரண்யநாப கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம்
ப்ரச்னமப்ருச்சத ஷோடசகலம் பாரத்வாஜ புருஷம் வேத்த? தமஹம்
குமாரமப்ருவம் நாஹமிமம் வேத யத்யஹமிமமவேதிஷம் கதம் தே
நாவக்ஷ்யமிதி ஸமூலோ வா ஏஷ பரிசுஷ்யதி யோன்ருதமபிவததி
தஸ்மாத் நார்ஹாம்யன்ருதம் வக்தும் ஸ தூஷ்ணீம் ரதமாருஹ்ய
ப்ரவவ்ராஜ தம் த்வா ப்ருச்சாமி க்வாஸெள புருஷ இதி

அத-பிறகு; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனான; ஸுகேசா-ஸுகேசன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச ஹ-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; கௌஸல்ய-கோசல நாட்டின்; ராஜபுத்ர-இளவரசனான; ஹிரண்யநாப-ஹிரண்யநாபன்; மாம்-என்னை; உபேத்ய-அணுகி; ஏதம்-இந்த; ப்ரச்னம்-கேள்வியை; அப்ருச்சத-கேட்டார்; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனே; ÷ஷாடச கலம்-பதினாறு பகுதிகள் உள்ள. புருஷம்-நபரை; வேத்த-தெரியுமா; அஹம்-நான்; தம்-அந்த; குமாரம்-இளவரசனிடம்; அப்ருவம்-சொன்னேன்; இமம்-இது; ந வேத-தெரியாது; யதி அவேதிஷம்-தெரிந்திருந்தால்; தே-உங்களுக்கு; கதம்-எப்படி; ந அவக்ஷ்யம்-சொல்லாமல் இருப்பேன்; ய-யார்; அன்ருதம்-பொய்யை; அபிவததி-சொல்கிறானோ; ஏஷ-அவன்; ஸமூவ-வேருடன்; பரிசுஷ்யதி வை-அழிந்தே போகிறான்; தஸ்மாத்-எனவே; அன்ருதம்-பொய்யை; வக்தும்-சொல்வதற்கு; ந அர்ஹாமி-துணிவு இல்லை; ஸ-அவர்; தூஷ்ணீம்-அமைதியாக; ரதம்-தேரில்; ஆருஹ்ய-ஏறி; ப்ரவவ்ராஜ-போய்விட்டார்; தம்-அதனை; த்வா-உங்களிடம்; ப்ருச்சாமி-கேட்கிறேன்; அஸெள-இந்த; புருஷ-நபர்; க்வ-எங்கே; இதி-என்று.

பொருள் : பிறகு பரத்வாஜரின் மகனான ஸுகேசன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:
தெய்வ முனிவரே! கோசல நாட்டு இளவரசனான ஹிரண்யநாபன் என்னிடம் பரத்வாஜரின் மகனே! பதினாறு பகுதிகள் உடைய நபரை உமக்குத் தெரியுமா? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் அவரிடம் தெரியாது. தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை என்று கூறினேன். இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப் போய்விட்டார். அந்த நபர் எங்கே இருக்கிறார்? என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

2. தஸ்மை ஸ ஹோவாச இஹைவாந்த சரீரே ஸோம்ய
ஸ புரு÷ஷா யஸ்யின்னேதா ÷ஷாடசகலா ப்ரபவந்தீதி

தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ஸோம்ய-இனியவனே; ஸ-புருஷ-அந்த நபர்; இஹ-இங்கே; அந்த; சரீரே-உடம்பினுள்; யஸ்மின்-யாரிடம்; ஏதா-இந்த; ÷ஷாடச கலா-பதினாறு பகுதிகள்; ப்ரபவந்தி-தோன்றுகின்றன; இதி-என்று.

பொருள் : ஸுகேசனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
இனியவனே! அந்த நபர் ஆன்மா, ஆன்மா இங்கே உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

பதினாறு பகுதிகள் என்பவை படைப்பின் பதினாறு அம்சங்கள் ஆகும். இது 4-இல் விளக்கப்படுகிறது.

3. ஸ ஈக்ஷõம்சக்ரே கஸ்மின் அஹமுத்க்ராந்த உத்க்ராந்தே
பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே ப்ரதிஷ்ட்டாஸ்யாமீதி

ஸ-ஆன்மா; ஈஷாம்சக்ரே-சிந்தித்தது; கஸ்மின்-யார்; உத்க்ராந்தே-வெளியேறுவதால்; அஹம்-நான் உத்க்ராந்த-வெளியேறியவனாக; பவிஷ்யாமி-ஆவேன்; கஸ்மின்-யார்; ப்ரதிஷ்ட்டிதே-நிலைபெறுவதால்; ப்ரதிஷ்ட்டாஸ்யாமி-நிலைபெறுவேன்; இதி-என்று.

பொருள் : யார் வெளியேறுவதால் நான் வெளியேறியவனாக ஆவேன்? யார் நிலைபெறுவதால் நான் நிலைபெறுவேன்? என்று ஆன்மா சிந்தித்தது.

ஒருவர் இறந்துவிட்டார் என்று எப்போதும் முடிவு செய்யப்படுகிறது? புலன்களோ மனமோ செயல் இழப்பதால் ஒருவர் மரணமடைவதில்லை. பிராணன் வெளியேறும் போதே ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார். அந்தப் பிராணன் எங்கிருந்து வந்தது என்று சிந்தனை அடுத்த மந்திரத்தில் தொடர்கிறது.

4. ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்சரத்தாம் கம்
வாயுர்ஜ்யோதிராப ப்ருதிவீந்த்ரீயம் மன: அன்னமன்னாத்வீர்யம்
தபோ மந்த்ரா கர்மலோகா லோகேஷு ச நாம ச

ஸ-அது; ப்ராணம்-பிராணனை; அஸ்ருஜத-படைத்தது; ப்ராணாத்-பிராணனிலிருந்து; ச்ரத்தாம்-புத்தி; கம்-ஆகாசம்; வாயு-காற்று; ஜ்யோதி-நெருப்பு; ஆப-நீர்; ப்ருதிவீ-பூமி; இந்த்ரியம்-புலன்கள்; மன-மனம்; அன்னம்-உணவு; அன்னாத்-உணவிலிருந்து; வீர்யம்-ஆற்றல்; தப-தவம்; மந்த்ரா-மந்திரங்கள்; கர்ம-கிரியைகள்; லோகா-உலகங்கள்; லோகேஷு-உலகில்; நாம ச-பெயர்கள்.

பொருள் : ஆன்மா பிராணனைப் படைத்தது. பிராணனிலிருந்து புத்தி, ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி, புலன்கள், மனம், உணவு ஆகியவை தோன்றின. உணவிலிருந்து ஆற்றல், தவம், மந்திரங்கள், கிரியைகள், உலகங்கள் எல்லாம் தோன்றின. உலகங்களில் பெயர்கள் படைக்கப்பட்டன.

பதினாறு பகுதிகள் உடையதாகக் கூறப்பட்ட அந்த ஆன்மாவே பிராணனைப் படைத்தது. உடம்பும் மனமும் எவற்றால் ஆக்கப்பட்டனவோ அந்தத் தூல, நுண் அம்சங்கள் பிராணனிலிருந்து தோன்றின. இந்தப் பதினாறு அம்சங்களும் ஆன்மாவின் பதினாறு பகுதிகள் என்று கூறப்பட்டன.

ஆன்ம அனுபூதி

5. ஸ யதேமா நத்ய ஸ்யந்தமானா; ஸமுத்ராயணா
ஸமுத்ரம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யதே தாஸாம் நாமரூபே
ஸமுத்ர இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்ரஷ்ட்டரிமா
÷ஷாடசகலா புநுஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே
தாஸாம் நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே
ஸ ஏ÷ஷா கலோ ம்ருதோ பவதி ததேஷ ச்லோக

ஸ-அந்த; யதா-எப்படி; இமா; இந்த; நத்ய-நதிகள்; ஸமுத்ராயணா-கடலை நோக்கி; ஸ்யந்தமானா; ஓடி; ஸமுத்ரம்-கடலை; ப்ராப்ய-அடைந்ததும்; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; ஸமுத்ர-கடல்; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஏவம் ஏவ-அதுபோலவே; அஸ்ய-இந்த; பரித்ரஷ்ட்ட-பிராணன்; இமா-இந்த; ÷ஷாடசகலா-பதினாறு பகுதிகள்; புருஷாயணா-ஆன்மாவை நாவி; புருஷம்-ஆன்மாவை; ப்ராப்ய-அடைந்து; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; புருஷ-ஆன்மா; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஸ-ஆன்மா; ஏஷ-இந்த; அகல-பகுதிகள் அற்றதாக; அம்ருத-மரணமற்றதாக; பவதி-ஆகிறது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-மந்திரம்.

பொருள் : நதிகள் கடலை நோக்கி ஓடுகின்றன. கடலை அடைந்ததும் அதில் கலந்து மறைகின்றன; அவற்றின் நாமரூபங்கள் அழிந்துவிடுகின்றன. அதன்பிறகு எல்லாம் கடல் என்றே அழைக்கப்படுகிறது. அது போலவே (ஆன்ம அனுபூதிக்கு பிறகு) பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் ஆன்மாவை நாடி, ஆன்மாவை அடைந்து அதில் மறைந்துவிடுகின்றன. அவற்றின் பெயரும் வடிவங்களும் அழிந்து விடுகின்றன. அனைத்தும் ஆன்மா என்றே அழைக்கப்படுகிறது. பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக ஆன்மா திகழ்கிறது. கீழ்வரும் மந்திரம் அதுபற்றி கூறுகிறது.

பரித்ரஷ்ட்டா என்றால் அனைத்தையும் காண்பவன் என்று பொருள். அனைத்தையும் இயக்குபவன் என்று கொள்ளப்பட்டு இங்கே பிராணன் என்ற பொருள் தரப்படுகிறது. ஆன்மாவிலிருந்தே பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதனின் உடம்பும் மனமும் அமைய இவை காரணமாக அமைகின்றன. இந்தப் பதினாறு பகுதிகளிலிருந்தும் உருவாகின்ற ஒன்றையே நாம் மனிதன் அல்லது தனிநபர் என்கிறோம். இந்த மனிதன் உண்மையை உணர்ந்து ஆன்மாவை நாடி, ஆன்ம அனுபூதி பெறும்போது இந்தத் தனித்துவம் மறைந்துவிடுகிறது. உடம்பு, மனம், பிராணன் என்ற பெயர்களும் வடிவங்களும் எல்லாம் மறைகின்றன. நதிகள் கடலில் கலப்பதுபோல் தனிநபர் சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆன்மாவில் கரைகின்றன.

தோன்றியதற்கே மரணம் வாய்க்கிறது. பதினாறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட தனிநபர் மரணமடைகிறார். ஆன்மா பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக என்றும்போல் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி பற்றிய ஒரு சித்திரம் இது.

ஆன்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள்: 6-7

6 சீடர்களும் கேட்ட கேள்விகளுக்குரிய பதில்களைக் கூறியபிறகு. எனக்கு இவ்வளவே தெரியும். தெரிந்ததை உங்களுக்குக் கூறினேன் என்று பணிவுடன் தெரிவித்து, அவர்களைப் பிப்பலாத முனிவர் வாழ்த்துவதுபோல் இந்த மந்திரங்கள் அமைகின்றன.

6. ஆரா இவ ரதநாபௌ கலா யஸ்மின் ப்ரதிஷ்ட்டிதா
தம் வேத்யம் புருஷம் வேத யதா மா வோ ம்ருத்யு பரிவ்யதா இதி

ரதநாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா-ஆரக்கால்கள்; இவ-போல்; யஸ்மின்-யாரில்; கலா-பகுதிகள்; ப்ரதிஷ்ட்டிதா-நிலைபெற்றுள்ளனவோ; வேத்யம்-அறிவதற்குரிய; தம்-அந்த; புருஷம்-ஆன்மாவை; வேத-அறியுங்கள்; யதா-எப்படி; வ-உங்களை; ம்ருத்யு-மரணம்; மா பரிவ்யதா-தீண்டாமல்; இதி-என்று.

பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல், யாரில் பதினாறு பகுதிகள் நிலைபெற்றுள்ளனவோ, அறிவதற்குரிய அந்த ஆன்மாவை அறியுங்கள். அதன்மூலம் மரணம் உங்களைத் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

7. தான் ஹோவாச ஏதாவதேவாஹமேதத் பரம்
ப்ரஹ்ம வேத நாத பரமஸ்தீதி

தான்-அவர்களிடம்; உவாச ஹ-கூறினார்; அஹம்-நான்; ஏதத்-இந்த; பரம்-மேலான; ப்ரஹம்-ஆன்மா; வேத-அறிந்தது; ஏதாவத்-இவ்வளவே; அத பரம்-இதற்கு மேலாக; ந அஸ்தி-இல்லை; இதி-என்று.

பொருள் : கடைசியாக பிப்பலாத முனிவர் அந்தச் சீடர்களிடம், மேலான ஆன்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்தது இவ்வளவே. இதற்கு மேலாக எதுவும் இல்லை என்று கூறினார்.

சீடர்கள் நன்றி கூறுதல்

8. தே தமர்ச்சயந்தஸ்த்வம் ஹி ந பிதா யோ ஸ்மாகமவித்யாயா
பரம் பாரம் தாரயஸீதி நம பரமரிஷிப்யோ நம பரமரிஷிப்ய

தே-அவர்கள்; தம்-முனிவரை; அர்ச்சயந்த-வழிபட்டு; த்வம் ஹி-நீரே; ந-எங்கள்; பிதா-தந்தை; ய-யார்; அஸ்மாகம்-எங்களை; அவித்யாயா-அறியாமைக் கடலின்; பரம்-மேலான; பாரம்-கரைக்கு; தாரயஸி-கூட்டிச் சென்றீர் ; பரமரிஷிப்ய-தெய்வ முனிவர்களுக்கு; நம-வணக்கம்.

பொருள் : அந்தச் சீடர்கள் ஆறு பேரும் பிப்பலாத முனிவரை வழிபட்டு கூறினர்:
நீரே எங்கள் தந்தை. அறியாமைக் கடலின் மேலான மறுகரைக்கு எங்களைக் கூட்டிச் சென்றவர் நீரே. உமக்கும் உம்மைப் போன்ற தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம். தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம்.

ஆன்ம அனுபூதி பெற்று, அதன்மூலம் மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டிய குருவாகிய பிப்பலாத முனிவரையும், ஆன்மீக வாழ்க்கையை நாடுகின்ற அனைவருக்கும் அருள் புரியக் காத்திருக்கும் மற்ற மகான்களையும் வணங்கி ஆறு சீடர்களும் விடைபெறுகின்றனர். இவ்வாறு இந்த உபநிஷதம் நிறைவுறுகிறது.

இதி ப்ரச்னோபநிஷதி ஷஷ்ட்ட: ப்ரச்ன:

பிரச்ன உபநிஷதம் நிறைவுபெறுகிறது.

கருத்துகள் இல்லை: