சனி, 7 செப்டம்பர், 2019

14. பிரசேதசர்களின் இலட்சியம்

பராசர முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே! பிருது மன்னனுக்கு அந்தர்த்தானன்; வாதி என்றும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அந்தர்த்தானன் திருமணம் புரிந்து கொண்டு சிகண்டி நீ என்னும் மனைவியிடம் ஹவிர்த்தானன் என்ற மகனைப் பெற்றான். அவனுக்கு அக்கினியின் மகளான தீக்ஷிணையிடத்தில் பிராசீனபர்ஹி, சுக்கிரன், கயன், கிருஷ்ணன், விரசன், அசினன் என்று ஆறு குமாரர்கள் உண்டாயினர். அவர்களில் ஹிவர்த்தானனின் மூத்த மகனான பிராசீனபர்ஹி என்பவன், பிராசீனக்கிரகங்களான தருப்பைகளை பூமியில் பரப்பி யக்ஞங்கள் செய்ததால் அவனுக்கு பிராசீனபர்ஹி என்ற பெயர் உண்டாயிற்று. அவன் சமுத்திரனின் புதல்வியான சுவர்ணை என்பவளைக் கல்யாணம் செய்து கொண்டு பிரசேதர்கள் என்னும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தனுர் வேதத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே பயனை அபேட்சித்து, ஒரே தர்மத்தைச் செய்து, சமுத்திர நீரில் பதினாயிரம் ஆண்டுகள் மூழ்கியிருந்து தவஞ்செய்தார்கள். ஏனெனில், பிரும்மாவின் கட்டளைப்படி பிராசீனபரிஹியானவன் பிரஜைகளை அபிவிருத்தி செய்ய நினைத்தான். தன் புத்திரரான பிரசேதசர்களை நோக்கி, பிள்ளைகளே! வேததேவனான பிதாமகர், பிரஜாவிருத்தி செய்யும்படி என்னை நியமித்தார். நான் அப்படியே ஆகட்டும் என்று அவரது கட்டளைக்கு இசைந்தேன். ஆகையால், நீங்கள் எனக்குப் பிரியமாகும்படிப் பிரஜாவிருத்தி செய்யுங்கள் என்றார். பிரசேதசரும் தந்தையின் வாக்கை ஏற்று, ஐயா! நாங்கள் பிரஜாபிவிருத்தி செய்யத்தக்க ஆற்றலையுடையவராக, எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அதை விளங்கச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

பிராசீனபரிஹி தன் புத்திரர்களைப் பார்த்து, ஸ்ரீவிஷ்ணுவை ஆதரித்து ஒருவன் தன் இஷ்டத்தைப் பெறுவானே அல்லாமல், வேறு ஓர் உபாயத்தினாலும் இஷ்ட சித்தியைப் பெறமுடியாது. இனி நான் சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆகையால் உங்கள் இஷ்டம் சித்தியாக வேண்டும் என்று விரும்பினால் ஸ்ரீகோவிந்தனை ஆராதனை செய்யுங்கள். பிரஜாவிருத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள், புருஷனுக்குத் தர்மார்த்த காம மோக்ஷம் என்கின்ற நான்குவித புருஷார்த்தங்களிலே அபிலாஷையுண்டானால், ஆதியந்தரகிதனும் பகவானுமான புரு÷ஷாத்தமனை அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் பிரும்மா ஜனார்த்தனனை ஆராதித்துத் தான் சிருஷ்டிக்கும் ஆற்றலைப் பெற்றான். அதுபோல், உங்களுக்கும் அச்சுதனை ஆராதிப்பதால் பிரஜா விருத்திக்குரிய சாமார்த்தியமும் உண்டாகும்! என்று சொன்னான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் பத்துப் பேரும் தந்தையின் வாக்குப்படி தவஞ்செய்ய நிச்சயித்தார்கள். அதனால் சமுத்திரத்திலே மூழ்கி ஏக சிந்தனையுடன் சர்வலோக சரண்யனும் ஜகத்பதியுமான ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமரைகளில் மனதை நிறுத்தி, பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்த வண்ணம் சகல அபீஷ்டங்களையும் வழங்கவல்ல லக்ஷ்மி நாராயணனை மனமாரத் துதித்தார்கள். இவ்வாறு பராசரர் கூறிவரும்போது மைத்ரேயர் அவரை நோக்கி முனிவரே! பிரசேதசர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபகவானைத் துதித்தார்கள் என்றீர்கள். அந்தத்தோத்திரத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார். அதற்குப் பராசரர் பிராமண உத்தமரே! பக்திப் பரவசத்தினால் தன்மயமாய் சாகா ஜலத்தில் நின்று கொண்டு, பிரசேதசர்கள் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸ்துதியைச் சொல்கிறேன். அமைதியாகக் கேளுங்கள்! என்று கூறலானார்.

சகலமான சப்தஜாதங்களும் எங்கே சென்று நிலைபெறுமோ அத்தகைய சகல உலகங்களுக்கும், சிருஷ்டி சங்காரகர்த்தாவான பரமபுருஷனை நாங்கள் வணங்குகிறோம்! சூரிய சந்திராதி சோதிக் கணங்களையும் பிரகாசிக்கச் செய்யும் அந்தப் பிராகிருத ஜோதிமயனும் உபமானரகிதனும் நுண்ணிய ரூபனும், கால பரிச்சேதமில்லாதவனும் சராசரத்மகமான ஜகத்துக்குக் காரண பூதனுமான ஸ்ரீவிஷ்ணு மூர்த்திக்குத் தெண்டஞ் சமர்ப்பிக்கிறோம்! எவனுக்குப் பகலானது முதல் ரூபமாகவும் இரவு இரண்டாவது ரூபமாகவும், சக்தி மூன்றாவது ரூபமாகவும் இருக்குமோ காலவடிவான அந்தப்பரந்தாமனுக்குத் தண்டனிடுகிறோம். எவன் அமிர்தமாகித் தினந்தோறும் தேவதைகளாலும் பிதுர்க்களாலும் உண்ணப்படுகிறானோ எவன் ஓஷதிகளைக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஜீவனாக விளங்குகிறானோ, அந்தச் சந்திரரூபியான பகவானுக்குத் தண்டனிடுகிறோம். எவன் உஷ்ணமயமாகித் தனது கிரணங்களால் இருளைப் போக்கி ஆகாயத்தை ஒளிரச் செய்து கொண்டு, தாபத்திற்கும் சயத்திற்கும் ஜலத்திற்கும் காரணமாக இருக்கிறானோ சூரியாத் மகனான அந்தப் பகவானுக்குத் தண்டனிடுகிறோம்! எவன் கடினமான ரூபமுள்ளவனாய் இந்தவுலகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு, சப்த, ஸ்பரிச, ரூப, ரச கந்தங்களுக்கு ஆசிரயமாய் விளங்கிறானோ அந்தப் பூமிஸ்வரூபியான எம்பெருமானை வணங்குகிறோம்! சுக்கிலமும் சுரோணிதமுமாய், உலகங்களுக்குக் காரணமாக இருக்கிற ஜலம் என்பது யாதோ, பக்தாக்ஷகனுடைய அந்த ஸ்வரூபத்துக்கு வந்தனஞ் செய்கிறோம். எவன் சகல தேவதைகளுக்கும் மூலமாக இருந்து கவ்யத்தைப் புசிக்கிறானோ, அந்த அக்னி ஸ்வரூபியான பரமாத்மாவுக்குத் தெண்டனிடுகிறோம்! பிராண அபானதி ரூபமாகச் சரீரங்களிலே இருந்து கொண்டு, எப்பொழுதும் சுவாசிப்பது போன்ற செயல்களைச் செய்பவனாகவும், ஆகாயத்தினின்று முற்பன்னனாயும் இருக்கிற வாயுதேவதா ஸ்வரூபியான ஜெகதீஸ்வரனுக்குத் தெண்டனிடுகிறோம்! எவன் சர்வபூதங்களுக்கும் அவகாசம் கொடுத்து, அனந்தமூர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கிறானோ அத்தகைய ஜகத்துக்கு கர்த்தாவாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரணாமஞ் செய்கிறோம்! எவன், க்ஷரமும் அக்ஷரமும் ஆன இந்திரிய ஸ்வரூபியாய், சப்தாதி விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு, ஞானத்துக்கு ஆதாரமாக இருக்கிறானோ, அந்தப் பிரணதார்த்திஹரனான் பெருமானுக்குத் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்! இந்திரியங்களாலே கிரகிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களை ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்று சொல்லப்பட்ட அந்தக்கரண சொரூபியான சர்வேசுவரனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

அளவில்லாதவனான எவனிடத்திலிருந்து சகல பிரபஞ்சமும் இருக்கிறதோ, எவனிடத்திலிருந்து அவை உண்டாயிற்றோ, எங்கே லயிக்கிறதோ, அந்தப் பிரகிருதி ரூபமுடையவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்! எவன் பிராகிருதமான சத்வாதி குணங்களல்லாமல் சுத்தனாக இருந்து பிரகிருதி சம்பந்தமுடைய சத்துவாதி குணங்களைக் கொண்டவனைப் போலப் பிராந்தியினால் தோற்றமளிக்கிறானோ அந்த ஜீவாத்மா ரூபியான புரு÷ஷாத்தமனுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம். அறிவு குறுகுவதும் விரிவதுமான விகாரமில்லாதவனும், பிறப்பற்றவனும், சுத்தனும் பிரகிருதி சம்பந்தமில்லாதவனும், பிரகிருதி புருஷர்களைவிட உயர்வுள்ளவனுமாக இருக்கிற மூத்த ஜீவன் உண்டோ அந்த ஸ்வரூபத்தில் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்! தீர்க்கமும் ஸ்தூலமும் சூட்சுமமும் ரத்தமும் நீலமுமல்லாமல் இருப்பதாய், ஒட்டுதலும் சாயையும் தேகமும் அவயவங்களும் இல்லாததாய், இடைவெளி இல்லாததாய் இன்ப துன்பமுற்றதாய் சப்த ஸ்பரிச ரூபரச கந்தங்கள் இல்லாததாய், கண் மூக்கு காது முதலியவையும், வாக்கு பாணி பாதாதிகளும், அந்தக்கரணமும் இல்லாததாய் நாமே தோத்திரங்களும் அன்னபானாதிகளில் உண்டாகும் சுகமும்; தன்னைவிட வேறொரு தேஜஸும் தனக்கு ஒரு காரணமும் இல்லாததாய்; பயம் பிரமம் நித்திரை ஜனன மரணம் முதலிய குற்றங்கள் இல்லாததாய், சலனமில்லாததாய், பரமேசுரத்துவாதி சகல கல்யாண குணங்களுடையதாய் யாவற்றுக்கும் இருப்பிடமாய், தனக்கு ஓர் ஆதாரமற்றதாய், வாக்கு மனம் இரண்டுக்கும் எட்டாததாய், கண்ணால் காணக்கூடாததாய், இவ்விதமாக எல்லாவிதத்திலும் உயர்ந்ததாய், பரமபிராப்பியமுமாய் விளங்கும் அந்த ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று பிரசேதசர்கள் எம்பெருமானைத் துதித்த வண்ணம் சமுத்திர ஜலத்தில் இருந்தவாறு பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்தார்கள். பிறகு ஷட்குண சம்பன்னனான ஹரி அவர்களிடம் கிருபை கூர்ந்து, அந்த சமுத்திர ஜலத்திலேயே பிரத்யட்சமானார். அப்பொழுது மலர்ந்த நீலோத்பல மலரிதழைப் போன்ற நீலச்சாயையுடன் பிரகாசிக்கும் திவ்வியத் திருமேனியோடும் கிரீட மகாகுண்டலங்களாகிய திவ்விய ஆபரணங்களோடும், சங்கு சக்கராதி திவ்ய ஆயுதங்களோடும், ஸ்ரீமந்நாராயணன் தோன்றி, பட்சியரசான பெரிய திருவடியின் (கருடனின்) திருத்தோளில் அமர்ந்து வந்து சேவை சாதித்தார். அவரைப் பிரசேதசர்கள் தங்கள் கண்குளிரக் கண்டு பக்திப் பரவசத்தால் தலைவணங்கித் தண்டப் பிரணமங்கள் செய்து, கைகூப்பி வணங்கி நின்றார்கள். பகவான் அவர்களை நோக்கி பிரசேதசரே உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த நான் உங்களுக்குப் பிரசன்னமானேன். உங்களுக்கு வேண்டும் வரங்களை கேட்பீராக என்று அருளிச் செய்தார். அவர்கள் மீண்டும்; ஸ்ரீயப்பதியை வணங்கி எமது தந்தையின் வாக்குப்படி நாங்கள் பிரஜாவிருத்தி செய்வதற்கு எங்களுக்குச் சாமர்த்தியம் ஏற்படும்படி கிருபை செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள். பகவான் அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார். பிரசேதசர்களும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் இச்சித்த வரத்தைப் பெற்று, கடலிலிருந்து எழுந்து தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

கருத்துகள் இல்லை: