சனி, 7 செப்டம்பர், 2019

6. பிருகு முதலியவர்களின் படைப்பு

சதுர்முகனாகிய பிரமதேவன்; பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்போது அவனுடைய சங்கல்பத்தினால் அவனது அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும்படியான தேக; இந்திரியங்களுடன் கூடிப்பிறந்த தேவமனுஷிய திரியத் தாவரங்களான சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தியடையாமற் போயின. அதைக்கண்ட பதுமகர்ப்பன் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி பிருகு புலஸ்தியர்: கிரது; அங்கிரசு; மரீசி; அத்திரி; தக்ஷர்; வசிஷ்டர்; நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களைத் தனது மனத்தாலே படைத்தான். அவர்கள் பிரம்மாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் பிரமாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் வைராக்கியத்துடன் மோட்சமார்க்க நிரதர்களாய்; பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் சர்வ சங்கப் பரித்யாகிகளாய் யோக நிஷ்டை பெற்று, காமக்ரோத மதாச்சரியங்கள் இல்லாதவர்களாய் கிருதார்த்தர்களாக இருந்தார்கள். அவர்கள் பிரஜா சிருஷ்டியைச் செய்யாமல் இருந்ததால் பதும கர்ப்பனுக்கு பொறுக்கமுடியாத குரோதம் உண்டாயிற்று. அப்போது மூன்று உலகங்களையும் எரித்துவிடும்படியான கோபாக்கினி ஜ்வாலைகள் பொருந்தியும் பயங்கரமாகப் புருவங்களை நெறித்துக் கொண்டும், குரோதத்தினால் ஜ்வலித்துக் கொண்டும் இருக்கிற பிரம்மாவின் லலாடத்திலிருந்து நடுப்பகல் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவரும், அர்த்தநாரி ரூபத்தைத் தரித்தவரான ருத்திரமூர்த்தி தோன்றினார்.

அந்த ருத்திரமூர்த்தி அதியுன்னத சரீரமுடையவராகவும், உக்கிர குணமுள்ளவராகவும் பாதியுடம்பு ஆணும் பாதியுடம்பு பெண்ணுமாகவும் விளங்கினார். அம்மூர்த்தியை பிரம்மா நோக்கி; இரண்டு விதமாக இருக்கிற நீயே உன்னைத் தனித்தனியாக பிரிப்பாயாக! என்ற சொல்லி அந்தர்த்தானமானார், அதன் பிறகு அந்த ருத்திரமூர்த்தியும், ஆண் பெண் உருவமாக இருந்த தன் உடம்பை பெண் உருவாகவும், ஆண் உருவாகவும் தனியே பிரித்து, வேறாகிப் பின்பு அந்தப் புருஷரூபத்தையும் பதினோறு விதமாகப் பிரித்து, பெண் ரூபத்தையும் பலவிதங்களாகப் பிரித்தார். அவை சவுமியங்களாகவும், பயங்கரங்களாகவும், காந்தங்களாகவும், கோரங்களாகவும், கறுத்தனவாகவும், வெளுத்தனவாகவும் பலவகைப்பட்டிருந்தன. பிறகு இரணியகர்ப்பன், பிரஜைகளை காக்கும் பொருட்டுத் தன்னுடைய அம்சத்தினாலே புத்திரன் ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் சுவாயம்புவமநு என்ற பெயரைப் பெற்று, பிரஜா பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தான். பிரம்மா, தம் அம்சத்தினால் தாமாகவே மநு என்ற புருஷன் ஆனதைப்போலவே, தமது பத்தினியின் அம்சத்தினாலே ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். அந்த மங்கை சதரூபை என்ற பெயர் கொண்டு தனக்குச் சரியான புருஷன் வேண்டும் என்று தவஞ்செய்து, தூய்மையாக இருந்தாள். அப்போது பிரமனின் கட்டளைப்படி சதரூபையை மநுமணந்து அவளிடத்தில் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு பிள்ளைகளையும் பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றான். பிறகு அழகும் குணமும் பொருந்திய இரண்டு பெண்களில், பிரசூதி என்பவனைத் தக்ஷனுக்கும், ஆகுதியை ருசி என்பவனுக்கும் மறுமணஞ்செய்து கொடுத்தான். ருசி என்பவன் ஆகுதி என்பவளைச் சேர்ந்து, யக்கியன் என்ற பிள்ளையையும் தக்ஷிணை என்ற பெண்ணையும் பெற்றான். பிறகு அந்த யக்கியன் தனக்குப் பத்தினியாகத் தன்னுடன் படைக்கப்பட்ட தக்ஷிணை என்பவனிடத்திலே பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர்.

அதுபோலவே தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண்களைப் பெற்றான். அவர்களிலே, சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை; புத்தி, லஜ்ஜை வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று கன்னிகைகளைத் தர்மனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான். அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும், லக்ஷ்மியிடத்திலே தர்ப்பனையும், துஷ்டியிடம் சந்தோஷனையும், புஷ்டியிடம் லோபனையும், மேதையிடத்தில் சுருதனையும், கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும், புத்தியிடம் போதனையும், லஜ்ஜையிடத்தில் விநயனையும், வபுவினிடத்தில் விவசாயனையும், சாந்தியினிடத்திலே ஷேமனையும், சித்தியிடம் சுகனையும், கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான். அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளிடத்தில் ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்றான். பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி, (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு), பிரீதி (அன்பு), க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை), அநுசூயை (தயை), ஊர்ச்சை (சக்தி), சுவாகை (சமர்ப்பணம்), சுவதை (துதி) என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும், அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்கினிக்கும், பிதுர்த்தேவதைகளும் மணஞ்செய்து கொடுத்தான். இது இப்படியிருக்க அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணைச் சேர்ந்து, அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும் நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான். அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றனர். அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை வேதனா என்பவர்களையே மணந்தார்கள். அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவைப் பெற்றாள். வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனைப் பெற்றாள். அந்த மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரே தசுக்களாய், மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.

முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள்! அவை நித்தியப் பிரளயத்துக்கு ஏதுக்கள், தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர். மநுவும் மநுவின் புத்திரர்களும் சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக நினைத்தவராயுமுள்ள நித்திய சூரஸ்திதிக்கு காரணமாவார்கள். இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பிராணிகள் யாவும் அநித்தியங்களாக இருக்க, நித்திய ஸ்திதியும் நித்திய பிரளயமும் உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்குப் பராசரர் பதில் கூறலானார். மைத்ரேயரே! பூதபாவனனும் அறியக்கூடாத சொரூபமுடையவனும் தடையற்றவனுமான ஸ்ரீமதுசூதனன் என்ற பெயரையுடைய பகவானே, தன் சக்தியினாலேயே சிறப்புடைய மநு முதலான அந்தந்த ரூபங்களைக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களை நடத்துகிறான். அவற்றை நித்தியங்கள் என்றேன். இனி பிரளய பேதங்களைப் பற்றிச் சொல்கிறேன். பிரளயமானது, நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம், நித்தியம் என்று நான்கு விதமாகும். அவற்றுள், எதனிடத்தில் ஜகத்பதியானவர் சயனிக்கிறாரோ அதுவே, பிரமனுடைய தனி அந்தியத்தில் உண்டாகும் நைமித்திகப் பிரளயமாகும். நான்முகப் பிரமனின் ஆயுள் முடிவில் பிரமாண்டம் உடைந்து சகல பூதங்களும் பிரகிருதியினிடத்தில் வயப்படுவது பிராகிருதப் பிரளயமாகும். யோகியானவன் ஞானதிசயத்தினால், அநாதி காம வாசனைகளால் செய்யப்பட்ட சங்கங்களையும் துறந்து, பரமாத்துமாவிடம் சாயுஜ்யத்தை அடைவது ஆத்தியந்திகப் பிரளயம் என்று வழங்கப்படும். சதுர்வித பூதங்களும் தத்தமது ஆயுள் முடிவில் மரணமடைவது நித்தியப் பிரளயம் என்று சொல்லப்படும். இனி, சிருஷ்டி பேதங்களைக் கேளும், பிரமன் பிறப்பதற்கு முன்பே, பிரகிருதியினால் மகத்தகங்கார தன்மாத்திரைகளை உண்டாக்குவது பிராகிருத சிருஷ்டி என்றும் தினப் பிரளயத்தின் முடிவிலே பிரஜைகளை உண்டாக்குவது நைமித்திக சிருஷ்டி என்றும் சொர்க்க நரகாதி போக அனுபவமான பிறகு ஜீவாத்துமாக்களே மனிதர், மிருகம், பறவை முதலான உருவங்களாகப் பிறப்பது நித்திய சிருஷ்டி என்றும் பவுராணிகர்கள் சொல்வார்கள். மைத்ரேயரே! ஜகத் காரண பூதரான ஸ்ரீவிஷ்ணு பகவான், சர்வபூத சரீரங்களிலேயும் இருந்து கொண்டே சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்கிறார்.

ஆனால் எம்பெருமான் எல்லாச் சரீரங்களிலேயும் எப்போதுமே இருக்கும்போது, சிருஷ்டியாதிகள் காலபேதத்தினால் உண்டாக வேண்டுவது ஏன் என்று கேட்பீர்கள். சகல பூதங்களிலும் சிருஷ்டி ஸ்திதி, சங்கார சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்குத் தக்கவாறே உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகள் மூன்றும் சத்வகுணம், ராஜஸகுணம், தாமச குணம் ஆகிய முக்குணங்களால் உண்டானவை. எவன் இவைகளுக்கு உட்படாமல் சர்வ சங்கவிமுக்தனாய், பிரம சாயுஜ்யத்தை அடைவானோ, அவன் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டான்!

கருத்துகள் இல்லை: