சனி, 23 மே, 2020

அம்பாளின் அழகினை கேசம் தொடங்கி பாதம் வரையில் ஒவ்வொரு அங்கமாக வர்ணிப்பதை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் நாம் காண்கிறோம்.

எந்த ஓர் ஆணும், உலகிலேயே உனக்கு மிக அழகாகத் தெரியும் பெண் யார் என்று கேட்டால், முதல் பதில் அம்மா என்றே வரும். இங்கே அழகு அன்னையின் அன்பினாலும், அக்கறையினாலும், காட்டும் பாசத்தினாலும் உள்ளத்தைக் கொள்ளையிட்டதால் வருவது.

சிலருக்கு அழகாகத் தெரிவது, சிலருக்கு அழகின்றித் தெரியும். எல்லாம் உள்ளத்தின் ஈடுபாட்டைப் பொருத்தது. தோல் கருப்பென்றோ, உடல் இளைப்பென்றோ கண்களுக்குப் புலனாகும் அழகைக் காணாது, உள்ளத்தின் அழகை உணர்ந்து ரசிப்பதாலே உலகம் உய்கிறது. இங்கே அம்பிகையின் அழகு, அவளின் அருள் கடாட்சத்தை முன்னிறுத்திக் காணச் செய்கிறது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், கேசாதி பாத வர்ணனை என 4ஆவது சுலோகத்தில் இருந்து, அம்பாளின் அழகு ஸ்வரூபம் தியானம் செய்யப் படுகிறது.

ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி எல்லையில்லாத அழகின் உருவமாய்த் திகழ்கிறாள். சுகந்தம் வீசும் சம்பக, புன்னாக, அசோக புஷ்பங்களின் நறுமணத்தை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தே கொண்ட கூந்தல் கற்றையை உடையவள் அம்பிகை.

அவள் நெற்றியில் திகழும் கஸ்தூரி திலகம்… மன்மதனுடைய வீட்டின் தோரணம் போன்ற புருவங்கள்… முகத்தில் உள்ள அழகு வெள்ளத்தில் துள்ளி விளையாடும் மீன்களைப் போன்ற கண்கள்… நட்சத்திரத்தின் பொலிவைப் பழிக்கும்படியான மூக்குத்தியுடன் கூடிய மூக்கு… சூரிய சந்திரர்களே தோடுகளாக விளங்கும் செவிகள்… பத்மராகக் கண்ணாடியைப் பழிக்கும் கன்னங்கள்…பவழ வாய்; சுத்த வி(த்)தையே முளைத்தது போன்ற அழகிய பல் வரிசை… – இப்படி அம்பிகையின் கட்புலனாகும் முக அழகு வர்ணிக்கப்படுகிறது.

பச்சைக் கற்பூரம் மணக்கும் தாம்பூலம், ஸரஸ்வதியின் வீணா நாதத்தினும் இனிய குரல்.. சொக்கனையும் சொக்க வைக்கும் புன்முறுவல்… – என அங்க அவயங்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் செயல் வெளிப்பாடு வர்ணிக்கப் படுகிறது.

மங்கல சூத்திரமும் அட்டிகையும் பதக்கமும் விளங்கும் கழுத்து.. காமேச்வரனுடைய விலையற்ற அன்பை விலைக்கு வாங்குவது போன்ற ஸ்தனங்கள்… நாபியாகிற பாத்தியில் இருந்து மெல்லிய கொடி போல் எழும் ரோம வரிசை; மூன்று மடிப்புக்களால் அழகிய வயிறு… சிவப்புப் பட்டாடை… சிறு கிங்கிணிகளுடன் கூடிய அரைஞாண், காமேசுவரன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் துடைகள், இரத்தினக் கிரீடங்கள் போன்ற முழங்கால்கள்… திரண்ட கணுக்கால்… ஆமை முதுகு போன்ற புறங்கால்.. வணங்குவோர் அகத்திருளைப் போக்கும் இரத்தின தீபங்களைப் போன்ற நகங்கள் பொருந்திய திருவடித் தாமரைகள்… – என, பாதத்தின் அழகுரூப வர்ணனையுடன் கேசாதி பாதாந்தமாக வர்ணனை முடிகிறது.

இவ்வளவு உவமை நயத்துடன் அழகுமிளிரத் திகழும் அம்பிகை, அன்பினால் சிவந்த உள்ளம் போல் அழகினால் சிவந்த திருமேனி உடையவள். அழகு மிக்க ஆபரணங்களுக்கு அழகு செய்யும் அவயங்கள் தோன்ற, அவள் அழகின் பொக்கிஷமாய்த் திகழ்கிறாள்.

 அம்பிகையை விட்டு இணை பிரியாது, அவளின் நாயகனாகிய காமேசுவரனுடைய இடது துடையில் அம்பிகை இன்புற்று அமர்ந்து திகழ்வது, கண் கொள்ளாக் காட்சியளிக்கும் அற்புதத் திருவுருவம்தான் என்று, அம்பிகையின் அழகு ரூபத்தை தியானிக்கச் சொல்கிறது

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்.
அம்பிகையின் ரூப லாவண்ய வர்ணனைக்குப் பின்னர் அம்பிகை தலைவியாகத் திகழும் ஸ்ரீநகரத்தைப் பற்றிய வர்ணனையையும், பின்னர் அம்பிகை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பண்டாசுரனை வதம் செய்யக் கிளம்பும் அழகும், அவளுடன் போருக்கு உடன் கிளம்பும் சக்திகளும் குறித்துக் கூறி, காமேசுவர அஸ்திரத்தால் பண்டாசுரனையும் அவன் நகரையும் தேவி அழிக்கும் காட்சியை வர்ணிக்கிறது. பின்னர் தேவி பரமசிவனாரின் நெற்றிக் கண் நெருப்பால் எரிந்து சாம்பலான மன்மதனை மீண்டும் தன் சக்தியால் உயிர்ப்பித்து, உலகம் உயிர்ப்புடன் திகழ வழி செய்கிறாள்.

கருத்துகள் இல்லை: