சனி, 23 மே, 2020

*தேவி மஹாத்மயம்*

2) *வைக்ருதிக ரஹஸ்யம்.-*

ரிஷி சொன்னார்- ஓம். சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுடையவள் தேவி. அவளே சர்வா, சண்டிகா, துர்கா, பத்ரா, பகவதி, ஆவாள்.

ஹரியின் யோக நித்ராவாக இருக்கும் பொழுது, தமோ குணம் நிறைந்த மஹா காளியாவாள். இவளை மது கைடப அசுரர்களை வதம்  செய்யும் பொருட்டு, ப்ரும்மா

எழுப்பினார். அவளும் மாயையாக வந்தாள். பத்து வாய், பத்து புஜங்கள், பத்து கால், கைகள், முப்பது விசாலமான கண்கள், பற்கள் என்று பயங்கரமாக இருந்தாலும், மஹாலக்ஷ்மியால் உருவாக்கப் பட்டவளாதலால் தனித் தன்மையுடையவளாக கவர்ச்சியாகவே இருந்தாள். கைகளில், வாள், பாணம், கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்ற ஆயுதம், இவைகளையும், பரிகம், கார்முகம், சிர்ஷம் என்பவைகளையும்  வைத்திருந்தாள். இவளே வைஷ்ணவி மாயா. மஹாகாளியே இவள். எளிதில் இவளை நெருங்க முடியாது. வணங்கி ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வசப்படுவாள்.

அனைத்து தேவ சரீரங்களிலும் இருந்து, தோன்றிய மஹாலக்ஷ்மி, மஹிஷமர்தினி என்ற பெயர் பெற்றவள். வெண்ணிறமும், அதை விட வெண்மையான ஸ்தனங்களும், கருமையான புஜங்களும், சிவந்த மத்ய பாகமும், பாதங்களும், கருமையான முழங்கால்களும், அழகிய பின் பாகமும், சித்ர விசித்ர ஆபரணங்களுமாக, வாசனைப் பொருட்கள் நிறைந்த அங்க ராகங்களுமாக, காந்தி, உடலமைப்பு, இவைகளால் மங்களகரமாக , விளங்குபவளுமாக, பதினெட்டு புஜங்களும், சில சமயம், ஆயிரம் கைகளுடையவளுமாக, சதியான இவளை பூஜிப்பவர் சொல்வர். இவள் கைகளிலுள்ள ஆயுதங்கள் – அக்ஷ மாலா, கமலம், பாணம், அசி என்ற வாள், குலிசம், கதை, சக்கிரம், த்ரிசூலம், பரசு, சங்கம், கண்டா- மணி, பாசக்கயிறு, சக்தி, தண்டம், சர்ம, சாபம், பான பாத்ரம், கமண்டலு, இந்த ஆயுதங்களுடன் கமலத்தில் அமர்ந்தவளான மஹா லக்ஷ்மி, அனைத்து தேவர்களும் ஒன்றாக விளங்கும் மகா சக்தி ஆவாள். இந்த விதமாக பூஜிப்பவர்கள், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ப்ரபுவாக, அரசனாக ஆள்வான்.

அதே போல, சத்வ குணம் நிறைந்த கௌரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவளே சாக்ஷாத் சரஸ்வதி என்பவளாவாள். அவளே சும்பாசுரனை அழித்தவள். அதன் பொருட்டு எட்டு புஜங்களையும், பாண முஸலங்களையும், சூல, சக்கரங்களையும், சங்கையும், கண்டா என்ற மணி இவை தவிர லாங்கலம், கார்முகம் என்பவைகளையும் தரித்தவள். பக்தியுடன் இவளை நன்றாக பூஜை செய்பவர்களுக்கு சர்வஞத்வம் – அனைத்தையும் அறியும் சக்தி என்பதைத் தருவாள். இவளே நிசும்ப மதினி- நிசும்பனை சம்ஹாரம் செய்தவள். அரசனே, இவைகள் தான் அம்பிகையின் ரூபங்கள். இவர்களை உபாசிக்கும் விவரங்களையும் சொல்கிறேன் கேள்.  பூமியை ஆளும் அரசனே. ஜகன்மாதாவின் பல விதமான உபாசனை முறைகளையும் தெரிந்து கொள்,

மஹாலக்ஷ்மியை பூஜை செய்யும் பொழுது, மஹா காளி, மஹா சர/ஸ்வதி – இவர்களை முறையே, தெற்கு, வடக்கு திசைகளில் பூஜிக்க வேண்டும். பின் பாகத்தில் இரட்டையர்களான மூவரும் இருக்க வேண்டும். ப்ரும்மா, ஸ்வரா என்பவளுடன் மத்தியிலும், ருத்ரன் கௌரியுடன் தென் பாகத்திலும், இடப் பக்கத்தில், லக்ஷ்மி தேவியுடன் ஹ்ருஷீகேசனையும், முன் பாகத்தில் மூன்று தேவதைகளையும், பதினெட்டு கைகளையுடைய ரூபம் மத்தியிலும், அவளது இடப்பக்கத்தில் பத்து முகங்களையுடையவள் என்ற பொருளில் தசானனா என்பவளையும், தென் பாகத்தில் எட்டு கைகளையுடைய லக்ஷ்மியை மஹதி என்றும் பூஜிக்க வேண்டும்.

பதினெட்டு கைகளையுடைய தேவியாக பூஜிக்க நினைத்தால் , நராதிபனே, இந்த தசானனா, தென் பாகத்திலும் எட்டு கைகளையுடையவளாக வடக்கிலும் வைக்க வேண்டும்.

இடர்கள் தீர, கால ம்ருத்யு இவர்களையும் பூஜை செய்ய வேண்டும். எட்டு கைகளையுடையவளாக, சும்பாசுரனை வதைத்தவள், அவளுடைய ஒன்பது சக்திகளையும் பூஜிக்க வேண்டும். அத்துடன் ருத்ர, மற்றும் வினாயகரையும் பூஜிக்க வேண்டும். நமோ தேவ்யா என்ற மந்திரத்தால் மஹா லக்ஷ்மியை அர்ச்சிக்க வேண்டும். மூன்று அவதாரங்களை அர்ச்சிக்கும் மந்திரங்கள், துதிகளைச் சொல்ல வேண்டும். மஹிஷ மர்தினி – எட்டு கைகளுடையவள். மஹா லக்ஷ்மியே, மஹா காளி, மஹா சரஸ்வதி என்றும் அழைக்கப் படுவர். சர்வ லோக மஹேஸ்வரி, புண்ய பாபங்களை நிர்வஹிப்பவள்.  மஹிஷனை வதைத்தவள் என்று, ஜகத்ப்ரபுவே பூஜித்தார். சண்டிகா பகவதீ என்ற இவளே, பக்த வத்ஸலா. அர்க்யம் முதலானவைகளும், அலங்காரங்களும், கந்த புஷ்பங்கள், அக்ஷதைகள், தூப தீபங்கள், பல விதமான நைவேத்யங்கள், ப்ரணாம, ஆசமனியங்கள், சுகந்தமான சந்தனம், கர்பூரம் சேர்த்த தாம்பூலங்கள், இவைகளை பக்தி பாவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இடது பாகத்தில், தேவியின் எதிரில் மகா அசுரனின் சிதைந்த தலையை வைக்க வேண்டும், இவனும் தேவியின் கரத்தால் வெட்டுண்டதால் சாயுஜ்யம் என்ற பதத்தை அதைந்தான் அன்றோ. தென் பாகத்தில் தேவியின் முன் தர்மமே உருவான சிங்கம் விளங்கும். இது தேவியின் வாகனம்.

இதன் பின் மனம் ஒன்றி தேவியை துதிக்க வேண்டும். கைகூப்பி வணங்கியபடி, இந்த சரிதங்களை சொல்லி துதிக்க வேண்டும். மத்யம சரிதம் என்ற ஒரு அத்யாயம் மட்டுமாக துதிக்கலாம். மற்ற பகுதிகளை தனியாக சொல்வதில்லை. பாதி சரித்திரத்தில் நிறுத்தக் கூடாது. அது பாதி ஜபம் – என்பதால். பிரதக்ஷிண நமஸ்காரங்கள், தலியில் அஞ்சலி செய்பவனாக ஜகன் மாதாவிடம் அபராத க்ஷமா என்பதை செய்ய வேண்டும். முடிந்தால் பிரதி ஸ்லோகத்திற்கும் பாயசம் வைவேத்யம் செய்யலாம்.

எள், நெய், சுத்தமா ஹவிஷ் முதலியவையும் நைவேத்யம் செய்யலாம். ஸ்தோத்ர மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  பின் நாம பஜனைகள், ஆத்ம நிவேதனம் என்ற பாவனையுடன் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றி தேவியை பூஜிப்பவன், சகல விதமான போக்யங்களை இக லோகத்தில் அனுபவித்து பின் தேவியின் சாயுஜ்யம் என்ற பதவியை அடைந்து விடுகிறான். பக்த வத்ஸலாவான இந்த தேவியை பூஜிக்கத் தெரியாதவன், தெரிந்தும் செய்யாதவன், புண்யங்கள் அழிய, தேவியினாலேயே வதைக்கப் படுவான். பூபால, அதனால், பூஜை செய். சர்வ லோக மஹேஸ்வரி இவள். உசிதமான விதத்தில் பூஜை செய். சுகத்தை அடைவாய்.

கருத்துகள் இல்லை: