சனி, 23 மே, 2020

பாலா? பாதுகையா?
ஆனந்த தாண்டவபுரம் என்ற சின்ன ஊரில் பெரியவா முகாம். பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் பெற்ற ஒரு சிறுவனுக்கு சந்த்ரமௌலீஶ்வரர் அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் பாலை ஸேகரித்து பூஜைக் கட்டில் கொண்டு வந்து வைக்கும் பொறுப்பு குடுக்கப்பட்டது!
ஒருநாள் காலை குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு தன் திருவடிகளை தண்ணீரில் நனைத்து "விளையாடி" கொண்டிருந்தா பெரியவா. பக்கத்தில் கைங்கர்யம் பண்ணும் சின்னப் பையன்கள் இருந்தனர். அந்த ஸமயம், ஒரு பக்தர் பாலை ஒரு பாத்ரத்தில் கொண்டு வந்து பெரியவா முன் பணிவோடு நின்றார்.
"என்னது?"
"அபிஷேகத்துக்கு பால்........"
"செரி...செரி...வை"
அந்த பக்தர் கொஞ்சம் தள்ளி அந்த பால் பாத்ரத்தை வைத்தார்.
கொஞ்சநேரத்தில் பெரியவா எழுந்து நடக்க ஆரம்பித்ததும், வேறொரு பையன் அந்த பால் பாத்ரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு பெரியவா பின்னால் நடக்க ஆரம்பித்தான். இதைப் பார்த்ததும், பால் கைங்கர்யம்" பண்ணும் பையனுக்கோ ஒரே ஆத்திரம்! ஏனென்றால், அது அவனுக்கு குடுக்கப்பட்ட கைங்கர்யம். அவனுடைய உரிமை! இவன் எப்படி அதை தட்டிப் பறிக்கலாம்?
பெரியவாளோடேயே நடந்து கொண்டிருந்தாலும், மெல்ல முணுமுணுவென்று " டேய்! பாலை மரியாதையா எங்கிட்ட குடுத்துடு....இல்லே....தொலைச்சுப்புடுவேன்! குடுடா......." என்றான்.
அந்தப் பையனோ காதில் விழாதமாதிரி பெரியவாளோடு போய்க் கொண்டிருந்தான்.
ஆனால் பெரியவா சட்டென்று நின்று, தன் பாதுகைகளைக் கழற்றி "பால் கைங்கர்யம்" பையனிடம் குடுத்து "இந்தாடா....இதை தூக்கிண்டு வா. அதுல ஏதோ குத்தறது" என்றார்.
மஹா மஹா பாக்யசாலியான அந்தப் பையன் ஸ்ரீராமனின் பாதுகையைத் தாங்கிய பரதாழ்வார் போல் புளகாங்கிதமடையவில்லை, மேனி சிலிர்க்கவில்லை, ஆனந்தத்தின் உச்சியை அடையவில்லை. பாவம்! சின்னப்பையன்தானே! மனஸ் முழுக்க "பால் கைமாறிப் போச்சே!" என்ற கோபம்.
எனவே அந்த இன்னொரு பையனைப் பார்த்து "மடத்துக்கு வா.......ஒதைப்பேன்..செருப்பாலேயே அடிப்பேன்" என்றெல்லாம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி பொருமிக்கொண்டே வந்தான். மனம் முழுக்க த்வேஷம்! ஆனால் அவனுடைய பாக்யம் செய்த கைகளிலோ,பெரியவாளுடைய பாதுகைகள்!
முகாமுக்கு வந்ததும் ஸ்ரீ பாதுகையை பூமியில் வைத்தான். பெரியவா பாதங்களில் அது மறுபடியும் தஞ்சம் அடைந்தது. பொருமி பொருமி சூளுரைத்தபடி, அந்தப் பையனை நன்றாக வெளுத்துக் கட்டிவிட்டான்!
அன்று ஸாயங்காலம் ஒரு வீட்டுத் திண்ணையில் பெரியவா வந்து உட்கார்ந்து கொண்டார். சுற்றி கீழே தரையில் எல்லாரும் அமர்ந்து கொண்டனர். பெரியவா டக்கென்று பேச ஆரம்பித்தார்.....
"இன்னிக்கு....பாலா? பாதுகையா?...ங்கற தலைப்புல பேசப் போறேன்"
பெரியவா பண்ணின உபன்யாஸங்களுக்கு கணக்கே கிடையாது...ஆனால், " இன்னிக்கி, இன்ன topic பத்தி பேசப்போறேன்" என்று, தலைப்புக் குடுத்து எதுவும் பண்ணியதில்லை என்பதால், எல்லாருக்கும் ஆச்சர்யம்!
பெரியவாளின் மதுரமான குரல் ஒலித்தது.....
"நந்திக்ராமத்ல எதுக்கு பாலாபிஷேகம் ஆச்சு தெரியுமோ?.........பாதுகைக்கு! ஸாதாரணமா கால்ல போட்டுக்கறதை செருப்புன்னு சொல்லுவா.......ஆனா, அதையே ஸன்யாஸிகள் போட்டுண்டா...அதுதான் பாதுகை...ன்னு சொல்லுவா. பரதன் ஸ்ரீ ராமனோட பாதுகையை ஸிம்ஹாஸனத்ல வெச்சு அபிஷேகங்கள்...அதுவும், பாலாபிஷேகம்! பண்ணினான்........அதுனால, பால் ஒஸத்தியா? இல்ல.... பாதுகை ஒஸத்தியா?" என்று கேட்டுவிட்டு அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், "கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்" என்று புண்டரீகம் போட்டுவிட்டு உபன்யாஸத்தை முடித்துவிட்டார்.
"பால் கைங்கர்ய"த்துக்கோ, பொட்டில், ஸம்மட்டியால் அடித்த மாதிரி உறைத்தது!
"எவ்ளோவ் பெரிய பாவி நான்! ரொம்ப ரொம்ப ஒஸந்த பாதுகையை எங்கிட்ட குடுத்து எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கா பெரியவா! பாதுகைல ஏதும் குத்தவேயில்லே....எனக்கு அந்த பாக்யத்தை குடுக்கணும்...ங்கறதுக்காக, மஹாப்ரபு, தான்... வெறும் பாதத்ல நடந்துண்டு அப்டி ஒரு நாடகம் நடத்தியிருக்கா! நான் பைத்தியக்காரத்தனமா அதை புரிஞ்சுக்காம, அதோட அந்த பையனையும் போட்டு தலைகால் புரியாம அடிச்சேனே! எனக்கு கெடச்ச பாக்யத்தை என்னால புரிஞ்சுக்க முடியாதபடி, ஸ்வாமி என் கண்ணை மறைச்சுட்டாரே!" என்று இன்றும் அந்த பக்தர் கண்களில் நீர் தளும்ப புலம்புகிறார்.

கருத்துகள் இல்லை: