சனி, 4 ஜூலை, 2015



சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம்.இந்த வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர்.அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள்.இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்றுமொரு வேதம் உண்டு.இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார்.யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார்.அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான்.அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்துவிட்டார் வைசம்பாயனர்.அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான்.அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர்.சீடர்கள் வழக்கம்போல வந்து வணங்கினார்கள்.ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார்.சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும்.இங்கே ஆச்சார்யரே பாவம் செய்துவிட்டார்.சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும்.வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம்.அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு?என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.
வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய்.அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை.நீ ஆசிரமத்தைவிட்டு வெளியே போ!என்று கோபத்தோடு சொன்னார்.யாக்ஞவல்கியருக்கு அதற்குமேல் கோபம்.ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை.அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல.என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள்.உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார்.அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.
யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை.கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார்.மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும்.வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார்.அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள்.இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர்.தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது.வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார்.பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார்.அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள்.அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீவைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார்.மறுக்க வழியில்லாமல் கொடுத்துவிட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும்.நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.
அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார்.அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம்.வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார்.அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது.நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக.நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய்.அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்துவைத்திருக்கிறார். எனது கடாட்சத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள்புரிந்து மறைந்தாள்.அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார்.சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர்முன் தோன்றினான்.(அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்துவிட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.) சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பிவிட்டார்.அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார்.யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்துவிட்டார்.அப்படி சூரியன் உபதேசம் செய்ததுதான் சுக்லயஜுர் வேதம்.

கருத்துகள் இல்லை: