வியாழன், 21 மே, 2020

ஸ்ருதி ஸீமந்த சிந்தூரி க்ருத பாதாம்ஜ தூளிகாயை நமஹ!

அம்பிகையின் பாதகமல துளிகளே வேத மாதாவின் வகிட்டினில் இருக்கும் ஸிந்தூரம்(அதாவது உபநிஷதமோ).  

"ஸீமந்த ஸிந்தூரி" என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வது போல், உச்சியிலே அணிந்து இருக்கிறாள். அலை அலையாய்ப் பரவும் கேசச் சுருள்கள் அந்த சூரியனின் கிரணங்கள் போல் இருக்கின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறம். நவரத்னங்கள் இருந்தாலும், "மனிதருள் மாணிக்கம்" என்று யாரையாவது உயர்த்திப் பேசும்போது, மாணிக்கக் கல்லையே உதாரணம் சொல்லுகிறோம்.

லலிதா ஸஹஸ்ரநாமமோ, அம்பிகையின் வர்ணனையை கேசாதி பாதாந்தமாகத் தொடங்குகிறது. "ஸம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத் கஸா" - "ஸம்பகம், அசோகம், புன்னாகம் போன்ற புஷ்பங்களின் வாசனையை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தில் கொண்ட கூந்தல்" என்று கேசத்தில் இருந்து தொடங்குகிறது.

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே!-இரங்கேல், உனக்கு என் குறையே?    
அபிராபி அந்தாதி 71.

அவள் அழகுக்கு ஏதேனும் ஒப்புமை உண்டா என்ன? இல்லை! அவளுடைய காலடிகள், சிவந்து இருக்கின்றன. எதனால்? வேதங்கள், அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கின்றன. அப்படி ம்றைகளாகிய வேதங்கள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, அவளுடைய காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!

இங்கே, லலிதா சஹஸ்ரனாமத்தினை நினைவு படுத்துகிறார் பட்டர். "ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரனாமம். அதனை இங்கே அப்படியே தமிழ்ப் படுத்துகிறார்.

அவள், சந்திரனைத் தம் முடியிலே சூடியவள். சந்திரசூடரின் ஒரு பாகமல்லவா! அந்தக் கோமளவல்லி, இனிமையான கொம்பு போன்ற தேவி இருக்கும்போது, நமக்கு என்ன குறை இருந்து விட முடியும்? நெஞ்சே, நீ ஏன் ஊக்கம் குறைந்து, வருத்தம் தோய்ந்து, அழுது கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன குறை இப்போது?

மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவரது பார்வையிலிருந்து, இந்தப் பாடலை நாம் பார்க்க வேண்டும். தேவி ஏதேனும் கருணை புரிந்தாலன்றி, மரணம் சர்வ நிச்சயம். அந்த சமயத்தில், அவளை மிக நிச்சயமாக நம்பி, அவள் அருள் புரிவாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இன்றி இருக்க வேண்டுமானால், எப்பேர்ப்பட்ட நம்பிக்கை அந்த அபிராமியின்மேல் இருந்திருக்க வேண்டும்? ஆவதும், அழிவதும், நிற்பதும், நடப்பதும், பிறப்பதும், இறப்பதும், எல்லாமும் அவளால்தான் என்பதிலே எத்தனை உறுதி இருந்திருந்தால், இப்படி இருக்க முடியும்!

நெஞ்சே! நீ ஏன் நம்பிக்கை தளர்ந்து போகிறாய்? அவள் பார்த்துக் கொள்வாள் ! உனக்கு இப்போது என்ன குறை வந்து விட்டது! அவள் பக்கத்திலேயே இருக்கும்போது, உனக்கு என்ன நேர்ந்துவிட முடியும்? எது நேர்ந்தாலும், அது அவளது அருளினால்தான் என்பது நிச்சயமானால், நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? கவலை உற்றிருக்கிறாய்? அவளது பாதாரவிந்தங்களிலே, அந்த வேதங்களே, எந்தப் பாதாரவிந்தங்களிலே நித்தம் வணங்கி நிற்கின்றனவோ, அந்தப் பாதாரவிந்தங்களிலே மனதை நிறுத்தி, உற்சாகமாக இரு. அவள் இருக்கும்போது, உனக்கு எந்த ஒரு குறையும் வந்துவிடாது என்று சொல்கிறார் பட்டர்.

கருத்துகள் இல்லை: