வியாழன், 21 மே, 2020

நம்முள்ளே அம்மையப்பனுடைய நினைப்பு எப்படி இருக்கவேண்டும் ஸ்ரீ பெரியவா அருள்கிறார்

சக்தியும் தீபமும் அதன் ப்ரகாசமும் போல, புஷ்பமும் அதன் ஸுகந்தமும் போல, தேனும் அதன் மாதுர்யமும் போல, பாலும் அதன் வெளுப்பும் போல, சொல்லும் அதன் பொருளும் போல ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாதபடி அல்லவா சேர்ந்திருக்கிறவர்கள்?அதனால் அவனுடைய அசைவுக்காக அவளுக்குத் தனி க்ரெடிட் கொடுத்தாலுங்கூட அவளையே அவனிடமிருந்து தனியாகப் பிரித்துவிட முடியாது. சிவ சக்திகளுடைய இந்த அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடியில் எந்நாளும் இருக்க வேண்டும். [மீண்டும்] சிவன், சக்தி என்பவர்களுடைய அன்யோன்ய உறவு நம் ஹ்ருதயத்தின் அடிவாரத்தில் எந்நாளும் இருக்க வேண்டும்.

சக்தி விலாஸத்தால் என்ன பண்ணினாலும் அதிலே சிவனுந்தான் சேர்ந்து இருக்கிறான். கஷாயத்தின் உறைப்பைக் குறைப்பதற்காக பாலுடைய மதுரமான ருசியைச் சேர்க்கே வேண்டும் என்றால் பாலிலிருந்து அந்த ருசியை மட்டும் பிரித்தெடுத்துச் சேர்க்க முடியுமா?சக்தி கார்யம் அத்தனையிலும் சிவ ஸம்பந்தமில்லாமல் செய்ய முடியாது.

ஒரு தெய்வத்தை ஸ்துதிக்கும்போது அதற்கே ஸர்வோத்கர்ஷம் [எல்லாவற்றுக்கும் மேலான நிலை]சொன்னால்தான் அதனிடமே மனஸ் ஆழப் புதைகிறது என்பதாலும், 'சிவனைவிட அம்பாள் உசத்தி', அல்லது 'அம்பாளைவிட சிவன் உசத்தி'என்று சொன்னாலும், அவர்கள் பிரிக்கவே முடியாமல் ஒன்றாக இருக்கிறவர்கள் என்ற எண்ணத்தை நம் ஹ்ருதயத்தின் அடி மூலையில் ஊறப் போட வேண்டும்.

கருத்துகள் இல்லை: