வியாழன், 21 மே, 2020

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந்
தான்தரு வாளே.

#திருமந்திரம்1348.

திருவருள் துணையால் சக்கரத்தில் தோன்றும் அம்பிகையின் திருவுருவினை உணர்ந்திருந்து, உள்ளத்தின் உள்ளே நோக்கினால், நோக்குவார்க்கு எங்கும் கலந்து பேரருள் பொழிவாள். அகத்தே மணி, யானை, கடல், புல்லாங்குழல்,மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய இன்னோசை பத்தும் ஒலித்திடும்.

அம்பிகையே சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள்புரிவாள். என்று திருமூலர் ஸ்ரீசக்கரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார்.

ஸ்ரீசக்கர தியானம் உயர்ந்த தியானமாகும். இதில் மனம் ஒருமுகப்பட்டு ஏகாக்கிர சித்தம் பெறுகிறது. இதுவே தியானம் வெற்றி பெற, சித்திகள் நமை வந்து அடைய சிறந்த மார்க்கமாகும்.

அம்பிகையைத் தியானித்தால் தொழுபவர்களுக்கு அவள் அருளாலே எல்லா வளங்களும், நலமங்களும் பெருகும்.காலனும் அணுகான்.

கதிரவனைப்போல பிரகாசிக்கலாம். நித்தர்களும் அம்பிகையான வாலைப் பெண்ணை தியானிக்காமல் தியானிக்காமல் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.

#ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற #ஆலயங்கள் :

#காஞ்சி #காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
#லலிதா  #ஸஹஸ்ர #நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள் ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

சென்னை-காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி.

சென்னை-நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்ரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ, 16 படிகளின் மேல் மகாமேருவுடன்  கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி.

நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.

திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்ரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி  நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.

கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.

காசி-அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்ப டுகிறது.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.

புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரம்மேந்திரர்.

கருத்துகள் இல்லை: