வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மரங்களின் அரசன் அரசமரம்

மரங்களின் அரசன் அரசமரம்

அரசமரத்தைக் கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம். காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது...."

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழை பெய்தே தீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....

நமது மண்ணின் மரங்களைப் பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரச மரத்திலிருந்தே துவங்க வேண்டும். அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும். எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால் தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில்  இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர்...

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டி விடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக் காரணத்தைச் சொன்னாலும் வெட்டி விடுவார்களோ என்கிற அக்கறை கூட அதன் கீழே சாமி சிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...

புத்தர்க்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம் தான். ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு தான் மூளைக்கான உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிக்கட்டுவதில்  பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்கு வளர்ந்த ஒரு மரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோ வரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்குத் தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனை பேருக்கு உதவுகிறது எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவு நேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.

இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத் தெளிவும் (ஞானம்) பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...

சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கியக் குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதைக் கடவுளாக்கி அதன் வேரினடியில் நீரை ஊற்றிச் சுற்றி வா... என அதன் கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தை மட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச் சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச் சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப் போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்பட வேண்டிய பொருள் காணாமல் போய் விட்டது.

அரசமரத்தைக் கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம் காரணம் போய் காரியம் மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது....

இந்தக் கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிது நேரம் அமர்ந்து பாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்து விட்டுச் செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத் தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லா மரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச் சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும் பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே. இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப் போல் காற்றையாவது காசு கொடுத்து வாங்காமல் இருப்போம்...

கருத்துகள் இல்லை: