செவ்வாய், 21 ஜனவரி, 2014

சோம்நாத் கோவில் – தோன்றிய வரலாறு


சோம்நாத் கோவில்: சோம்நாத் கோவில் துவாரகையைப் போன்றே கடற்கரையில் அமைந்துள்ளது. அது பன்னிரெண்டு “துவாதச” லிங்கங்களில் ஒன்றாகும். இதிகாச, புராணங்களில் இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே உள்ளன. சோம்நாத, ரெயில்வே ஸ்டேசன் கட்டப்படுவதற்கு முன்பு, வெராவல் ஸ்டேசன் தான் பிரதானமாக இருந்தது. 1948 வரை, பிரபாஸ் தீர்த் என்ற பெயர்தான் பிரபலமாக இருந்து வந்தது. பிறகு வெராவல் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது. அருகில் சீதலா என்ற இடத்தில் சூரியன் கோவில் உள்ளது. பாரசீகர் இவ்வூரை “மீனூர்” என்றழைத்தனர். அதாவது கடவுளின் நிழல் மற்றும் ஒளி என்று சேர்த்தழைக்கப்பட்டது. இங்கிருந்து, பல ஆசிய துறைமுகங்களுக்கு பொருட்கள் வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டன. பிறகு “அர்க் தீத்” அல்லது “பாஸ்கர தீத்” என்ற பெயர் சூரியவழிபாடு காரணமாக பிரசித்தியானது. இவ்வாறு ஒருபக்கம் சூரியன், மறுபக்கம் சந்திரன் என்று இருகுழுக்கள் உருவாகின. அவர்களும் தங்களை “சூரிய வம்சத்தினர்” மற்றும் “சந்திர வம்சத்தினர்” என்று அழைத்துக் கொண்டனர். “பிரபாஸ்” என்றால், சமஸ்கிருதத்தில் “ஓளி உள்ளது” என்று பொருள்.

குஜராத் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளின் இணைப்பு, தொடர்புகள்: ஒருகாலத்தில் அரேபியா முதல் குஜராத்தின் மூக்குப் போன்ற பகுதி வரை இருந்த நிலப்பகுதி எல்லாமே சேர்ந்திருந்தது. இதனால், இப்பகுதிகளில் சூரியன்-சந்திரன் வழிபாடு பிரசித்தியாக இருந்தது. அரேபியாவில் சந்திரன் மற்றும் கிழக்குப் பக்கமாக செல்ல-செல்ல சூரிய வழிபாடு இருந்தது. இதனால் தான், அரேபியாவில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஈரான் போன்ற பகுதிகளிலிருந்து, சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சந்திரனையும், சூரியனையும் தனித்தனியாக வைத்துக் கொண்டு, நேரம், நாட்கள் முதலியவை கணக்கிடப் பட்டன. சந்திரமாதம் 30 நாட்கள் மற்றும் சூரிய மாதம் / சௌர மாதம் என்பதில் சற்று அதிகமான நாட்கள் என்றிருந்தது. இரண்டையும் இணைத்தபோது, “அதிக மாதம்” என்ற கணக்கீட்டில் சரிசெய்யப்பட்டது

அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத்: சிவலிங்க வழிபாட்டின் தொன்மை, இந்த மத்தியத் தரைகடல் பகுதிகளில் அதிகமாகவே காணப்படுகின்றது. குரானில் “அல்லாவின் புத்திரிகள்” (daughters of Allah) என்று மூன்று பெயர்கள் காணப்படுகின்றன.

அல்-உஜ்ஜா
அல்-மனத்
அல்-லத்

இதில், அல்-மனத் என்பதுதான் சோம்நாத் என்று, முகமதியர் கருதியதாகத் தெரிகிறது. முகமது நபி மெக்காவில் இருந்த பண்டைய கோவில் வளாகத்தில் இருந்த விக்கிரகங்களை உடைத்தெரிந்ததாக சொல்கிறார்கள். ஒருகாலத்தில், மெக்கா உலகத்தின் மையப்பகுதி அல்லது நாபிப்பகுதி என்று கருதப்பட்டு, அங்கு வானியல் ரீதியாக அமைக்கப் பட்ட ஒரு கோவில் இருந்தது. நடுவில் ஒரு விக்கிரகம், அதைச் சுற்றி, 27 விக்கிரங்கள், அதையும் சுற்றி 360 விக்கிரங்கள் என்றிருந்தன. இவையெல்லாம், சூரிய மண்டலம் (Zodiac), நட்சத்திரக் கூட்டம் (Asterism), அண்டத்தின் 360 பாகைப்பிரிவுகள் (360 degrees divisions) என்று தெரிகிறது. முகமது நபி, விக்கிர ஆராதனை எதிர்ப்பு என்ற கொள்கையில், அவ்விக்கிரகங்களை எல்லாம், வானியல் மகத்துவம் அறியாது, உடைத்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், நடுவில் இருந்த விக்கிரகத்தை உடைக்க முற்பட்டபோது, அங்கிருந்த மக்கள் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால், உடைக்காமல் விடுத்தார். அதுதான் காபாவிலுள்ள கல், ஏதோ ஒரு விண்மீனின் பகுதி, எரிநட்சத்திரம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நடுவில் இருந்த செங்குத்துக் கல் மற்றும் சுற்றியிருந்த விக்கிரங்களில் அமைப்பு, சூரியமானியாக (Sun dial) செயல்பட்டது எனத்தெரிகிறது. இரவு-பகல் என்பததை குறிப்பிட, சூரியன்-சந்திரன் விக்கிரகங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

முஹமது நபி வழி பின்பற்றிய கனிஜி முஹமது: முகமது நபி எப்படி விக்கிரகங்களை அழித்தாரோ, அதே போல, பின்வந்த முகமதிய மதம் மாறியவர்கள், அவர் சொன்னதை மற்றும் செய்ததை உதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்றி வந்தனர். அத்தகைய முகமது நபி சொன்னது மற்றும் செய்தது என்பவை தொகுக்கப் பட்டு “ஹதீஸ்” என்றும் வழங்கப்பட்டது. இடைக்காலத்தில், கஜினி என்ற ஊரைச் சேர்ந்த முகமது, அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா விக்கிரகங்கள் எங்கிருக்கின்றன, அவற்றை அழித்தாலும் தானும் அவ்வாறே புகழ் பெறலாம் என்று தீர்மானித்தான். அவை கிழக்கில் உள்ளன என்று கஜினியில் வாழ்ந்த பிராமணர்கள் மூலமே அறிந்து கொண்டான். இதனால், பலமுறை அப்பகுதிகளுக்கு கொள்ளையெடிக்கச் சென்றான். அப்பொழுது சோமநாதபுரத்தில் இலிங்கம் இருந்தது. அதுதான், அல்-மனத் என்று (சோநாத் தன் அல்-மனத்) தீர்மானித்துக் கொண்டு அதனை உடைத்தான். ஆனால், அங்கிருந்தவர்கள், மறுபடி-மறுபடி அத்தகைய விக்கிரகத்தை உருவாக்கி, பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

விக்கிரகம் சாக்கு வைத்துக் கொண்டு கொள்ளையடித்த முறை: இதிலிருந்தே, அவர்கள் “விக்கிரங்களை” கடவுளாக பாவிக்கவில்லை, ஒன்றை உடைத்தால், மற்றதை வைத்துக் கொண்டு வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டான். இதனால், அவர்களது செல்வத்தின் சிறப்பை அறிந்து, அதனை ஒடுக்க தீர்மானித்தான். இதனால் தான், விக்கிரகத்தைக் கவர்தல், கவர்ந்த விக்கிரகத்தைத் திருப்பிக் கொடுக்க தங்கம் என்றெல்லாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இதனால், தங்கத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு பதிலாக கல்லினால் செய்யப்பட்ட விக்கிரங்கள் வைக்கப்பட்டன எனலாம். ஒரு குறிப்பின்படி, இலிங்கம் காற்றில் மிதந்து மிதந்து கொண்டிருந்தது என்றுள்ளது. அதாவது, காந்தங்களின் உதவியால் அது மிதந்து கொண்டிருந்தது என்றும் விளக்கம் கொடுத்தார்கள். அப்படியென்றால், கல்லில்லை, இரும்பினாலும் இலிங்கம் செய்யப்பட்டு வந்த பழக்கம் தெரியவருகிறது. இதனால் தான், ஏமாந்த கஜினி முகமது, தங்கம் கேட்டு கொடிய, குரூரக் காரியங்களில் ஈடுபட்டான்.

முதல் சோமநாதப்புரக் கோவில் (முதல் நூற்றாண்டு): பிரபாச பட்டிணத்தை இன்னொரு பாரம்பரியத்தின் படி பாசுபத வழிபாட்டு முறையோடு இணைக்கிறது. பாசுபத வழிபாட்டு ஆசாரியர்கள் பலர் இருந்திருக்கின்றனர். சரித்திரரீதியில், லகுலிஷ் [லகுட் + ஈஷ் = அதாவது கையில் கொம்பு அல்லது வேல் கொண்டவர்], என்பவர்நர்மதை நதிக் கரையில் உள்ள காயவரோனா என்ற இடத்தில் (பரூச்சிற்கு அருகில்) இரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர், பாசுபதமுறையின் கடைசி ஆச்சாரியராகக் கருதப் படுகிறார்.இவர் சிவனின் மறுஅவதாரமாகவே கொண்டாடப் பட்டார். இவர்தாம் பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர் என்றும் அல்லது ஏற்கெனவே இருந்த சைவத்தை சீர்திருத்தி அமைத்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இவர் ஆஜீவக ஜைனப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்து, சைவராக மாறினார் என்றும் எடுத்துக் கட்டுகின்றனர். அதாவது முதல் நூற்றாண்டு காலத்தில் ஜைனம் அங்கு வலுவிழந்தது என்றாகிறது.

மொஹஞ்சதாரோ பசுபதி சிற்பம் போன்று, சோமநாத கோவிலின், கூரைப்பகுதியில், தெற்குப் புறத்தில் ஒரு சிற்பம் இருந்தது. இதனால், முதல் சோமநாத கோவில் முதல் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கக் கூடும்.

இரண்டாம் சோமநாதப்புரக் கோவில் (ஏழாம்நூற்றாண்டு CE): பாசுபத வழிபாடு மறைந்த பிறகு, சோமநாதரின் முக்கியத்துவம் அதிகமானது. கார்லே மற்றும் நாசிக் கல்வெட்டுகள் பிரபாச தீர்த்ததில் ஸ்கைத்திய அரசன் நாஹபாணன் (Scythian conquerer Nahapana) வந்து வழிபட்டதாக இருக்கிறது.இதேபோல பாக்டீரிய கிரேக்க, பாரசிவ மற்றும் வகடக அரசர்களும் சிவனை வழிபட்டுள்ளனர். அதாவது இப்பொழுதைய வடக்கில், வடக்கிழக்கில் சிவன் வழிபாடு பரவியிருந்தது அல்லது ஏற்கெனவே இருந்ததை அறிய முடிகிறது. ஆனால், குப்தர் காலத்தைய (320-500) ஒரு கல்வெட்டுக் கூட காணப்படாதது ஆச்சரியமாக உள்ளது.

இதற்கு கே. எம். முன்ஷி, குப்தர்கள் விஷ்ணு பக்தர்களாக இருந்தமையால், அங்கு செல்லக் கூடாது என்ற முறை இருந்திருக்கக் கூடும் என்று ஹேஷ்யமாக குறிப்பிடுகிறார். ஆனால், இந்திய சரித்திரத்தைப் பொறுத்த வரைக்கும், குப்தா சந்திர குப்தா மற்றும் மௌரிய சந்திரகுப்தா இவர்களை அடையாளம் காணும் சிக்கல் இருந்துள்ளமையால், சுமார் 1,200 வருட காலக் கணக்கீடு இடைவெளி இருப்பதாக, இந்திய காலக்கணக்கீட்டு வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதன்படி பார்த்தால், அக்காலத்தில் குப்தர்கள் ஆட்சி செய்திருக்கவே மாட்டார்கள், அதனால், குப்தர் காலத்தைய கல்வெட்டு ஒன்று கூட காணப்படாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை எனலாம். ஹர்ஷனின் வழிவந்த தாரசேனா (640-649) இப்பகுதியை ஆண்டபோது, இரண்டாவது கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இடையில், இப்பகுதி பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. முதல் கோவில் இருந்த அதே இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது எனும் போது, பௌத்தர்கள் காலத்தில் முதல்கோவில் இடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாம் சோமநாதப்புரக் கோவில் (8-9 நூற்றாண்டுகள் CE): 725-26 CE காலக்கட்டத்தில், இப்பகுதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. 711 CEல் சிந்து அரேபியர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், அவர்கள் இப்பகுதிகளையும் தாக்க ஆரம்பித்தார்கள். காலிப் ஹிஷம் (724-743) ஜுனாயாத் என்பவனை கவர்னராக நியமித்தான். இவனுக்குப் பிறகு தமீம் என்பவன் கவர்னரான போது, அரேபியர் ஒரு படையுடன் 731-738 CE காலத்தில் இப்பகுதியில் நுழைந்தனர். புலிகேசி அவனிஜனஸ்ரயா என்பவன் இவர்களைத் தோற்கடித்தாலும், இடையே அரேபியர்கள் இக்கோவிலை அழித்திருக்கக் கூடும். இக்கோவிலின் பிரதான மண்டபம் இக்காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதால், இக்காலத்தில் மூன்றவது முறையாக இக்கோவில் கட்டப்பட்டதாதத் தெரிகிறது. 1025 வரை சோமநாதப்புரக் கோவில் சிறப்பாக விளங்கி வந்தது. அப்பொழுது தான் கஜின் முகமது படையெடுத்து வந்து இக்கோவிலை அழித்தான்.

நான்காம்சோமநாதப்புரக்கோவில் (1055-1066 CE): கஜினி சென்ற பிறகு, போஜ ராஜன் (1055-1066 CE) காலத்தில் ஆட்சிக்கு வந்தான். அப்பொழுது, சோமநாதர், சாளுக்கியர்களுக்கு காக்கும் கடவுளாக இருந்தார். சியக – II (Siyaka – II) 1045ல் தங்க துலாபாரம் கொடுத்ததாக கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அல்-பிருனி (1031 CE), மெக்கா எப்படி முகமதியருக்கு முக்கியமானதோ, சோமநாதபுரம் இந்துக்களுக்கு புனிதச்மானது என்று குறிப்பிட்டுள்ளார். அல்-பிருனி கட்ச் மற்றும் சிந்து பகுதிகளில் இருந்த பல சிவலிங்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம்சோமநாதப்புரக்கோவில் (1169 CE): இதற்குள் சித்தராஜ என்ற கூர்ஜர அரசன் 1144 CEல் ஜைன மதத்தைத் தழுவியதாக உள்ளது. 1169 CEல் இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டது என்றுள்ளதால், இடையில் மறுபடியும் இக்கோவில் இடிக்கப்பட்டது என்றாகிறது. ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் போது, இக்கோவில் தாக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு மறுபடி-மறுபடி இக்கோவில் இடிக்கப்படுவது, கட்டப்படுவது என்றுள்ளதால், இக்கோவில் இந்து மதத்தின் எழுச்சிற்கு ஒரு சின்னமாக அமைகிறது.

சோமநாத கோவில் மறுபடி-மறுபடி மக்களால் கட்டிப் புதுப்பித்து வந்த முறை, எழுச்சி: சோமநாத் கோவில், மற்ற கோவில்களுடன், முகமதியர்களால் பலமுறை சீரழிக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது, சூரையாடப்பட்டுள்ளது. ஆனால், மக்களும் விடாமல், அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

தேதி முகமதிய / முகலாய அரசன் / தளபதி கோவில் பாதிக்கப்பட்ட விதம்

1206 CEமுகமது கஜினி கஜினி முஹமது 17 முறை படையெடுத்து வந்தது கொள்ளையடிக்கத்தான்.

1298 CEஅல்லாவுத்தீன் கில்ஜி மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்மஹ்மூத் மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்
தில்லி படை மததுவேஷம் மற்றும் செல்வத்தைக் கொள்ளையடித்தல்

1396 CEஜாபர்கான் வாசி-உல்-உலக் கோவிலை இடித்து மசூதி கட்டினான், மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினான்.

1547 CEபோர்ச்சுகீசியர் கொள்ளை அடித்தனர்.

1659 / 1665 CEஔரங்கசீப் மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்

1701 CEமுஹமது ஆஸம் புனர்-நிர்மாணம் செய்யமுடியாத அளவிற்கு அழிக்க ஆணையிட்டான்.

சோமநாத கோவில் மறுபடி-மறுபடி மக்களால் கட்டிப் புதுப்பித்து வந்த முறை, நம்பிக்கையாளர்களின் உறுதியான மனப்பாங்கைக் காட்டுகிறது. “அழிப்பவர்கள்–உருவாக்குகிறவர்கள்” என்பதில் பங்குக் கொள்ளும் மக்களின் மனநிலையையும் எடுத்துக் காட்டுகிறது. “வன்முறை-அமைதியானமுறை” என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது மெய்ப்பிக்கப் படுகிறது. உருவ-வழிபாடு, உருவ-வழிபாடு-எதிர்ப்பு என்பது ஒரு மறைப்பு-மறுப்புவாதமாகக் கொண்டனரேயன்றி அவர்கள் உண்மைனின்று விலகித்தான் நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அதனால் தான் வன்முறையை, அழிப்பை, கொடுமைகளை, கொலைகளை மாற்றுமுறையாகக் கொண்டிருந்தாலும், எல்லா மக்களையும் மாற்றமுடியவில்லை. ஆகையால் தான் மக்கள் இக்கோவிலை விடாமல் புதுப்பித்து வந்துள்ளது ஒரு சாத்துவிகமான, அமைதியான, அஹிம்சை எழுச்சியைக் காட்டுகிறது. “நீ இடித்துக் கொண்டே இரு, நான் கட்டிக் கொண்டே இருக்கிறேன்” என்பது பலவீனம் அல்ல, பலம் தான் என்றும், மெய்ப்பித்தது.
 
 

கருத்துகள் இல்லை: