புதன், 18 டிசம்பர், 2013

நாகநாதஸ்வாமி கோவிலில் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது. இங்கு நாகநாதசுவாமியின் இடப்பாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் இறைவியின் முகத்தில் நிலவொளி படுவது சிறப்பு. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை நாக, கிளி, காளை, பூத, சிம்ம,கைலாச, யானை, அன்ன, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. கடந்த, 10ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 12ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று, 15ம் தேதி காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் சிறப்பு புஷ்பலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மதியம், 2 மணிக்கு சூரியபுஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின் சூரியபுஷ்கரணியின் நான்கு புறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்க, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம், 2.20 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. அதே நேரத்தில் சூரியபுஷ்கரணியில் நான்குபுறமும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் புனித நீராடி, சுவாமியை தரிசனம் செய்தனர். பின் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

கருத்துகள் இல்லை: