புதன், 18 டிசம்பர், 2013

வேதாந்த தேசிகர்

ஆன்மாக்களை உய்விக்க பகவான் பல நிலைகளை மேற்கொள்கிறார். குருவாக ஆச்சார்ய நிலையில் தோன்றி, அஞ்ஞானத்தை அழித்து, ஞானத்தை வளர்ப்பதும் அந்நிலைகளில் ஒன்று. அப்படிப்பட்ட ஆசார்ய நிலையில் அவதரித்து அஞ்ஞானத்தை அகற்றி ஞான விளக்கேற்றியவர் வேதாந்த தேசிகர். தமிழகத்தின் புண்ணிய நகரான காஞ்சிபுரத்தில் அனந்த சோமயாஜிகள், தோதாத்திரி அம்மையார் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களின் மகவாக அவதரித்தவர் வேங்கடநாத சம்மா. இளமையில் தேசிகருக்கு பெற்றோர் இப்பெயரையே சூட்டினர். இவரை திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீனிவாசனின் திருமணி அம்சம் என்று போற்றுவர். இவர் அவதரித்த தலம் தூப்பல் எனப்படும். தூப்பல் என்றால் தூய்மையான இடம் என பொருள்படும். காஞ்சிமாநகருக்குள் இப்பகுதி இருக்கிறது.தேசிகர் தன் இருபதாவது வயதிலேயே வேதாந்த ரகசியங்களை எல்லாம் முறைப்படி கற்றுத்தேர்ந்தார். தனது மாமனார் கிடாம்பி அப்புள்ளாரிடம் அருளுபதேசம் பெற்று வைந்யேய மந்திரத்தை கற்றுக்கொண்டார். பின்னர் இல்லறவாழ்வை மேற்கொண்டார். தேசிகர் நாவன்மை மிக்கவர். இவரது நாவன்மை இவரை சிறந்த பேச்சாளராக்கியது. பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்துவார். ஒருசமயம் தென் திருப்பதிகளை தரிசிக்க புறப்பட்டவர் திருவஹீந்திரம் கோயிலில் வந்து தங்கினார். அங்கு அவர் கருடாழ்வாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

ஸ்ரீஹயக்ரீவர் மந்திர உபதேசம் பெற்றதன் பயனாய் காட்சி தந்து வாக்குவன்மையை வழங்கி அருளினார். அங்கு தங்கியிருந்தபோது தன் நாவாற்றலால் சொற்பொழிவுகளையும், எழுதாற்றலால் பல நூல்களையும் இயற்றியவர். ஒருசமயம் தேசிகர் வறுமைப்பட்ட ஏழை அந்தண பிரம்மச்சாரியிடம் கருணை கொண்டார். ஸ்ரீ ஸ்துதி என்ற நூலை அருளிச்செய்து, காஞ்சிபுரம் தேவப்பெருமாள் கோயிலில் தாயாரின் சன்னதி முன்பாக பொன்மழை பொழிவத்தது கண்டு பக்தர்கள் அதிசயித்தனர். அந்த அந்தண பிரம்மச்சாரி தன் வறுமை நீங்கி வளம் பெற்றார். தேசிகரின் பெருமை நாடெங்கும் பரவியது. அவரிடம் பொறாமை கொண்ட ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு கிணறு வெட்டத் தெரியுமோ ? என கேட்டான். அமைதியாக புன்முறுவல் கொண்ட தேசிகர், உடன் ஒரு கிணற்றினை உண்டாக்கி, அவனது செருக்கை அடக்கினார். இன்றளவும் அக்கிணறு உள்ளது.சிற்பி ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு சிற்பம் வருமோ ? என ஆணவத்துடன் கேட்டான். உடன் தேசிகர் தமது உருவத்தையே விக்கிரகமாக அமைத்துக் கொடுத்தார். அந்த விக்ரகம் தேவநாத பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. வேறொரு, சிலரால் தூண்டப்பட்ட பாம்பாட்டி யொருவன் இவர் முன்னிலையில் பாம்புகளை எல்லாம் வெளியில் எடுத்து விட்டான். பாம்பைக் கண்டதும் அவரருகே நின்ற பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால், தேசிகர் அமைதியாக கருட தியானம் செய்தார்.

கருடன் தோன்றி பாம்புகளை எல்லாம் பற்றிச் சென்றது. பாம்பாட்டி தேசிகரின் பாதம் பணிந்து மன்னிப்புகேட்டான். இப்படி பல அரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் தேசிகர். ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்தை முப்பது முறை பிரவசனம் செய்து திருப்தியுற்றார் தேசிகர். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி என்ற நால்வகைக் கவிதைகளிலும் ஒப்புயர்வு பெற்று விளங்கியவர். வடமொழி பாண்டித்யம் கொண்டவர். இவர் எண்ணற்ற நூல்களை இயற்றி அருளினார். ஹயக்ரீவ ஸ்தோத்திர, கருட பஞ்சாசதத், அச்சுத சதகம், பந்துப்பா, ஊசற்பா, ஏசற்பா, அஷ்டபுஜான்டகம் போன்றவை சிறப்பானவை. களப்பிரர் படையெடுப்பால் தமிழகக் கோயில்கள் சூறையாடப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கத்தில் அந்தணர்கள் பெருமாளுக்கு பாதுகாப்பு செய்துவிட்டு பல திசைகளுக்கும் சென்றுவிட்டனர். அந்த சமயம் பெருமாளுக்கு எவ்வித சேதமும் வந்துவிடக்கூடாது என்று தேசிகரால் அபிதீஸ்தவம் என்ற நூல் அருளிச் செய்யப்பட்டது. கோடான கோடி விண்மீன்கள் விண்ணில் தோன்றினாலும் பளிச்சென்று கண்ணிற்கு புலப்படுவது ஒரு சிலவே. அதைப்போல் எத்தனையோ மகான்களின் மத்தியில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர் வேதாந்த தேசிகர் என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை: