புதன், 18 டிசம்பர், 2013

20ம் நூற்றாண்டின் இணையற்ற சித்தர்

ஞானானந்தகிரி. இவர் சென்ற நூற்றாண்டின் இணையற்ற சித்தர். 100 வயதுக்கு மேல் வாழ்ந்த இவர் மக்களிடையே தியானம், கூட்டு வழிபாடு, நாம பஜனை மூலம் பக்தியை பரப்பியவர் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனம் அமைத்து குருகுல முறைப்படி கல்வி கற்க ஏற்பாடு செய்தவர். இன்றும் இந்த தபோவனத்தில் இவர் கூறியபடி ஆராதனை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களபுரியில் வெங்கோபகணபதி, சக்குபாய் தம்பதியினர் வசித்தனர். இவர்களின் செல்வப் புதல்வராக தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் இவர் அவதரித்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். ஞானக்கல்வியை மக்களிடையே போதிக்க பிறந்தவராதலால், சிறுவயதில் ஏட்டுக் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை. தன் 12ம் வயதில் குருநாதரை தேடி வீட்டை விட்டு வெளியேறி நடந்தே பண்டரிபுரம் வந்து, சந்திரபாகா நதிக்கரை மணலில் அமர்ந்து உறங்கிவிட்டார். இறைவன் ஒரு முதியவர் வடிவில் வந்து இவரை எழுப்பி, பண்டரிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய ஜியோதிர் மடத்தின் தலைவர் சுவாமி சிவரத்னகிரியை குருவாக ஏற்கும்படி கூறி மறைந்தார். சிவரத்னகிரியிடம் சீடராக சேர்ந்த சுப்ரமணியம், தன் பணிவிடையாலும், குருபக்தியாலும் அவரது பாராட்டை பெற்றார். அந்த ஆசான் இவருக்கு ஞான ஒளி வீசும் விளக்காக திகழ்ந்து. அஷ்டாங்க யோகம், சாஸ்திரங்கள் உபநிஷத் உண்மைகளை கற்பித்தார். அஷ்டாங்க யோகத்தில் தனித்திறமை பெற்று ஞான உணர்வை நாடி அடிக்கடி உணவும், உறக்கமும் மறந்து தியானத்தில் அமர்ந்து விடுவார். சிவரத்னகிரி சுவாமிகள் இவருக்கு தீட்சை அளித்து ஞானானந்தகிரி என்ற நாமம் சூட்டி, தனக்கு பின் பீடாதிபதியாகும் பொறுப்பையும் தந்து முக்தியடைந்தார்.

பீடாதிபதி ஆன பிறகும். அதில் சுவாமி மகிழ்ச்சி கொள்ளவில்லை. மக்களிடையே பக்தியை பரப்ப விரும்பி, ஆனந்தகிரி என்பரிடம் மடத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை கிளம்பினார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்றார். தன் புனித யாத்திரையின் போது ராமகிருஷ்ண பரமஹம்சர், சீரடி சாய்பாபா, ராமலிங்க அடிகள், அரவிந்தர், ரமணர் போன்ற மகான்களை சந்தித்தார். காடுகளிலும் மலைகளிலும், கங்கை நதிக்கரையிலும் தவம் செய்து இறைவன் அருள்பெற்று மாபெரும் சித்தராக விளங்கினார். இவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்ததால் நாடெங்குமிருந்து பல பக்தர்கள் இவரை நாடி வந்தனர். இவர் தமிழகம் திரும்பி வந்த போது வயது 100. சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் தங்கி, அங்குள்ள ஏழை நெசவாளிகளுக்கு வேதாந்த வகுப்புகள் நடத்தி அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைய செய்தார். பின் 1954 முதன் திருக்கோவிலூர் அருகே பெண்ணாற்றங்கரையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து நிலையாக தங்கி விட்டார். இதுவே பிற்காலத்தில் ஞானானந்த தபோவனம் என அழைக்கப்பட்டது. தபோவனத்தில் சுவாமி அதிகாலையில் எழுந்து நீராடி, தியானம், கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம் போன்ற நெறி முறைகளை ஏற்படுத்தி, அங்கு வந்து தங்குபவர்களுக்கு எளிமையான உபதேசங்களை கூறி, அவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் நிம்மதியும் கிடைக்கும்படி செய்தார்.

முதிர்ந்த வயதிலும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்புடன் ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புக்களையும் கவனித்து கொண்டார். சுவாமியின் தவ வலிமையாலும், அயராத உழைப்பாலும் தபோவனத்தின் புகழ் எங்கும் பரவி பக்தர்களின் கூட்டம் பெருகியது. இரவு வேளைகளில் சுவாமி தனது தவ வலிமையால் ஆசிரமத்திலிருந்து மறைந்து, தான் விரும்பிய திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து திரும்புவார். ஆசிரமத்து குழந்தைகளுக்கு தன் அனுபவத்தை கதையாக கூறுவார். ஆசிரமத்தில் ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை என பல தெய்வங்களின் சன்னதிகளை ஏற்படுத்தினார். தனது உலக வாழ்க்கை முடிவுக்கு வருவதை அறிந்த சுவாமி, 1973 முதல் கூட்டத்திலிருந்து ஒதுங்கி தியானத்தில் அதிக நேரம் செலவழித்தார். 1974 ஜனவரி 6ல் சுவாமிகளின் உடல்நலம் குன்றியது. அன்று விடியற்காலை சித்தாசனத்தில் அமர்ந்த பிறகு எழுந்திருக்கவில்லை. ஜனவரி 10ல் சுவாமி பரம்பொருளுடன் கலந்து விட்டார். அந்த மகான் சமாதி நிலையில் இருந்து, மறையாத கருணையுடன் அனைவரையும் காத்து வருகிறார். ஹரி தாஸ் சுவாமிகள், சுவாமி நாமாநந்தகிரி ஆகியோர் இவரது சீடர்களாவர். திருக்கோவிலூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த தபோவனத்திற்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு.

கருத்துகள் இல்லை: