திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 88: கணேச தான முறை

88வது படலத்தில் கணேச தான முறை கூறப்படுகிறது. முதலில் எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தான முறை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. ஆசார்யன் துலாரோஹ முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டலம் அமைக்கவும். அதன் நடுவில் லோக பாலகர்களுடன் கூடியதாக பரமேஸ்வரனை பூஜிக்கவும். அதற்கு வெளியில் 8 திக்கிலும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட வினாயகர்களை ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் மூன்றாவது ஆவரணத்தில் உள்ள வினாயகர்களுடன் கூடியதான அந்த மூர்த்திகளை பூஜிக்கவும். பிரதான குண்டத்தில் ஸ்வாமியை பூஜிக்கவும். மற்ற 8 குண்டங்களில் வினாயகரை பூஜித்து ஹோமம் செய்யவும் என ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஈசான முதலான ஏழுதிக்குகளில் ஏழு பிராம்ணர்களையும் வடக்கு திக்கில் ஒரு கன்னிகையும் ஸ்தாபித்து சந்தன, புஷ்பங்களால் ஆசார்யன் பூஜிக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட அவர்களுடன் அந்தந்த மந்திரங்களால் வரிசையாக விக்னேஸ்வரர்களை கொடுக்க வேண்டும். இங்கு எந்த கர்மா கூறப்படாததாக உள்ளதோ அதை துலாரோஹ முறைப்படி செய்யப்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறு 88வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தானத்தை கூறுகிறேன். முன்புபோல் வேதிகை, மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைக்க வேண்டும்.

2. அதன் நடுவில் திக்பாலர்களுடன் கூடிய கணேசரை ஆராதிக்க வேண்டும். அதன் வெளியில் கணேசரின் அஷ்ட வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.

3. அவர்கள் அனைவரையும் தங்கத்தால் நிர்மாணிக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்துடன் கூடிய கணேசர்களை சந்தனம் புஷ்பமிவைகளால் அலங்கரித்து

4. பிரதானத்தில் கணபதியை உத்தேசித்து ஹோமமும், எட்டு திசைகளிலும் வித்யேசர்களை பூஜித்து ஈசானம் முதலான எட்டு திக்குகளிலும் ஏழு பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும்.

5. வடக்கு திக்கில் ஆசார்யன் கன்னிகையை சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிறகு ப்ராம்மணர்களுக்கு அந்தந்த மந்திரங்களைச் சொல்லி மஹாகணபதியை தானம் செய்ய வேண்டும்.

6. இதில் கூறப்படாதது ஏதாவது இருந்தால் துலாரோஹண விதியில் கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கணேச தான விதியாகிற எண்பத்தி எட்டாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: