திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 81: கிருஹயக்ஞ விதி

81வது படலத்தில் நவக்கிரஹ பூஜை முறை கூறப்படுகிறது. முதலில் எந்த காரணத்தால் எல்லா கிரஹங்களின் கிரஹ சாரத்தால் எல்லா துன்பமும் ஏற்படுகிறதோ அந்த கிருஹ சாரத்திலிருந்து விடுபடுவதற்கு நவக்கிரஹங்களின் பிரீதியை கொடுக்கக்கூடிய கிருஹ யக்ஞம் பற்றி கூறுகிறேன் என்பது கட்டளையாகும். பிறகு மண்டபத்திலோ கிருஹத்திலோ 9 பாகம் செய்யப்பட்ட பூமியிலோ நதீக்ஷிதர்களுடன் கூடி ஆசார்யன் நவக்கிரஹங்களை பூஜித்து ஹோமம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஓம்காரம் முதல் நம: வரையிலாக அந்தந்த பெயரால் நவக்கிரஹங்களின் பூஜை செய்யவும் எனக்கூறி விருத்தம் முதலிய 9 மண்டல முறையும் தியானத்திற்காக நவக்கிரஹங்களின் நிறங்களும் விளக்கப்படுகின்றன. பிறகு பூஜா முறையும், ஹோம முறையும் நிரூபிக்கப்படுகிறது. அங்கே தூப, தீப, நைவேத்ய திரவ்யங்களும், ஹோம திரவ்யங்களும் நிரூபிக்கப்படுகின்றன. ஹோம திரவ்ய விஷயத்தில் நவக்கிரஹங்களை அனுசரித்து ஒன்பது விதமான சமித்துக்கள் கூறப்படுகின்றன. இங்கே எல்லா சமித்துக்களும் பாலுள்ள விருக்ஷத்திலிருந்து இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்ருக், ஸ்ருவம், லக்ஷணத்துடன் கூடியதாக இருக்கவேண்டும் அல்லது பலாச இலையினாலோ ஹோமம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஹோமம் முடிவில் பயனை அடைவதற்காக ஹோமம் செய்தவர்களுக்கு தட்சிணை கொடுக்கவும். இவ்வாறு நவக்கிரஹ ஹோம விதியில் செய்யவேண்டிய முறை கூறப்படுகிறது. இவ்வாறு 81 படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எதனால் எல்லா துக்கங்களும் யாவருக்கும் நவக்ரஹ சாரத்தினாலே உண்டாகுமோ அந்த நவக்ஹங்களுக்கு ப்ரீதியான க்ருஹயக்ஞத்தை கூறப்போகிறேன்.

2. மண்டபம் முதலிய இடத்திலோ வீட்டிலோ இடத்தை ஒன்பது பங்காக பிரித்து சிவதீøக்ஷ பெற்றவர்களோடு தேசிகர் பூஜை செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

3. சூர்யன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சுநைச்சரன், ராகு, கேது என்ற ஒன்பது பெயர்களாலும் பூஜிக்க வேண்டும்.

4. ஆசார்யன் ஓம் என்ற பிரணவத்தை முதலில் வைத்து நம: என்ற பதத்தை கடைசியில் கூறி மண்டலத்தில் பூஜிக்க வேண்டும். அந்த மண்டலமானது முதலில் வட்டவடிவம், நாற்கோணம், முக்கோணம், பாணம் (அம்பு) போன்றும்

5. நீண்ட சதுரம், ஐந்து கோணம், வில் போன்றும் முறம் போன்றும் கொடி போன்றும் மண்டலங்கள் கூறப்பட்டுள்ளது. கிரஹங்களின் நிறம் கூறப்படுகிறது.

6. சூர்யன் அங்காரகன் இவர்கள் சிவப்பு வர்ணமும், சுக்ரனும் சந்திரனும் வெள்ளைநிறமும், புதனும், குருவும், மஞ்சள் நிறமானவர்களாக ஸ்மரிக்க வேண்டும்.

7. சனைச்சரன், கருப்புநிறமும், ராஹுவும் கேதுவும், அதே நிறமான கருப்பு நிறமாவர். வித்வானவன் இவ்வாறு வரிசையாகத் தியானித்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

8. எல்லா மூர்த்திக்கும் குங்குலியத்தால் தூபமும் நெய்யாலோ, எண்ணையாலோ தீபம் கொடுத்து, நெல்லிலிருந்து உண்டான அரிசியால் பக்குவப்படுத்திய அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

9. சருவிற்காக செந்நெல்லிலிருந்து உண்டான அரிசியால் பக்குவப்படுத்திய அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

10. ஸமித்து நெய், எள் இவைகளினால் ஹோமத்தை செய்யவும். வெள்ளெருக்கு புரசு, கருங்காலி நாயுருவி ஆகிய சமித்துகளையும்

11. அரசு, அத்தி, வன்னி, அருகம்பில், தர்ப்பை இவைகளையும் புரசு, கருங்காலி இவைகளையாவது வரிசையாக ஹோமம் செய்ய வேண்டும்.

12. பாலுள்ள மரத்தில் உண்டானதும், புரசு, கருங்காலி இந்த மரங்களால் உண்டானதும் பிரசித்தமானதும் ஆன ஸ்ருக் ஸ்ருவத்தை லக்ஷணப்படி அமைத்தோ அல்லது புரசு இலையினாலோ ஹோமம் செய்ய வேண்டும்.

13. ஹோம முடிவில் ஹோமம் செய்ததின் பயனை அடைவதற்காக ஹோமம் செய்பவரான ஆசார்யனுக்கு தட்சிணையை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் கிருஹயக்ஞ விதியாகிற எண்பத்தி ஒன்றாம் படலமாகும்.

கருத்துகள் இல்லை: