திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 85 : எள்ளினால் ஆன மலை தானம் செய்யும் முறை

85வது படலத்தில் திலபர்வத தான முறை கூறப்படுகிறது. துலாரோகதான முறைப்படி மண்டலத்தின் கூடியதான மண்டபம் அமைக்கவும். ஆனால் அங்கு வேதிகையின்றி வெளிவீதியில் குண்டங்களை முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. மத்தியில் கல்பிக்கப்பட்ட மண்டலத்தில் பஞ்ச கவ்ய பிரோக்ஷணம் செய்து 100 அடி அளவுள்ள மூங்கில் முதலான திரவ்யங்களால் அமைக்கப்பட்ட தண்டத்தை அமைக்கவும். அதில் வியோம வியாபி மந்திரம் கூறி எள்ளை வைக்கவும். அங்கு எள்ளின் அளவு தண்டத்திலிருந்து ஒரு சாண் அளவு அல்லது 8 அங்குல அளவு அல்லது 4அங்குலமோ அதிகமாக இருக்கவேண்டும் அல்லது தண்ட அளவு முறையுமோ செய்யவேண்டும். ஆனால் குறைவுள்ளதாக செய்யக்கூடாது. பிறகு எள்ளை வஸ்திரங்களால் சத்யோ ஜாதாதி மந்திரத்தினால் மூடவும். அப்பேற்பட்ட எள்ளால் ஆன மலையில் தேச காலத்தை சங்கல்பித்து பூஜிக்கவும் என்று திலபர்வத அமைக்கும் முறை பிறகு திலபர்வதத்தின் முடிவில் க்ஷ்மா (பூமி) முதலிய அஷ்ட மூர்த்திகள் அதன் அதிபர்களான 8 சர்வாதி மூர்த்தீஸ்வரர்களும் 3 நிஷ்க்க பிரமானத்தால் நிர்மாணித்து வைக்கவும். திலபர்வதத்தின் மத்தியில் தேவனை விதானம் அறிந்த ஆசார்யன் யஜமானனுடன் கூடி பூஜிக்கவும். அப்பொழுது இந்த எல்லார்க்கும் தேவனான தேவதேவேசன், விருபத் த்வஜன், இவனுக்கு அர்சனை செய்யப்பட்ட போது எல்லா பலனும் நிச்சயமாக ஏற்படுகிறது என கூறி எஜமானனுக்கு தில மத்யத்திலிருக்கும் தேவ தேவனான, உமாபதியும் தரிசிக்க வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத சிறிய பூஜையான அர்சனை, ஹோமம், ஸ்வாமிக்கு ஆயிரம் கலச ஸ்நபனம் மற்ற எல்லாம் துலாரோஹன முறைப்படி செய்யவும்.

பிறகு பரமேஸ்வரனை விசர்ஜனம் செய்து திலதானபுரஸ்ஸரம், சிவனின் பொருட்டு சிவதர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு திலபர்வதத்தை கொடுக்கவும். பிறகு இந்த தானத்திற்கு மேன்மையான வேறு தானம் மூவுலகிலும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு வேறுமுறைப்படி அல்பத்திரவ்யம் பெரிய பலத்தை கொடுக்கும் தானம் என கூறப்படுகிறது என்று கூறி வேறு முறையினால் தில பர்வதம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தேசத்தில் வஸ்திரங்களை விரித்து தசாக்ஷர மந்திரத்தினால் அங்கு ஆறு மரக்கால் அளவுள்ள எள்ளை ஸ்தாபிக்கவும். கர்ணிகை கேசரங்களுடன் கூடிய எட்டு தளத்துடன் கூடிய பத்மத்தை 10 நிஷ்க அளவினால் செய்து எள்ளின் நடுவில் ஸ்தாபிக்கவும். அந்த பத்மத்தின் நடுவில் பரமேஸ்வரனை பூஜிக்கவும். ஐந்து நிஷ்க தங்கத்தினால் மனோன்மணியை அமைத்து அவ்வாறே மூன்று நிஷ்க்க தங்கத்தினால் வர்மை முதலிய 8 சக்திகளை செய்து பத்மத்தின் வடக்கு பாகத்தில் வைத்து முறைப்படி பூஜிக்கவும், அதற்கு வெளிபாகத்தில் அதே மூன்று நிஷ்க அளவில் சொர்ணமயமான எட்டு வித்யேஸ்வரர்களை அமைத்து ஸ்தாபித்து முறைப்படி பூஜிக்கவும். பிறகு உயர்ந்ததான ஆசார்யன், எல்லா கார்யத்தையும் திரவ்யங்களையும் எள்ளுடன் கூடியதாக யஜமானன் சிவபக்தர்களுக்கு கொடுக்கக் கூறவும் என்று செயல்முறை விளக்கம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு 85ம் படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஓ அந்தணர்களே, திலபர்வததானம் பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது. முன்புபோல் வேதிகை இல்லாமல் மண்டபம் அமைத்து

2. வெளி பாகத்தில் முன்கூறிய விதிப்படி குண்டங்களை அமைக்க வேண்டும். நடுவில் மண்டலம் அமைத்து பஞ்சகவ்யத்தால் ப்ரோக்ஷணம் செய்து

3. வெட்டப்படாத புதிய வஸ்திரங்களால் மறைத்து தும்பை புஷ்பங்களை பரப்பி புண்யாஹ ஜலத்தால் பிரோக்ஷித்து நூறு அடி உயரமுள்ள

4. மூங்கில் முதலியவைகளால் செய்யப்பட்ட தண்டத்தையும் அமைத்து, வ்யோம வ்யாபி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு எள்ளையும் பரப்ப வேண்டும்.

5. தண்டத்திலிருந்து ஓட்டை சாணளவு அல்லது எட்டு அங்குலம் அளவு அல்லது நான்கு அங்குலம் அளவிற்கு அதிகமாகவோ எள் பரப்ப வேண்டும்.

6. தண்டத்தின் (உயர) அளவுக்கு சமமாகவோ எள்ளைப் பரப்பலாம். குறைவாக செய்யக் கூடாது, எள்ளை பரப்பி ஸத்யோஜாதாதி மந்திரங்களைச் சொல்லி வஸ்திரங்களால் எள்ளை மூட வேண்டும்.

7. பர்வதத்தின் ஸமீபம் நல்ல இடத்தை ஏற்படுத்தி, எள் மலையின் பக்கங்களில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை விசேஷமாக பூஜிக்க வேண்டும்.

8. செய்யப்பட்ட மூன்று நிஷ்க அளவால் க்ஷமா முதலான மூர்த்திகளையும் சர்வன் முதலான மூர்த்தீஸ்வரர்களையும் பூஜிக்கவும், அதுபோல் திலபர்வதத்தின் நடுவில் தேவனான பரமசிவனை பூஜிக்க வேண்டும்.

9. முறைப்படி சாஸ்த்ரமறிந்த ஆசார்யர் யஜமானரைக் கொண்டு பூஜையையும் செய்து எள் நடுவில் தேவதேவனான ஸ்ரீ உமாபதியை யஜமானனுக்கு காண்பிக்க வேண்டும்.

10. இவனோவெனில் வ்ருஷபக் கொடியுள்ள தேவதேவனான பரமேச்வரன் என்னை இப்படி பூஜை செய்த பொழுது எல்லோரும் நினைத்தது எல்லாம் நிச்சயம் நிறைவேறும்.

11. இங்கு சொல்லப்படாததான அர்ச்சனை, ஹோமம், ஸஹஸ்ர கலச ஸ்நபனம் இவையெல்லாம்

12. துலா ரோஹணத்தில் முன் சொன்னபடி செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்து தேவதேவனான ஈச்வரனை விஸர்ஜனம் செய்து சிவ சின்னங்களோடு சிவதர்மத்தில் நின்று ஒழுகுகின்ற சிவஸ்வரூபமானவர்க்கு

13. ஜலதானத்துடன் எள் மலையை கர்த்தா தானம் செய்ய வேண்டும். இதைக் காட்டிலும் உயர்ந்த வேறுதானம் மூன்று உலகத்திலும் இல்லை.

14. அல்லது வேறு விதமாகவும் கொஞ்ச திரவ்யத்துடனும் பயன் அதிகம் உள்ளதுமான எப்பொழுதும் எல்லா காலத்திலும் செய்யக்கூடியதுமான திலதானம் சொல்லப்படுகிறது.

15. கோமயத்தால் மெழுகப்பட்ட இடத்தின் மேல் புதிய வஸ்திரத்தை விரித்து அதில் (மூன்று) முக்குறுணி என்ற அளவுடைய எள்ளை தசாக்ஷர மந்திரத்தால் பரப்ப வேண்டும்.

16. பத்து ஸ்வர்ணங்களால் (தங்கம்) எட்டு தளங்களோடு கூடிய கர்ணிகையுடைய (தாமரையை) கேஸரங்களோடு அமைத்து அதற்கு மேல் பாதியளவு அளவால்

17. ஐந்து தங்கங்களால் தாமரை அமைத்து அதன் நடுவில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். அவருக்கு இடது பக்கத்தில் இரண்டரை தங்கங்களால் மணோன்மனீ தேவியையும் அமைக்க வேண்டும்.

18. மூன்று நிஷ்க தங்கங்களால் வாமாதி எட்டு சக்திகளையும் அமைத்து அதன் வெளியில் அதே மாதிரி மூன்று நிஷ்க தங்கத்தால் எட்டு வித்யேச்வரர்களையும் அமைக்க வேண்டும்.

19. ஆசார்யன் முறைப்படி அவற்றை பூஜித்து எஜமானனை அவை எல்லாவற்றையும் எள்ளோடு கூட சிவபக்தனுக்கு கொடுக்கும்படியாகச் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தில (எள்மலை) பர்வததான விதியாகிற எண்பத்தைந்தாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: