புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா -பகுதி 8

கமலாப்பூர் மிகப்பெரிய நகரம். சத்யாவுக்கு அவ்வூர் வாழ்க்கை ஒன்றும் கடினமாகத் தோன்றவில்லை. சத்யா வந்தபிறகு அவ்வூர் வழக்கத்தை விட செழிக்க ஆரம்பித்தது. இதற்கான காரணம் அவ்வூர் மக்களுக்கு தெரியவில்லை. தெய்வமே அவ்வூரில் வசிக்க வந்ததை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அந்த இனம்புரியா மகிழ்ச்சிக் கடலில் மக்கள் திளைத்தனர். சத்யா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டான். எளிமையான உடை, புத்தகங்கள் தவிர வேறு எதற்கும் அவன் ஆசைப்படவில்லை. பள்ளியில் விழாக்கள் நடந்தால் பாடுவான். பழைய மாணவர்கள் பாடிய பாடல்களெல்லாம் சத்யாவின் இனிய குரலுக்கு முன்பு எடுபடவில்லை. பாட்டுகளாலேயே அவன் பள்ளியில், பிரபலமாகி விட்டான். அவனது விளையாட்டு ஆசிரியர், கேசவன் என்ற நண்பன் ஆகியோருக்கு சத்யா நெருக்கமாகி விட்டான்.பள்ளியில் நாடகம் நடந்தால் சத்யாவுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்படும். அதை செம்மையாக நடித்துக் காட்டுவான். கமலாப்பூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இறைவணக்கம் பாடுவதற்கென்றே ஊர் பெரியவர்கள் சத்யாவை அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். கமலாப்பூரின் முக்கிய பிரமுகராகி விட்டான் சத்யா. ஆனால் அந்த எளிமை மட்டும் அவனை விடவில்லை. சாரணர் இயக்கத்தில் சேரும்படி, விளையாட்டு ஆசிரியர் சத்யாவை வற்புறுத்தினார். இயக்கத்தினர் கேம்ப் போட்டால், அவரவர் சொந்த செலவில் தான் போக வேண்டும். சத்யாவிடம் அந்த அளவு பணமில்லை. பக்கத்து ஊர் ஒன்றிற்கு போய் வரக்கூட சாப்பாட்டுடன் சேர்த்து 20 ரூபாயாவது வேண்டும். இதை தான் தங்கியிருக்கும் அண்ணனின் மாமனார் வீட்டில் சத்யா கேட்கமாட்டான். கடுமையாகத் தயங்குவான். இந்தநிலையில், இயக்கத்தில் சேர சத்யா மறுத்து விட்டான். ஆனால் அவன் உள்மனதில், சாரணர் இயக்கத்தின் சேவைகள் அலை மோதின. இந்த இயக்கத்தில் சேர்வதன் மூலம் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

சாரணர் இயக்கத்தில் சேர்வதற்குரிய யூனிபார்ம் வாங்க பணம் அதிகமாக வேண்டும். இதற்கு என்ன செய்வது என தயங்கி நின்ற வேளையில், அவனது இரண்டு நண்பர்கள் யூனிபார்ம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூர் பணக்காரரின் குழந்தைகள். சத்யா மீது அன்பு கொண்டவர்கள். அவன் தன்னோடு கேம்ப் வருவதை பெருமையாகக் கருதினார்கள்.சத்யாவுடன் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பஸ்சுக்கு தயாரானார்கள். சத்யாவைக் காணவில்லை. முகாமுக்கு ஒரு பையன் குறைகிறானே! என்ன செய்வது? என ஆசிரியர் கையைப் பிசைந்தார். சத்யா வரவே இல்லை. வீட்டுக்கு ஆள் அனுப்பி பார்த்தால், அவன் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டானே, என்ற பதில் கிடைத்தது. குழம்பிப் போன முகாம் அமைப்பாளர் வேறு வழியின்றி மற்ற மாணவர்களுடன் கிளம்பி விட்டார். புஷ்பகிரிக்கு செல்லும் வழியில், பஸ்சில் சென்ற மாணவன் ஒருவன், சத்யா ரோட்டில் நடந்து செல்வதைக் கவனித்தான். எல்லாரும் புஷ்பகிரி சென்றாயிற்று. அங்கே சத்யாங தயாராக நின்றான்.ஆசிரியரும், நண்பர்களும் சத்யாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். நண்பன் கேசவன் சத்யாவிடம், நாங்கள் கிளம்பும் போது உன்னைக் காணவில்லையே! ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாயே! என்னாயிற்று உனக்கு? என வாஞ்சையோடு கேட்டான்.சத்யா நடந்ததைச் சொன்னான்.நண்பர்களுடன் பஸ்சில் வந்தால், பஸ்சுக்கு கட்டணம் கொடுக்க வேண்டும். சத்யாவிடம் காசு இல்லை. தன் பழைய புத்தகங்களை சிலரிடம் விற்றான். அவர்கள் கூடுதலாக பணம் கொடுக்க முன் வந்தாலும், ஐந்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டான். அதைச் சாப்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். புஷ்பகிரிக்கு நடந்தே போய் விடலாம் என முடிவு செய்து விட்டான்.கமலாப்பூரிலிருந்து, புஷ்பகிரிக்கு பத்துமைலுக்கும் அதிமான தூரம். இருந்தாலும் நடந்தே சென்று விட சத்யா எண்ணி விட்டான். வழியில் களைப்பாக இருந்தது. சத்யா மட்டுமல்ல. புஷ்பகிரி கோயில் திருவிழாவுக்கு வரும் ஏழை மக்கள் அனைவருமே நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் களைப்பாற, வழியிலுள்ள ஆற்று மணலில் படுத்து உறங்கினர். சத்யாவும் களைப்பின் மிகுதியால் அவர்களுடனேயே படுத்து உறங்கினான்.இதன் உள்பொருளை நாம் உணர வேண்டும். தெய்வம் ஏழைகளுடன் துணை வருகிறது. ஏழைகள் படும் சிரமத்தை தானும் படுகிறது. ஏழைமக்கள் நடந்து வரும் போது வாகனத்தில் செல்ல தெய்வம் விரும்பாது என்பதையே குறிப்பால் உணர வேண்டும்.

சத்யா தான் கொண்டு வந்த ஐந்து ரூபாயை தன் தலைமாட்டில் ஒரு துணியில் சுற்றி வைத்துக்கொண்டு உறங்கினான். விழித்து பார்த்த போது, தலைமாட்டில் பை இல்லை. யாரோ அதை திருடி விட்டார்கள். சத்யாவுக்கு சாப்பாட்டு காசுக்கும் வழியில்லை. ஆனாலும் புஷ்பகிரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் ஒரு அணா கீழே கிடந்தது. அதை எடுத்தான். புஷ்பகிரி கோயிலின் ஒரு பக்கத்தில், இரட்டை லாட்டரி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.அதாவது ஒரு ரூபாய் வைத்து ஒரு சக்கரத்தை சுழற்ற வேண்டும். சொன்ன நம்பரில் சக்கரம் நின்றால், இரட்டிப்பு பணம் தருவார்கள். இல்லாவிட்டால் பணம் கடைக்காரனைச் சேர்ந்து விடும். சத்யா தன் காசை அங்கு வைத்தான். இரட்டிப்பாக கிடைத்தது. மீண்டும் வைத்தான். அதுவும் இரட்டிப்பானது. இப்படியே 12 அணா சேர்ந்து விட்டது. கடைக்காரனுக்கு பயம் வந்து விட்டது. சிறுபையனாக இருந்தாலும், ஜெயித்துக் கொண்டே இருக்கிறானே என்ற பயத்தில், விளையாட்டு முடிந்ததாகச் சொல்லி கடையைக் கட்டி விட்டான். கிடைத்த காசுக்கு தின்பண்டங்கள் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு சாரணர் இயக்கப் பணிகளிலும் கலந்து கொண்டான் சத்யா.இவ்வளவு விஷயத்தையும் நண்பர்களும், ஆசிரியரும் அறிந்து கொண்டனர். சரியாக சாப்பிடாமல், வெறும் தின்பண்டங்களுடன் சாரணர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய சத்யாவைப் பாராட்டினர். அவன் ஒரு இடத்தில் இருந்தபடியே, திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல்களைச் சொன்னான். அங்கு போய் பார்த்தால், காணாமல் போன குழந்தை நிற்கும். இதுபோல பல அற்புதங்களை இருந்த இடத்தில் இருந்தே செய்தான். எங்காவது குப்பை கூளம் குவிந்திருந்தால், அதை அப்புறப்படுத்த சொல்வான். அவன் சொன்ன இடத்தில் குப்பை கிடக்கும். தண்ணீர் பானைகள் காலியாகி விட்டால், எங்கோ நின்று கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பச் சொல்வான். அவன் சொன்னபடி அங்கு காலியான பானை இருக்கும். அந்த ஆண்டில் திருவிழாவில் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. சாரணர் இயக்க சிறுவர்களை அதிகாரிகள் பாராட்டினர். முகாம் முடிந்து எல்லாரும் ஊருக்கு புறப்பட்டனர். சத்யாவின் கையில் சல்லிக்காசு இல்லை. அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். நண்பர்கள் கூப்பிட்டும், பஸ்சில் வர மறுத்து விட்டான்.

கருத்துகள் இல்லை: