புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா -பகுதி 7

பகவான் ஷிர்டி சாய்பாபா பற்றிய எண்ணம் தான் அது. இத்தனைக்கும் ஷிர்டிபாபா பற்றி சத்யாவுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. ஷிர்டிக்கு சென்றதும் கிடையாது. இருப்பினும் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றிய பஜனைப் பாடல்களை சத்யா பாடினான். அவனது நண்பர்களும் அதை திரும்பப் பாடினர்.இதனால் புட்டபர்த்தியை காலரா தொட்டுப்பார்க்க கூட இல்லை. மக்களுக்கு ஒரே ஆச்சரியம். சத்யாவின் பஜனைப்பாடல்களின் மகிமையால் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது என்பதை மட்டும் அவர்களால் உணர முடிந்தது.இப்போது பஜனைக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வர ஆரம்பித்தனர். அவர்கள் மற்ற கிராமங்களில் உள்ளவர்களிடம், சத்யா பாடும் ஷிர்டி பஜனைப் பாடல்கள் பற்றி கூறினர். மற்ற ஊர் மக்களும் சத்யாவை தங்கள் கிராமத்திற்கு வந்து பஜனை செய்யும்படி கேட்டனர். ஆனால் காலரா பாதித்த கிராமங்களுக்கு சத்யாவை பெற்றோர் விடுவார்களா? மறுத்து விட்டனர்.சத்யா அவர்களைச் சமாதானம் செய்து அந்த கிராமங்களுக்கு சென்றான். அவனது பஜனை கோஷ்டியும் சென்றது. எங்கும் பக்திப்பரவசம் எழுந்தது. சத்யாவின் காலடிபட்ட கிராமங்களில் காலரா காணாமல் போனது. எல்லாரும் இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தெய்வீகச் சிறுவன் என வாழ்த்தினர்.நாடகங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சத்யாவுக்கு சவால் ஒன்றும் வந்து சேர்ந்தது. புட்டபர்த்தியை சுற்றியுள்ள கிராமங்களில் புதிய நாடகக் கம்பெனி ஒன்று வந்தது. ருஷ்யேந்திரமணி என்ற சிறுமி தான் இந்தக் கம்பெனியின் மிகப்பெரும் சொத்து. அவள் ஆடும் நடனத்திற்காகவே கூட்டம் சேர்ந்தது. அவள் மிகப்பெரிய நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் சத்யாவே, அவள் நடித்த நாடகத்தை காண வந்திருந்தான். அவளது நடன அசைவுகளைக் கவனித்தான்.பாட்டில் ஒன்றை தலையில் வைத்து அது கீழே விழாமல்,குனிந்தும், நிமிர்ந்தும், சுழன்றும் ஆடினாள் அவள். இதைக்கண்டு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.சத்யாவுக்கும் இதே ஆசை பிறந்தது.

ருஷ்யேந்திராவை விட மிகச்சிறப்பாக ஆடி பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதே அந்த ஆசை. தந்தை வெங்கப்பராஜூவும், தாய் ஈஸ்வராம்பாளும் கூட இதற்கு சம்மதித்தனர். ருஷ்யேந்திரா ஒரு தீப்பெட்டியை தரையில் வைத்து, அதனை ஒரு கைக்குட்டையால் மூடி, பாட்டிலை தலையில் வைத்து வளைந்து நெளிந்து கீழே விழாமல், உதடுகளால் கவ்வி கைக்குட்டையை எடுத்தாள்.இதைவிட அரிய சாகசத்தை நிகழ்த்த சத்யா முடிவு செய்தான். . நண்பர்களிடம் அதைச் செய்து காட்டினான். நண்பர்கள் சத்யாவிடம், பக்கத்து ஊர் திருவிழாவில் இந்த நடனத்தை ஆடிக்காட்டு. நம் நாடகக்குழுவின் பெருமையை உயர்த்து, என்றனர்.சத்யாவை, அவரது சகோதரிகள் ருஷ்யேந்திரமணி போலவே அலங்கரித்தனர். சத்யா பெண் வேடத்தில் ஜொலித்தான். இறைவன் ஆணும், பெண்ணுமாக இருக்கிறான். அவனுக்கு இருபிரிவும் ஒன்றே என்பதை சத்யசாய் இங்கே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.சத்யா நாடக மேடையில் ஏறினான். கம்சனின் அவையில் ஒரு நடன மாது ஆடுவது போன்ற காட்சி. சத்யா இசைக்கேற்ப ஆடினான். தலையில் பாட்டில் இருந்தது. எவ்வளவு சுழன்று ஆடியும் கீழே விழவில்லை. இறைவன் ஆனந்தநடனம் புரிவது போல, பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா கீழே குனிந்தான். ருஷ்யேந்திரமணி உதடுகளால் கைக்குட்டையைத் தானே எடுத்தாள்! ஆனால் சத்யாவோ கண் இமைகளால் ஒரு குண்டூசியையே எடுத்து சாதனை படைத்து விட்டான்.நாடகம் நடந்த திடலே கரகோஷத்தால்  அதிர்ந்தது. ஈஸ்வராம்பாவும், வெங்கப்பராஜூவும் மகனின் திறமை கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.ஈஸ்வராம்பாவுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. வயதுக்கு மீறிய சக்தியுடன் சத்யா பல காரியங்களைச் செய்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஒரு அற்புதமாகவே தெரிகிறது. இதனால் அவனுக்கு திருஷ்டி ஏற்பட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது, என யோசிப்பார்.தன் சந்தேகத்தை பக்கத்து வீட்டு தோழியும், சத்யாவை தன் மகன் போல பாசம் செலுத்தியவருமான சுப்பம்மாவிடம் கேட்டார்.

சத்யா! இப்படி செய்வதால் திருஷ்டி ஏற்பட்டு, அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ? என்றார்.சுப்பம்மா சிரித்தார்.அடி போடி! ஏன் அஞ்சுகிறாய். அவன் உன் பிள்ளை மட்டுமல்ல. என் பிள்ளையும் தான். அவன் இங்கு தான் பொழுது போக்குகிறான். இங்கு தான் சாப்பிடுகிறான். அவனை பெற்ற தாயான உன்னை விட முழுமையாக நான் அறிவேன். அவன் குழந்தைகளிடம், சினிமா, பொழுதுபோக்கு என தறிகெட்டு அலையாதீர்கள். அந்த நேரத்தை இறை வழிபாட்டுக்கு பயன்படுத்துங்கள். பண்டரிநாதன் புகழ் பரப்பும் பஜனையைப் பாடுங்கள், என்று புத்திமதி சொல்கிறான். இதிலிருந்து அவன் சாதாரண பிள்øளா? இறைவனே அவன் தான் என எனக்கு தோன்றுகிறது. இறைவனுக்கு திருஷ்டி எப்படி ஏற்படும்? நீ மனதைக் குழப்பாதே! அவனுக்கு ஏதும் ஆகாது, என்றார்.ஆனால் இந்த விஷயத்தில் ஈஸ்வராம்பாவே ஜெயித்தார். கம்சநாடகம் முடிந்த மறுநாளே ஊரார் கண்பட்டதாலோ என்னவோ? சத்யாவுக்கு கடும் ஜூரம் அடித்தது. ஈஸ்வராம்பா என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். அன்று இரவில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. யாரோ ஒருவர் வீட்டுக்குள் வந்தது போன்ற ஒரு உணர்ச்சி...அவரது காலில் மரத்தால் ஆன காலணி. அதன் சத்தத்துடன், வந்த உருவம் சத்யா இருந்த அறைப்பக்கம் சென்றது. சற்று நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. ஈஸ்வராம்பா நடுங்கியபடி சத்யாவின் அறைக்குள் சென்றார். அங்கே சத்யா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் கையை வைத்து பார்த்தார் ஈஸ்வராம்பா. காய்ச்சல் இல்லை. உடம்பே ஜில்லிட்டு இருந்தது. காய்ச்சல் குணமானதற்கும், உள்ளே வந்த உருவத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புரியாத புதிராகவே இருந்தது.அடுத்தநாள் சத்யா சகஜமாகி விட்டான். வீட்டுத் திண்ணையில் அவன் அமர்ந்திருந்த போது, அவ்வூர் சிறுவர்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். பெரியவர்கள் அவர்களை வீட்டுக்குள் இழுத்துப் போட்டு கதவுகளை அடைத்தனர். ஒரு சில பெரியவர்கள் மட்டுமே எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யா அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தான்.அப்போது ஒருவர் கடாமீசையுடன் ஊருக்குள் வந்தார். ராணுவ சீருடை, கையில் துப்பாக்கி சகிதமாக வந்த அவர், உறுமலான குரலில் தோரணையுடன், ஒரு பெரியவரிடம், அந்த மந்திரவாதி பையனை எங்கே? என்று கேட்டார்.அந்தக்காலத்தில் போலீஸ் வந்தாலே கிராம மக்கள் என்னவோ ஏதோவென்று பயந்து வீடுகளுக்குள் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் வந்தவரோ ராணுவ தோற்றத்தில் இருந்ததால் ஒரு சில வயோதிகர்களைத் தவிர, மற்றவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். பெரியவர்கள் விசாரித்த போது, அவர் அப்பகுதி ஆங்கிலேயக் கலெக்டரின் டிரைவர் என்பது தெரிந்தது.அவர் வீராப்பாக, அங்கு நின்ற பெரியவர்களிடம் சத்யாவைப் பற்றி தெரிந்து கொண்டார். நேராக சத்யாவிடம் வந்தார்.உம்! புறப்படு! அங்கே கலெக்டர் காரில் அமர்ந்திருக்கிறார். கார் ரிப்பேராகி விட்டது. அதை சரிசெய்து கிளம்பச் செய், உடனே வா, என்றார்.ஒரு சின்னப்பையனிடம், இந்த ஆள் இந்த விரட்டு விரட்டுகிறானே என்று பெரியவர்களுக்கு கோபம் வந்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. கலெக்டரின் கார் டிரைவரான இவன், நம்மைப் பற்றி ஏதாவது கலெக்டரிடம் வத்தி வைத்து விட்டால் தங்கள் கதி அதோகதி தான் என்பதை தெரிந்து, வாய்மூடி மவுனிகளாக நின்று விட்டனர்.சத்யா டிரைவரின் தோற்றம் கண்டோ, மிரட்டல் பேச்சுக்கோ பயங்கொள்ளவில்லை.நான் கார் மெக்கானிக் அல்ல. எனக்கு ரிப்பேர் பார்க்க தெரியாதே, நான் வந்து எப்படி காரை கிளப்ப முடியும்? என்றான்.உனக்கு கார் ரிப்பேர் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் மந்திரம் தெரியுமே! நீ அதை தொட்டாலே ஓடி விடுமாமே, எதையாவது செய்து காரை கிளப்பு. என்னோடு வா, என்றார் டிரைவர் அதட்டலாக.சத்யா கிளம்பி விட்டான். அவனது வீட்டாருக்கும், உறவினர், நண்பர்களுக்கு பயம். இருப்பினும் அரசாங்க காரியம் என்பதால், அவனை தடுக்கவும் வழியில்லாமல் நின்றனர்.சத்யா கார் நின்ற மலைப்பாங்கான பகுதிக்கு வந்து விட்டான். துரை கடும் டென்ஷனில் இருந்தார்.உடனே காரை கிளப்ப வழி பாரு. சீக்கிரம் கிளம்பணும். எனக்கு நெறய வேலைகள் இருக்கு, என்றார் எரிச்சலாக.சத்யா காருக்குள் எட்டிப்பார்த்தான். உள்ளே ஒரு புலி படுத்திருந்தது. அது துரையால் வேட்டையாடப்பட்டு இறந்த புலி. மிஸ்டர் துரை! என்று விளித்தான் சத்யா அனாசயமாக.

துரைக்கு தூக்கி வாரிப்போட்டது.ஒரு கிராமத்து சிறுவன் கலெக்டரான தன்னை இவ்வளவு அதிகாரமாக அழைக்கிறானே,. அவர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். உங்கள் வண்டியில் இறந்து கிடக்கும் புலியை சுட்டுக் கொன்று விட்டீர்கள். அதன் குட்டிகள் தாயைப் பிரிந்து காட்டில் அல்லாடுகின்றன. தாயையும், குட்டியையுயும் பிரிப்பது எங்கள் நாட்டில் பெரும் பாவச் செயலாக கருதப்படும். நீங்கள் உடனே காட்டிற்குப் போய், குட்டிகளை கண்டுபிடித்து அவற்றின் துன்பம் தீரும் வகையில் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்கள். அதுவரை யார் வந்து ரிப்பேர் செய்தாலும் இந்தக் கார் நகராது, என்றான் சத்யா.அதிகாரி மிரண்டு விட்டார்.காட்டில் மூன்று குட்டிகளின் தாய்ப்புலியை நான் சுட்டுக் கொன்றது இவனுக்கு எப்படி தெரிந்தது? போதாக்குறைக்கு இவன் மந்திர தந்திரம் தெரிந்தவன் என டிரைவர் சொல்லி இருக்கிறார். எப்படியிருப்பினும் இவன் ஒரு ஆபத்தான சிறுவன். இவனிடம் கவனமாக நடந்து கொள்வதே நல்லது, என சிந்தித்த கலெக்டர், மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் காட்டுக்குள் சென்றார்.நீண்ட தேடுதலுக்கு பிறகு பயந்து கிடந்த புலிக்குட்டிகளைக் கண்டுபிடித்தார். அவற்றை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைப்பதாக உறுதி கூறினார். அவ்வளவு தான். காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ததும், வண்டி புறப்பட்டது.இப்பேர்ப்பட்ட மகானா இந்தச் சிறுவன் என ஆச்சரியப்பட்டார் கலெக்டர்.இந்த சம்பவம் நடந்த சிறிது நாளில் சத்யாவின் எட்டாம் வகுப்பு படிப்பு புங்கப்பட்டணம் பள்ளியில் நிறைவடைந்ததது. அவன் விடுமுறையில் இருந்தான். மேற்கொண்டு படிக்க வைக்க கிராமத்தில் வசதி இல்லை. எனவே சத்யா கவிதைகளை எழுதியே பொழுது போக்கி வந்தான். ஊரெங்கும் தினமும் பகல் வேளையிலும் பஜனை சத்தம் கேட்டது. ஈஸ்வராம்பாவுக்கு மகனை வெளியூருக்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைக்க விருப்பமில்லை. சத்யாவைப் பிரியும் மனோபாவம் அவளிடம் இல்லை. இந்த நேரத்தில் சத்யாவின் அண்ணன் சேஷமராஜூ, தாயாரிடம் ஒரு யோசனை சொன்னார்.அம்மா! சத்யா இங்கு இருந்தால் பஜனை, கச்சேரி, நாடகம், கவிதை என்று பொழுதை போக்கி விடுவான். அதனால் அவனை கமலாப்பூருக்கு அனுப்பி விடுவோம். (கமலாப்பூர் ஆந்திராவின் கடப்பை மாவட்டத்தில் உள்ளது). அங்கே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் அவன் மேல்படிப்பு படிக்கட்டும், என்றார்.

ஈஸ்வராம்பா மறுத்து விட்டார்.என் மகனை பிரியும் சக்தி எனக்கில்லை. அவனுக்கு வயதும் குறைவு. வெளியூரில் தங்கிப்படிக்கும் அளவுக்கு அவனுக்கு வயது இல்லை. நான் அனுப்ப மாட்டேன், என்றதும், கணவர் வெங்கப்பராஜூவின் காதில் இது விழுந்தது.ஈஸ்வரா! உன் மகன் மீது உனக்கிருக்கும் பாசத்தை விட ஒரு மடங்கு அதிகமாகவே எனக்கும் இருக்கிறது. இங்கிருந்தால், அவன் நாடகத்தோடு வாழ்க்கையை முடித்து விட வேண்டியது தான். ஆனால் உயர்கல்வி படித்தால் அவனுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும். நல்ல கவுரவமான வாழ்க்கையை சத்யா அமைத்துக் கொள்வான். என் நாடகத் தொழில் என் மகனுக்கு வேண்டாம், என்றார்.கணவரின் சொல்லில் நியாயம் இருப்பதை ஈஸ்வராம்பா புரிந்து கொண்டார். சத்யா கமலாப்பூரில் வசித்த சேஷமராஜூவின் மாமனார் வீட்டில் தங்க முடிவாயிற்று.சத்யா புறப்பட்டு விட்டான். ஊரே கண்ணீர் விட்டது. அவனை அன்போடு வளர்த்த பக்கத்து வீட்டு சுப்பம்மா வடித்த கண்ணீருக்கு அளவே கிடையாது. அது சித்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கையே ஏற்படுத்தி விடும் போல் தெரிந்தது.தெய்வப்பிறவியான சத்யாவுக்கே கூட சற்று கலக்கம் தான். கிராமத்திலுள்ள தன் அன்பு நண்பர்கள், நாடகக்கலைஞர்கள். வேளாவேளைக்கு அமுதூட்டிய அன்னை, தன்னை கண்ணின் மணிபோல் காத்த பக்கத்து வீட்டு அன்னை சுப்பம்மா, நாடகத்தில் புகழ் பெறக்காரணமான தந்தை, பள்ளி செல்லும் போதெல்லாம் அலங்கரித்து அனுப்பிய சகோதரிகள்...அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான் சத்யா.பிரிவுத்துயரை வெளிக்காட்டாமல் தன் அண்ணனுடன் கமலாப்பூருக்கு கிளம்பி விட்டான். எல்லாரும் அழுதனர். நண்பர்கள் அழுத அழுகை அனைவரையும் கலக்கியது. புட்டபர்த்தியே களை இழந்தது போன்ற பிரமை. ஊரை விட்டு தெய்வமே வெளியேறுவது போன்ற உணர்வு... சத்யா வண்டியேறி விட்டான்.

கருத்துகள் இல்லை: