புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா -பகுதி 3

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் வெங்கப்பராஜூவின் கனவிலும் அதே இசை கேட்டது. அவர் கலக்கமடைந்தவராய் மறுநாள் ஜோதிடர் இல்லத்திற்கு சென்றார். என் வீட்டில் கேட்கும் அந்த இசை எங்கிருந்து வருகிறது? என்றார். உங்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக உள்ளார்களா? என்றார் ஜோதிடர். இதெப்படி அவருக்கு தெரிந்தது. நம் மனைவி அல்லவா கர்ப்பமாக இருக்கிறாள்? கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கும், இசைக்கும் என்ன சம்பந்தம்?. சிந்தித்த வெங்கப்பராஜூவின் முகத்தில் ஓடிய சலனங்களை வைத்தே புரிந்து கொண்ட ஜோசியர், சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அந்த கர்ப்ப ஸ்தீரி யார்? என்றார். என் மனைவி தான்,. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மனைவியின் வயிற்றில் இருக்கும் அந்த குழந்தையை தூங்க வைக்கவே அந்த தேவகானம் எழுகிறது. அது ஒரு தெய்வக்குழந்தை, என்றார் ஜோதிடர். ஆச்சரியம், மகிழ்ச்சி, ஆர்வம் தொற்றிக் கொள்ள வீட்டிற்கு வந்தார் வெங்கப்பர். மனைவியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 1926 நவம்பர் 22ம் தேதி இரவில் ஈஸ்வராம்பாவுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மாமியார் லட்சுமம்மா அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டில் நடந்த சத்யநாராயண பூஜைக்கு சென்றிருந்தார். மருமகளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்ட செய்தியை வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினர். அவர் பிரசாதம் பெற்றுக் கொண்டு வருவதாக சொல்லி விட்டார். சற்று நேரத்தில் பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தார். மருமகளுக்கு கொடுத்தார்.

கவலைப்படாதே! நிச்சயமாய் ஆண்மகன் பிறப்பான். அவன் உலகத்திற்கே சொந்தமானவனாக விளங்குவான், என்றார். நவம்பர் 23ம் தேதி காலை 5.06 மணிக்கு பிரசவம் நிகழ்ந்தது. பூவுலகம் மகிழ அவதரித்தார் தெய்வமகன் பாபா. அந்த வீட்டில் உள்ளவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று கார்த்திகை மாதம் திங்கள்கிழமை திருவாதிரை நட்சத்திரம். பொதுவாக குழந்தை பிறந்ததும் என்ன செய்யும்? வீறிட்டு அழும். இந்தக்குழந்தையும் அழுதது. ஆனால் மெல்லிய குரலில் சிறிது நேரம் அழுது விட்டு ஓய்ந்து விட்டது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களெல்லாம் பார்க்க வந்தனர். அதிலும் அவர்களுக்கு அடுத்து, இரண்டாவது வீட்டில் வசித்த சுப்பம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஜாதி வித்தியாசம் பாராத பெண்மணி அவர். அவரது கணவர் தான் அவ்வூர் கர்ணம். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. அதனால் குழந்தையைக் கண்டதும் அள்ளி, அணைத்து கொஞ்ச ஆசைப்பட்டு ஓடோடி வந்தார். அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரசவம் பார்த்த பெண் ஈஸ்வரம்மாவின் அருகில் கிடந்த குழந்தையைக் கவனித்தாள். குழந்தை படுத்திருந்த துணி மேலும் கீழும் அசைந்தது. ஏதோ மன பிரமை என நினைத்தவளின் கண்களில் திரும்பவும் துணி ஆடுவது தெரிந்தது. என்ன இது! துணி மேலும் கீழும் ஆடுகிறதே! குழந்தையும் மேல் நோக்கி எழுந்து தாழ்கிறதே! என சந்தேகப்பட்டவளாய், குழந்தையை தூக்கினாள். துணியின் அடியில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. துணியை தூக்கியவுடன் அது சென்று விட்டது. பயமும், வியப்பும் மேலிட பாம்பை பார்த்தாள் பிரசவம் பார்த்த பெண். ஆனால் அந்தப் பாம்பு நாராயணனை சுமக்க வந்த ஆதிசேஷன் போன்றது என்பதை அவளால் அறிய முடியவில்லை. இவ்வூருக்குள் பாம்பு வருவது சகஜம் என்ற அளவிலேயே எடுத்துக் கொண்டாள். சத்ய நாராயண பூஜை நேரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு, சத்யநாராயணன் என பெயர் வைத்தனர்.

சத்யா என்பது அவனது செல்லப்பெயர். சத்யாவின் அழகை கண்டு விரும்பி அவனைப் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் தூக்கி சென்று கொஞ்சுவார்கள். இருப்பினும் கர்ணம் மனைவி சுப்பம்மாள் வீட்டில் தான் சத்யா நீண்ட நேரம் இருப்பான். வீட்டிற்கு வந்தால் தாத்தா கொண்டமராஜூவிடம் இருப்பான். அவர் தனியாக ஒரு கூரை அமைத்து அங்கு தங்கியிருந்தார். அங்கு தான் பூஜைகளைச் செய்வார். நம் வீட்டில் பூஜை நடக்கும் போது நம் குழந்தைகள் விளக்கை இழுக்கும். குங்குமத்தை கொட்டி விடும். தீப்பெட்டியை எடுத்து விளையாடும். இப்படி குழந்தைகள் செய்யும் எந்த சேஷ்டையையும் செய்வதில்லை சத்யா. அமைதியே வடிவாக இருப்பான். தாத்தா செய்யும் பூஜைகளை அந்த சின்ன வயதிலும் கூர்ந்து கவனிப்பான். அவன் அறைக்குள் இருந்தால், தாத்தாவுக்கும் பூஜை செய்யும் போது தனி பலமே வந்தது போல இருக்கும். விறுவிறுவென ஏற்பாடுகளைச் செய்து பூஜையைக் கவனிப்பார். சத்யா பிறந்து 9 மாதம் ஓடி விட்டது. அமைதியே வடிவாய் இருக்கும் தன் குழந்தையை பார்த்து தாய் ஈஸ்வராம்பாவுக்கு சற்று கலக்கமும் ஏற்படுவதுண்டு. அழக்கூட செய்வதில்லையே இந்தக் குழந்தை. இவன் ஏன் இப்படியே இருக்கிறான்?. மற்ற குழந்தைகளைப் போல துறுதுறுவென இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணியபடியே சமையலறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அழுகை நிற்கவில்லை; அதிகரித்தது. ஈஸ்வராம்பாவுக்கு சந்தேகம். அழாத குழந்தை வீறிட்டு அழுகிறது. பூச்சி எதுவும் கடித்து விட்டதா? குழந்தைக்கு வயிறு வலிக்கிறதா? பெற்ற தாயின் மனம் பரபரத்தது. அவர் கலங்கிப் போய், சத்யா ஏண்டா அழுகிறாய்? என்றவராய், சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து தொட்டிலைப் பார்த்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அங்கே....?

கருத்துகள் இல்லை: