புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா - பகுதி 2

ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து வருகிறது? கலவரப்பட்ட அந்தத் தாய் அந்த ஒளியின் சக்தியை தாங்க முடியாமல் மயங்கி விட்டார். முதல் மூன்று குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்பது ஈஸ்வராம்பாவின் விருப்பம். ஆனால் அடுத்தடுத்து நான்கு முறை கருவுற்றாலும் கர்ப்பம் கலைந்து விட்டது. ஈஸ்வராம்பா மிகவும் மன வருத்தமடைந்தார். அவரது மாமியார் லட்சுமம்மா தன் மருமகள் மீது உயிரையே வைத்திருந்தார். உலகத்தில் உள்ள மாமியார்களெல்லாம் தன் மருமகளை நடத்தும் முறை பற்றி லட்சுமம்மாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மருமகள் மெச்சும் மாமியார் அவர்.தெய்வக் குழந்தை பிறக்கப்போகும் அந்த வீட்டில் இருந்தவர்களின் குணமும் தெய்வீகமானதாகவே இருந்தது. லட்சுமம்மா தன் மருமகள் கருவுற பகவானை பிரார்த்தித்தபடியே இருந்தார். ஒருமுறை ஒரு வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு சத்தியநாராயண பூஜை நடந்தது. அந்த பூஜை மிகவும் விசேஷமானதாகும். பக்தி சிரத்தையுடன் அதை நடத்தினால் நல்லதை தவிர வேறெதுவும் நடக்காது. அந்த பூஜையில் கலந்து கொண்ட லட்சுமம்மா, இருக்கும் விரதங்களுடன் இந்த விரதத்தையும் தன் வீட்டில் மேற்கொண்டார்.

அர்ச்சகர் ஒருவர் இதை மிகவும் சிறப்பாக நடத்தி தந்தார். ஒருமுறை லட்சுமம்மாவின் கனவில் தோன்றிய சத்தியநாராயணர், உன் வீட்டில் ஒரு அற்புதம் நிகழப் போகிறது,என கூறி இருந்தார். இந்த நேரத்தில் தான் இந்த நீல ஒளி அற்புதம் நிகழ்ந்தது. அந்த ஒளி ஈஸ்வராம்பாவின் வயிற்றில் அணுஅணுவாய் இறங்கியது. கிணற்றடியில் மயங்கிஇருந்த ஈஸ்வராம்பா சற்று நேரத்தில் எழுந்தார். அவரது மாமியார் அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதுபோல ஏதாவது அற்புதம் நடந்தால் நீ அஞ்ச வேண்டாம் மருமகளே, என சொல்லி இருந்ததால், ஈஸ்வராம்பா இதுபற்றி முதலில் பயந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டார். சிறிது காலத்தில் கர்ப்பமாகவும் ஆனார். மருமகள் கர்ப்பமானதை அறிந்து லட்சுமம்மா பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் பூஜை, புனஸ்காரங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டார். ஈஸ்வராம்பாவை அனைவரும் அன்புடன் கவனித்துக் கொண்டனர். அப்போது தான் அந்த கிராமத்திற்கு வந்தார் வெங்காவ தூதர். ஏற்கனவே வெங்காவதூதர் என்ற பக்திமானின் வம்சத்தவரேகொண்டம ராஜூவின் குடும்பத்தினர். அவரைப் போலவே பெயர் கொண்ட ஒருவர் வந்ததும், கொண்டமராஜூ மகிழ்ச்சி கொண்டார்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த அவரது பிரசங்கம் நகைச்சுவையாக இருக்கும். இதற்காகவே மக்கள் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். கடவுள் மனிதனுக்கு கொடுத்தமிகப் பெரிய வரப்பிரசாதம் நகைச்சுவை. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கூட்டம் என்றுமே அதிகமாக இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒருநகைச்சுவை பட்டிமன்றம் என்றால் கூட எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது நாம் அறிந்தது தான். கொண்டமராஜூ அவரது பிரசங்கத்தை தவறாமல் கேட்கச் செல்வார். ஒருமுறை வெங்காவ தூதர், கொண்டமராஜூவை ஒரு தனியிடத்தில் சந்தித்தார். அவரது கையைப் பிடித்தார். பேச வாய் வரவில்லை. இருப்பினும் நா தழுதழுக்க, ராஜூ!  நாராயணன் இங்கு அவதரிக்க போகிறார். அதற்காக காத்திரு, என காதோரமாக சொன்னார். கொண்டமராஜூவும் தலை அசைத்தார். ஆனால் எங்கே எப்படி நாராயணன்அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் கொண்டமராஜூவின் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர் வீட்டில் இரவு நேரத்தில் இனிய இசை ஒலித்தது. வெங்கப்பராஜூ நாடகங்கள் மீது அபிமானம் கொண்டவர். அவரது வீட்டில் நாடக ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும். நாடகத்துக்காக யாரோ இசைக்கருவிகளை மீட்டுகிறார்களோ என அந்த அறையைப் போய் பார்த்தால் அங்கு யாருமே இல்லை. கொண்டமராஜூ அதிர்ச்சி அடைந்தார். அப்படியானால் அந்த தெய்வீக இசை எங்கிருந்து வந்தது? அதை மீட்டியவர் யார்?

கருத்துகள் இல்லை: