புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா - பகுதி 5

சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவன் தெய்வம் அல்லவா? பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அல்லவா அவன்? அவனது கையிலிருந்து நெய் வாசம் வர கேட்கவா வேண்டும்? கோகுலத்தில் அவன் தின்னாத வெண்ணெயா? நெய்யா? அதன் மணம் எத்தனை யுகங்கள் கடந்தாலும், அவன் உடலில் அந்த வாசனை ஒட்டியிருக்கத்தானே செய்யும்? இதை அன்னையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. சத்யாவை ராமலீலா ஊர்வல வண்டியில் ஏற்றிய அர்ச்சகரிடம், அவனை வண்டியில் எப்படி ஏற்றினீர்கள்? எனக் கேட்டார் ஈஸ்வராம்பா. குருவை ஏற்ற என்ன தயக்கம்? என்று பதிலளித்தார் அவர். குருவா? யாருக்கு யார் குரு?. அம்மா! தங்கள் மகன் இந்த ஊரில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குருவாக இருக்கிறான். அவனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் குழந்தைகள். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து அவனை வண்டியில் ஏற்றச் சொன்னார்கள். அவனை வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமலே உந்தியது. அவனை ஏற்றி வந்தேன், என்றார் அர்ச்சகர். ஈஸ்வராம்பாவுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனால் பகவானாக பிறந்தவர், தன்னை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் தானாகவே அமர்ந்து வந்தார் என்ற உண்மை அவர்கள் யாருக்கும் புரியவில்லை. குழந்தைகள் சத்யாவை விரும்ப ஒரு காரணம் இருந்தது. அவ்வூரில் திண்ணைப்பள்ளிகள் மட்டும் தான் உண்டு. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் சிலரே. அவர்களே ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரிய உதயம் ஆனவுடனேயே வகுப்புகள் ஆரம்பித்து விடும். பல குழந்தைகளின் உடம்பில் துணியே இருக்காது.

சத்யாவுக்கு ஈஸ்வராம்பா சட்டை அணிவித்து அனுப்புவார். அவன் அதிகாலை குளிரில் நடுங்கும் தன் சக நண்பர்களை பார்த்துக் கொண்டே இருப்பான். சிரமத்துடன் கல்வி கற்றனர் அவர்கள். அவர்களுக்கு சட்டை கொடுத்தால் என்ன என்ற எண்ணம் சத்யாவுக்கு ஏற்பட்டது. வீட்டில் தனக்காக வைத்திருந்த சட்டைகள், துண்டுகளை எல்லாம் எடுத்து வந்தான். குழந்தைகளுக்கு அணிவித்தான். வீட்டில் எல்லாருக்கும் இது தெரியும். ஆனால், சத்யா! இப்படி செய்யலாமா? உன் சட்டைகளை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்க குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தயக்கம். தர்மவானாக அல்லவா வளர்கிறார் நமது பாபா. அவரது செயல்களை தடுக்க வல்லவர் யார்? கீதையிலே கண்ணன் சொன்னது போல, உலகில் எப்போது அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன், என்று சொல்லியதை நிறைவேற்ற வந்துள்ள மகான் அல்லவா அவர். அவர் இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ? சிறு வயதிலேயே அவர் தர்ம காரியங்களுடன் அற்புதங்களையும் செய்யத் தொடங்கி விட்டார். சத்யா திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அடிப்படை படிப்பை முடித்து ஆரம்பக் கல்விக்காக புக்கப்பட்டணம் செல்ல வேண்டியதாயிற்று. புட்டபர்த்தியிலிருந்து 5 கி.மீ.தொலைவில் இருந்தது புக்கப்பட்டணம். காலையில் புறப்பட்டால் இருட்டிய பிறகு தான் வீடு வருவான் சத்யா. செல்லும் வழியெல்லாம் முட்புதர்கள் அடர்ந்திருக்கும். கற்கள் குவிந்து கிடக்கும். ஒரு ஆற்றிலும் இறங்கி அதை கடக்க வேண்டும். சத்யா இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. அவன் தினமும் நடந்தே சென்று வருவான். இந்தக் கால குழந்தைகள் ஆட்டோவிலும், பஸ்களிலும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்கள் பாபா சிறுவயதில் தினமும் 10 கி.மீ. நடந்தே சென்று படித்து வந்ததை உணர வேண்டும். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சிரமப்பட்டு படிக்க வேண்டும்.

சத்யாவின் நினைப்பெல்லாம் தன் சக மாணவர்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தான். அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுப்பான். தன் சட்டை பைக்குள் கையை விடுவான். ஏதாவது பலகாரம் வரும். நண்பர்களுக்கு கொடுப்பான். எத்தனை பேர் கேட்டாலும் கொடுப்பான். சத்யா! உன் சட்டைப் பையில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் கையை விட்டால் பண்டங்கள் வருகின்றன. அது எப்படி? என்பார்கள் நண்பர்கள். சத்யா அவர்களுக்கு புன்முறுவலையே பதிலாகத் தருவான். அவனது செய்கை அவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. அவனை புக்கப்பட்டணம் பள்ளி மாணவர்களும் குரு என்றே அழைத்தனர். பகவானுக்கு நாம் படையல் வைக்கிறோம். பூஜை முடிந்ததும் நாமே சாப்பிட்டு விடுகிறோம். இதை பிரசாதம் என்கிறோம். பிரசாதம் என்பது பகிர்ந்தளிக்கப்படுவது. ஆண்டவனுக்கு நாம் ஆத்மார்த்தமாக கொடுக்கும் பொருளை அவன் நமக்கு பகிர்ந்தளிக்கிறான் என்பதே பிரசாதத்தின் தத்துவம். ஆனால் சத்யா தனக்கென்று எதையும் எதிர்பார்ப்பதில்லை. மதிய உணவாகக் கொண்டு வரும் பழையசாதத்தையும், ஊறுகாயையும் கூட பசிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவான். பள்ளிப் பிள்ளைகள் சத்யாவை ஆராய ஆரம்பித்தார்கள். சத்யாவால் எப்படி வெறும் பையில் இருந்து தின்பண்டங்கள் தர முடிகிறது என்பதே அந்த ஆராய்ச்சி. இறைவனை மனிதன் என்றுமே ஆராய்ந்து வந்திருக்கிறான். நாத்திகன் அவன் இருக்கிறானா என ஆராய்கிறான். ஆஸ்திகன் அவன் இருக்குமிடத்தையும், அங்கு சென்று எப்படி அவனை அடைவது என்றும் ஆராய்கிறான். ஆக ஆத்திகன், நாத்திகன் இருவருமே இறைவனை ஆராய்கிறார்கள். அவனைப் பார்த்து விட துடிக்கிறார்கள். அவர்கள் அவனை அடையச் செல்லும் பாதை தான் வித்தியாசமானது. சத்யாவுடன் படித்த அந்தக் குழந்தைகளும் கூட தெய்வக்குழந்தைகளே! அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பெருமையாகவும், ஒரு வகையில் பொறாமையாகவும் இருக்கிறது. ஏன் நாமும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இல்லை? என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அவரது கடைக்கண் பார்வை படாதா என்று இப்போதும் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை? ஆனால் அவரோடு வாழ்ந்த குழந்தைகளை, அவரது அருட்பிரசாதம் பெற்ற குழந்தைகளை வணங்கத் தோன்றுகிறது. சத்யாவிடமே குழந்தைகள் தங்கள் சந்தேகத்தை கேட்டார்கள். சத்யா..வெறும் பையிலிருந்து எப்படி பண்டங்களை வரவழைக்கிறாய்?. சத்யாவின் பதிலுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.சத்யா தன் நண்பர்களிடம் அழகாக பதில் சொன்னான்.இது ஒன்றும் அதிசயமில்லை. நம் கிராம தேவதை ஒன்று இந்த பண்டங்களை எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன், என்றான்.குழந்தைகள் அவனை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் சத்யாவின் இந்த நிலை அவனுக்கு சாதகத்தை விட பாதகத்தையே நிறைய தந்தது. அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சத்யாவை அம்மா ஈஸ்வராம்பா கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.டேய் சத்யா! நீ இப்படியெல்லாம் செய்தா மாடு மேய்க்கத்தாண்டா போவே, அம்மா இவ்வளவு கடுமையான வார்த்தையை உதிர்த்து சத்யா கேட்டதே இல்லை. அவன் அம்மாவின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டு பார்த்தான்.அம்மா! நான் எந்தத்தப்பும் செய்யலையே?டேய்! பொய் சொல்றியா? இன்றைக்கு வகுப்பிலே ஆசிரியர் கொண்டப்பாவை என்னடா பண்ணினே? என்று அம்மா கேட்டதும் தான் சத்யாவுக்கு உறைக்க ஆரம்பித்தது. ஓ! அதுதான் அம்மாவின் கோபத்திற்கு காரணமா?அன்று வகுப்பறை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் கொண்டப்பா. இன்னொருவர் மகபூப்கான். மகபூப்கானுக்கு சத்யா மீது பிரியம் அதிகம். அவனுக்கு தான் கொண்டு வரும் இனிப்பு பண்டங்களைக் கொடுப்பார் அவர். ஆனால் சத்யா அதைச் சாப்பிட யோசிப்பான். அவர் ஒரு முஸ்லிம் என்பதால், வீட்டில் மாமிசம் சமைப்பார்கள். மாமிசம் சமைத்த பாத்திரத்தில் இந்த பண்டங்களையும் சமைத்திருப்பார்கள். எப்படி இதை சாப்பிடுவது? என்பது தான் சத்யாவின் தயக்கத்திற்கு காரணம். மகபூப்கான் இதைப் புரிந்து கொண்டார். ஒருநாள் தன் வீட்டை நன்றாக கழுவி, பெருக்கி, மெழுகி வீட்டை சுத்தமாக்கினார். புதுப்பாத்திரங்கள். புது எண்ணெய், புதிதாக மளிகைப் பொருள்கள் வாங்கி வீட்டில் பலகாரம் செய்யச் சொன்னார். அதை சத்யாவுக்கு எடுத்து வந்து கொடுத்தார்.

சத்யா! இன்று என் வீட்டை சுத்தமாக்கி, சுத்தமாக செய்து எடுத்து வந்த பலகாரம் இது. இதையாவது சாப்பிடேன், என்றார். ஆசிரியர் தன் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்தான் சத்யா. அது மட்டுமல்ல! சத்யா ஒரு சமயம் கடந்த தெய்வமாகவும் உருவாகி இருக்கிறான் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. ஆசிரியர் கொண்டப்பா கண்டிப்பானவர். தான் பாடம் சொல்லித்தரும் போது மாணவர்கள் வேறு எங்காவது கவனத்தை செலுத்தினால் அவருக்கு பிடிக்காது. ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சத்யா ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். கொண்டப்பா சத்யாவைக் கண்டித்தார்.சத்யா! நான் பாடம் நடத்தும் போது கவனிக்காம அங்கே என்ன செஞ்சுகிட்டிருக்கே! கொண்டப்பா சத்தம் போட்டார்.ஐயா! நான் இங்கே எழுதிகிட்டிருந்தாலும், நீங்க சொல்றதை கவனிச்சுகிட்டும் இருக்கேன். இதோ பாருங்க! பஜனை பாட்டு தான் எழுதிக்கிட்டு இருந்தேன்,.சத்யாவின் இந்த பதில் ஆசிரியரை எதிர்த்து பேசுவது போல் இருந்தது. அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது.சத்யா! செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்காம எதிர்த்தா பேசுறே! பெஞ்சு மேலே ஏறு! வகுப்பு முடியறவரைக்கும் நிக்கணும் புரியுதா! என்றார். சத்ய நாராயணன் அப்படியே செய்தான். அவன் தன் நண்பர்களுக்கு பஜனைப் பாடல்களை எழுதிக் கொடுப்பான். அதை வகுப்பு நேரத்திலேயே செய்வான். அதே நேரம் பாடங்களில் கோட்டை விட்டதில்லை. எல்லா பாடங்களை படிப்பதிலும் படுசுட்டி சத்யா.அடுத்த பீரியட் ஆரம்பமானது. கொண்டப்பா பக்கத்து வகுப்புக்கு கிளம்ப தயாரானார். மகபூப்கான் உள்ளே வந்தார். அவர் சத்யா பெஞ்சு மீது நிற்பதைப் பார்த்ததும் கலவரம் அடைந்தார்.தெய்வத்தை தண்டிக்கும் அதிகாரம் நமக்கேது! என பதறியபடியே சிந்தித்தவராய் நடந்த விஷயத்தை கொண்டப்பாவிடம் கேட்டார். கொண்டப்பா சொன்னதும், பரவாயில்லை, சிறுவன் தானே! தெரியாமல் செய்து விட்டான், விட்டு விடுங்கள், என கேட்டுக் கொண்டார்.

கொண்டப்பா மனம் இரங்கவில்லை. அவன் இன்று முழுவதும் நிற்கட்டும், என்றவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆனால் அவரால் எழ முடியவில்லை. வலுக்கட்டாயமாய் எழுந்த போது, நாற்காலியும் பின்பக்கமாய் ஒட்டிக் கொண்டு வந்தது.மகபூப்கான் நினைத்தது போலவே தான் நடந்தது. சத்யாவை பெஞ்சில் ஏற்றியதால், கொண்டப்பாவுக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர், இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளெல்லாம் சிரித்தனர்.ஐயா! எங்கள் குருவை கீழே இறக்குங்கள். இல்லாவிட்டால் நாற்காலி உங்களை விடாது, என்றனர். மகபூப்கானும் இதையே சொன்னார்.வேறு வழியின்றி சத்யாவை இறங்கச் சொன்னார் கொண்டப்பா. சத்யா இறங்கவும், ஒட்டிய நாற்காலி கீழே விழுந்தது.காண்டப்பா ஆச்சரியப்பட்டார். இவன் மகான் தான், சந்தேகமே இல்லை, என மனதில் நினைத்து அவனை கருணை பார்வை பார்த்தபடி வெளியே சென்றார்.இந்த சம்பவம் வீட்டுக்கு தெரியாமல் இருக்குமா? சக சிறுவர்கள் சத்யாவின் அம்மாவிடம் போய் சொல்லி விட்டார்கள். அம்மாவுக்கு கடும் கோபம்.அதன் விளைவு தான், அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் சத்யா. சத்யாவை கண்டித்து விட்டு, ஈஸ்வராம்பா தற்செயலாக வெளியே சென்றார். ஆசிரியர் கொண்டப்பாவை அவர் பார்த்தார். நடந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சும் தொனியில் கூறினார். ஆனால், கொண்டப்பா, அம்மா அப்படி சொல்லாதீர்கள். அவன் தெய்வம், நீங்கள் தெய்வத்தாய், என்று அக மகிழ்ந்து சொல்லவும் ஆச்சரியப்பட்டார் ஈஸ்வராம்பா.

கருத்துகள் இல்லை: