செவ்வாய், 17 செப்டம்பர், 2019

இந்த என்னுடைய கட்டுரையை சரியாகப் புரிந்துகொள்வதற்க என்னுடைய ஆதிகால வரலாறு. என் குடும்பத்தின் பின்னணி மற்றும் என்னுடைய துன்பங்கள் நிறைந்த நாட்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய முதல் பன்னிரண்டு வருஷ வாழ்க்கையில் சந்தோஷமான நேரம் என்று எதுவும் இருந்ததாகவே நினைவில்லை ஒன்றே ஒன்றைத் தவிற 1947 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில் எங்கள் ஊரில் நடந்த விழா அது. நாட்டுக்கு சுதந்திரம் என்பது என்ன என்று அப்போது எனக்கு விளங்க வில்லை. 1950 வாக்கில் என்னுடைய பெற்றோர்கள் தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் திருவெண்ணை நல்லூர் அருகே இருந்த டி. குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். அது தான் என்னுடைய அம்மாவின் பிறந்த ஊர். அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் கொடியூர் என்ற ஊர் என் தந்தையின் பிறந்த ஊர். என்னுடைய அம்மாவின் திருமணத்தின் போது அவர்களுக்கு வயது ஐந்து! கல்யாணத்திற்கு சில வருஷங்கள் பின் என்னுடைய அப்பா குளத்தூருக்கு வந்து விட்டார். சுந்தரேச ஐயர் என்பவரின் ஒரே மகளான என் அம்மாவுக்கு அவரிடமிருந்து பல ஏக்கர் விளை நிலங்கள் சொந்தமாயின. என் தந்தை ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்பு முடிந்தவுடன் வேதங்கள் படிக்க முற்பட்டார். ஆனால் வேதபாடசாலைப் படிப்பை முடிக்கவில்லை. அவருடைய முன் கோபம் மிகவும் பிரஸித்தமானது! அதனால் பல வேலைகளை இழந்து கடைசியில் மேட்டுக்குப்பம்  கிராமங்களின் தாற்காலிக மணியக்காரராக (village munsiff) ஆனார். சிறுபையனாயிருந்த அந்த வேலைக்குரிய வாரிசு வயது வந்த பின் அவருக்கு இருந்த அந்த வேலையும் போயிற்று. அதன் பிறகு வக்கீல் குமாஸ்தாவாக சொந்தமாக வேலை செய்ய ஆரம்பித்தார். படிப்பறியாத அந்த கிராம மக்களின் ‘கேஸ்’களை திருக்கோயிலூர் மற்றும் கடலூர் வக்கீல்களிடம் கொண்டு கொடுத்து ஏதோ கொஞ்சம் வரும் படி வந்தது. ஆனால் அந்த கிராமத்தின் பெரும்பாலான மக்கள் நல்ல குணத்தினால் பெரும்பாலான ‘கேஸ்’களை உள்ளூர் பஞ்சாயத்தில் வைத்தே தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தையின் வருமானம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. ஒவ்வொரு வருஷமும் என் தாய் ஏக்கர் ஏக்கராகத் தன் நிலங்களை விற்கத் தொடங்கினார். 1950 ஆம் வருஷத்தில் எங்கள் குடும்பத்தின் நிலைமை நம்பிக்கையற்ற மிக மோசமான நிலையை அடைந்தது என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஒரு இளைய சகோதரியும், ஒரு அண்ணனும் இருந்தனர். அண்ணா கணபதியை திருக்கோயிலில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அப்பா மிகவும் முயன்றார். ஆனால் அவன் படிப்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை. 1951 ஆம் ஆண்டு அவன் வீட்டை விட்டே ஓடி விட்டான். என்னுடைய ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்புக்குப் பிறகு ஒரு வருஷம் போல் வெறுமனே இருக்க வேண்டி வந்தது. திருக்கோயிலூர் உயர் நிலைப்பள்ளிக்கு அப்பாவால் என்னை அனுப்ப முடியவில்லை.

1949 — 50 வாக்கில் பெரியவா எங்களுடைய கிராமத்தில் முகாமிட்டிருந்தார அதைப்பற்றி எனக்கு மிக மங்கலான நினைவே உள்ளது. பெரியவா எங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டியதாகவும் அப்போதிருந்த குடும்பநிலையைக் கண்டு எல்லோரையும் மடதில் சேர்ந்து விடும் படி அழைப்பு விட்டதாகவும் என் அம்மா சொன்னார்கள். என்னை ப்ரத்யேகமாக ஆசீர்வதித்ததாகவும் & இவன் உன்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷத்தையும் வளத்தையும் கொண்டு வருவான் என்று சொன்னதாகவும் அம்மா சொன்னார்கள். இதை அவர் சொல்லும் பொழுது நான் அவரை நம்பவில்லை. பின்னால் நடந்த நிகழ்ச்சிகள் பெரியவா உண்மையாக என்னை ஆசீர்வதித்திருக்கிறார்’ என்று நிரூபித்தன (காலம் கடந்த தெளிவு!). மீதி இருந்த கொஞ்சம் கௌரவத்துடன், 1951 இல் அந்த ஊரை விட்டு வெளீயேறி மாயவரத்தில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த மடத்தில் சேர்ந்தனர் என் பெற்றோர்கள்.

என்னுடைய பெரிய அக்காவின் கணவர் குளத்தூரிலேயே அதிகம் படித்த மூன்று, நான்கு பேர்களில் ஒருவர். S.S.L.C—முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு ஒரு நல்ல ப்ரஸித்தமான ஆசிரியராக ஆனார். 1951—இல் கண்டசிபுரம் என்ற ஊரில் ஆசிரியராக இருந்தார். என் ஏழாவது வகுப்பை அவர்கள் வீட்டில் தங்கி அங்கேயே படித்தேன். அடுத்த வருஷம் அவர் சித்தலிங்கமடம் என்ற ஊருக்கு மாற்றப்பட்ட போது நானும் அவருடன் சென்று எட்டாவது வகுப்பில் படித்தேன். 

அப்பொழுது ஞானானந்தா என்ற ஒரு ஸ்வாமிகளின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. அவர் நான் படித்த பள்ளியின் எதிரில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அழகுத் தமிழில் இனிமையாகப் பேசுவார். என்னை “சுந்தரம்” என்று அன்புடன் கூப்பிடுவார். ஒவ்வொரு மாலையிலும் எனக்கு இனிப்புகளும், பழங்களும் தருவார். தினமும் மாலை ஸ்கூல் விட்டதும் நேரே அங்கே போவதற்குப் போதுமான ஊக்குவிப்பு! நான் அவரை என்னுடைய தாத்தாவாகக் கருதினேன். அவருடைய பூர்வ சரித்திரம் அங்கு யாருக்கும் தெரிந்திருக்க வில்லை சில வருஷங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ அந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் வயதாகிறது என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நான் ஸ்கூலில் என்னென்ன படிக்கிறேன் என்று கேட்பார். கதைகள் சொல்லுவார். நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். நான் ஸ்கூலிலிருந்து அங்கு வரவில்லையென்றால் எனக்காக வாசலில் காத்திருப்பார். சில வருஷங்களுக்குப்பின் அவர் திருக்கோயிலூர் அருகே இருக்கும் அரகண்டநல்லூர் என்ற இடத்திற்குப் போய் விட்டார். அங்கே மிகவும் பிரபலமானார். இப்பொழுது அவர் இல்லை. “தபோவனம்’ தற்பொழுது ஒரு மிகப் பிரபலமான இடம் அதைப் பின் பற்றுபவர்கள் அநேகம். நான் எதற்காக அந்த ஸ்வாமிகளைப் பற்றி இவ்வளவு சொல்கிறேன் என்று நீங்கள் வியக்கலாம். “பெரியவாள் ஒரு நடமாடும் தெய்வம். ஒரு மடத்தின் பீடாதிபதி மட்டும் இல்லை சீக்கிரம் மக்கள் அவருடைய உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்வர். என்று எனக்கு முதல் முதலாக சொன்னவர் அவர் தான்! நான் எப்பொழுது சோர்ந்து போயிருந்தாலும் பெரியவா உன்னையும் உன் குடும்பத்தையும் ரக்ஷிப்பார் என்று கூறுவார். என் தாயார் மாயவரம் போகும் வழியில் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார்.

மடத்தில் சேர்ந்து சுமார் எட்டு மாதங்கள் கழித்து என் தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதினார். பெரியவா உன்னைப்பற்றி விஜாரித்தார் நீ உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார். என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அன்று வரை எப்படியாவது E.S.L.C வரை படித்து விட்டு ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று ஒரு ‘எலிமென்டரி’ ஸ்கூல் ஆசிரியராக வர வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அறிந்த போது என் மனத்தில் உற்சாகம் கரை புரண்டது. ஞானானந்த ஸ்வாமிகளின் ஜோசியம் பலிக்கிறதோ என்று எண்ணினேன். 

ESLC முடித்து விட்டு, ஞானானந்த ஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு 1952 ஏப்ரலில் பெரியவாளின் முன்பு போய் நின்றேன். அப்பொழுது அவர் மாயவரம் பக்கத்தில் ஒரு இடத்தில் இருந்தார். பெரியவா கேட்டார், “ஹைஸ்கூலில் படிக்கப்போறே இல்லியா?” நான் அதற்கு ஆசைப்படுவதாகவும் ஆனால் எப்படி எங்கே என்று தெரியவில்லை என்றும் பதிலளித்தேன்.

பெரியவா அப்போது எனக்கும் என் தந்தைக்கும் ஒரு புதிர் போட்டார். தென்னாற்காடு தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைகளிலிருந்து ரொம்ப தூரமில்லாமலும் ஒரு பிரபலமான கோயிலும் ‘யுனிவெர்சிடி’யும் இருக்கும் இடமுமான ஒரு பெரிய நகரத்தின் பெயர் என்ன?”
எங்கள் மனத்தில் ‘யுனிவெர்சிடியைப்ப ற்றிய எண்ணம் இல்லாததால் மாயவரமாக இருக்குமோ என்று நினைத்தோம்.

ஆனால் பெரியவா சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசி விட்டு என்னுடைய அம்மாவிடம் சிதம்பரத்தில் குடித்தனம் போடச் சொன்னார். இப்பொழுது நான் அதைப்பற்றி நினைக்கும் போது நானோ என்னுடைய பெற்றோரோ என்னுடைய மேல் படிப்புப்பற்ற ஒரு திட்டம் போடவில்லையென்றாலு ஒரு நினைப்பே கூட இல்லாமல் தான் இருந்தோம். ஆனால் பெரியவா ஒரு முழுத் திட்டமே போட்டு வைத்திருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.

நான் சிதம்பரத்தில் இருந்த ராமஸ்வாமி செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். படிப்பில் மிகவும் நன்றாகச் செய்தேன். லீவு நாட்களில் பெரியவாளைப் போய்ப் பார்ப்பேன். விரைவில் அவருடைய அணுக்கத் தொண்டனாகவும் ஆனேன். பிரசாதம் கொடுப்பது பக்தர்களுக்கு மெயிலில் பிரசாதம் அனுப்புவது, பக்தர்களின் கடிதங்களைப் பெரியவாளுக்குப் படித்துக் காட்டுவது, தினசரி பத்திரிகைகளைப் படித்துக்காட்டுவது பக்தர்களின் க்யூ வரிசைகளைக் கட்டுப்படுத்துவது, இன்னும் அவர் எனக்கு என்னென்ன பணிகளிடுகிறாரோ அவைகளைச் செய்வது போன்ற பல. 

ஏப்ரல் 15—ஆம் தேதி S.S.L.C பரீக்ஷை எழுதினேன். அதற்குள் பெரியவாளும் மடமும் சின்ன காஞ்சீபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் அவர் அருகிலிருந்த சிவாஸ்தானத்திலும் ஓரிக்கையிலும் முகாமிட்டிருந்தார். பரீக்ஷை முடிந்தவுடன், காஞ்சீபுரம் சென்று அடுத்த இரண்டு மாதங்கள் அவருடன் இருந்தேன். ஜூன் 1955-இல் ‘ஹிந்து’ நாளிதழில் என்னுடைய பரீக்ஷை முடிவு வெளியானபொழுது பெரியவாளிடம் போய் சந்தோஷமாகத் தெரிவித்தேன்..
 
ஜனவரி 23-ஆம் தேதி மெட்ராசிலிருந்து நியூயார்க் போகும் flght—இல் நான் மேட்டூர் ஸ்வாமிகள் சொன்னதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த 26 மணி யாத்திரையில் 8 மணி நேரம், நான் 1952 முதல் 1967 வரையிலான பெரியவாளுடனான என்னுடைய அனுபவத்தை மறுபடி ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். எதிரில் உள்ள திரையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. என் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘நானும் என்னுடைய கஷ்டமான நாட்களையே நினைவில் வைத்திருக்கிறேன்.” என்று. எனக்கு அருகில் அமர்ந்திருந்த என்னுடைய இரண்டாவது மகன் பிரபாகர் அதைக்கேட்டு, “யாரைப்பற்றி எதற்காக நீங்களே சத்தமாகப் பேசிக்கொள்கிறீர்கள் என்று கேட்டான். அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது அதை நிச்சயமாக எழுதுவது என்று உறுதி கொண்டேன். வீட்டை அடைந்த பின் ஜனவரி 25—ஆம் தேதி இரவு எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வரிசையாக எட்டு இரவுகள், ஒவ்வொரு இரவிலும் நான்கு மணி நேரம், விடாமல் எழுதினேன். ஒவ்வொரு இரவும் அந்த அனுபவங்களைத் திரும்ப ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். (என்னுடைய மனைவி என்னுடன் அப்போது திரும்பி வரவில்லை). ரமணியின் புல்லாங்குழல் இசையும் லால்குடி ஜயராமனின் வயலின் இசையும் மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கர்னாடக இசையில் இருந்த ஆர்வம் ஞாபகத்திற்கு வந்தது, முக்கியமாக, வீணை இசையில். எங்கே இதை தொடங்குவது என்று ஆலோசித்தேன். முன்னால் எழுதியுள்ள ‘அந்த இரவின் விஸ்வரூப தரிசனத்திலேயே தொடங்கினேன். எனக்குத் தெரியும், அவர் நினைத்தால் நான் எழுதுவதை நிச்சயமாகப் பார்ப்பார் என்று.

இனித் தொடர்வது என்னுடைய சொந்த விஷயம். படித்து முடிக்கும் வாசகர்கள்,, பெரியவாள் என்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறார் என்று அறிந்து கொள்வர். பெரியவா அவருடைய பரிசோதனைகளுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இப்பொழுதும் நான் ஆச்சரியப்படுவது போலவே, அவர்களும் ஆச்சரியப்படுவர். அவருடைய கடாக்ஷம் எனக்குக் கிடைப்பதற்கு நான் அருகதை உடையவனே இல்லை. நான் எழுதியதில், பெரியவாளுக்குப் பல துறைகளிலும் இருந்த மிக உயர்ந்த திறமையையும் அறிவையும் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை; என்னுடைய வழியில் எழுதியிருக்கலாம்; ஆனால் அந்த முக்கிய விஷயம் பற்றி எண்ணும் பொழுது நான் என்னை ஒரு கடைநிலை சிஷ்யனாகவே கருதுகிறேன்.

1952—இல் இருந்து 1967 வரை உள்ள பதினைந்து வருஷங்கள் பெரியவாளுடன் நெருங்கிப் பழகும் பாக்யம் கிடைத்தது. முக்கியமாக, 1952 முதல் 1960 வரையிலான என்னுடைய பள்ளி மாணவ நாட்களில் பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவருடைய அணுக்கத் தொண்டனாக பணியாற்றினேன். அவருக்கு என் மேல் ஒரு ப்ரத்யேக அன்பு இருந்தது. மடத்தில் உள்ளவர்களும் மடத்திற்கு வருகிறவர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். என்மேல் பொறாமையும் கொண்டணர். நான் இதை மிகவும் ரஸித்தேன்! ஒரு முறை மடத்தின் மானேஜர் ஸ்ரீ விஸ்வனாத ஐயர் (எனக்கு மிகவும் பிடித்தவர்), பெரியவா நெடுநேரமாக தியானம் செய்து கொண்டிருந்த அறைக்குள் செல்ல விரும்பினார். தட்டிக்கதவுக்கு அருகில் நான் காவல் இருந்தேன். விஸ்வநாத ஐயர் பெரியவாளிடம் மிக முக்கியமான ஒரு விஷயம் தெரிவிக்க உள்ளே போக வேண்டும் என மிகவும் வற்புறுத்தினார். நான் அவரிடம் பணிவாக ஆனால் உறுதியாக, அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, இப்போது உள்ளே போக முடியாது என்று மறுத்தேன். அவர் கோபமடைந்து, மடத்தில் இருந்த பக்தர்கள் மத்தியில் கத்தினார், “அந்த துரைஸ்வாமி ஐயரோட பையன் சுந்தரராமன் மடத்துக்கு வந்துட்டா பெரியவா அவனுக்கு முழு அதிகாரம் கொடுத்துடறா! மடமே அவனோட அரசாங்கமாயிடறது.” அன்று பிறகு ஒரு சமயம் அவர் பெரியவாளிடம் இதைப்பற்றிப் புகார் சொன்னார். அதற்குப் பெரியவா தந்த பதில், “ அவன் என்னை இத்தனை நன்னா பாத்துக்கறதுக்கு நீன்னா அவனுக்கு நன்றி சொல்லணும்?”

இந்த ஏழை ஸ்கூல் மாணவனான என்னிடம் ஏன் பெரியவா இத்தனை அன்பும் பரிவும் வைத்திருக்கிறார்? இந்தக் கடாக்ஷத்தைப் பெற நான் அவருக்கு என்ன செய்து விட்டேன்? பல வருஷங்களுக்கு முன் நான் அவரைத் திடீரென்று விட்டு விட்டுப் போன பின்னாலும் வெகு தொலை தூரத்தில் இருந்த போதிலும் அவர் என்னை விடாது ஆசிர்வதித்திருக்கிறார் என்று எண்ணும் போது என் மனது வெடித்து விடும் போல் இருக்கிறது.

1985—இல், நான் மெக்ஸிகோ நகரத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள் காஞ்சீபுரத்தில் இருக்கும் என் மருமான் சந்த்ருவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கடைசியாக அவனிடம் இருந்து கடிதம் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. அவன் கடிதம் எழுதியதற்கு முதல் நாள் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றிருக்கிறான். எப்போதும் போல் பல பக்தர்களும் அணுக்கத்தொண்டர்களும் இல்லாமல் பெரியவா எல்லோருக்கும் ஒரு புதிர் போட்டார்.

“நான் ஒத்தனை மனஸால் நினைத்தேன். அவன் பறந்து போயிட்டான். யார் அவன்?”

(anusham163’s comment at this stage: இதைப்படித்த எனக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்து கதறி அழுது விட்டேன். எத்தனை ஒரு அன்பு இருந்திருந்தால் பெரியவா வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும்? நம்மைப்போன்ற ஸாதாரண மனிதர்களுக்குத்தான் சுகம், துக்கம், போன்ற உணர்ச்சிகள். மஹான்களுக்கு அதொன்றும் கிடையாது என்றாலும், பெரியவா மனசில் அன்புடன் கூட “திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டுப் போயிட்டானே” என்ற தாபம் அந்த வார்த்தைகளில் தொனிக்கிறதோ என்ற எண்ணத்தில்தான் நான் அப்படி அழுதேன். ஆனால் அவர் எதை நினைத்து அவ்விதம் சொன்னார் என்று யாரால் சொல்லமுடியும்?)

அரைமணி நேரம் ஆனபிறகும், அந்தப் புதிருக்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை. பெரியவாளே கடைசியில் புதிரை அவிழ்த்தார், “அந்த துரைஸ்வமியின் பையன் சுந்தரராமந்தான் அவன்”

பெரியவா எதற்காக என்னைப்பற்றி அன்றைய தினம் குறிப்பிட வேண்டும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த கடிதத்தைப் படித்து முடித்தவுடன், என்னை நம்புங்கள், என்னுடைய இதயம் நின்று விட்டது போல் இருந்தது; அழுதேன்.

கருத்துகள் இல்லை: