செவ்வாய், 17 செப்டம்பர், 2019

திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா?

வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
-----------------------------------------------‐---------------------------------
பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்!

தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.

விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு
-----------------------------------------------‐---------------------------------
பச்சை நிற சிவபெருமான்

பொதுவாக பச்சை நிறம் விஷ்ணுவுக்கு உரியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் (பச்சை) மரகதத்தால் ஆன சிவனின் சிலை திருஇடைச்சுரம் என்ற ஊரில் உள்ளது. இங்குள்ள ஞாலபுரீஸ்வரர் மற்றும் மரகதாலேஸ்வரர் கோயில்களில் பச்சைக்கல்லாலான சிவலிங்கங்கள் உள்ளன. இவரை தரிசித்தால் வாழ்வில் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி சிவன் கோயிலிலும் பச்சை லிங்கம் இருக்கிறது. ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் விசேஷ நாட்களில் மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது.
-----------------------------------------------‐---------------------------------
ஆறு சமய வழிபாடு

ஆதிசங்கரர் ஆறு சமயங்களைத் தொகுத்து, வகுத்து சிறப்பித்தார். இது ஷண்மத வழிபாடு எனப்படும். இறைவழிபாட்டிற்குரிய மாதமான மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்கு உரிய திருநாள்கள் வருவது சிறப்பு.

காணாபத்யம் - கணபதி வழிபாடு தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்தி கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவ வழிபாடு - திருவாதிரை
வைணவம் - விஷ்ணு வழிபாடு - வைகுண்ட ஏகாதசி
கௌமாரம் - முருக வழிபாடு - படி உற்சவம்
சாக்தம் - சக்தி வழிபாடு - பாவை நோன்பு
சௌரம் - சூரிய வழிபாடு - தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தை பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.
-----------------------------------------------‐---------------------------------
வாரணாசி (காசி) ன் சிறப்பு!

அலகாபாத் நகலிருந்து 123 கி.மீ. தூரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புராண சிறப்புள்ள தொண்மையான நகர். கங்கையின் வடக்கே அருணை நதி கலக்கிறது. தெற்கே அஸி நதி கலக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் உள்ள நகரம் தான் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. காசியின் நீளம் கங்கை கரையில் ஓரமாக நான்கு மைல்கள். இதில் அறுபத்து நான்கு ஸ்நான படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில் உயர்ந்த மாளிகைகளும், ஆலயங்களும் உள்ளன. ஐந்து ஸ்நான கட்டங்களை முக்கியமானதாக குறிப்பிடுகிறார்கள். அவை-

1. அஸி கட்டம்,
2. தசாசுவமேத கட்டம்,
3. வருணா கட்டம்,
4. பஞ்சகங்கா கட்டம்,
5. மணிகர்ணிகா கட்டம். - இந்த இடுகாட்டில் தான் உயிர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பதாக சிவன், விஷ்ணுவிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார்.

ஐந்து கட்டங்களிலும் படகில் பயணம் செய்து கங்கையில் ஸ்நானம் செய்து வரவேண்டும். மணிகர்ணிகா காட் படித்துறையில்  நீராடுவதும், பித்ரு காரியங்களை செய்வதும் மிகவும் விசேஷம். மணிகர்ணிகா காட் ஆதிசங்கரர் மணிகர்னிகாஷ்டகத்தில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு ஐந்தும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.
-----------------------------------------------‐---------------------------------
சிவபிரானின் வீரட்டானத் தலங்கள்

சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். வீரஸ்தானம் என்பதுவே வீரட்டானம் என்றாயிற்று. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

1. திருக்கண்டியூர்   : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
3. திருவதிகை         : திரிபுரத்தை எரித்த இடம்
4. திருப்பறியலூர்  : தக்கன் தலையைத் தடிந்த தலம்
5. திருவிற்குடி        : சலந்தராசுரனை வதைத்த தலம்
6. திருவழுவூர்       : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
7. திருக்குறுக்கை    : மன்மதனை எரித்த தலம்
8. திருக்கடவூர்       : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
-----------------------------------------------‐---------------------------------
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது. மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒன்றாக அடையலாம்.
-----------------------------------------------‐---------------------------------
துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?

ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனி : காலை 09:00 - 10:30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
-----------------------------------------------‐---------------------------------
பூஜைக்குரிய காலங்களும் பூக்களும்!

கொன்றை, செவ்வந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிற பூக்கள் விடியற்காலை பூஜைக்குரியவை. செந்தாமரை, செவ்வரளி, பாதிரி முதலிய சிவப்பு நிற பூக்கள் பகல் பூஜைக்குரியவை. மல்லிகை, முல்லை, தும்பை முதலிய வெள்ளை நிற பூக்கள் மாலை நேர பூஜைக்குரியவை. நீலோற்பவம் எனப்படும் பூ தற்போது உபயோகத்தில் இல்லை. இதை தவிர வேறு எந்த நீல நிற பூவும் பூஜைக்கு தகுதியற்றது. பொதுவாக மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பூக்கள் தான் பூஜைக்க உகந்ததாக கருதப்படுகிறது.
-----------------------------------------------‐---------------------------------
பாம்புக் கோயில்கள்

1. திருவாரூரில் மூலவராக இருக்கும் வன்மீகநாதருக்கு புற்றிடம் கொண்ட நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இது சுயம்புலிங்கம். ஒரு பாம்புப்புற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

2. திருப்பதி மலையின் தோற்றம் பாம்பைப் போலவே இருக்கிறது. தன் படத்தை திருமலையில் வைத்திருக்கும் வாலை கிருஷ்ணா நதி வரை நீட்டியிருப்பதாக சொல்வார்கள்.

3. சென்னை திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள வடிவுடை நாயகியை தரிசனம் செய்தால் நாகதோஷம் விலகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வூரின் புராணப்பெயர் வானொளிப்புற்றூர் என்பதாகும்.

4. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில் இருக்கிறது. இவரை நாகராஜர் என்கிறார்கள்.

5. நாகர்கோவில் அருகிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் புற்று 56 அடி உயரம் உடையது. ஐந்து முகங்களைக் கொண்ட இந்த புற்று வளர்ந்துகொண்டே இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

6. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகியவற்றில் புற்று மண்ணை பிரசாதமாக தருகிறார்கள். இந்த மண் பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது.
-----------------------------------------------‐---------------------------------
பிறந்தநாளில் வித்தியாசமான வழிபாடு!

புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாடு உள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் பக்தர்கள் தங்களது ஜென்மநட்சத்திரத்தன்று பிறந்த நாயன்மார்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உதாரணமாக கண்ணப்ப நாயனார் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் இங்கு சென்று தங்கள் பெயருக்கு நாயனார் முன்பாக அர்ச்சனை செய்வார்கள். இந்த வழிபாட்டின் மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த சாதனையாளர்களாக உருவாகலாம் என்பது நம்பிக்கை. வேதசாஸ்திரம் கற்க விரும்புபவர்கள் முதலில் இத்தல ஈசனை வழிபாடு செய்கிறார்கள்.
-----------------------------------------------‐---------------------------------
சிவனுக்கு துளசி அர்ச்சனை

சிவனுக்கு வில்வத்தாலும், பெருமாளுக்கு துளசியாலும் அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால், திருப்பதி ஏழுமலையானுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருநோக்கிய அழகிய நாதருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
-----------------------------------------------‐---------------------------------
சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?

சப்தவிடங்கத்தலங்கள் திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. சப்தம் என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. வி என்றால் செதுக்காதது. உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இல்லை. இந்த ஏழு தலங்களிலும் தியாகராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு.

1. திருவாரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது.)

2. நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகள் அசைவதுபோல் ஆடுவது.)

3. திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம் (கோழி நடப்பது போல் ஆடுவது.)

4. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது.)

5. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம் (நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல ஆடுவது.)

6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்ஸபாத நடனம் (அம்ஸம் என்பது அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)

7. திருநள்ளாறு - தகவிடங்கர் - உன்மத்த நடனம் (பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல் ஆடுவது.)
-----------------------------------------------‐---------------------------------
காலண்டர்,மாதங்கள் பிறந்தது எப்படி?காலண்டர் கண்டுபிடித்தது எங்கு?

கிரேக்கர்கள் தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன. கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12வது மாதங்கள்)இருந்தன. கி.மு.46ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்கள் ஆக்கினார். இதற்கு ஜுலியன்காலண்டர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

மாதங்களின் பெயர்க் காரணம்:

ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.

ஏப்ரல்:ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே:உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.

ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன்.

ஜூலை:ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்:ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்:மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்:அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்:நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.
-----------------------------------------------‐---------------------------------
வாழ்வில் வளம் பெற வாயு மைந்தன் வழிபாடு!

இரண்டெழுத்தில் நம் மூச்சிருக்கும் : ராமபக்தியில் சிறந்தவர்களை எண்ணிக்கையில் அடக்கமுடியாது. கோடிக்கணக்கான ஜீவன்கள் ராமநாமத்தை ஜெபித்து மோட்ச கதியைப் பெற்றிருக்கின்றனர். மிகவும் புனிதமானது "ராம என்னும் இரண்டெழுத்து நாமம். "ராம என்று சொன்னவருக்கு பாவம் விலகி புண்ணியம் வந்து சேரும். பக்த ரத்தினமான அனுமன் எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம். அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார். வேதாந்த தேசிகன் என்பவர், சங்கல்பசூரியோதயம் என்னும் நூலில்,""அனுமனிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் பரம்பொருளான ராமசந்திர மூர்த்தியிடம் நிச்சயம் சேர்த்துவிடுவான் என்று நம்பிக்கையூட்டுகிறார்.ராமாவதாரம் முடிந்து அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பி தானும் கிளம்பினார் ராமர். ஆனால், ராமநாமம் ஒலிக்காத வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பாமல் பூலோகத்திலேயே இருந்து ராமநாமத்தை ஜெபிப்பது என்று தீர்மானித்தார் அனுமன். ராமபிரானும், ""ராமாயணமும், ராமநாமமும் இவ்வுலகில் இருக்கும்வரை என்றென்றும் நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக! என்று வாழ்த்தி வைகுண்டம் கிளம்பினார்.

செல்வம் பெருக்கும் ஸ்லோகம்: சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:

வெற்றி தரும் ஸ்லோகம்: அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க:சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
-----------------------------------------------‐---------------------------------
மனிதராய் பிறந்த மணிகண்டனின் மகரஜோதி தரிசனம்!

கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக புஷ்கலாவுடனும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் துறவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கேரளநாட்டை உருவாக்கிய பரசுராமர் இக்கோயில்களை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றொரு பழமையான சாஸ்தா கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உள்ளது. இங்கே சாஸ்தாவை காவல் தெய்வமாகக் கருதி சொரிமுத்து அய்யனார் என்ற பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.தமிழகப் பிரிவினைக்கு முன்பு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லைக்குள் இருந்த இக்கோயில் தற்போது தமிழகத்தில் உள்ளது.

மீனாட்சி வழிபாடு

குளத்துப்புழை ஐயப்பன் கோயில் கொல்லம் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. பாலகனாக இக்கோயிலில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் மீனூட்டு என்னும் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். கோயில் குளத்தில் இருக்கும் மீன்களை ஐயப்பனின் நண்பர்களாகப் பக்தர்கள் கருதுகின்றனர். மீன்களுக்கு கோதுமை மற்றும் கடலையை உணவாக இடுகின்றனர். இதனால் இக் குளத்தில் யாரும் மீன் பிடிப்பதில்லை. இக்கோயிலுக்கு வந்த அனைவரும் தன்னை மறந்து குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா! என்ற சரணகோஷத்தை முழங்குகின்றனர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் சாஸ்தாம் கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஐயப்பன் சிறுவனாக காட்சிதருகிறார். இங்கு குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றிற்கு உணவிடுவதை முக்கியமான வழிபாடாக மக்கள் பின்பற்றுகின்றனர்.

பக்தன் தவறு செய்தால் குருசாமிக்கு பங்குண்டு

வழிபாட்டில் ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவுக்கு குருசாமிக்கும் முக்கியத்துவம் உண்டு. குருசுவாமிகளை முதன்முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரே ஐயப்பன் தான். கொள்ளையனான உதயணனை கொன்றபின், சபரிமலைபிரதிஷ்டை தினத்தில் ஞானிகளைத்தேர்ந்தெடுத்து தலைவராக்கி குழுக்களை நியமித்தார். இவர்களே முதல் குருசாமியானார்கள். இவர்களதுஉத்தரவின்படி எல்லா பக்தர்களும் நடக்கவேண்டும் என்று ஐயப்பன் கட்டளையிட்டார். குருமாரை வசதி, புகழ் இவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. சபரிமலை யாத்திரை அனுபவம், தெய்வ பக்தி, தர்மசிந்தனை இவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தனர். அதுபோல, யாத்திரையின் போது எந்த பக்தர் பாவம் செய்தாலும் அதில் குருசாமிக்கும் பங்குண்டு என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. எனவே, விரத விதிகளை மீறும் பக்தர்களை குருசாமி கண்டித்து திருத்த உரிமையிருக்கிறது.

சபரிமலையில் பிறதெய்வ வழிபாடு

சபரிமலையில் உள்ள தெய்வங்களுக்கு தனித்தனியான பிரசாதமும், வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்டுகின்றன.மாளிகைப்புறத்தம்மனுக்கு கோயிலைச்சுற்றி தேங்காய் உருட்டுதல் சடங்கு நடக்கும். வெற்றிலை, மஞ்சள்பொடி, பட்டு, குங்குமத்தை இவளுக்கு காணிக்கையாகச் செலுத்தவேண்டும். விநாயகருக்கு தோப்புக்கரணமிட்டு நெய்த்தேங்காய் உடைத்து ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கடுத்தசுவாமிக்கு கதலி வாழைப்பழம், வறைப்பொடி, அவல், தேங்காய், சர்க்கரை, உலர்திராட்சை, கல்கண்டு சமர்ப்பித்து வழிபடவேண்டும். மலநடை பகவதிக்கு விளக்கேற்றி காணிக்கை செலுத்த வேண்டும். நாகராஜாவுக்கு கற்பூரம், மஞ்சள்பொடி சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம். வாவர் சுவாமிக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், ஊதுபத்தி, பன்னீர், நெய், தேங்காய் பிரசாதமாகப் படைக்க வேண்டும். ஐயப்பசுவாமிக்கு மிகவும் பிடித்தமான பிரசாதம்அரவணை. இதைக் கட்டிப் பாயாசம் என்பர்.உண்ணியப்பமும் பிடித்தமானதே. இது அரிசி மற்றும் வெல்லத்தால் செய்யப்படுகிறது. கற்பூரஜோதியையும்,

விழியில் விழுந்தது! உயிரில் கலந்தது!

சூரியனின் சஞ்சாரத்தில் மகரராசிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தென்திசை பயணித்த சூரியன் வடதிசை நோக்கி பயணத்தைத் துவக்கும் தினத்தையே மகரசங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். ஐயப்ப தரிசனத்தில் இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது. மார்கழி மாதம், தைமாதத்திற்கு வழிவிட்டுக் கொடுக்கும் இந்நாளில், சபரிமலை யாத்திரை, மகரவிளக்கு ஜோதியோடு சுபநிறைவு பெறுகிறது. ஐயப்ப சந்நிதானத்தின் நேர் எதிரில் பொன்னம்பல மேட்டில் ஆகாயத்தை எட்டும் மலைச்சிகரங்களில் மகர ஜோதி தோன்றுகிறது. எங்கும் சரண கோஷங்கள் முழங்குகிறது. ஜோதியின் ஒளி, பக்தனின் விழியில் பட்ட அந்த கணத்திலேயே அருள்வெள்ளம் உள்ளத்திலும், உயிரிலும் கலக்கிறது. ஜோதி வடிவாக ஐயப்பனைக் காண விண்ணுலக தேவர்களும், தவம் செய்யும் முனிவர்களும் வருவதாக ஐதீகம்.

ஐயப்பன் வரலாறு: ஐயப்பனின் ஆயுதமாக இருப்பது வில். ஐயப்பனை வில்லாளி என்று நாட்டுப்புறப்பாடல்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஐயப்பன்பாட்டு, பொன்னம்பலப்பாடல், பந்தளசேவம், வாவரங்கம், குத்திசேவம், இடிவதரசேவம், புலிப்பால் சேவம், பாண்டிசேவம் என்று பலவிதமான நாட்டுப்புறப்பாடல்களின் ஐயப்பசுவாமியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்திலும் ஐயப்பனை ஒரு மனிதனாகவே காணமுடிகிறது. கடவுளாக ஐயப்பனைப் போற்றும் பூதநாத புராணத்தில் இருந்து இந்நாட்டுப் புறப்பாடல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இந்நாட்டுப்புறப்பாடல்களில் ஐயப்பன் பந்தள நாட்டில் வாழ்ந்த வீரனாகச் சித்தரிக்கப்படுகிறார்.அவருக்கு உதவியாக வாவர், கடுத்தசுவாமி இருந்தனர். உதயணன் என்னும் கொள்ளையன் மற்றும் சோழமன்னர்களிடம் இருந்து பந்தளநாட்டு மக்களைக் காப் பாற்றினார் ஐயப்பன். இந்த வீரனையே தர்மசாஸ்தாவின் அவதாரமாக மக்கள் போற்றி வணங்குகின்றனர். காக்கும் கடவுள் விஷ்ணுவின் மாயாசக்திக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையே சாஸ்தா. பிரம்மஞானம் என்னும் நூல், இக்கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வந்த அவதாரம் இது என்று குறிப்பிடுகிறது. கைம்மாறு கருதாமல் சேவை செய்து, உயிர்களைக் காப்பதை தன்னுடைய குறிக்கோளாக தர்மசாஸ்தா ஏற்று அமர்ந்திருக்கிறார். சைவசமயத்தின் முழுமுதற்பொருளான சிவமும், வைணவத்தின் முழுமுதல் பொருளான மகாவிஷ்ணுவும் இணைந்த அவதார என்பதால் ஐயப்பனை விட உயர்ந்த அவதாரம் உலகில் கிடையாது என்பர்.

ஐயப்ப வழிபாட்டில் மதபேதம் இல்லை

சாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்தக்கதோம் என்னும் கோஷத்தோடு பாட்டு பாடி ஆடும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஐயப்பன் கோவிலில் தனிச்சிறப்பு மிக்கதாகும். ஐயப்பசுவாமி மகிஷி என்னும் அரக்கியைக் கொன்ற வெற்றியை அறிந்த எருமேலிவாசிகள் ஆடிய நடனமே பேட்டைத்துள்ளல். இந்த நிகழ்ச்சியை இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்வர். அப்போது, பல வண்ணப்பொடிகளை உடலெங்கும் பூசிக் கொள்வர். அம்பு, இலை, கம்புகளை ஏந்திக் கொண்டு கூட்டமாகச் செல்வர். மத ஒருமைப் பாட்டை நிலைநாட்டும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வாவர் மசூதிக்குச் சென்று காணிக்கை செலுத்தி வாவருக்கும், ஐயப்பனுக்கும் நன்றி செலுத்துகின்றனர். ஜாதிமத பேதம் அற்றவனே சரணம் ஐயப்பா என்னும் சரண கோஷத்துக்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

யாருக்கும் தெரியாமல் ஐயப்பன் கோயில் நடைதிறப்பது தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் ஆயிரம் குடம் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு சகஸ்ர கலசாபிஷேகம் என்று பெயர். ஒவ்வொரு மாதமும் இந்த அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது பலமுறை நடைதிறக்கவும், மூடவும் வேண்டி இருப்பதால் பக்தர்கள் வராத நாளை தேர்ந்தெடுத்து இந்த அபிஷேகத்தை நடத்துகிறார்கள். மதியவேளையில் இந்த அபிஷேகம் நடத்தப்படும். ஐயப்ப சுவாமியின் தெய்வீக அருளை அதிகப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இந்த அபிஷேகம் நடத்த 3 மணி நேரமாகும்.

ஐயப்பனுக்கு எளிய உணவு: சபரிமலை தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் நடை திறக்கும் நாட்களில் அவருக்கு செய்யப்படும் பூஜை, எளிய உணவு வகைகளைத் தெரிந்து கொள்வோமா! காலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டதும், பிரதான புரோகிதரான தந்திரி முதலில் அபிஷேகம் செய்வார். பின்னர் கணபதிஹோமம் நடக்கும். கணபதி, நாகராஜாவுக்கு பாயாசம் படைக்கப்படும். பிரசன்னபூஜை முடிந்தபின் தீபாராதனை நடக்கும். மதியம் 12மணிவரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும். 25 கலசங்களைக் கொண்டு தந்திரி மத்தியான பூஜை செய்வார். அரவணை பாயாசம் படைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். இரவு 10மணிக்கு நெய் அப்பமும், பானகமும் ஐயப்ப சுவாமிக்கு படைக்கப்படும். மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் ஐயப்பசுவாமி உறங்கச் செல்வதாக ஐதீகம். அப்போது உலகப்புகழ்பெற்ற பாடலான ஹரிவராசனம் பாடுவர்.

நெய்த் தேங்காயே நமது மனம்: இருமுடிக்கட்டில் இருக்கும் பொருள்களில் நெய்த்தேங்காய் முக்கியமானது. இந்த தேங்காயும், பக்தனின் மனமும் ஒன்று என்பது தான் இதன் தத்துவம். தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரை வெளியேற்றுவர். உலக ஆசைகள் ஒருவனுக்குத் தேவையில்லை என்று எண்ணி புறக்கணிப்பதைக் குறிக்கும். அத்தேங்காயில் நெய்யை ஊற்றுவது மனதில் தெய்வீக சிந்தனையை நிரப்ப வேண்டும் என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த நெய்த்தேங்காயே சபரிமலை சந்நிதானத்தில் உடைக்கப்பட்டு சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும். இறையருளை நம்மோடு கொண்டு வருவதன் அடையாளமாக இதில் சிறிதளவு நெய்யை வீட்டிற்குக் கொண்டுவருவர். இதனை வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் உள்ளப்பூர்வமாகச் செய்தால் நெய்தேங்காயோடு நம் மனமும் ஐயப்பனுக்குரிய அருட்தேங்காயாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

பார்த்தாலும் பலன் உண்டு: ஐயப்பனுக்கு நடக்கும் பூஜைகளில் படிபூஜைக்கு சிறப்பிடம் உண்டு. இதற்கு நிலவிளக்கு, கற்பூரம், பத்தி, பூமாலை, பட்டுவஸ்திரம், தேங்காய், தந்திரி, மேல்சாந்தி, உதவியாளர்களுக்கு புது வஸ்திரங்கள் தர வேண்டும். நினைத்தது நினைத்தபடி நிறைவேற இப்பூஜையைப் செய்கின்றனர். அதிகச் செலவாகும் இப்பூஜையைப் பார்த்தவர்களுக்கும் நற்பலன் உண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பூஜை நடந்து வந்தது. தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு காலம் தவிர, நடைதிறக்கப்படும் மாத பூஜை நாட்களில் நடத்தப்படுகிறது. ஐயப்பனின் முன்னோர் தமிழகத்தில் வாழ்ந்தனர். இவர்கள் செம்பழஞ்ஞி குடும்பத்தினர் என அழைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தான் இக்குடும்பம் வசித்து வந்தது. செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தை தஞ்சையை ஆண்ட சோழமன்னர்கள் புறக்கணித்ததோடு போரும் தொடுத்தனர். பகைமை விரும்பாத செம்பழஞ்ஞி குடும்பமும் தென்காசிப்பகுதியில் குடிபுகுந்தது. ஆனாலும், பகைமன்னர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மீண்டும் விரட்டினர். சிறிது காலத்திற்குப் பின், கேரளாவில் உள்ள கோந்தி என்னும் இடத்தில் குடியேறினர். அங்கேயும் சோழனின் நெருக்கடி தொடர்ந்தது. பாதுகாப்புக்காக பந்தளம் வந்து சேர்ந்தனர். பந்தளத்தில் இவர்களை பந்தளராஜா குடும்பத்தினர் என்று மக்கள் அழைத்தனர். அப்பெயர் இன்றும் ஐயப்பசுவாமிக்கு இருப்பதை அறியலாம். தங்கள் பகுதியான தென்காசி முதல் கோந்திவரையில் உள்ள பகுதியில் தங்களின் உரிமையை நிலைநாட்டிட விரும்பினர். இந்த சந்தர்ப்பத்தில் உதயணன் என்ற கொள்ளைக்காரனின் அட்டகாசமும் இப்பகுதியில் அதிகரித்து வந்தது. இந்த அடக்குமுறைக்கு முடிவுகட்டிட மணிகண்டன் அவதரித்தார். உதயணனை வென்றதோடு, கோட்டை கொத்தளங்களை அமைத்து பந்தளநாட்டைப் பலப்படுத்தினார். எரிமேலி முதல் சபரிமலை வரையிலுள்ள பகுதி இன்றும் ஐயப்பனின் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்கிறது.

ஐயப்பனின் உதவியாளர்: ஐயப்பசுவாமியின் உதவியாளர்களில் வாபரைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். ஆனால், வெளுத்தச்சனைப் பற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. ஆனால், ஐயப்பனுக்குரிய சரணத்தில் ஆர்த்துங்கல் பள்ளியே சரணம் ஐயப்பா என்றொரு வரி உண்டு. அது ஐயப்பனின் உதவியாளரான புனிதசெபஸ்பதியனைக் குறிக்கிறது. இவரை வெளுத்தச்சன் என்று ஐயப்ப வர்ணனைகளில் குறிப்பிடுவர். ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஆர்த்துங்கல்லில் இவருக்கு கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் ஆர்த்துங்கல் சென்று காணிக்கை செலுத்திய பின்னரே, சபரிமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கோட்டைக்குள் ராஜா: சபரிமலை காடு முழுவதும் ஐயப்பனின் அருளாட்சி நடந்து வருகிறது. இப்பகுதியை ஐயப்பனின் பூங்காவனம் என்று குறிப்பிடுவர். எரிமேலியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள பேரூர்த்தோடு என்னும்   இடத்தில் இருந்து பூங்காவனம் ஆரம்பமாகிறது. இங்கிருந்து ஏழு கோட்டைகளைக் கடந்தால் தான் ஐயப்ப தரிசனம் கிட்டும். கோட்டபுறம், காளைகெட்டி, உடும்பாறமலை, கரிமலை, சபரிபீடம், சரம்குத்தி, திருப்படி என்பவையே அந்தக் கோட்டைகள்.
-----------------------------------------------‐---------------------------------
தைப்பூசத்திருநாளின் சிறப்பு!

தைப்பூசமென்பது தை மாதத்துப் பூசத்திருநாள் எனப்படும். தை என்பதற்குப் பல பொருள்கள் உள. அவையாவன தைக்கத் தக்கவை. தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று, மகர ராசி, பூசநாள் என்பனவாகும். தைப்பூசத் திருநாள் சிறப்புப் பற்றிய பாவலர் பெருமான், தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடும் சித்தயோக தினம் வர, அன்று மத்தியானத்திலே, ஆயிர முகத்தையுடைய பானு கம்பர் ஆயிரஞ்சங்கூத, ஆயிரந் தோணுடைய வாணாசுரன் குடாமுழா ஒலிப்பிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய கீதஒலியும் மிக்கெழ ஞானசபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நிருத்தஞ் செய்தருளினார். வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் என்னும் இருவரும், பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களும், திருவுடையந்தணர் மூவாயிரவரும், பிறரும் சிவபெருமானுடைய திருவருளினிலே, ஞானக் கண்ணைப் பெற்று, அவருடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்து, உரோமஞ் சிலிர்ப்ப, நெஞ்சு நெக்குருக, கண்ணீர் பொழியச் சிவானந்தக் கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி முனிவர் எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியாரோடு இன்று முதல் எக்காலமும் ஆன்மாக்களுக்கு ஆனந்த நிருத்தத்தைப் புலப்படுத்தி யருளும் என்று வேண்டிக் கொண்டார். அதற்குச் சிவபெருமான் உடன்பட்டருளினார். சிவபெருமான் பணித்தருளியபடியே தேவர்கள் அந்த நிருத்தஸ்தானத்தை வளைத்து உயர்ந்த பொன்னினாலே ஒரு மகாசபை செய்தார்கள். சிவபெருமான் அன்று தொடங்கித் தேவர்களும் வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் முதலாயினோரும் வணங்கச் சிவகாமியம்மையாரோடும் கனகசபையிலே எக்காலமுந் திருநிருத்தத்தைத் தரிசிப்பித்தருளுவாராயினர். தைப்பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சூரியனின் மகரவீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தை மாதத்தில் பவுர்ணமி சேரும் பூசநாள் மிகவும் விசேஷமானதாகும். இந்நாளின் சிறப்புப் பற்றிப் பூம்பாவைப் பதிகத்தில் ஞானசம்பந்தரும்.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

எனக் கூறுவதனால் அறியலாகும். தில்லை மூவாயிரவர்களுக்கு மநு மகன் இரணியவர்மனுக்கும் தில்லை நடராசர் தரிசனம் கொடுத்த தினமும் இத்தினமேயாகும். மேலும், புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலைச் சாரலிலே இருந்த நாளில் ஈழநாட்டைப் பற்றி நினைத்ததும் இத்தினத்திலேதான் என்பர். எனவே இத்தினத்தைச் சிறப்புடன் கொண்டாடி இறைவனருள் பெற்று வாழ்வோமாக.

புதிதுண்ணல்

புதுப்பிரயோசனத்தைச் சுபதினம் பார்த்துண்ணல் புதிதுண்ணல் எனப்படும். புதிருண்ணல் எனவும்படும். நவான்ன போஜனம் எனவும் கூறுவர். பொங்கலுக்குப் புதிய அரிசியைத்தான் பெரும்பாலும் உபயோகிப்பர். சுபதினத்தில் மங்கல வாத்தியங்களோடு கிராமமக்கள் சென்று புதிரெடுத்துக் கோயிலிலும், வீடுகளிலும் சேர்ப்பர். அந்நாளில் வீடு மெழுகிக் கோலம் செய்து வைப்பர் பெண்கள். கொண்டுவரும் நெற்கட்டைப் பணிவுடன் வணங்குவர். சுவாமிக்குப் புத்தரிசி கொடுத்துத் தாமும் உண்பர். கால உலக மாற்றத்தினாலும் பிறவாற்றானும் இக்காலத்து இவ்வழக்கு அருகி வருகின்றது. அன்றிச் சுவாமிக்குப் புதிரெடுதலுக்கு முன்னரே தாம் புதிரெடுத்தலையும் மேற்கொள்ளுகின்றனர். தை பிறந்துவிட்ட்து; வழி பிறந்துவிட்டது; அறுவடையெல்லாம் ஆரம்பித்துவிட்டன. களஞ்சியங்கள் நிறைந்து விட்டன. அதுபோல உள்ளமும் நிறைந்துவிட்டது. கஷ்டங்கள் மறைந்தன. கவலைகள் நீங்கின. வாழ்வில் பிரகாசம் ஏற்பட்டுவிட்டது என்று அன்றைத்தினம் முழுவதும் குதூகலிப்பர். சைவ மக்கள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடும் ஒரு பெருநாளாக இத்திருநாள் விளங்கும்.

தைப்பூச துளிகள்

முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம். தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார். ராமலிங்க அடிகளார் ஸ்ரீமுக (1874) ஆண்டு தை மாதம் 19-ம் நாள் ஒரு தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழும். ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார். தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார். உலக நாடுகளில், தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. மலேசியாவில் மட்டுமே.

தேவர்கள் பூமாரிப் பொழிய, வெற்றிவேல் வீரவேல் எனும் முழக்கம் திக்கெட்டும் ஒலிக்க, வீரமகேந்திரபுரியை வீழ்த்தி, சூரபதுமனை வென்ற வேலவன், வெற்றிப்புன்னகையுடன் நின்றிருந்தார். அசுரகுலத்தை அடக்கி வெற்றிவாகை சூடிய அந்தத் திருவிடத்துக்கு செந்திலம்பதிக்கு... ஜெயந்திபுரம் என்று அவர் திருப்பெயர் சூட்ட, மகிழ்ச்சியுடன் மீண்டும் ஆர்ப்பரித்தது தேவர்கள் சேனை. அவர்களைக் கையமர்த்திய வீரபாகு கந்தவேளை வணங்கினான். பிறகு,தந்தைக்கே பாடம் சொன்ன தகப்பன் சுவாமியே... சூரனை வதைத்து அமராபுரியை தேவர்களுக்கு மீட்டுக்கொடுத்து, அவர்களை வாழ வைத்து விட்டீர்கள். அதற்குப் பரிசாக வேவேந்திரன் தன் மகளையே தங்களுக்குத் தாரைவார்க்க காத்திருக்கிறான். ஆனால், அதுமட்டும் போதாது. மிக மேன்மையாக, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம்... என்று அவன் முருகனின் முகம் நோக்க, அவரோ என்ன செய்வதாய் உத்தேசம் வீரபாகு...? எனக் கேட்டார். முருகா, உலகில் உள்ள அனைத்தும் நீங்கள் தந்த பரிசு. அப்படியிருக்க கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? இமைப்பொழுதும் மறவாமல் தங்களின் திருநாமத்தை உச்சரிப்பதையும், சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம் கூறி உங்களைத் தியானிப்பதையுமே மேன்மையாகக் கருதுகிறோம். எனவே, தயவுகூர்ந்து... நாங்களும், எங்களின் வழியொற்றி உலக மாந்தர்களும் உங்களுக்குச் செய்யவேண்டிய பூஜா விதிகளையும் வழிமுறைகளையும் தாங்களே கூறியருள வேண்டுகிறோம். அப்படியே ஆகட்டும் என்ற சண்முகன், தனக்குரிய வழிபாட்டு முறைகளை அன்பொழுக எடுத்துரைத்தார். இப்படி, முருகப்பெருமான் தன்னை வழிபடும் நியதிகளை, வழிபாட்டு விதிமுறைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொன்னது, உத்தராயன புண்ணிய காலத்தின் துவக்கமாகிய தை மாதத்தில் என்பார்கள். ஆகவே தான்... முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்தின் பொருட்டு வைகாசி மாதமும், அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்களால் கார்த்திகை மாதமும் பேறுபெற்றதுபோல தை மாதமும் புண்ணியம் பெற்றது. தைப்பூசத் திருநாளை தன்னில் கொண்டு முருக வழிபாட்டுக்கு உகந்ததாயிற்று என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.

தை மாதத்தில் முருக வழிபாடு குறித்து, வேறு சில காரணங்களையும் பெரியோர்கள் சொல்வது உண்டு. பொதுவாக பவுர்ணமி தெய்வ வழிபாட்டுக்கும், அமாவாசை திருநாள் பித்ருக்கள் வழிபாட்டுக்கும் உகந்தவை என்பார்கள். பவுர்ணமியுடன் சில சிறப்பு நட்சத்திரங்கள் இணையும் திருநாள், மகிமை பெற்றுவிடும். சித்திரை நட்சத்திரம் பவுர்ணமியுடன் இணைவது சித்ராபவுர்ணமி. இப்படி பவுர்ணமியுடன் சேர்ந்து வரும் வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி <உத்திரம் போன்று, தை மாத பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து தைப்பூசமாக, முருகக் கடவுளுக்குரிய திருநாளாக பன்னெடுங்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முருகக் கடவுள் அசுரகுலத்தை அழித்ததன் வெற்றி விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர். முருகக் கடவுள் சூரனை வதைக்க அன்னை சக்தியிடம் சக்திவேல் பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளின் தான்.

தைப்பூசத்துக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு

ஒரு கல்பத்தில் தைப்பூச தினத்தில்தான் உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான நிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது. ஈசனுக்கும் உரிய நாள் தைப்பூசம். வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, தன் திருத்தாண்டவத்தை காணச் செய்த எம்பெருமான் சிவன். அவர்களுக்காக திருநடனம் புரிந்த தினமும் ஒரு தைப்பூசத் திருநாளில்தான் என்பார் திருமுருக கிருபானந்தவாரியார். சிவாலயங்களில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூசம் அல்லது புஷ்யம் என்று சொல்லப்படும் நட்சத்திரம், நட்சத்திர வரிசையில் 8வது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. இதற்கு தேவதை சனிபகவான் ஆவார். எனவே, பூச நட்சத்திர நாளில் சனி பகவானை பூஜித்தும் சிறப்படையலாம். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார் தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறுகின்றன.
-----------------------------------------------‐---------------------------------
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!
-----------------------------------------------‐---------------------------------
பண்புள்ளவனைத் தெய்வமாக உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் :

ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த தினம்: உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும். மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர்களையும் விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை.லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் தானாவே வந்துசேரும்.  உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் ஆன்மிகவாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.உள்ளத்தூய்மையும், மனவலிமையும் உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்  பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே  ஆன்மிகம்.

உள்ள உறுதியோடு இருங்கள். அதற்கு மேலாக மனத்தூய்மையும், முழு அளவில் சிரத்தை உள்ளவராகவும் இருங்கள்.பிறருடைய நன்மையைச் சிறிது நினைத்தாலும் கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றல் நம்மிடம் இதயம் பெற்றுவிடும். வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.ஒருகாலத்தில் நீங்களே வேதகால ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறுவடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். தைரியமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்லுங்கள். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளராக இருங்கள்.சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் இந்த உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகள். அதனால் எதற்கும் அஞ்சிவிட மாட்டீர்கள். சிங்கக்குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.ஓய்வு ஒழிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், அந்த வேலைகளில் கட்டுப்பட்டு விடாதீர்கள். அதற்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.நீங்கள் ஒரு எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல அல்ல. சுதந்திரமாகவும், அன்போடும் கடமைகளைச் செய்யுங்கள்.

அன்பின் அடிப்படையிலும், அன்பின் மூலமாகவும் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மனஒருமைப்பாடு ஆகும். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் தன்னம்பிக்கையோடு வாழ்பவனே பெருமையும் ஆற்றலும் பெற்றுத் திகழ்கிறான். உலகின் எந்த நாட்டு வரலாறானாலும் இந்த உண்மையை நம்மால் உணர முடிகிறது.மனிதர்களின் துணை எவ்வளவு கிடைத்தாலும், அதை எல்லாம்விட கடவுள் துணையே மிகவும் பலம் மிக்கதாக நமக்கு வழிகாட்ட வல்லது.யாருடைய நம்பிக்கையையும் குலைக்காமல், முடிந்தால் அவனை மேலே தூக்கிவிட முயற்சி செய்யுங்கள்.அனைவர் மீதும் அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறருக்காக உழைத்துக் கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட நமக்குள் சிங்கத்தின் வலிமையை தரவல்லதாகும். விரும்புகிற வேலையைச் செய்வதில் என்ன பெருமை இருக்கிறது? எந்த வேலையாக இருந்தாலும், அதை தனக்கு விருப்பமானதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி. ஒரு பணியைச் செய்வதாக இருந்தால், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்.அடிமையைப் போல அல்ல. தன்னை அடக்கப் பழகியவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்படுவதில்லை. அவனுக்கு அதன் பின்னர் அடிமைத்தனம் என்பதே இல்லை.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். சோம்பல் ஒருபோதும் நமக்கு உதவாது. வேண்டாத குணங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முழு வலிமையோடு செயலில் இறங்கினால், வெற்றிக்குரிய வழியை இறைவனே காட்டி நிற்பான்.உடம்பை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ள பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் கற்றுத் தாருங்கள். காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.கடினமான உடல்வேலைகளில் ஈடுபடுங்கள். மனம், உடல் இரண்டுக்கும் சரிசமமாகப் பயிற்சி கொடுங்கள்.  துன்பங்கள் மலைபோல நின்று பயமுறுத்தினாலும், பயப்படாதீர்கள். காலால் மிதித்து நசுக்கிவிடுங்கள். பயத்திற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. காலத்திற்கு எல்லையில்லை. முன்னேறுங்கள். திரும்பத் திரும்ப உங்களின் உண்மை இயல்பான தைரியத்தை மனதில் கொள்ளுங்கள். பிரகாசம் உங்களை வந்தடைந்தே தீரும்.மூன்று விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தேவை. லட்சியத்தை உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை, வேலை செய்யக்கூடிய கைகள். இம்மூன்றும் இருந்தால் வெற்றி உங்களைத் தானாக வந்தடைந்துவிடும்.விழிப்புணர்வுடன் செய்யும் பிரார்த்தனையின் மூலம் எல்லா விருப்பங்களும் நிறைவேறும். பிரார்த்தனையின் போது நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்பு பெறுகின்றன.

கற்பு என்பது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருபாலாரிடமும் இருக்கவேண்டிய நன்னெறி ஆகும்.நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல், தோற்றம் கூட மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். வலிமையுள்ளவர்களாக, மனத்தூய்மை மிக்கவர்களாக எண்ணினால் நிச்சயம் அப்பண்புகள் உங்கள் உணர்வோடு கலந்துவிடும்.நீங்கள் மகத்தான பணிகளைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறீர்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. எழுந்து நின்று துணிவுடன் உங்கள் கடமையைச் செய்யுங்கள். பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நமக்கு நாமே நன்மை செய்தவர்களாகிறோம். நன்மை பெறுவதற்கான ஒரே வழி இது மட்டும் தான். எப்போதும் விரிந்து மலர்வது தான் வாழ்வின் பயனாகும். உங்கள் மனம் பரந்தநோக்குடன் திகழட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிச்சிகரத்தை எட்டிப் பிடிக்கத் தேவையான குணங்கள். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத்தவிர தனியாக வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.விவேகானந்தர்.
-----------------------------------------------‐---------------------------------
கோயில்களும் அவற்றின் துவார பாலகர்களும்!

 கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.
பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

சிவன் கோயில் துவார பாலகர்கள்: சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.

அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.
-----------------------------------------------‐---------------------------------
தூணிலும் இருப்பான் இறைவன்!

 ஒரு ஊரில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோயிலைக் கட்டினார்கள், அவரவர் தங்களால் இயன்ற தொண்டுகளைக் கோயிலுக்கு செய்தார்கள். அந்த ஊரில் ஒரு வயது முதிர்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். அவனுக்கும் கோயிலில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று எனக்கும் ஏதாவது வேலை கொடுங்கள் என்றான். நீ கிழவன் உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அந்த நிர்வாகி அலட்சியாமாகக் கேட்டார். ஏதோ, என்னால் முடிந்ததை செய்கிறேன் ஏதாவது மூலையைக் காட்டுங்கள் அங்கே ஏதாவது செதுக்குகிறேன் என்று கெஞ்சினான். கிழவனுடைய வேண்டுகோளுக்கு இரங்கிய அவர் கோயிலில் இருட்டாக இருந்த ஓரிடத்தில் உள்ள கம்பத்தைக் காட்டி, அதில் ஏதாவது செய்து கொள் என்று சொன்னார். கிழவன், அந்த இடமாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு வேலை செய்யத் தொடங்கினான். அவனுக்கு வயசு ஆயிற்றே தவிர, சிற்பத் திறனில் தளர்ச்சி உண்டாகவில்லை. மெல்ல மெல்ல அந்தத் தூணில் ஓர் அழகிய உருவத்தைக் கோலம் செய்யத் தொடங்கினான். ஆர்வத்தோடும், பக்தியோடும், உருவைச் செதுக்கினான். நாளுக்கு நாள் அவனுக்கு ஊக்கம் மிகுந்தது உருவமும் அழகு பெற்று வந்தது.
ஒரு நாள் வெளியூரிலிருந்து ஒரு கலாரசிகர் வந்தார் கோயிலில் பல சிற்பங்கள் அமைத்து வரும் சிற்ப உருவங்களை எல்லாம் கண்டு இன்புற எண்ணிக் கோயிலுக்குள் புகுந்தார். முகப்பில் பல சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய உழைப்பில் உருவாகி வந்த சிற்பங்களைக் கண்டு வியந்தார். சிற்ப வடிவங்களில் சில முற்றுப் பெற்றிருந்தன. சில முடிவடையும் நிலையில் இருந்தன. ரசிகர் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்தார். பிறகு, கோயிலைச் சுற்றிக் கொண்டு வந்தார். ஒரு மூலையில் உள்ள தூணில் கிழச் சிற்பி வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே இருண்ட அந்த மூலைக்கும் ரசிகர் சென்றார் சிறிது நேரம் நின்ற பிறகுதான் தூண் தெரிந்தது; தூணில் உருவாகிய வடிவமும் தெரிந்தது கண்ணைச் சுருக்கியும் விரித்தும் பார்த்தார். அங்கேயே நின்ற விட்டார். மயில் மேல் ஏறிவரும் முருகன் திருவுருவத்தை கிழவன் அங்கே படைத்து முடித்திருந்தான். அந்த உருவத்தின் ஒவ்வோர் அங்கமும் குழைந்து இழைந்து கொஞ்சியது. திருமுக மண்டலம் உயிர் பெற்று விளங்கியது. இத்தனை நேரமும் ரசிகர் கண்ட சிற்பங்களை எல்லாம் எங்கோ தள்ளிவிட்டு இந்த முருக வடிவம் மேலோங்கி நின்றது ரசிகர் உலகையே மறந்து பார்த்தார்; அந்தக் கிழவனுடைய கையில்தான் எத்தனை திறமை! அவர் எதையோ நினைத்துக் கொண்டார் கண்ணில் நீர் துளித்தது. அவனைப் பார்த்து பேசலானார். அப்பா! இந்த அழகிய உருவத்தை இந்த இருண்ட மூலையிலே அமைக்கிறாயே! இதை யார் அப்பா, பார்க்கப் போகிறார்கள்? உனக்கு இந்த இடம்தானா கிடைத்தது? மூலஸ்தானத்து விக்கரகத்தைச் செய்யும்படி அல்லவா உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்? சொல், இதை யார் பார்த்து மகிழப் போகிறார்கள்? என்று கேட்டார். சிற்பி கனைத்துக் கொண்டான், ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்? அவர்கள் பார்க்க வேண்டாமே! ஒருவன் நிச்சயமாகப் பார்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்ற தலை நிமிர்ந்து அவன் சொன்னான். அவனுடைய நெஞ்சத் திண்மையைக் கண்டு ரசிகர் பிரமித்துப் போனார். கிழவன் கூறியபடி அவனுடைய சிற்பத்தை அந்த ஒருவன் தானா கண்டான்? கோயிலைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். கர்ப்பகிருகத்துக்குள்இருக்கும் சுவாமிக்குப் பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால் யாரோ ஒரு பக்தர் இந்த தூணைச் சுற்றி கம்பி கட்டி அதையே ஒரு கோயில் ஆக்கி விட்டார்; விளக்குப் போட்டார். தனியே பூஜை நடத்தினார்.

முருகன் கம்பத்து இளையவனாகக் காட்சி தரலானான் இப்படி ஒரு கதை உண்டு. திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கரையில் கம்பத்து இளையனார் கோயில் என்று ஒரு சன்னதி இருக்கிறது. அருணகிரிநாதருக்கு அருள் செய்த பெருமான் திருக்கோயில் அது. ஒரு மண்டபத்தின் தூணில் முருகன் எழுந்தருளியிருக்கிறான் பின்னர் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. தூணில் உருவத்தை வடித்தபோது அங்கே இந்தச் சிறப்பு ஏற்படும் என்று அந்தக் காலத்தில் யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சன்னதியில் ஒரு தூணில் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிறார். அந்தத் தூணே இப்போது கோயிலாகி விட்டது. இப்படியாக தூணில் உள்ள ஆஞ்சநேயருக்கும் தண்டபாணிக்கு மகிமை உண்டான இடங்கள் பல.

சீர்காழியிலும் இப்படி ஒரு நடைபெறுகின்றன அந்த தேவஸ்தானத்தில் தலைமைப் பதவியை சட்டைநாதர் தம்முடைய மகிமையினால் பெற்றார் பக்தர்களும் இப்போது அவரது அருள் வேண்டி நிற்கிறார்கள். இந்த சட்டைநாதர் உருவம் தோணியப்பர் கோயிலைச் சார்ந்த ஒரு மூலையில் இருக்கிறது. கோயிலில் பிரம்மபுரீசர் சன்னதிக்குப் பின்னே ஒரு கட்டுமலை இருக்கிறது. அந்த மலையில் தோணிபுரேசர் எழுந்தருளியுள்ளார். சட்டைநாதரோ ஒரு மூலையில் தனியனாக உள்ளார்.
-----------------------------------------------‐---------------------------------
வள்ளி திருமணம் எப்படி நடந்தது?

 தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மேல்பாடி அருகே வள்ளிமலை என்ற வள்ளிக்காட்டில் வேடுவர் தலைவராக நம்பிராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த வள்ளிக்காட்டில் சிவமுனி என்ற முனிவர் தபஸ் செய்து கொண்டிருந்தார். இவர் நாராயண அம்சம் கொண்டவர். இவர் தவம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு எதிரே அழகான மான் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை அன்புடன் அவர் பார்த்தார். ரிஷி கர்ப்பம் ராத் தாங்காது என்பர். உடனே மான் கர்ப்பமாகி அது ஒரு குழந்தை ஈன்றது. அது ஒரு பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையை நம்பிராஜன் எடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறார். வள்ளிக் காட்டில் இருந்து இந்தப் பெண் குழந்தையை எடுத்ததால் இந்தக் குழந்தைக்கு வள்ளி என்ற பெயரிட்டு வளர்க்கிறார். அவளுக்குப் பன்னிரண்டு வயது பூர்த்தியானதும், அவர்களுடைய வேடுவர் குல வழக்கப்படி, தினை முதலிய தானியங்களை பட்சிகளிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும் காக்க காவலுக்கு அனுப்பி வைப்பார்கள். தினைக் கொல்லையைக் காவல் காக்க காட்டிலேயே பரண் மாதிரி ஒன்றை அமைத்து கவை, கம்பு கொடுத்து பெண்களை காவல் காக்க அனுப்பி வைப்பார்கள். அந்தக் காட்டில் சுப்ரமண்யர் தன் அழகிய உருவத்தை மாற்றிக்கொண்டு வேடுவர் வேஷத்தோடு வில் அம்பு வைத்துக்கொண்டு, வள்ளி காவல் காத்துக் கொண்டிருக்கும் காட்டுக்கு வருகிறார். வந்தவர் வள்ளியிடம், அம்மா நீ யார்? உன் ஊர் என்ன? பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கும் உன்னை இந்த காட்டில் காவலுக்கு அனுப்பி வைத்தது யார்? என வள்ளியைக் கேட்கிறார். உண்மையில் பார்த்தால் அவர் வள்ளியைத் தான் திட்டியிருக்க வேண்டும். ஆனால் உன்னை இங்கு அனுப்பி வைத்தது யார்? எனக் கேட்கிறார். நீ வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போ. என் பெற்றோரைப் பற்றிப் பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என சத்தமிட்டாள். இந்த வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், தாரை தம்பட்டம் அடித்தபடி நம்பிராஜன் அவருடைய சேனைகளுடன் காட்டில் வள்ளி இருக்குமிடம் நோக்கி வருகிறார். அதைக் கண்ட முருகர் வள்ளி உட்கார்ந்திருக்கும் பரணுக்கு பின்னால் நிற்கறார். ஆனால் வள்ளி நடுக்கத்துடன் இருக்கிறார். நம்பிராஜன் தன் மகளுக்கு தினை, தேன், பழங்கள் கொடுக்கிறார், பரணுக்கு பின்னால் நின்றிருந்த முருகர்(வேடுவர்) பெரிய வேங்கை மரமாகிவிட்டார். நம் சாஸ்திரங்களே வேதத்தை மரமாகச் சொல்கிறார்கள், பாகவதம் வேதமே மரமானது என்று சொல்கிறது. திடீரென்று தோன்றிய அந்த மரத்தை வேடுவரோடு வந்தவர்கள் வெட்டலாம் என்று சொல்ல, அதற்கு நம்பிராஜன் அவர்களைத் தடுத்து, வேண்டாம் இந்த மரம் வள்ளிக்கு நிழலாக இருக்கட்டும். துணையாக இருக்கட்டும் என்கிறார். அவர்கள் கிளம்பியதும், முருகர் மறுபடியும் வள்ளியிடம் வந்தார். என்ன உன் தந்தை வந்துவிட்டுப் போகிறார் எனக் கூற, வள்ளி, உண்மையைக் கூறுங்கள். நீங்கள் வேடுவர் இல்லை. ஏனென்றால் மரமானதை நான் பார்த்தேன். மேலும் நீங்கள் வேறு வேடத்தில் வருவதால் வேடுவர் இல்லை. உங்களைப் பார்த்தால் ஏதோ ராஜ வம்சத்தில் பிறந்தவர் மாதிரி தெரிகிறது. என்று சொல்ல... அதற்கு முருகர், நான் வேடுவன்தான்! என்றார். ஆனால், வள்ளி தன் மனதுக்குள் நம்மைக் கவர்ந்து சொல்லத்தான் இவர் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, இந்தக் காட்டில் வேடுவர் குலத்தில் பிறந்த பெண் நான். எனக்கு வசதியும் கிடையாது. மேலும் என் தந்தைக்கு நீங்கள்என்னிடம் பேசியக்கொண்டிருப்பது தெரிந்தால் அவ்வளவுதான்! நீங்கள் என்னிடம் எந்த வாக்குவாதமும் செய்யவேண்டாம் எனக் கெஞ்சினாள்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே அரைமணிக்கு ஒருமுறை வரும் நம்பிராஜன் மீண்டும் தன் மகளைப் பார்க்க வருகிறார். உடனே வள்ளி, இந்த முறை என்ன வேஷம் எடுக்கப்போகிறார்? என குழப்பத்துடன் பார்த்தாள். உடனே முருகர் வயதான தொண்டுக் கிழவனாக மாறினார். உடம்பு வெள்ளையான ரோமங்கள், அணிந்திருக்கும் வஸ்திரமும் வெள்ளை, உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருக்கிறார். உடல் தள்ளாடித் தள்ளாடியபடியே நடந்து வருகிறார். வயோதிகரைக் கண்ட நம்பிராஜன் அவர் காலில் விழுந்து நமஸ்கரிக்க, நம்பிராஜனிடம் விபூதியைக் கொடுத்து, மங்களம் உண்டாகட்டும்! என்றார். அவரைப் பார்த்து நம்பிராஜன் என்ன விசேஷம் ? யாரைப் பார்க்க வந்தீர்கள்? நீங்கள் எங்கே போக வேண்டும்? ஏதாவது பொருளைத் தேடி வந்திருக்கிறீர்களா? எனக் கேட்க, அதற்கு முருகப் பெருமான், எனக்கு இந்த உலகத்தில் எதுவும் வேண்டாம். இங்கு ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் பெயர் குமரி தீர்த்தம். அங்கு நீராட வேண்டும் என்றார். அதைக் கேட்ட நம்பிராஜன், அம்மா வள்ளி! இவர் தள்ளாத வயதில் நம் இருப்பிடத்துக்கு வந்திருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு போய் விட்டுவா என்று கூற.. அந்தக் காட்சி தன் மகளை, திருமணம் செய்துகொள் என்பதை மறைமுகமாக கூறுவது போல் இருந்ததாம்.
நம்பிராஜன் அந்த இடத்தை விட்டு சென்றதும், முருகர் வள்ளியைப் பார்த்து, எனக்குப் பசியாக இருக்கிறது.உண்பதற்கு ஏதாவது தர வேண்டும் எனக் கூற... வள்ளி தன் தந்தை கொடுத்த தேனை தினைமாவுடன் பிசைந்து முருகப் பெருமானிடம் கொடுக்கிறார். அதை உண்டதும் அவருக்கு விக்கல் எடுக்கிறது, அதைப் போக்குவதற்குக் குடிக்க தண்ணீர் கேட்கிறார்.  வள்ளியும், இங்கு ஒரு சுனை ஒன்று உள்ளது அங்கு போய்த்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்ல... முருகர், நான் கிழவன். என்னால் தனியாக போக முடியாது. ஆகவே என்னோடு நீயும் வா என்று கூறியபடி வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு சுனையைநோக்கிப் போகிறார். அங்கு தண்ணீர் குடித்த பிறகும் வள்ளியின் கையை விடாமல் பிடித்தபடி நிற்க.. வள்ளி தன் கையை அவரிடமிருந்து பிடிவாதமாக இழுத்து உதறிவிட்டு, தாத்தா, நான் முன்னால் போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறாள். அந்தச் சமயத்தில் தன் அண்ணனான விநாயகரை வேண்டுகிறார். உடனே வள்ளி ஓடுகின்ற பாதையில் பெரிய யானை ஒன்று பிளறியபடி ஓடி வருகிறது. இதைக் கண்டு பயந்த வள்ளி திரும்பவும் கிழவரிடம் வந்து, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன். அந்த யானையைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று வள்ளி வேண்டுகிறார். உடனே அவரும் யானையிடம் வேண்ட... யானையும் திரும்பிப் போய்விட்டது. உடனே முருகர் தன் உருவத்தை மாற்றி, சுப்ரமண்யராகக் காட்சியளித்தார். நாரதர் வாழ்த்தோடு பார்வதி, பரமேஸ்வரன் முன்னிலையில் முருகர் வள்ளியை மணந்தார். இப்படியாக வள்ளி திருமணம் நடந்தது.
-----------------------------------------------‐---------------------------------
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் புகை!

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.
-----------------------------------------------‐---------------------------------
துன்பங்கள் நீக்கும் ஜீவ விக்ரகம் ...!

 முதுமையினால் உடல் தளர்ந்தபோதும், ஸ்ரீரங்கம் தென் திருக்காவேரிக்கு தினமும் நடந்து சென்று நீராடி, அனுஷ்டானங்களை நிறைவேற்றி வந்தார், ராமானுஜர். திடீரென்று சில சீடர்களை அழைத்து, தான் இதுவரை உபதேசிக்காத ரகசியத் தத்துவங்களையும், பல சூட்சும அர்த்தங்களையும் உபதேசித்தார். சீடர்கள் இது பற்றிக் கேட்க, நான் இந்த பூத உடலை விட்டு விலகும் காலம், வெகு தூரத்தில் இல்லை என்றார் ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின், திருவடி நிலை, என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கந்தாடை ஆண்டான் என்ற சீடர் அவரைக் கண்ணீருடன் அணுகி, சுவாமி, உங்கள் நினைவாக உங்களது திருமேனி விக்ரகம் ஒன்றைத் தந்திட வேண்டும் என்று வேண்டினார். ராமானுஜர் அதற்கு அனுமதி அளித்தார். மிகச் சிறந்த சிற்பி ஒருவர் மூலம் அப்போது ராமானுஜர் எவ்விதம் இருந்தாரோ, அதே போன்று ஒரு தத்ரூபமான விக்ரகம் வடிக்கப்பட்டது! ஸ்ரீமத் ராமானுஜர் அதனை ஆரத் தழுவி, தனது ஆத்ம சக்தியை அதனுள் செலுத்தினார். அவரது ஆணைப்படி, தைப்பூசத்தன்று அத்திருமேனி ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த விக்ரகத்தின் கண் திறப்பின்போது, ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜரின் கண்களில் இருந்து ரத்தம் வடிந்ததாம்! இதனை நானாகவே ஏற்று, என்னிடம் காட்டிய பேரன்பை அதனிடம் காட்ட, அனைத்து மங்களமும் உண்டாகும் என்று திருவாய் மலர்ந்து அருளினார், ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரீரம் ஸ்ரீரங்கத்தில்  இருந்தாலும், இந்த ஜீவ விக்ரகம் ஸ்ரீபெரும்புதூரில் தன்னை நாடி வருவோரின் துன்பங்களை நீக்கி, அருள்புரிந்து வருவதில் ஆச்சரியமில்லை.
-----------------------------------------------‐---------------------------------
பகவானை கண்டு பயப்படுபவரா நீங்கள்?

பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், இறைவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே? அவனிடம் நமக்கு என்ன பயம்? இந்த பயம் என்ற சொல்லுக்கு அவனை கண்டு நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல! அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம், சீடன் பய பக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து பணிவிடை செய்வதைத்தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் குறை இல்லாதவனிடம் எந்த பயமும் இருப்பதில்லை.
நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை. பகவானும் சரி, மகான்களும் சரி... என்னைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்... என்றுதான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும். பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு இறைவனிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை. குற்றவாளி, போலீசைக் கண்டதும் சந்து பொந்து வழியாக ஓடுகிறான். நேர்மையுள்ளவன் போலீஸ்காரரைப் பார்த்தாலும் பயமின்றி போய் கொண்டிருக்கிறான்.

தன்னிடம் குற்றமில்லாத போது, பயம் இருக்காது. குற்றம் உள்ளவன், பயப்படுகிறான். இந்த பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது. ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ... என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். எந்த நேரத்தில் என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ... என்று. இளம் வயதினருக்கு வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம். பணமும், பொருளும் உள்ளோருக்கு திருடர்களிடம் பயம். பயணம் செய்வோருக்கு விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்.

தர்ம சிந்தனை இல்லாதோருக்கு யாசகனைக் கண்டு பயம். படிக்காத பையனுக்கு பரிட்சை என்றால் பயம். இப்படி சில வகை பயங்கள் சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அதாவது, மரண பயம். மரணம் என்பது எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது, எப்போது என்று தெரியாததால் பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால் கூட, உடனே வைத்தியரிடம் போகிறான். இதுவும் போதாது என்று ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவரும் ஜாதகத்தை பார்த்துவிட்டு, சனி போதாது, குரு போதாது என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். இன்னும் அதையெல்லாம் செய்து கொண்டு ஓரளவு தைரியமாக இருக்கிறான். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன். மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்!
-----------------------------------------------‐---------------------------------
வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மை தரும் பகமாலினி!

பகமாலினி தேவிக்கு ஒளியைப் பரப்பும் சிவந்த திருமேனி, புன்முறுவல் பூத்த அழகிய திருமுகம், மூன்று கண்களும் ஆறு கரங்களும் உடையவள். இடது திருக்கரங்களில் செங்கழு நீர் மலர், பாசம், கரும்பு வில் ஆகியவற்றையும், வலக்கரங்களில் தாமரை மலர் அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றையும் ஏந்தியவன். இவளைப் போலவே தோற்றமளிக்கும் சக்தி கணங்கள் சூழ பக்தர்களுக்கு அருள் செய்யும் வடிவினளாக இவள் வீற்றிருக்கிறாள். பகம் என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். செல்வம், தர்மம், புகழ், ஸ்ரீ, ஞானம் என என்றும் மங்காத செல்வங்களை உடையவள். அந்த ஐஸ்வர்யங்களையெல்லாம் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்குபவளாக விளங்குவதால். இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்றால் யோனி என்றொரு பொருளும் உண்டு. இந்த பகமெனும் தம்மையே பெண்மைக்கு உரியது. எனவே பெண்களுக்கு உரிய தெய்வமாகவும், அவர்களுக்குப் பலவிதமான நன்மைகளை அளிப்பவளாகவும் பகமாலினி விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் அனைத்து மக்களையும் தன் வசப்படுத்தும் சித்தி கிடைக்கும். மூவுலகும் அறியும் வண்ணம் பிரபலமான நிலை உண்டாகும். எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். எதிரிகளை அழிக்கும் வழிமுறைகளையும், அவர்களை வெல்லும்  வல்லமையையும் தன் பக்தனுக்குக் கொடுப்பதில் பகமாலினி வல்லவள். திருமணமான தம்பதிகளிடம் மகிழ்ச்சியை, அன்னியோன்யத்தை உருவாக்கி ஆனந்தம் கொடுப்பதும் பகமாலினி தேவிதான். பெண்களுக்கு உரிய தெய்வமாக விளங்கும் இவள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாகவும், அவர்களுக்கு சுகப்பிரசவமாகவும் அருளுகிறாள். குறைப்பிரசவம், கரு கலைந்து போகுதல் போன்ற குறைபாடுகள் இவளை வணங்குவதால் அறவே நீங்கும்.

லவுகீக வாழ்வில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கும் பகமாலினி, ஆன்மீக ரீதியாக தன் பக்தனுக்கு எல்லா தெய்வங்களையும் ப்ரீதி பண்ணும் தன்மையையும், அளப்பரிய சாதனைகளைச் செய்யும் வல்லமையையும் கொடுக்கிறாள். மிகப்பெரிய ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றை பகமாலினியின் அருள் இருந்தால் அனாயாசமாகச் செய்து விடலாம். தனக்குத் தானே எதிரியாக விளங்கும் காமம், க்ரோதம், லோபம் போன்ற பகைவர்களை வெல்லுவதும் இவளது பக்தர்களுக்கு மிகச் சுலபமாகிறது. தன்னை வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மையை அருளி, எல்லா நிலையிலும் ஜயத்தைக் கொடுப்பவள் பகமாலினி. பகமாலினி நித்யாவுக்கான அர்ச்சனை:
ஓம் பகமாலின்யை நம
ஓம் பகாயை நம
ஓம் பாக்யாயை நம
ஓம் பகின்யை நம
ஓம் பகோதர்யை நம
ஓம் குஹ்யாயை நம
ஓம் தாக்ஷõயண்யை நம
ஓம் கன்யாயை நம
ஓம் தக்ஷயக்ஞ விநாசின்யை நமஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அஜிதாயை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் ஸுதீப்தாயை நம
ஓம் லேலிஹானாயை நம
ஓம் கராளாயை நம
ஓம் ஆகாச நிலயாயை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
ஓம் ப்ரஹ்மாஸ்யாயை நம
ஓம் ஆஸ்யரதாயை நம
ஓம் ப்ரஹ்வ்யை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் ப்ரஜ்ஞாயை நம
ஓம் மாத்ரே நம
ஓம் பராயை நம
ஓம் புத்தயே நம
ஓம் விச்வமாத்ரே நம
ஓம் சாச்வத்யை நம
ஓம் மைதர்யை நமஓம் காத்யாயன்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் துர்கஸந்தாரிண்யை நம
ஓம் பராயை நம
ஓம் மூலப்ரக்ருதயே நம
ஓம் ஈசானாயை நம
ஓம் ப்ரதானேச்வர்யை நம
ஓம் ஈச்வர்யை நம
ஓம் ஆப்யாயன்யை நம
ஓம் பாவன்யை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் யமாயை நம
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம
ஓம் ஸம்ஹாரிண்யை நம
ஓம் ஸ்ருஷ்ட்யை நம
ஓம் ஸ்தித்யந்தகாரிண்யை நம
ஓம் அகோராயை நம
ஓம் கோர ரூபாயை நம நம் மனதில் உள்ள ஒவ்வொரு காம்யத்தை (ஆசையை), பலனைப் பொறுத்து பகமாலினி தேவியை அதற்குரிய முறையில் உபதேசம் பெற்று ஆராதித்தால், அந்தந்த விசேஷமான பலன்கள் கிட்டும். உதாரணமாக, தாமரைப்பூ, கொன்றை, அரளி, அல்லி ஆகிய பூக்களை முறையே நான்கு வர்ணத்தவரும், அவரவர் வர்ணத்துக்கேற்ற பூவை, வாழைப்பழம், தேன்,நெய் கலந்த த்ரிமதுரத்தில் தோய்த்து இவளுக்கு ஹோமம் செய்தால் அனைத்து காரியங்ளும் வசப்படும். வில்வ தளம், ஸமித், பழம் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் பரிபூர்ண லட்சுமி கடாட்சத்தை அடையலாம். வெண்தாமரையில் செய்யும் ஹோமம் வாகன ப்ராப்தியும் சிவந்த தாமரையால் செய்யும் ஹோமம் சர்வ சித்தியும் தரும்.

பகமாலினிக்கு உகந்தவை:
திதி: வளர்பிறை (சுக்லபக்ஷ) த்விதீயை, தேய்பிறை சதுர்த்தசி
புஷ்பம்: செந்தாமரை
நைவேத்யம்: சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)

பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
என்பது இவளது காயத்ரி மந்த்ரம்

முறை யான உபதேசம் பெற்று; புரச்சரணம் செய்த பின்னர் இந்த ஹோமங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் தங்கு தடையின்றிப் பெறலாம். பகமாலினி நித்யாவுக்கான பூதஜ: முதலில் ஸ்ரீ லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும், பின்னர் அன்றைய நித்யாவான பகமாலினி நித்யாவை, அவளது யந்த்ரத்தில் தியானிக்கவும்.

பகஸ்வரூபாம் பகினீமமோதாம்
ஸம்÷க்ஷõ பயந்தீமகிலாம்ச்ச ஸத்வான்
க்லின்னத்ரவாம் ஸ்ரீபகமாலினீம்தாம்
ஆகாரரூபாம் ப்ரணமாலி நித்யாம்

என்று கூறி பகமாலினி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும். மேற் கூறிய நாமாவளியால் பகமாலினி தேவிக்கு அவளுக்கு உகந்த செந்தாமைரப் பூக்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும், தேவிக்கு உரிய நைவேத்யமான சர்க்கரையைச் சமர்ப்பிக்கவும். முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் பகமாலினி தேவியின் காயத்ரியைக் கூறி கர்ப்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.
-----------------------------------------------‐---------------------------------
பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்!

நட்சத்திரம்  எழுத்துக்கள்

அசுவினி  சு-சே-சோ-ல, ர

பரணி   லி-லு-லே-லோ

கிருத்திகை  அ-இ-உ-ஏ

ரோகிணி  ஒ-வ-வி-வு

மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு

திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க

புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ

பூசம்  ஹு-ஹே-ஹோ-டா

ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா

மகம் ம-மி-மு-மே

பூரம் மோ-டா-டி-டு

உத்திரம் டே-டோ-ப-பா-பி

அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா

சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ

சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு

விசாகம் தி-து-தே-தோ

அனுஷம் ந-நி-நு-நே

கேட்டை நோ-யா-யீ-யு

மூலம் யே-யோ-பா-பி

பூராடம்              பூ-தா-ட-பா-டா-பி

உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி

திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க

அவிட்டம் க-கீ-கு-கே

சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு

பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி

உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ

ரேவதி               தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி

27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!
அஸ்வினி   கேது
பரணி   சுக்கிரன்கார்த்திகை  சூரியன்                              
ரோகிணி  சந்திரன்
மிருகசீரிஷம்  செவ்வாய்
திருவாதிரை  ராகு
புனர்பூசம்  குரு (வியாழன்)
பூசம்  சனி
ஆயில்யம்  புதன்
மகம்  கேது
பூரம்  சுக்கிரன்
உத்திரம்  சூரியன்
அஸ்தம்  சந்திரன்
சித்திரை  செவ்வாய்
சுவாதி  ராகு
விசாகம்  குரு (வியாழன்)
அனுஷம்  சனி
கேட்டை  புதன்
மூலம்  கேது
பூராடம்  சுக்கிரன்
உத்திராடம்  சூரியன்
திருவோணம்  சந்திரன்
அவிட்டம்  செவ்வாய்
சதயம்  ராகு
பூரட்டாதி  குரு (வியாழன்)
உத்திரட்டாதி  சனிரேவதி  புதன்.

அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:
அசுவினி  சுகந்த தைலம்
பரணி  மாவுப்பொடி
கார்த்திகை  நெல்லிப்பொடி
ரோகிணி  மஞ்சள்பொடி
மிருகசீரிடம்  திரவியப்பொடி
திருவாதிரை  பஞ்சகவ்யம்
புனர்பூசம்  பஞ்சாமிர்தம்
பூசம்  பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம்  பால்
மகம்  தயிர்
பூரம்  நெய்
உத்திரம்  சர்க்கரை
அஸ்தம்  தேன்
சித்திரை  கரும்புச்சாறு
சுவாதி  பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம்  இளநீர்
அனுஷம்  அன்னம்
கேட்டை  விபூதி
மூலம்  சந்தனம்
பூராடம்  வில்வம்
உத்திராடம்  தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம்  கொம்பு தீர்த்தம்
அவிட்டம்  சங்காபிஷேகம்
சதயம்  பன்னீர்
பூரட்டாதி  சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி  வெள்ளி
ரேவதி  ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).
-----------------------------------------------‐---------------------------------
ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?

பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல்  சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.

திருச்சி-பெயர்க்காரணம்

ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.
-----------------------------------------------‐---------------------------------
பிள்ளையார்.. பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்..

கணபதியை கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பார்கள். விநாயகரின் நாபி பிரம்மனின் அம்சமாகவும், முகம் விஷ்ணுவின் அம்சமாகவும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்சமாகவும், முக்கண் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறது. இதனால் விநாயகர் ஒருவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.

விநாயகர் - தனக்கு மேல் யாரும் இல்லாத வெற்றி நாயகர்
பிள்ளையார் - சிவசக்தியின் மூத்த பிள்ளை
கணேஷ், கணபதி - சிவனின் பூத கணங்களுக்கு தலைவர்
விக்னேஸ்வரர் - தடைகளைத் தகர்ப்பவர்
கஜமுகன், கஜராஜன் - யானை முகம் கொண்டவர்.

முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.

முதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு - நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு - காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு - கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்

யார் பட்டம் ஏன் வந்தது?

தாயை தாயார், தந்தையை தந்தையார் மாமியை மாமியார், என்று யார் அடைமொழி போடுவது ஒரு மரியாதைக்காக. நம் வீட்டு பிள்ளைகளை பிள்ளையாரே வருக என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், சிவ பார்வதியின் மூத்த பிள்ளை தெய்வக்குழந்தை இல்லையா? எனவே, தெய்வத்துக்குரிய மரியாதையுடன் பிள்ளையார் என்கிறோம். இந்த தெய்வத்தின் அருள்பெற்ற ஒரு பெண்மணியும் யார் பட்டம் பெற்றார். தமிழ் மூதாட்டி அவ்வையை பிள்ளையார், தன் தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு போய் சேர்த்தார். எனவே, இந்தத் தெய்வப்புலவரையும் அவ்வையார் என்கிறோம்.

விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?

ஒருசமயம் பார்வதி தேவி, கங்கையில் நீராடிய போது தன் உடலிலிருந்த அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானை முகமும், மனித உடலும் கொண்டிருந்தது. அதை அவள் கங்கையில் எறிந்தாள். அந்த பொம்மை விநாயகராக வெளிப்பட்டது. இவரை பார்வதியும் கங்கையும் பிள்ளையாக ஏந்தி கொண்டனர். இதனால், விநாயகருக்கு பார்வதியும், கங்கையும் அன்னையர் ஆனார்கள். இந்த காரணத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கங்கையில் கரைக்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பின்னர் கங்கையும் சேரும் இடம் கடல் என்பதால் விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

விக்ன ராஜர்

விநாயகருக்கு விக்ன ராஜர் என்ற பெயர் உண்டு. வரேணியன் என்ற மன்னனின் மனைவி புட்பகை கருவுற்றிருந்தாள். விநாயகர் கருவிலிருந்த குழந்தையை மறைத்து அதற்கு பதில் யானை முகத்துடன் தானே குழந்தையாக அவதரித்தார். இதனைக் கண்ட ராஜா குழந்தையை காட்டில் விடும் படி உத்தரவிட்டார். காவலர்கள் குழந்தையை காட்டில் பராசரமுனிவர் ஆஸ்ரமத்தின் அருகே விட்டனர். முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். அப்போது கிரவுஞ்சன் என்ற அசுரன் பெருச்சாளி உருவெடுத்து அங்கிருந்த முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு விக்னன் என்ற பெயரும் உண்டு. விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக்கி கொண்டார். அன்றிலிருந்து விநாயகர் விக்னராஜா ஆனார்.

பிள்ளையாரின் ஆயுதங்கள்

பொதுவாக பிள்ளையார் ஐந்து கைகளில் மேல் இரண்டு கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார். இவை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். இவரது ஆயுதங்கள் மொத்தம் 29. பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாக பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடரி, அட்சர மாலை, சாமரம், கட்டு வாங்கம், சக்கரம், அகல் விளக்கு, வீணை ஆகியவை.

விநாயகரின் 16 திருநாமங்கள்

பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜா கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, புவனேச கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி.

வீணை விநாயகர்

விநாயகரை கையில் மோதகம், கொழுக்கட்டை வைத்தபடி பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரை சரஸ்வதிக்குரிய வீணையை கைகளில் வைத்தபடி ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அம்பாள் வேதநாயகி சன்னதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் இவர் சிற்ப வடிவமாக இருக்கிறார். புலிக்கால்களுடன் இருக்கும் இவருக்கென தனி வழிபாடு கிடையாது. அம்பாள் வேதநாயகியின் இடது காலடியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இசைப் பயிற்சி பெறுபவர்கள் அம்பாள் சன்னதி முன்பு நின்று இவ்விரு விநாயகர்களையும் தரிசித்தால், இசைக்கலையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.

அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்

விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம்,  ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.

அபிஷேக நட்சத்திரங்கள்

விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?

பாலபிஷேகம்                  - உத்திராடம்
சந்தன அபிஷேகம்               - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம்                      - ரேவதி
திருநீறு அபிஷேகம்              - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம்             - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு                  - திருவாதிரை
அன்னாபிஷேகம்                   - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம் - திருவோணம்

விநாயகரின் ஐந்து கைகள்

விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.

அங்குசம் தாங்கிய வலது மேல் கை  - சி
பாசம் பற்றிய இடது மேல் கை          - வா
தந்தம் ஏந்திய வலது கை                   - ய
மோதகமுள்ள இடது கை                   - ந
துதிக்கை                                            - ம

வெல்லப் பிள்ளையார்

விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் விளக்கு

விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.

கல்யாண வரம் தரும் கட்டை பிரம்மச்சாரி

தனக்கொருத்தி இல்லாமல் தனித்திருக்கும் சுவாமியை சுற்றிச்சுற்றி வந்து, எனக்கொருத்தி வேண்டுமென கேட்கிறார்கள் பிரம்மச்சாரிகள். கல்யாணம் செய்து கொள்ளாத இந்த கட்டைப் பிரம்மச்சாரியிடம் இதை கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தெரியுமா? வள்ளியை மணம் முடிக்க முருகப்பெருமாள் பகீர தப்பிரயத்தனம் செய்து பார்த்தார். கதை நடக்கவில்லை. கடைசியில் அவர் கூப்பிட்டது தன் அண்ணனைத் தான்! அவர் யானை வடிவில் வந்தார். வள்ளியை விரட்டினார். அவள் பயந்து போய், வேடன் வடிவில் வந்த முருகனைத் தழுவி நின்று கொண்டாள். காதல் மலர்ந்தது. கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காத ஒன்றை யாருக்கும் கிடைக்க விடக்கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தான் உலகத்தில் அதிகம். ஆனால், விநாயகரோ, தனக்கு இல்லாததை கூட பிறருக்கு தரும் அருள் வள்ளல். அதனால் தான் பிரம்மச்சாரிகள் அவரைத் தேடிப் போகிறார்கள்.
-----------------------------------------------‐---------------------------------
ஆன்மீகம்

முருகன் கோயிலில் சொர்க்கவாசல்

முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பது தனி சிறப்பாகும். முருகனின் கருவறையில் பவளக்கனிவாய் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இதனால் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சிறப்பு தரிசனத்துக்கு செல்லும் வழியிலுள்ள கதவு ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று மாலையில் 2 மணி நேரம் சாத்தப்படுகிறது. அந்தக் கதவில் சந்தனத்தால் நாமம் போடப்பட்டு பூ அலங்காரம் செய்யப்படும். இந்நிலையில் உத்ஸவர் சன்னதியில் பெருமாளுக்கு சர்வ அலங்காரமும், அபிஷேகமும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பெருமாள், பெரிய கதவு வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி நாளன்று மட்டும், வருடத்தில் இருமுறை பவளக்கனிவாய் பெருமாள் உலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீசையில்லாத பார்த்தசாரதி

சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோயிலின் மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் மார்பில் மகாலட்சுமி, அருகில் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்ணன், பேரன் அதிருத்தன் என குடும்பத்துடன் காட்சி தருகிறார். இங்கு கிருஷ்ணர் தேரோட்டிற்குரிய கம்பீரத்தை உணர்த்தும் மீசையுடன் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது அந்த ஐந்து நாட்கள் மட்டுமே இவரை மீசை இல்லாமல் தரிசிக்கலாம்.

சில மணித்துளி தரிசனம்

திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று உத்ஸவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்துக்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்து விடுவர். பின் கண் இமைக்கும் நேரத்தில் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்துவிடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒன்பது மூலவர்கள் !

எட்டு வகையான சயனத் திருக்கோலங்களில் பல்வேறு திருத்தலங்களில் மாகாவிஷ்ணு காட்சியளிக்கிறார். அவை உத்தான சயனம் - திருக்குடந்தை; தர்ப்பசயனம் - திருப்புல்லாணி ; தலசயனம் - மாமல்லபுரம்; புஜங்க சயனம் - திருவரங்கம், திருஅன்பின், திருஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம்; போக சயனம் - திருச்சித்ரகூடம்; மாணிக்கசயனம் - திருநீர்மலை; வடபத்ரசயனம் - திருவில்லிப்புத்தூர், வீரசயனம் - திருஇந்தளூர்.

ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரான் மேனியில் சாத்தப்பட்டிருக்கும் தங்கக் கவசம் வருடம் ஒருமுறையே கழற்றப்படுகிறது.

உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஒன்பது மூலவர்கள் காட்சித் தருகிறார்கள்.

பெருமாள் வலமிருந்து இடமாக பள்ளிகொண்ட தலம் திருவெஃகா.

ஒரு ஆழாக்கு - நுற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு - முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் - அறுபத்தி நாலரை லிட்டர்.
ஒரு தூணி - இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி - தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி - இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை - முப்பது மில்லி லிட்டர்
ஒரு குப்பி - எழுநூறு மில்ல லிட்டர்.
ஒரு அவுன்ஸ் - முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் - ஒரு சோடு.
ஐந்து சோடு - ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு - ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு - ஒரு உரி.
இரண்டு உரி - ஒரு நாழி.
எட்டு நாழி - ஒரு குறுணி.
இரண்டு குறுணி - ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு - ஒரு தூணி.
மூன்று தூணி - ஒரு கலம்.

அர்த்தநாரீஸ்வரர்

தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும். உமையொருபாகனான ஈசன் தரிசனம் தரும். இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணி நாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார். இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று. திருக்கண்டியூரில் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார். திருமழப்பாடியில் இடப்பகுதிக்கு பதிலாக வலப்பகுதியில் உமாதேவியின் (பெண்) உருவம் உள்ளது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் அபயமுத்திரை இல்லாமல் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்.

மிகப்பெரிய விளக்கு

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செட்டிகுலங்காரதேவி திருக்கோயிலில் 11 அடி உயரத்துக்கு ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கு 1000 திரிகள் ஏற்றக்கூடிய வகையில் 13 சுற்றுக் கிளைகளுடன், பெரிய ஆலமரம் போல் அமைந்துள்ளது. கன்மெட்டல் ஏன்ற உலோகத்தால் செய்யப்பட்ட இந்தத் திருவிளக்கு. 1500 கிலோ எடை கொண்டது. இதுவே, இந்தியக்கோயில் விளக்குகளில் மிகப்பெரியதாம்.

பதினெண் புராணங்கள் என்னென்ன?

பஞ்ச புராணங்கள் என்று எதுவும் நமது சம்பிரதாயத்தில் இல்லை. புது சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக இருக்கலாம். அதுபற்றிக் கூறியவர்களே அதற்கு சான்று. பதினெட்டு புராணங்கள் உண்டு. அதை மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மவைவர்த்த புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், வராஹ புராணம், வாமன புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், அக்னி புராணம், நாரதீய புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்கந்த புராணம் ஆகியன. இதை தவிர உப காரணங்களும் உண்டு. அவை; சனத்குமார புராணம், நரஸிம்ஹ புராணம், சிவ புராணம், பிரஹன்னாரதீய புராணம், துர்வாச புராணம், கபில புராணம், மானவ புராணம், ஒளசஸை புராணம், வருண புராணம், ஆதித்யபுராணம்,  மஹேச்வர புராணம், பார்கவ புராணம், வசிஷ்ட புராணம், காலிகா புராணம், சாம்ப புராணம், நந்திகேச்வர புராணம், ஸெளர புராணம், பராசர புராணம். இப்படி 18ல் முடிவடையும் புராணங்கள் புழக்கத்தில் உண்டு. ஐந்து எண்ணிக்கையில் முடிவடையும் புராணத் தகவல் தென்படவில்லை!

புராணங்கள் - 18, உப புராணங்கள் - 18, வித்யைகள் 18, அதேபோல் மகாபாரதம் 18 பர்வாக்களை உள்ளடக்கியது. பாரதப்போர் 18 நாட்கள் நடந்தது. படைகளும் 18 அஷெளஹணியாக இருந்தன. பகவத்கீதையும் 18 அத்தியாயங்கள் கொண்டது. ஆக 18 எனும் சிறப்புடன் அமைந்த புராண எண்ணிக்கையில் பஞ்ச புராணம் என்றொரு வழக்கத்தை தோற்றுவிப்பது விளையாட்டு.

சிவபூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் தெரியுமா?

திருமணத்தின் தாலி கட்டும் போது,

மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! - என்று சொல்கிறார்கள். மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக! என்பது இதற்குப் பொருள்.

பாமா ருக்மிணி

கிருஷ்ணருடன், பாமா ருக்மிணி ஆகியோர் இணைந்து காட்சி தருவர். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாச்ரயே என்ற ஸ்லோகம் வருகிறது. இதன் அடிப்படையில் தென்னகத்தில் பாமா, ருக்மிணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாமா பூமாதேவி அம்சம் என்றும், ருக்மிணி லட்சுமி அம்சம் என்றும் கூறுவதுண்டு. பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்திலுள்ள லட்சுமியிடம் எடுத்து தாயார் சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள். எனவே, ஸ்ரீ கிருஷ்ணரை பாமா, ருக்மிணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வடமாநிலங்களில் ருக்மிணியும், சத்யபாமாவும் இணைந்த வடிவத்தை ராதை எனக்கருதி ராதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்

திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274 தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியும் பெருமாளும்

பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு  மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.

கோமாதா பூஜை

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

திருநீறில் மருந்திருக்கு

திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு, வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.

தானமும் பலன்களும்

ஆடை தானம் செய்தால் ஆயுள்விருத்தியும், பூமிதானம் தானம் செய்தால் பிரம்மலோக வாழ்வும், நெல்லி தானம் செய்தால் ஞானமும், தீபம் தானம் செய்தால் பதவியும் கிடைக்கும். அரிசி தானம் செய்தால் பாவம் நீங்கும், பழம், தாம்பூலம் தானம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், கடலை தானம் தானம் செய்தால் சந்ததி பெருகும், விதை தானம்  செய்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறைவனுக்கு ஆடை

சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால்,  அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.

லெட்சுமிக்கு வில்வ பூஜை

பெருமாள் கோயில்களில் தாயாருக்கு துளசியால்தான் அர்ச்சனை செய்வர். ஆனால், கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் கல்யாணப்பெருமாள் கோயிலில் உள்ள லட்சுமி தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்கின்றனர். இக்கோயில் அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சைவமும், வைணவமும் வேறில்லை என்ற கருத்தின்அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

பிரதான லட்சுமி

விழாக்களின் போது, திருமால் முன்னே செல்ல தாயார் பின்பு தான் செல்வர். திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலில், விழாக்களின் போது, லட்சுமி தாயார் முன்னே செல்கிறார். பின்னால் தான் பெருமாள் செல்கிறார்.

பெண் குழந்தைகளுக்கு நாகரிகமான பெயர்

ஆண்களுக்கு கண்ணன் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு கண்ணம்மா என்று பெயர் வைத்தால் ஏதோ நாட்டுப்புறம் போல் தெரிகிறது என சிலர் கவலைப்படுகிறார்கள். கண்ணன் கருப்பு நிறம் உடையவன். இதனால் அவனை ஷியாம் என்றும், சியாமளன் என்றும் அழைப்பர். ஷியாம் என்றால், கருப்பு என்று பொருள். எனவே கண்ணனின் பெயரைப் பெண்குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவோர் சியாமளா என்று வைத்துக்கொள்ளலாம்.

ஷண்முகி முத்திரை

நதிகள் அல்லது கடலில் முழ்கி குளிக்கும் போது காதுகளை பெரு விரல்களாலும், மூக்கின் இரு பக்கங்களை நடுவிரல்களால் மூடிக் கொண்டும், கண்களை ஆள்காட்டி விரலால் திறந்து கொண்டும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு நீராட வேண்டும். இந்த முத்திரைக்கு ஷண்முகி முத்திரை என்று பெயர்.

கும்பிடக்கூடாத நேரம்

கோயில்களில் சில நேரங்களில் சுவாமியை வணங்கக்கூடாது. <உற்சவ காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதி உலாவரும்போது கோயிலில் உள்ள மூலவரையும் பரிவார தெய்வங்களையும் வணங்கக்கூடாது. அபிஷேகம் ஆகும் போதும், நைவேத்யம் தருவதற்காக திரட்டியிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரசாதத்துக்காக அடித்துக் கொள்ளாதீர்கள்

இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை சிறிதளவாவது நாம் உண்ண வேண்டும். சிலர் பிரசாதம் வேண்டொமெனச் சொல்வதும், பெரும்பாலான இடங்களில் பிரசாதத்துக்காக சண்டைபோட்டுக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கென தனி மரியாதை இருக்கிறது. தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில்படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் திருஷ்டி போக் என்பர். கண்ணொளி பட்டது என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்கள் மனம் தூய்மையடைகிறது. <உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே, பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்று, உரிய மரியாதைகளுடன் பெற்றுச் செல்ல வேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பெற்றால் மோட்சம்

பெண் குழந்தை என்றாலே ஓடிப்போகிறார்கள் பெற்றவர்கள். காரணம், அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால். ஆனால், பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும். திருமணத்தின் போது, பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, புரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா?

மகளே! நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக! நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இருபுறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லாவகையிலும் பெருமையைக் கொடு. மிகச்சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னை தானம் அளிப்பதால், நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன், என்று ஒரு தந்தை சொல்வது போல் அமைகிறது.

எல்லாமே ஐந்து

நமசிவாய இது சிவனின் தாரக மந்திரம். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாட்சர மந்திரம் என்பார்கள். இதன் அடிப்படையிலேயே சிவனுக்கு அமைவது எல்லாமே ஐந்தாக அமைவது சிறப்பு. நடராஜரின் பஞ்ச சபைகள்

பொன்னம்பலம் - சிதம்பரம், வெள்ளியம்பலம் - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, ரத்தினசபை - திருவாலங்காடு, சித்திரைசபை - குற்றாலம்

பஞ்சபுராணங்கள்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு , பெரிய புராணம், ஆகும்.

பஞ்சபூத ஸ்தலங்கள்

பிருத்திவி (மண்) - காஞ்சிபுரம், வாயு (காற்று) - காளஹஸ்தி, தேயு (நெருப்பு)- திருவண்ணாமலை, அப்பு (நீர்) - திருவானைக்கா, ஆகாயம் - சிதம்பரம்

திருவண்ணாமலையில் கிரிவலம்  சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்

இந்திரலிங்கம் : புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்பு, சத்யம், தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

புராணம் - 18

பிரம்ம புராணம், பதும புராணம், வைணவ புராணம், சைவ புராணம், பாகவத புராணம், பவிழிய புராணம், நாரதீய புராணம், மார்க்கண்டேய புராணம், ஆக்கினேய புராணம், பிரமபகைவர் புராணம், இலிங்க புராணம், வராக புராணம், காந்தப் புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மற்ச புராணம், காருட புராணம், பிரமாண்ட புராணம்

பிரதோஷ பலன்

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் அதற்காக பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் புண்ணியமில்லை பிறர்க்கு உதவாமல் இருப்பினும், உபத்திரம் செய்யாமல் இருப்பது அதனினும் இனிது

சக்கரத்தாழ்வார்

எம்பெருமானின் நித்ய சூரிகளில் ஒருவரே சக்கரமாக மாறியுள்ளதால் சக்கரத்தாழ்வார் எனப்படுவார். பெருமாளுக்கு ஐந்து ஆயுதங்கள். சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலக்கையிலும் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, வஜ்ரம், சூலம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.

சொன்னது

1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது  - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது  - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது  - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.

என்றும் சிரஞ்சீவி எனப் பெயர் பெற்றவர்கள்

அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாசார்யார், பரசுராமர்

காஞ்சி புராணப்படி காஞ்சி மாநகரத்தில் சிவனுக்கு 16,000 கோயிலும், விநாயகருக்கு 1,00,000 கோயிலும், காளிக்கு  5000 கோயிலும், விஷ்ணுவிற்கு 12,000 கோயிலும், முருகனுக்கு 6,000 கோயிலும், திருமகள், கலைமகளுக்கு 1000 கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது.

நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை

சரவணம் - இறைவனது பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம் - நமஸ்கரித்தல்
தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல்
ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார் பணி செய்தல்

மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் குரு சஞ்சாரம் செய்யும் ராசி ஊர்களும் விழாக்களும்

ராசி                                          ஊர்                    விழா

சிம்மம்                 கும்பகோணம்                 மகாமகம்
கன்னி                   திருக்கழுக்குன்றம்       சங்கு
கும்பம்                 ஹரித்துவார்                   கும்பமேளா
மேஷம்                அலகாபாத்                       பிரயாகை
கடகம்                   நாசிக்                                பஞ்சவடி
துலாம்                   உஜ்ஜயினி                     மேளா (தீர்த்தம்)

புகழ் பெற்ற பிள்ளையார் கோயில்கள்

பிள்ளையார்பட்டி           - தேசிக விநாயகர்
திருவலஞ்சுழி            - வெள்ளை விநாயகர்
திருவாரூர்            - மாற்றுரைத்த விநாயகர்
திருச்செங்காட்டாங்குடி   - வாதாபி விநாயகர்
மதுரை             - சித்தி விநாயகர்
திருநாரையூர்                   - பொள்ளாப் பிள்ளையார்
மலைக்கோட்டை             - உச்சிப்பிள்ளையார்

விநாயகர் அர்ச்சனை

விநாயகருக்கு கண்டகங்கத்திரியால் அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சமும், மாதுளை இலையால் அர்ச்சனை செய்தால் நற்புகழும், வெள்ளெருக்கால் அர்ச்சனை செய்தால் சகல பாக்கியமும், அரளிஇலையால் அர்ச்சனை செய்தால் அன்பும், அரச இலையால் அர்ச்சனை செய்தால் எதிரி நாசமும், எருக்கு இலையால் அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறும் கிடைக்கும்.

8 ன் சிறப்பு:

8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும்.
பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி  திதியில் பிறந்தார்.
8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்.
மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும்.
சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும்.
சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும்.
முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும்.
ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.

அஷ்டபந்தனம்

அஷ்டபந்தனம் என்பது கோயிலில் சுவாமி சிலைகளை பீடத்தில் பொருத்த பயன்படும் ஒரு கலவை ஆகும். இது மூன்று வகையாக உள்ளன.
1. ஏஜகபந்தனம் - என்பது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டவை
2. ஸ்வர்ணபந்தனம் - என்பது தங்கத்தால் செய்வது
3. அஷ்டபந்தனம் என்பது அரக்கு, சுக்காங்கல், குங்குலியம், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, வெண்ணை, மஞ்சள் மெழுகு, பச்சை கற்பூரம் ஆகியவற்றால் ஆனது.

16 செல்வங்கள்

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச் சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

பழந்தமிழரின் அளவு முறைகள்

கால அளவுகள்: அறுபது வினாடி - ஒரு நாழிகை, இரண்டரை நாழிகை - ஒரு மணி, மூன்றே முக்கால் நாழிகை - ஒரு முகூர்த்தம், அறுபது நாழிகை - ஒரு நாள், ஏழரை நாழிகை - ஒரு சாமம், ஒரு சாமம் - மூன்று மணி, எட்டு சாமம் - ஒரு நாள், நான்கு சாமம் - ஒரு பொழுது, ரெண்டு பொழுது - ஒரு நாள், பதினைந்து நாள் - ஒரு பக்ஷம், ரெண்டு பக்ஷம் - ஒரு மாதம், ஆறு மாதம் - ஒரு அயனம், ரெண்டு அயனம் - ஒரு ஆண்டு, அறுபது ஆண்டு - ஒரு வட்டம்.

இறைவனுக்கு மருத்துவம்

தேனி நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வைகை ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள கோயில் வீரப்ப ஐயனார் சுவாமி கோயில். இங்குள்ள சாமி, இடதுபுறம் தழும்புடனே காணப்படுகிறார். காரணம், முன் ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இந்த சுவாமிக் கல்லாகக் கிடக்க, அதை பக்தர் ஒருவர் தெரியாமல் கோடாரியால் வெட்ட, அதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கி தன்னை அடையாளம் காட்டினார் என்பது வரலாறு. இன்றும் சித்திரை முதல் தேதி சுவாமி கல்லை வெட்டியவரின் பரம்பரையில் இருந்து ஒருவர் வந்து சுவாமியின் வெட்டப்பட்ட காயத்திற்கு மருந்திடுகிறார்கள்.

காது அறுந்த நந்தி

ராஜபாளையத்திற்கு அருகே உள்ள சொக்கநாதன் புதூர், மதுரை மீனாட்சியின் சொந்த ஊராகும். மதுரையில் திருமணம் முடிக்க, மீனாட்சியை அழைத்துச் செல்ல சொக்கநாதர் வந்த போது, ""சிவனைத் தவிர வேறு எவரையும், மீனாட்சியே ஆனாலும் சுமக்கமாட்டேன் என்று நந்திதேவர் அடம்பிடித்து அமர்ந்த இடம். கோபத்தில் சிவன் நந்தியின் காதைத் திருக, அறுந்து போனதால் ""காது அறுந்த நந்திகேஸ்வரர் என்று பெயர். பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு எதிரே நந்தி இருக்கும். இங்கே நந்திக்கு முன்னால் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது விசேஷம்.

சந்திர பூஜை

சிவாலயங்களில் லிங்கத்திருமேனியில் சூரியனின் கதிர்கள் விழுவதை சூரிய பூஜை என அழைக்கிறோம். அதேபோல் நவக்கிரகத் தலமான திங்களூர் கைலாச நாதர் கோயிலில் வருடத்திற்கு இருமுறை சந்திரன் வழிபாடு செய்கிறார். சந்திரனது கிரணங்கள் பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமியிலும், அதற்கு முன்பின் தினங்களிலும் லிங்கத்திருமேனியில் படுவது சிறப்பு.

கூடாது... கூடவே கூடாது...

சங்கு மற்றும் வெற்றிலையை தரையில் வைக்க கூடாது. விளக்கை தானாக அணைய விடக்கூடாது.  பால், மோர், தண்ணீரை இரவில் பிறருக்கு கொடுக்க கூடாது. கிழிந்த துணியை உடுத்த கூடாது.  உப்பை சிந்தக்கூடாது. வாசற்படி, உரல், அம்மி, ஆட்டுக்கல் மேல் உட்காரக்கூடாது. வாசல்படியில் நின்றபடி எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

தக்காளி அபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்து மாரியம்மன் கோயிலில், பங்குனிப் பெருவிழாவின் போது, அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிஷேகம் நடக்கிறது.

கோயில் ஒன்று :வாசல் பத்து

சேலத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திலுள்ள சங்ககிரி மலை 2348 அடி உயரமுள்ளது. இங்குள்ள சிவன் கோயில் 10 நுழைவு வாசலைக்கொண்டது. இவற்றை 1. புலிமுக வாயில்,2. கிட்டி வாயில், 3. கடிகார வாயில், 4. ரண மண்டல வாயில், 5. புதுப்பேட்டை வாயில், 6.ரோக்கல் திட்டி வாயில், 7. இடி விழுந்தான் வாயில், 8. லட்சுமி காந்தன் வாயில், 9.வெள்ளைக்காரன் வாயில், 10. மைசூர் வாயில் என அழைக்கின்றனர்.

நவக்கிரக வழிபாடு

ஆரோக்கியம் பெற சூரியனையும், புகழ் பெற சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவு பெற புதனையும், ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மை பெற வெள்ளியையும், சந்தோஷம் மற்றும் ஆயுள் பெற சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.                                        

அஷ்டமியின் சிறப்பு

பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. எட்டு என்ற எண் அனைவராலும் வெறுக்ககூடிய எண்ணாக இருந்து வந்தது. எனவே இந்த எண்ணுக்குரிய திதிக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ஒரு முறை இந்த திதி தனது மனக்குறையை இறைவனிடம் முறையிட்டது. மனமிறங்கிய இறைவன் இந்த திதியின் குறை நீக்க அஷ்டமி திதியில் கண்ணனாக அவதாரம் செய்ததாகவும், சைவ சமயத்தில் பைரவர் இந்த திதியை தனக்குரிய பூஜை நாளாக ஏற்றுக்கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த திதியில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடப்பதில்லை என்ற குறை நீங்கியது. வட மாநிலங்களில் எல்லாம் அஷ்டமியன்று இறைவழிபாட்டை மிகச்சிறப்பாக செய்கின்றனர்.

மணிகளில் சிறந்த ருத்ராட்சம்

தேவிகளில் சிறந்தவள் கவுரி. கிரகங்களில் சூரியன். மாதங்களில் மார்கழி. மந்திரங்களில் காயத்ரி. நதிகளில் கங்கை. ரிஷிகளில் காசிபர். விருட்சங்களில் (மரம்) கற்பதரு. மலர்களில் பாரிஜாதம். பசுக்களில் காமதேனு. மணிகளில் சிறந்தது ருத்ராட்சம்.

மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையும் ஒரு பஞ்சபூத தலமாகும்.

நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர்
நிலம்- இம்மையில் நன்மைதருவார் கோயில்-மேலமாசிவீதி
நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி
காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம்
ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
மதுரையில் உள்ள இந்த ஐந்த தலங்களையும் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஜபத்தின் பலன்

பிறர் காதில் விழும்படி ஜபம் செய்வது வாசிகம் எனப்படும். இது ஒரு மடங்கு பலனைத்தரும். தனக்கு மட்டுமே கேட்கும்படி ஜபம் செய்வது உபாம்சு எனப்படும். இது நூறு மடங்கு பலனைத்தரும். மனதால் மட்டுமே ஜபிப்பது மானஸம் எனப்படும். இது ஆயிரம்  மடங்கு பலனைத்தரும்.

ரஜதலிங்க தரிசனம்

வெள்ளியில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு ரஜதலிங்கம் என்று பெயர். காஞ்சிபுரம் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் கோயில்களில் இந்த லிங்கம் உண்டு. இந்த லிங்கத்திற்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய முக்கிய நாட்களில் மட்டும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ரஜதலிங்க தரிசனம் முக்தி தர வல்லது.

மிகப்பெரிய துவஜஸ்தம்பம்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள துவஜஸ்தம்பம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய துவஜஸ்தம்பங்களில் ஒன்றாகும். ஒரே கல்லினால் ஆன இந்த துவஜஸ்தம்பத்தின் உயரம் தரைக்கு மேல் சுமார் 80 அடியும், பூமிக்கடியில் சுமார் 40 அடியும் உள்ளதாக அமைந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சுமார் 8 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

ஐந்து முக ஆறுமுகன்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஓதிமலை உள்ளது. சுமார் 1500 படிக்கட்டுகளை கடந்து சென்றால் இங்குள்ள முருகனை  தரிசிக்கலாம். இத்தல முருகப்பெருமான் ஐந்து முகம், எட்டு கரத்துடன் பின்பக்கம் மயில் நிற்க அருள்பாலிக்கிறார். கொங்கு நாட்டில் உள்ள மிக அழகு மிக்க முருகனிள் சிலைகளில் இதுவும் ஒன்று.
-----------------------------------------------‐---------------------------------
பஜனையில் கேட்டதுண்டா?

உங்கள் ஊரில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள். அது ராமனை பற்றிய சொற்பொழிவாக இருந்தால் ஸ்ரீஜானகி காந்த ஸ்மரணம் என்று சொற்பொழிவாளர் ராகத்துடன் சொல்வார். உடனே சுற்றியிருப்பவர்கள் ஜெய் ஜெய் ராமா என்பார்கள். கிருஷ்ணரை பற்றிய சொற் பொழிவாக இருந்தால், ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்றோ, கோபிகா ஜீவன் ஸ்மரணம் என்றோ சொல்வார். அப்போது, சுற்றியிருப்பவர்கள் கோவிந்தா கோவிந்தா! என்பார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆன்மிக சொற்பொழிவுகளில் கலந்து கொள்பவர்கள். பேச்சு துவங்கும் முன் பலவிதமான உலக நினைவுகளில் இருக்கலாம். அவர்களுக்கு இறைச்சிந்தனையை ஊட்டவே இவ்வாறு செய்யப்படுகிறது. தங்களுக்கு இறைவனின் நினைவு வந்துவிட்டதாக ராமா என்றோ, கோவிந்தா என்றோ சொல்லி நாங்கள் இறைநிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். மேலும் இந்த நாமங்கள் எத்தகைய இன்னல்களையும் தீர்க்கவல்லவை. பாஞ்சாலி கோவிந்தா என அலறியபோது, கண்ணன், அவளது மானத்தை காப்பாற்றியதில் இருந்தே இதை தெளிவாக அறியலாம்.
-----------------------------------------------‐---------------------------------
தமிழக கோயில்களின் பெரிய தெப்பகுளங்களும் அவற்றின் சிறப்பும்!

தமிழகத்தில் தெப்பக்குளங்களுடன் கூடிய கோயில்களை தரிசிப்பது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தங்கத்தால் ஆன தாமரையே இருக்கிறது. இதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர வண்டியூர் மாரியம்மன் கோயில் முன்புள்ள தெப்பக்குளமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி. 1635ல் வெட்டப்பட்டதாகும். இது 1000 அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இதை ஒரு நதியாகக் கருதி, ஹரித்ரா நதி என்பர். கும்பகோணம் மகாமகக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணி சங்கமத்தையும் விட உயர்ந்தது. மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தெப்பக்குளம், சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளம் ஆகியவையும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பக்குளத்தை கமலாலயம் என்று அழைப்பர். இதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 30 ஏக்கர்.
-----------------------------------------------‐---------------------------------
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?

மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும். அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.

வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.

வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்

தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:

ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.

ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
ஓம் ஸ்ரீ ஸத் குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாலா திருபுர ஸூந்தர்யை நம:

லக்ஷ்மி ராவே மா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி

அனுபல்லவி

லக்ஷ்மி ராவே மா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி

சரணம்

குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)

பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)

குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)

கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ

தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி

னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு

சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்

பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி

சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி

1. வரலெக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
ச்ருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)

2. கைலாஸந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேச்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)

3. சொல்பொரியே ஈசுவரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விருதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)

4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)

5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியாளாம் (ஜெய)

6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லாமலே (ஜெய)

7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)

8. என்னை நீபூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)

9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டு உகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)

10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் எனறு
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜயசுப)

11. நித்யமா வரலெக்ஷிமி முக்தி தரும் நாயகி சித்தத்திலே மறைஞ்சு
செல்வமாக்கும் சித்திரம் எழுதியே சிறப்பாக கிரகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முஹூர்த்தம் பார்த்து

12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும் (கட்டின பூப்பந்தல்)
கல்யாணிக்கு ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு

13. ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜய)
நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜய)

14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி ஸகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜய)

15. வரலெக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாஸனங்கள் போட்டு கற்பூரஹாரத்தி
காக்ஷியுடனே எடுத்து கைபிடித்து கிரகந்தனிலே
அழைத்து வந்தார் (ஜய)

16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிரொதரி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு

17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜய)

18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் (ஜய)

19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமங்கலியம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூ ஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜய)

20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல நத்து மூக்குத்தியும் நல்ல
முத்து புல்லாக்கு அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள்

21.மல்லிகை ஜெண்பகம்மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் கொட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலைமாலை கட்டிவைத்து
மலர் சொரிந்தாள் வரலெக்ஷிமிக்கு (ஜய)

22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலெக்ஷிமி
புகழ்ந்து கொண்டாள் (ஜயமங்களம்)

23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜய)

24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலை தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினாள் (ஜய)

25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலெக்ஷிமி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தாள்  (ஜயமங்க)

26. பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா ஸாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜய)

27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க ரம்பை
திலோத்தமை நாட்டியமாட சந்ததம் பக்தர்கள்
ஸ்ந்நிதியில் ஸதோத்தரித்து இந்த விருதம்போல
உலகத்தில் இல்லை என்றார் (ஜய)

28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர் போட்டு
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான மங்கையர்கள்
சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜய)

29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜய)

30. பூவினால் பூஜீத்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலெக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நிவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜய)

31. வடையுடனே அதிரஸம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய், பானகம் வடப் பருப்பு
பஞ்சாமிருதம் தேனும், இளநீரும் செங்கரும்பும்
எடுத்து நிறைந்தார்

32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சக்கரைப் பொங்கலுடன் சிருபருப்பு பொங்கல்
கருச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யன்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லெக்ஷ்மிக்கு
பரிபூர்ணமாய் பூஜித்தாள் பாக்யலெக்ஷிமியை (ஜய)

33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்தக்ஷணம் மேளம் அமர்த்தி கையினால்  (ஜய)

34. பந்தானத்தோட பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜய)

35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரஸைவணங்கிக்கொண்டு (ஜய)

36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷிமி அம்மன் ஆதிலெக்ஷி அம்மன்
பொன்னுலக்ஷிமி அம்மன் புகழும் லெக்ஷிமி அம்மன் (ஜய)

37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லெக்ஷிமி சகல லக்ஷிமி அஷ்டலெக்ஷிமி
அம்மன் எல்லோரும் வந்திருந்து கஷ்டமெல்லாம்
தீர்த்து கண்டவுடனே (ஜய)

38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாரி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜய)

39. அளளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புஜிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜய)

40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துகொடுத்தாள் (ஜய)

41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்டலெக்ஷிமியுடனேகிரகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி பவழஹாரத்தி
பரதேவதைக்கு (ஜய)

42. மாணிக்க ஹாரத்தி வரலெக்ஷிமி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இரக்கிகொண்டு இருக்கவேவரலெக்ஷ்மி
இஷ்டமாய் கிரகந்தனில் பரிபூர்ணமாகவே
இருந்து கொண்டாள் (ஜய)

43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜய)

44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜய)

45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷிமியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபிகளை மயங்கவைத்த கோவிந்தருக்கும்  (ஜய)

46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் ஜெயமங்களம் (ஜெயசுப)

சோபானை

1. மதுராலவெலசின மகிமாதலதல்லி நீவே
மாமித்ய உனிசினம்மு ரக்ஷிஞ்சவம்மா
ஒச்சினவாரிகி வரமுலிச்சே தல்லி
இச்சி ரெக்ஷிஞ்சலம்மா ஈசுவரி மீனாக்ஷிகி ப்ரோவவே (சோபானே)

2. அந்தன மனசேதனு அமரின சேகக்ஷ்க்ஷி
பந்துக கம்மலு பளபள நிறையக
முக்குண முந்தக முமெலா வெலுக்க
முந்துலாகுசூசி உளிதோ கொலுவையுண்டே மீனாக்ஷி (சோபானே)

3. சுக்ரவார பூசேர்வ சூடவேடுகலாய
எக்குண நீ சேர்வா என்னாடே தொரகுனு
ஸக்கக மொக்கேடி தண்டாலுக துல்க
ஸல்லாபக்ருபாஜூடிதல்லி ஜகன்மோகினி (சோபானை)

4. ப்ரோவே மாமித சோடு முலெஞ்ச கபாலிம்புட
மம்முவார முகாதேவி ப்ரோவவே  (சோபானை)

பூஜை முடித்து மறுதினம் ஹாரத்தி எடுத்து கலசத்துடன், பாலும் பழமும் அரிசிவைக்கும் பெட்டியிலோ அல்லது அவரவர்களுக்கு உண்டான அரிசி நிறைந்திருக்கும் பாத்திரத்திற்குள் கலசத்தை வைக்கவேண்டும்.

அம்மனை அனுப்புகிற பாட்டு

க்ஷீராப்தி நாதருடன் ஸ்ரீ வரலெக்ஷிமியுடன் சேர பள்ளியறைக்குச் சென்றாள், அம்மன் சியாமள வர்ணனைக் கண்டாள். வந்தோர் வரலெக்ஷ்மியை வாஸூ தேவரும் கண்டு வஸூந்தரர் ஸகோதரி வாவென்றார் இரு கையாலும் சேர்த்து அனைத்துக்கொண்டார். சுந்தரவதன முக சுந்தரி உந்தன் மேல் சாந்தமும் காதல் கொண்டேனடி இத்தனை தாமதங்கள் ஏனடி....

பங்கஜ தயணியைக் கொஞ்சி மடியில் வைத்துக்கொண்டார். இன்பமாய் சேதிகளை கேளுங்ககோ என்று அம்மன் சந்தோஷமாக உரைத்தாள். பிராண நாயகரே நான் போகுமுன் அன்பர்கள் நன்றாய் வீதிகளெல்லாம் அலங்கரித்து சேர்வை எப்போது காண்போம் என்று காத்து பிரார்த்தித்தார்கள். (சோபானை)

சந்திரன் கண்ட சாகரம்போல் என்னை கண்டவுடன் பூரித்தார்கள். மங்களவாத்தியங்கள் கோஷித்தார். சந்தன பரிமள வெகுவித புஷ்பங்களால் எந்தனை பூஜை செய்தார்கள். பலவித பழவகைகள் வெகுவித நிவேத்தியங்கள் கனக தட்டில் முன்கொண்டு வைத்தாள். கற்பூர ஹாரத்தி எடுத்து பூஜித்த பெண்களுக்கு அபீஷ்டவரம் கொடுத்து உம்மைக் காணவந்தேன். நாம் இருவரும் அவர்கள் இல்லத்தில் ஆனந்தமாக இருக்க அருள்புரியும் நாதா. (சோபானை)

பார்வதி உள்ளத்தில் பரிபூர்ணமாய் இருந்துமே
மங்காத செல்வமும் அருளும் தந்து அஷ்ட
லெக்ஷ்மியுடன் நாமும் ஆனந்தமாகவே
மங்கள கரமாகவே மகிழடைவோம் (சோபாநை)

ஜயமங்களம் சுபமங்களம் ஸ்ரீ வரலக்ஷிமிக்கு
ஜயமங்களம் சுபமங்களம்

ஸ்ரீ வரலக்ஷ்மி விருத பூஜை

சங்கல்பம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பூஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ன உபாசாந்தையே

ஓம் பூ: - ஸூவரோம் மமோபாக்தஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வரா (ஸ்ரீ மந் நாராயண பரீத் யர்த்தம்) கரிஷ்ய மாணஸ்ய கர்மண, அவிக்னேன பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து மஞ்சள் பொடியினால் பிம்பம் செய்து விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வேதம் அறிந்தவர் கணானாம் த்வா என்று மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸூமுகம் விக்னேஸ்வரம் த்யாயாமி. ஆவாஹயாமி! ஆஸனம் ஸம்ர்ப்பயாமி.

அக்ஷதை போடவும்

பாதையோ பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்  ஸமர்ப்பயாமி
(தனிப்பாத்திரத்தில் ஒவ்வொரு தடவையும் உத்தரணி தீர்த்தம் விடவும்)

ஸ்நாபயாமி (புஷ்பத்தை தீர்த்ததில் தோய்ந்து ப்ரோக்ஷிக்கவும்)
ஸ்நானாநந்தரம் ஆசமணீயம்  ஸமர்ப்பயாமி தீர்த்தம் போடவும்
வஸ்திரார்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி உபவீதார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
கந்தஸ்யோபரி அக்ஷதான்  ஸமர்ப்பயாமி( அக்ஷதை)

புஷ்பை: பூஜயாமி (புஷ்பார்ச்சனை)

1. ஸூமுகாய நம:
2. ஏகதந்தாய நம:
3. கபிலாய நம:
4. கஜகர்ணிகாய நம:
5. லம்போதராய நம:
6. விகடாய நம:
7. விக்னராஜாய நம:
8. விநாயகாய நம:
9. தூமகேதவே நம:
10. கணாத்யக்ஷõய நம:
11. பாலசந்த்ராய நம:
12. கஜானனானய நம:
13. வக்ரதுண்டாய நம:
14. சூர்ப்பகர்ணாய நம:
15. ஹேரம்பாய நம:
16. ஸ்கந்தபூர்வஜாய நம:

நாநாவித பத்ர புஷ்பம்  ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கற்கண்டு வாழைப்பழம்
ஓம் பூர்புவஸ்வ: தியோயோநப்
(நிவேதன வஸ்துவைத்து ப்ரோஷித்து)

ப்ராணாயஸ்வாஹா அபாநாய ஸ்வாஹா
வ்யாநாய ஸ்வஹா, உதாநாய ஸ்வாஹா
ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா
விக்னேஸ்வராய நம; ரஸகண்டம்
கதலீ பலம் நிவேதயாமி, நைவேத்யாநந்தரம்
ஆசமனியம் ஸமர்ப்பயாமி, பூகிபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிகிருஹ்யதாம் கற்பூர தாம்பூலம்
ஸம்ர்ப்பயாமி சூடம் ஏற்றி தீபாராதனை (கற்பூர)
நீராஜனம் ஸமர்ப்பயாமி மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி
ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி

(பிரார்த்தனை)

வக்ரதுண்ட மஹகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமேதேவ
ஸர்வ கார்யேஷூ ஸர்வதா

ஸ்ரீ வரலட்சுமி பூஜா சங்கல்பம்

(அக்ஷதையை கையில் எடுத்துக்கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே
ஓம்பூ ஸூவரோம் மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்
வாராஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீமந்நாராயண ப்ரித்யர்த்தம்
சுபேசோபனே முஹூர்த்தே ஆத்யபரும்மண: த்விதீய
பரார்த்தே ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வ தமன்வந்
தரே அஷ்டாவிம் சகிதமே கலியுகேபிரதமேபாதே
ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக் கண்டே மேரோ, தக்ஷிணே
பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ காரிகே
ப்ரபவா தீ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே - நாம
ஸம்வத்ஸ்ரே தக்ஷிணாயனே வர்ஷருதௌச்ராவண மாஸே
சுக்லப÷க்ஷ சதுர்தச்யாம் சுபதிதௌப்ருகுவாஸர யுக்தாயாம்
நக்ஷத்ரயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்தச்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்
÷க்ஷமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கிஐச்வர்ய
அபிவிருத்யர் த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல
புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள
மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம்
கல்யோக்த ப்ர*ரேண த்யான ஆவாஹனாதி

÷ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
(வடக்கு திக்கில் அக்ஷதையை போட்டு கையலம்பி)

(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
(மணி) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்

கலசபூஜை: (தீர்த்த பாத்திரத்தின் நாலு புறமும் சந்தனம் இட்டு ஒரு புஷ்பத்தைப் போட்டு கையால் மூடிக்கொண்டு ஜபிக்க வேண்டும்.)

கலசஸ்யமுகே விஷ்ணு: கண்டேருத்ர: ஸமாச்ரித:
முலேதத்ரஸ்திதோப்ருஹ்மாமத்யேமா த்ருகணாஸ்திதா
குöக்ஷளது ஸாகராஸவர்வே ஸப்தத்வீபாவஸூந்தரா
ரிக்வேத: அப்யஸூர்வேத: ஸாமவேதாப்யதர்வண,
அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
கங்கேச யமுனேசைவ கோதாவரிஸரஸ்வதி நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ் மின் ஸன்னிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)

பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

வரலக்ஷ்மி மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா
கலசேஸ்மித் வஸேதஸ்மிந் கேஹே ஸெளபாக்ய காரணீ (தியானம்)

1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி:
ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்

2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)

பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (என்று சொல்லி நோம்பு சரட்டை வைக்கவும்.)

ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணுவக்ஷஸ்தாலாலயே
ஆவாஹ்யாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ
(அஸ்மின் கும்பேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி அக்ஷதை போடவும்
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆஸனம் ஸமர்ப்பயாமி

கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
பாத்யம் ஸமர்ப்பயாமி.... தீர்த்தம் விடவும்

கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே

அர்க்யம் ஸமர்ப்பயாமி - உத்தரணி தீர்த்தம் விடவும்
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் விடவும்

ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபாக்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி

மதுவர்க்கம் ஸமர்ப்பயாமி - தேன் பால்

பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி

பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி

ரத்ன கும்பஸமாதீதம் ஸர்வதீர்த்தாஸ்ருதம் ஜலம்
ஸ்னானார்த்தம் ப்ரயச்சாமி ஸ்ருஹாண ஹரிவல்லபே

சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி

மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம்
தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே

கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி

ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே
பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே

ஆபரணானி ஸமர்ப்பயாமி

சந்தனா கரு கஸ்தூரி கோரோசனாதி ஸூமிச்ரிதம்
லேபனார்த்தம் மஹாதேவி தாஸ்யாமி ஹரிவல்லபே

கந்தம் ஸமர்ப்பயாமி - சந்தனம் இடவும்

ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம்
ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி

ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி

சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான்
அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி

அக்ஷதான் ஸமர்ப்பயாமி

மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை,
மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
வரலக்ஷ்மியை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி

அங்க பூஜை

1. வரலக்ஷ்மியை நம: (பாதௌ) பூஜயாமி
2. மஹாலக்ஷ்மியை நம: (குல்பௌ) பூஜயாமி
3. இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. க்ஷீராப்தி தனயாயை நம: (ஊரும்) பூஜயாமி
6. பீதாம்பரதாரிண்யை நம: (கடிதம்) பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: (குஹ்யம்) பூஜயாமி
8. லோகமாத்ரே நம: (ஜகனம்) பூஜயாமி
9. விஷ்ணுப்ரியாயை நம: (நாபிம்ஃ) பூஜயாமி
10. ஜகத்குக்ஷ்யை நம: (உதரம்) பூஜயாமி
11. விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஜகத்தாத்ர்யை நம: (ஹ்ருதயம்) பூஜயாமி
13. ஸூஸ்தந்யை நம: (ஸ்தநௌ) பூஜயாமி
14. கஜகாமின்யை நம: (பார்ச்வெள) பூஜயாமி
15. கம்பு கண்ட்யை நம: (கண்டம்) பூஜயாமி
16. லோகஸூந்தர்யை நம: (ஸ்கந்தௌ) பூஜயாமி
17. பத்மஹஸ்தாயை நம: (ஹஸ்தான்)  பூஜயாமி
18. பத்மநாப ப்ரியை நம: (பாஹூன்) பூஜயாமி
19. சந்திரவதனாயை நம: (முகம்) பூஜயாமி
20. உத்பலாக்ஷ்யை நம: (நேத்ரே) பூஜயாமி
21. சம்பக நாஸிகாயை நம: (நாஸிகாம்) பூஜயாமி
22. ஹரிப்ரியாயை நம: (ச்ரோத்ரே) பூஜயாமி
23. பிம்போக்ஷ்ட்யை நம: (ஒஷ்டௌ) பூஜயாமி
24. ச்ரியை நம: (அதரம்) பூஜயாமி
25. சஞ்சலாயை நம: (ஜீஹவாம்) பூஜயாமி
26. ஸூகபோலாயை நம: (கண்டஸ்தலம்) பூஜயாமி
27. அக்ஷ்டமீசந்திர பாலையை நம: (பாலம்) பூஜயாமி
28. மந்தஸ்மிதாயை நம: (சுமுகம்) பூஜயாமி
29. நீலகுந்தளாயை நம: (அளகான்) பூஜயாமி
30. கமலவாஸின்யை நம: (பிடரம்) பூஜயாமி
31. பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஸர்வைச்வர்யை நம: (சர்வாண்யங்கானி) பூஜயாமி.
-----------------------------------------------‐---------------------------------
நவக்கிரகங்கள் வணங்கிய தலங்கள்!

நவக்கிரகங்களால் மனிதர்கள் இன்ப, துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அந்த நவக்கிரகங்களும் துன்பம் அனுபவித்து, பாவ விமோசனம் பெற்ற தலங்கள் எவை என்று தெரியுமா?

சூரியன்: சூரியனார் கோயில், பாபநாசம் பாபநாசர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

சந்திரன்: திருவாரூர் தியாகராஜர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில், சேரன்மகாதேவி அம்மையப்பர் கோயில் (நெல்லை மாவட்டம்)

செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோவில், பழநி

புதன்: மதுரை, திருவெண்காடு

குரு: திருச்செந்தூர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சுக்கிரன்: கஞ்சனூர் சுக்கிரபுரீஸ்வரர் கோயில் (சூரியனார்கோவில் அருகில்)

சனீஸ்வரன்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில், மதுரை அழகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர் கோயில்

ராகு: திருநாகேஸ்வரம்

கேது: கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் (நாகப்பட்டினம் மாவட்டம்).
-----------------------------------------------‐---------------------------------
கோமடிசங்கின் சிறப்பு தெரியுமா?

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். (கோ - பசு, மடி - பால் சுரக்குமிடம்). இந்த சங்கை பார்க்க வேண்டுமா? மேல்மருவத்தூர் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை தான் தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். இங்குள்ள சிவலிங்கத்திற்கு கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த அபிஷேகம் நடக்கும்போது, அமிர்தவர்ஷினி ராகத்தில் பாட்டு பாடுகின்றனர். அம்பாளே இந்த அபிஷேகத்தை, சிவனுக்கு செய்வதாக ஐதீகம். தெட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் நந்தி வடிவில் சிவனின் திருமணக்காட்சியை இங்கிருந்து கண்டனர்.
-----------------------------------------------‐---------------------------------
ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள்!

விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர். ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப் பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, சிறியவனாகிய தான்,  தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம் கொண்டார் முருகன். எனவே, அவர், இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். சிவன்  அவருக்கு காட்சி தந்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி மைந்தனை தேற்ற, மனம் தெளிவடைந்தார் முருகன். எனவே, பிரண வேஸ்வரர் என்று பெயர் பெற்றார். திக்குவாய் உள்ளவர்கள் இந்த முருகனை வேண்டிக்கொண்டால் மனஆறுதல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இத்தல முருகனை "தந்தை பட்டம் பெற்ற தனயன் என அழைக்கின்றனர்.
-----------------------------------------------‐---------------------------------
வலவந்தை நரசிம்மரின் சிறப்பு!

பொதுவாக லட்சுமிநரசிம்ம

கருத்துகள் இல்லை: