சனி, 11 ஜூலை, 2020

*மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.*

ஊர் உலகத்திற்குத் தெரியாமல் தாம் மறைத்த பல அநியாயங்களால் நிம்மதி இழந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்பதற்காகப் பிராயச்சித்தம் என்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்களோ என்று தோன்றுகிறது. நன்றி செலுத்துவதற்காகக் கூட இப்படிப்பட்ட அறியாமையுடன் உடலை வருத்தும் செயல்களைச் செய்யக்கூடாது. சட்டத்தினால் எதையும் முற்றிலுமாக சரிசெய்ய இயலாது. தெய்வமும் இப்படிப்பட்ட பிரார்த்தனைகளை நிச்சயம் ஏற்காது.

மிருக நிலையிலிருந்து மனிதத்தன்மைக்கு உயர்ந்து, பிறகு மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு முயன்று நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி இந்த பகவத்கீதை போன்ற உன்னத நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்து, அவற்றில் கூறிய நற்குணங்களைத் தமதாக்கிக்கொள்வதுதான். மனமும், குணமும் தெய்வீகமாக மாற வேண்டும். மாறினால் சுய தண்டனைகள் தேவையில்லை.
இவ்வாறு மூன்று வகைக் குணங்களைக் கொண்ட மனிதர்கள் வழிபடுகின்ற விதங்களை விளக்கி, அவர்களை இனம் காணும் விதத்தை அர்ச்சுனனுக்கு விளக்கிய மாதவன் மேலும் இதே மூன்று வகைக் குண அடிப்படையில் மனிதர்கள் எந்தெந்த விஷயங்களில் தங்கள் சிரத்தையை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் நுட்பமாக விளக்குகின்றார்.

நமக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த விளக்கத்தைக் கண்ணன் வாய் அமுதமாகவே அறிந்து, நம்மை நாமே, நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என ஆராய்ந்து தெரிந்துகொள்ளவும், நமது தன்மையை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சி செய்வோம்.
‘வழிபடும் விதம் மட்டுமின்றி உணவு, யாகம், தவம், தானம் இவை அனைத்திலும் கூட மக்கள் சத்வ, ரஜோ, தாமச குண அடிப்படையில் வேறுபடுகின்றனர். ஒருவர் உண்ணும் உணவு இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப மூன்று விதமானது”.

‘ஆயுள், சாத்வீகக் குணங்கள், உடல் வலிமை, ஆரோக்கியம், சுகம், மகிழ்ச்சி இவற்றை வளர்ப்பவையும், சாப்பிட்டவுடன் திருப்தியளிப்பவையும், இதயத்திற்கு வலிமை அளிப்பவையும், சுவையானவையும், ரசமுள்ளவையாகவும் அமைகின்ற உணவு வகைகள் சாத்வீகமான மனிதர் விரும்புவையாகும்.”

‘கசப்பும், புளிப்பும், உப்பும் அதிகமாக உள்ளவையும், மிகவும் சூடாக இருப்பவையும், மிகக் காரமுடையவையும், எரிச்சல் தருபவையுமான உணவு வகைகள் ரஜோ குண மனிதர்கள் விரும்புகின்றவை. இத்தகைய உணவுகள் துன்பத்தையும், சோகத்தையும், நோயையும் ஏற்படுத்துபவை.”
‘அரைகுறையாக வெந்தது, சுவையில்லாதது, நாற்றம் வீசக்கூடியது, பழையது, ஊசிப்போனது, தூய்மையற்ற அசைவ உணவு வகைகள் ஆகியவை தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.”

அடடா! ஒரு தாய் போன்று எவ்வளவு தயையுடன் நாம் சாப்பிடும் உணவு வகைகளைக்கூடத் தரம் பிரித்து, அவை எவ்வாறு நம்மில் குண வேறுபாடுகளை உண்டாக்குகின்றன என்பதையும் கண்ணபெருமான் கூறியிருக்கின்றார் பாருங்கள்! இனியென்;ன? ஆன்மீகச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதுதான். சொல்லப்போனால், ஒன்றுமே பயப்பட வேண்டாம். தினமும் சமைக்கும்போது உடலையும், மனதையும் துhயதாக்கி ஒருமித்த இறை சிந்தனையோடு, பக்திப்பாடல்களையோ, நாமாவளிகளையோ சொல்லிக்கொண்டு முறையாகவும், சரியாகவும் சுத்தமான சைவ உணவைத் தயார் செய்ய வேண்டும். சமைத்ததை முதலில் இறைவனுக்குப் படைத்து, நைவேத்தியம் செய்து பிறகு அந்த உணவை இறைப் பிரசாதமாக நினைத்து வணங்கி உண்ண வேண்டும். அதோடுமட்டுமின்றி இந்த உலகத்திலுள்ள எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு உண்ண வேண்டும். அந்த நேரத்தில் தம்மோடு இருப்பவர்களுக்கும், தம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் அந்தப் பிரசாதத்தை வழங்கி உண்ணப் பழக வேண்டும்.
இன்றும் பல வீடுகளில் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டோ, பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டோ சமைக்கின்ற பெண்களும், உண்ணப்போகின்ற உணவைக் கும்பிட்டுவிட்டு சாப்பிடுகின்றவர்களையும் பறவைகளுக்கு உணவளித்துவிட்டுப் பின்னர் உணவருந்துகின்றவர்களையும் கவனித்தால் தெரிய வரும். இறையுணர்வில் ஒன்றிச் செயல்படுகின்றபோது மூவகை குணங்கள்      தலைதூக்காது. எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், *யோகத்தால் என்னுடன் இணைந்து விடு* அர்ச்சுனா!” என்கிறார் கனிவுடன்.

அடுத்தபடியாக அவர் யாகங்களைப் பற்றிய மூவகைக் குண இயல்புகளைப் பற்றி விளக்குகின்றார். ‘பொதுவாக யாகங்கள் உலகப் பொது நன்மைக்காகவே செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் அடிக்கடி யாகங்கள் செய்ய முடியாது. ஒரு வேள்வியைச் செய்யவேண்டுமானால் சரியாகத் திட்டமிட்டு, முறையான ஏற்பாடுகளுடன், தேவையான பொருள்களை அதிக அளவில் சேகரித்து, வேதங்களில் சொல்லிய முறைப்படி, ஆச்சார்யரின் துணை கொண்டு செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்கள் உயர்ந்த தர்மநெறியைக் கடைப்பிடிப்பவர்களாக, தவசீலர்களாக இருக்க வேண்டும்”.

‘பிரபஞ்சத்தின் தன்னலம் கருதாத, முறையான இயக்கத்திற்கு அதிகாரிகளாக விளங்குகின்ற தேவர்களுக்கும், தெய்வங்களுக்கும், அவர்களின் பெருங் கருணைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், இயற்கை இவ்வாறே எங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்குமே யாகங்கள் செய்யப்படுகின்றன”.

இவ்வகையில் இல்லாமல் சுயநலத்துடன் தனிப்பட்ட ஒருவரின் பட்டம், பதவி, ஆசைகளுக்கும், ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வரியத்திற்கும், சுய முன்னேற்றத்திற்கும் என்று செய்யப்படுகின்ற யாகங்கள் உயர்ந்தவை அல்ல. உலக நன்மைக்காக உள்ளன்போடு ஒரு யாகத்தைச் செய்தாலே அதில் நமக்கு வேண்டியவையெல்லாம் தானாகவே வந்து சேரும். எனவே தான் குடும்ப நன்மைக்காக என்று செய்யப்படுகின்ற ஹோமங்களில் கூட, இந்த எனது பிரார்த்தனையால் உலகம் நன்மை அடையட்டும் என்னும் மந்திரம் சொல்லப்படுகின்றது.
இவையெல்லாவற்றையும் விட ஆன்மீக சாதகர்கள் குருவின் துணை கொண்டு செய்கின்ற ஞானவேள்விதான் அனைத்து வேள்விகளிலும் சிறந்தது. இந்த யாகத்தில் பொருட் செலவில்லை. சுயநலமில்லை. ஆணவம், செருக்கு எதுவுமில்லை. அலைச்சல் இல்லை. அங்கு குரு என்றோ, சிஷ்யன் என்றோ வேறுபாடு இல்லை. குரு வடிவாக அங்குப் பிரம்மமே அமர்ந்து, சீடனாக வீற்றிருக்கும் பிரம்மத்திற்கு சொல்கின்ற உபதேச யக்ஞம் அல்லது ஞானவேள்வி இது. அங்கு சொல்வதும் பிரம்மம். கேட்பதும் பிரம்மம். எல்லாமாய் இருக்கின்ற பிரம்மம், தன்னை அறியாத, வரையறைகளுக்கு உட்பட்ட பிரம்மத்திற்குச் சொல்லிச் செய்வது இது.

ஆத்ம உணர்வே இங்கு அக்னி. உபதேசமே இதில் ஊற்றப்படும் நெய்; அறியாமை என்னும் சமித்துக்களும், ஆசைகள் என்னும் திரவியங்களும் இந்த ஆத்ம அக்னியில் போடப்படுகின்றன. இப்படிச் செய்வதன் மூலம் இதயத்தை மூடியிருக்கின்ற அஞ்ஞான இருள் விலகுகின்றது. ஆத்ம ஒளி பிரகாசிக்கிறது. ஒருவன் பெறுகின்ற ஞானத்தால் உலகமே ஒளி பெற்று நன்மை அடைகின்றது. ஏன் தெரியுமா? ஞானம் பெற்றவனால் யாருக்குமே தீங்கு செய்ய முடியாது. எனவே இந்த ஞானவேள்வியே உத்தமமான வேள்வியாகும். இப்படிப்பட்ட இந்த வேள்வியைச் செய்வதனாலேயே ஒருவன், இரு பிறப்பாளன் என்னும் உயரிய நிலையை இப்பிறவியிலேயே எய்துகின்றான். பல உபநிடதங்களில் சாந்தி பாடமாகச் சொல்லப்பட்டிருக்கின்ற ‘ஓம் ஸஹனா வவது ஸஹனௌ புனக்து” என்று தொடங்கும் மந்திரம் இந்தப் பொருளில் அமைந்திருக்கும் ஓர் அருமையான மந்திரமாகும்.

கருத்துகள் இல்லை: