திங்கள், 13 ஜூலை, 2020

இன்று பௌமாஸ்வினி !

இன்று பெளமாஸ்வினி. செவ்வாய் கிழமை அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய சுபதினம் .

ஜூலை 14-07-2020, ஆனி 30, செவ்வாய்க்கிழமை, அஸ்வினி நக்ஷத்ரம் பகல் 02.06 வரை

(14 / 7 / 2020)

இன்று பௌமாஸ்வினி = பௌமனான செவ்வாய் கிழமையும், அசுவதி நட்சத்திரமும் கூடும் நாள். அம்பாளின் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்.

அம்பிகையின் முன் விளக்கேற்றி தேவி அதர்வசீர்ஷத்தை ஓதினால் மஹா ம்ருத்யுவைக் கூட ஓடச்செய்திடும்.

இன்று நம்மால் இயன்ற வகையில் அவளை வழிபடுவோம். துதிகளைச் சொல்லுவோம். போற்றி வணங்குவோம்.

நமக்கெல்லாம் அன்னை அவள். எதைக் கேட்டாலும் நாம் கேட்பதற்கும் மேலே கொடுத்து விடுபவள் அன்னை. ஆயின் அவளிடம் கேட்க நமக்குத்தான் அறிவோ தகுதியோ இல்லை. நாம் கேட்டாலும் கேளாது போனாலும் நமக்கு எது நன்மையோ அதை வாரிக் கொடுக்கும் கருணைக்கடல் அவள்.

இன்றிருக்கும் சூழ்நிலையில் அவளிடம் என்ன கேட்கவேண்டுமென்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் அவளை சரணடைந்து விட்டால் போதும். நமக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரியும்.

மந்திரமோ, தந்திரமோ, ஸ்தோத்திரமோ அறிய வேண்டாம். பூஜையோ, தியானமோ, பஜனையோ தெரிய வேண்டாம். முத்திரையோ, அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்ய வேண்டாம். அழக்கூடத் தெரியாமல் போனாலும் பரவாயில்லை.

ஆனால் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் சரணாகதியும் இருந்தால் போதும். அது துன்பத்தையெல்லாம் போக்கும் என்ற உண்மை புரிந்து கொண்டால் போதும்.

ஏதும் அறியாத குழந்தை அழுதால், அது பசிக்கு அழுகிறதா, பூச்சி கடித்து அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, தன்னை பார்க்க வேண்டி அழுகிறதா என்று அன்னைக்கு தெரியாதா என்ன?

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
அம்பிகையை சரண்புகுந்தால் வரம் பெறலாம்.

கருத்துகள் இல்லை: