திங்கள், 13 ஜூலை, 2020

ஶ்ரீசித்சக்தி மஹிமை:

ஸம்விதாநந்த ரூபிணியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை ஆத்மஸ்வரூபமாக உணர்வதே ஶ்ரீவித்யையின் லக்ஷ்யம். மற்ற பலன்கள் எல்லாம் லக்ஷ்யமல்ல!!

பாவனோபநிஷத், லலிதோபநிஷத், ஶ்ரீசக்ரோபநிஷத் மூன்றுமே "ஸ்வயமேவ ஆத்மா லலிதா" என்று ப்ரத்யக்ஷமாகக் கூறுகின்றன.

மஹாயாகக்கரமத்தில் பாஸ்கராச்சார்யாளும் "ஸம்விந்மாத்ர ரூப காமேச்வராங்க நிலயாயை, ஸச்சிதாநந்த ப்ரஹ்மாத்மிகாயை பரதேவதாயை லலிதாயை மஹாத்ரிபுரஸுந்தர்யை நம" என்கிறார்.

கேவலஞான மயமான ஶ்ரீகாமேச்வரன் மடிமீது (ஆத்மஞானத்தை விட உயர்ந்த பரஞானமில்லாததால் ஶ்ரீகாமேச்வரன் ஸம்விதாநந்த மயமானவர்), கேவலாத்ம(தன்னைத் தவிர்த்து வேறொன்றில்லாத ஏகசைதன்ய பரவஸ்து) வடிவினளாக ஶ்ரீலலிதா பரமேச்வரி ஜ்வலிக்கிறாள்.

ஆத்மஞானமான ஶ்ரீகாமேச்வரன் மூலமாக, ஆத்ம தத்வமான ஶ்ரீலலிதாம்பாளை உணர்கிறோம்!! உணர்ந்ததும் ஆத்மாவே ஆத்மஞானமாக விளங்குவதைத்தான் சிவசக்தி ஸாமரஸ்ய ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி லலிதை என்று உணரப்படுகிறது.

தந்த்ரராஜதந்த்ரத்தில் ஶ்ரீவித்யையில் அனேக ப்ரயோகங்கள் கூறப்படுகிறது. ஶ்ரீமத்பஞ்சதசாக்ஷரிக்கும் அனேக ப்ரயோகங்கள் உண்டு!! திதிநித்யைகள் பதினைந்து பேருக்கும் தனித்தனி ப்ரயோகங்கள் ஸமுத்ரம் போல் உள்ளது.

ஆனால் இதெல்லாம் தேவி உபாஸனையின் லக்ஷ்யமா!? என்று கேட்டால் இல்லையென்றே தான் சொல்லவேணும்!! தேவி உபாஸனையின் லக்ஷ்யம் என்றவென்ளால் கைவல்ய மோக்ஷமே!!

ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலைகள் போல் கேவலானந்தவடிவினளான ஶ்ரீலலிதையிடமிருந்து தெறித்தத் துளிகள் நாம் அனைவரும்!! ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலை மறுபடி ஸமுத்ரத்தில் சேர்வது போல் ப்ரஹ்மானந்த வடிவினளான நிர்குண ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியினோடே ஐக்யமடைவதே கைவல்யம் எனப்படும்!!

ஶ்ரீலலிதை அக்கைவல்யத்தை தான் கொடுப்பவள் என்பதை ஸாலோகாதி முக்திகளை சொல்லாத ஸஹஸ்ரநாமம். கைவல்யத்தை மட்டுமே இருமுறை அழுத்திச் சொல்கிறது. ஒரு ஶ்ரீவித்யோபாஸகன் இத்தகைய கைவல்யத்தை மட்டுமே நாட வேண்டுமே அன்றி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது.

மோக்ஷத்தை எங்ஙனம் அடைவது என்பது பெருங்கேள்வியாக உள்ளது அல்லவா!! கலிப்ரபாவமோ கொடுமை!!? கலி தோஷம் க்ரூரமாக உள்ள இந்த ஸமயத்தில் மோக்ஷத்தை நாடிப்போவதெல்லாம் ஸாத்யமா!!?

பார்வதி பரமசிவனிடம் கேட்கிறாள் "மஹாதேவா!! நீலகண்டா!! சைவம், வைஷ்ணவம், ஸௌரம் முதலிய மார்க்கங்கள் ஆயிரம் இருக்கும் போது மிகக்கடினமான ஶ்ரீவித்யையில் ஏன் நீங்கள் ஜனங்களை ப்ரவேசிக்கச்சொல்கிறீர்கள்!!"

மஹாதேவர் சொன்னார் "மலையரசன் மகளே!! அஞ்ஞானம் எனும் இருளால் சூழப்பெற்றது இவ்வுலகு. உன் வடிவான ஶ்ரீவித்யை எனும் சூரியன் உதிக்காத வரை இந்த இருள் விலகாது!!" என்றார்.

ஶ்ரீவித்யை ஞானஸூர்யன். ஆனால் மிகக்கடினமாயிற்றே!! இப்போது உபாஸனை சுருங்கிச்சுருங்கி நவாவரணமும் சுருங்கியாயிற்று!! உபாஸனையிலும் லகு வந்தாயிற்று!! எல்லாவற்றிலும் லகு வந்தாயிற்று !! அது வேறு விஷயம்!!

ஶ்ரீசக்ர நவாவரணம் என்பது மஹாயாகம்!! பஞ்சதசீ/ஷோடஷீ என்பது ஆத்மவித்யை. ஆத்மஸாக்ஷாத்கரமே இதனுடைய பலன்.

இவ்விதம் ஆத்மஸாக்ஷாத்காரத்தை அடைவதென்பது எல்லோர்க்கும் சுலபமா என்றால் நிச்சயம் இல்லை!! ஶ்ரீசக்ர நவாவரணமே செய்தாலும் அந்தர்யாகம், காமகலா த்யானம் முதலியவற்றில் பாவனையிலாவது குண்டலினி சக்தியை எழுப்புதல்/ ஶ்ரீவித்யா ஸ்வரூபத்தை தானாக பாவித்தல் என்பதெல்லாம் செய்ய வேண்டும்!!

கலிதோஷத்தால் அஸுத்தமடைந்திருக்கும் மனதில் பாவனை லபிப்பதற்கே மிகுந்த ப்ரயத்தனம் வேண்டும். பிறகு ஶ்ரீவித்யையை தானாக (முகம் பிந்தும் க்ருத்வா முதலியவற்றில் கூறியுள்ளபடி) பாவிப்பதற்கு எவ்வளவு காலமாகுமோ தெரியாது!!

அப்போது, எப்படித்தான் அம்பாளிடத்திற் லயத்தை அடைவது!! முக்தியை நோக்கிச்செல்ல என்ன தான் வழி!! உபாஸகர்கள் ப்ரயத்தனம் செய்துகொண்டே இருப்பின் அம்பாள் வழிகாட்டுவாள். ப்ரயத்தனம் செய்தாவது தேவி ஸாக்ஷாத்காரத்தை அடைய முடியும்!! இந்த உபாஸனையெல்லாம் இல்லாத ஸாதாரண நம் போன்ற பக்தர்களுக்கு என்ன வழி!!?

அனைத்து தந்த்ரங்களும் தந்த்ரராஜம், தக்ஷிணாமூர்த்தி ஸம்ஹிதை, த்ரிபுரார்ணவம், ஞானார்ணவம் என ஆர்ணவம் எனும் ஸமுத்ரமாக பலகடின வழிகளில் லலிதோபாஸனா பத்ததியைக் கூறுகிறதே தவிர சுலபமான வழியைக் கூறுகிறதா!!?

ஸுபகோதயம், சுபாகம பஞ்சகம் முதலியவற்றில் தக்ஷிணத்தை விட கடினமான ஞானமார்க்கமான ஸமயத்தைப் பற்றியே கூறுகிறது. கௌலதக்ஷிணங்களையாவது அவலம்பிக்கலாம் அன்றி அவலம்பிக்கிறோம் என்று பெயரிலாவது பூஜிக்கலாம். ஶ்ரீஸமயாச்சார மஹாவித்யை லபிப்பதே மிக துர்லபம்!!

ஷட்சக்ரங்களிலும் ஶ்ரீவித்யையை பாவித்து, ஸஹஸ்ரகமலத்தில் ஐக்யபாவம் செய்து, அம்ருதரஸம் பெருகி இதையெல்லாம் நினைக்கவே கடினமாக உள்ளது. பயமாக இருக்கிறது. சுலபமான வழியைத் தான் தந்த்ரங்கள் கூறுகிறதா!!?

நிச்சயம் கூறுகிறது. தந்த்ரராஜம் எனும் மிகப்பழமையான மஹாக்ரந்தத்தில் உபாஸனை இல்லாது மோக்ஷமடையும் வழியும், ஜீவன் முக்தியை மட்டும் விரும்புவோரின் ஶ்ரீசக்ர பூஜையும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது ஸஹஸ்ரதளத்தில் யந்த்ர பாவனை செய்து, அம்பாளை பிந்துவில் பாவித்து பூஜிப்பது.

முதலாவது, உபாஸனை இல்லாது முக்தி அடைய முடியுமா!!? என்ற கேள்விக்கு விடை!!- நிச்சயம் முடியும்

குண்டலினி முதலிய யோகமார்க்கங்கள் அறியாதவர்கள், அதயந்த பக்தியுடன் ஶ்ரீலலிதாம்பாளை நாட்யம் அல்லது ஸங்கீதம்/ பஜனை, மற்றும் ப்ரவசனம் இவற்றால் ஆராதிப்பவர்கள் ஜீவன்முக்தர்களாகி ஶ்ரீலலிதா பரமேச்வரியின் ஸாயுஜ்யம் அடைவர் என்று ப்ரத்யக்ஷமாக தந்த்ரராஜத்தில் கூறியிருக்கிறது.

1) ஶ்ரீலலிதாம்பாளின் வைபவங்களை ந்ருத்ய ஸாஸ்த்ரத்தின் மூலமாக பரதம் முதற்கொண்ட அனைத்து ஸாஸ்த்ரங்கள் மூலமாகவும் காண்பிப்பவர் ஜன்மாவின் இறுதியில் ஶ்ரீபுரம் சென்று ஶ்ரீலலிதையுடன் ஐக்யமடைவர்.

2) ஶ்ரீதேவியின் பெருமையை நாதோபாஸனை மூலமாக அதாவது ஸங்கீதத்தின் மூலமாக ஸங்கீர்த்தனம் செய்பவர் ஶ்ரீபுர ஸாயுஜ்யம் அடைந்து லலிதையுடன் ஐக்யத்தை அடைவர். ஸங்கீத மும்மூர்த்திகளும் இதற்கு ஸாக்ஷி. மூவருமே ஶ்ரீவித்யோபாஸகர்கள் தான்.

கர்நாடக ஸங்கீதம் ராக தாள பாவங்களெல்லாம் கடினமாயிற்றே என்பின், இங்கு குறிப்பிடப்பட்டது நாம ஸங்கீர்த்தனம். ஶ்ரீவித்யா நாமஸங்கீர்த்தம். ஸந்தேஹமே இல்லாது ஶ்ரீலலிதா பரமேச்வரியின் நாமஸங்கீர்த்தனைத்தினை செய்து கடினமில்லாமல் முக்தியை ஸுலபத்தில் கொடுத்துவிடும். ஸமஸ்த பாபங்களையும் அழித்து ஜன்மாந்த்ரத்தில் முக்தியையும் அளித்துவிடும். ஶ்ரீலலிதாம்பாளின் நாமஸங்கீர்த்தனம் என்பது மிகுந்த புண்யம் வாய்த்தது. ஶ்ரீலலிதா நாமஸங்கீர்த்தனம் இதுவரை ப்ரபலமாகவில்லை. இனியாவது எல்லாவிடங்களிலும் சென்று ஜனங்களுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ணட்டும்!!

3) ப்ரவசனம் -- ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் கதாச்ரவணங்களை உபந்யஸித்தல். உபநாயஸிப்பது என்பது ப்ரவசனம் செய்வது கேட்பது இரண்டிற்கும் பொருந்தும். ஶ்ரீலலிதோபாக்யானம், த்ரிபுராரஹஸ்யம், தேவி பாகவதம், காமாக்ஷி விலாஸம் முதலய புண்ய சரித்ரங்களை மிகுந்த பக்தி ச்ரத்தையுடன் உபந்யஸிக்க வேண்டும்!! அத்யந்த பக்தியுடன் கேட்க வேண்டும்!! அங்ஙனம் செய்யின் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான அம்பாளின் சரணாவிந்தங்களை ஸுலபமாய் அடைந்து, கைவல்ய மோக்ஷத்தை அடையலாம்.

தேவி ப்ரவசனங்கள் தமிழுலகில் மிகமிகக் குறைவு என்பது துக்கிக்கவேண்டிய விஷயம். தெலுங்கு தேசத்தில் ஶ்ரீஸாமவேதம் ஷண்முக சர்மா, ஶ்ரீசாகண்டி கோடீச்வரராவ் முதலியோர் ஶ்ரீவித்யையைப் பற்றியும், ஶ்ரீகாமாக்ஷி பற்றியும், ஶ்ரீலலிதோபாஸனை பற்றியும் வருடக்கணக்கில் உபந்யஸித்துள்ளர். உபந்யஸித்து வருதிறார்கள்.

தமிழுலகில் அம்பாளுக்கென்று உபந்யஸிப்பது தற்காலத்தில் மிகமிக்குறைவாக உள்ளது மிக வருத்தமான விஷயம். ஶ்ரீஅநந்தராம தீக்ஷிதரின் தேவிபாகவதம், ஶ்ரீக்ருஷ்ண மூர்த்தி ஸாஸ்த்ரிகளின் லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் முதலியவை அற்புதமான ப்ரவசனங்கள்.

மேலும் திருச்சி ஶ்ரீராதாக்ருஷ்ண ஸாஸ்த்ரிகளின் ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம, ஸௌந்தர்யலஹரி, தேவி பாகவத, தேவி மாஹாத்ம்ய, லலிதா த்ரிசதி ப்ரவசனங்கள் முதலியவை பொக்கிஷங்கள்.

ஶ்ரீகோடாவெங்கடேச்வர ஸாஸ்த்ரிகள் தற்காலத்தில் தேவிபாகவத ப்ரவசனம் செய்துள்ளார். மற்றும் தேவி பரமான நிறைய விஷயங்களை ப்ரவசனம் செய்துள்ளார். அவர் ஶ்ரீதேவியின் பாதகமலங்களில் சீக்ரமாகவே சேர்ந்தது நமக்கெல்லாம் பெரிய துக்கம்.

மேலும் ஶ்ரீராஜகோபால கனபாடிகள் ஸௌந்தர்யலஹரி ப்ரவசனம் அற்புதமாகச் செய்துள்ளார்.

தற்போது சாக்த பரமாக ப்ரவசனம் செய்து ஶ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் Aravind Subramanyam அண்ணா தான். ஶ்ரீலலிதோபாக்யானத்தை அண்ணாவைத் தவிர்த்து வேறு யாரும் செய்து பார்த்ததில்லை.

ஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள் எனில் ஶ்ரீதேவி நாம ஸங்கீர்த்தனம்,
ஶ்ரீலலிதாம்பாள் கல்யாணம், ஶ்ரீதேவி பாகவத, மாஹாத்ம்ய, ஶ்ரீலலிதோபாக்யன ப்ரவசனங்கள் நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது போன்ற தேவி ஸம்பந்தமான விஷயங்கள் பெருக ஜகத்தில் மங்களம் பெருகும். லௌகீகத்தில் ஸமஸ்த ஸுகங்களும் பெருகி மறுவாழ்வில் மோக்ஷமும் கிட்டும்!!

இப்படி கைமேல் ஸர்வ ஸௌபாக்யங்களையும் வழங்கும் பராசக்தியின் அம்ருதம் இருக்க, அதை உபயோகித்துக்கொள்ள வேண்டியது நமது கடமை!!

ஶ்ரீதேவியின் பஜனையையும், ஶ்ரீலலிதா நாம ஸங்கீர்த்தனத்தையும், ஶ்ரீலலிதாம்பாளின் ப்ரவசனங்களும் எட்டுத்திக்குகளிலும் சென்று சேர்ப்பது நமது கடமை என்று நினைத்துச் செயல்படுவோம்!!

ஶ்ரீதேவியின் அருள் அதை கூட்டிவைக்கட்டும்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

-- மயிலாடுதுறை ஶ்ரீராமராகவன்

கருத்துகள் இல்லை: