ஞாயிறு, 31 மே, 2020

நைஷ்டிக பிரம்மச்சாரி = ஆசையற்ற பிரம்மச்சாரி

மகாபாரதப் பெரும்போர் நடந்து முடிந்தது. துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, உயிர் நீங்கும் நிலையில் இருந்தான்.

அசுவத்தாமா, போரில் தன்னுடைய தந்தை துரோணரையும் நண்பன் துரியோதனனையும் கொன்ற பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்க எண்ணினான். .

அதுவே துரியோதனின் ஆசையாகவும் இருந்தது.

உப பாண்டவர்கள் என்னும் பாண்டவ குமாரர்கள் ஐவரும் போர்க்களத்தில் இருந்த பாசறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டவர்கள் வெளியில் இருந்தனர்.

அசுவத்தாமன் பாசறைக்குத் தீவைத்தான். உப பாண்டவர்களை, வாளால் வெட்டிக் கொன்றான். ஐவரும் இறந்த செய்தியை உயிர்விடும் நிலையிலிருந்த தன்னுடைய நண்பன் துரியோதனனிடம் சொன்னான்.

துரியோதனும் அசுவத்தாமனும் உப பாண்டவர்கள் அழிந்து விட்டதாக எண்ணினர்.

அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்துப் பாண்டவர் வம்சம் குலநாசம் செய்ய எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது உத்தரையின் வயிற்றைத் தாக்கியது. உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்தாள்.

உத்தரையின் வயிற்றை, பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும்.

உத்தரையின் வயிற்றைத் தடவ, பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவிய கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவினான்.

பிரம்மாஸ்திரக் கட்டு விலகியது. உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் காக்கப்பட்டது.

கிருஷ்ணன் எப்படி சுத்த பிரம்மச்சாரி

பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான்.

அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே “நைஷ்டிக பிரம்மசாரி”

இராமயண காலத்தில்
தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர்.

தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று விசுவாமித்திரர் ராமனை அழைத்ததாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்தனர்.

தாங்கள் விரும்பியபடி, கண்ணனைத் தழுவி மகிழ்ந்தனர்.

ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை! அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றினர்.

கருத்துகள் இல்லை: