ஞாயிறு, 31 மே, 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 05*

      *பகவான் உந்தியில்*
       *தோன்றிய பரமன்*
  ======================

மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும்., மலரோனுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரம்மனிடம்., உலகைப் படைப்பவர் அவர் என்றால்., ஈரேழு உலகங்களையும் அவர் உதிரத்தில் காட்ட முடியுமா என்று கேட்டு., பிரம்மன் வாய்வழிச் சென்று அவர் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தார். அப்போது பிரம்மன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு., அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க., திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய் வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரம்மன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன்., நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலை கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் "அவன்" பெருமையை அறிய., தானே வழிகளை அடைத்ததாகவும்., உன்னை தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன்., மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்..? என்று பிரம்மன் கேட்க., நாராயணன் இவருக்கு நிகர் இவரே..! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும்., பிரம்மன் மாயையால் மயங்கி அலைய., ஈசன் அவர் மயக்கம் தீர அழற் சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர்.

தொடரும்.....

*குங்கும சம்தன லேபித லிங்கம்*
*பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் |*
*ஸஞ்சித பாப வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: