வெள்ளி, 13 டிசம்பர், 2019

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம். கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் நம் காமாக்ஷி அம்மனுக்கு அபிஷேகம்... பெரியவா போகாமல் இருக்கலாமா?''
என்று கேட்டேன். அதற்கு பெரியவா 'இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை... மடத்தை நிர்வாகம் செய்கிறார், பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும் அது தான் முறை என்று சொல்லி விட்டார். கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து தீர்த்தம், சால்வை, புடவை எல்லாம் வந்தன
பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்து என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகி விட்டது. நான் போகவில்லை எனக்குக் காமாகியைப் பார்க்க வேண்டும் போகலாமா? என்று கேட்டார். ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ அப்படி ஓர் ஆவல்! என்னை ஏன் கேட்கிறீர்கள், நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன். ''நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய் என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன் அவர் கால்
சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார். அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி போய்ச் சேர்ந்தோம்.
கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு, மாலை சார்த்தி, புடவை சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து ஆச்சார்யாள் சன்னிதிக்கு வந்து தரிசித்து அங்கேயே வாய் திறந்தவாறு
படுத்து விட்டார். அவ்வளவு அசதி. அப்போது அவருக்கு தொண்ணூறு வயசு. பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார். மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார்.
உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம் செய்தவர் பெரியவாதான்! அதே வேகத்தில் கிளம்பி இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் நடந்து கலவை சென்று விட்டார்!

சொன்னவர் பாலு ஸ்வாமிகள்.

இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர...

கருத்துகள் இல்லை: