செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நமசிவாய என்று சொல்வோமே! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே

கயிலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம் உயிர்கள் உய்யும் வழி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி இறைவனிடம், நாதா! உங்களை வழிபாடு செய்வதில் எந்தநாள் மிகவும் உகந்தது? என்று கேட்டாள்.  சுவாமியும் அன்னையின் விருப்பமறிந்து, உமா! மாசி மாதத்தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்தநாளாகும். அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகிய வற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே சிறப்பாகும். சிவபெருமானின் உள்ளம் அறிந்த உமையவள் மிகவும் பரவசமுற்றாள். தானும் சிவராத்திரி நோன்பிருக்க எண்ணம் கொண்டாள். தன்னுடைய தோழிகளுக்கும் விஷயத்தை தெரிவித்தாள். அவர்கள் பூலோகத்திற்கு தெரியப்படுத்தினர். இப்படியே சிவராத்திரி விரதமகிமை உலகெங்கும் பரவியது.மனிதனுக்கு சத்வ, ரஜோ, தமோ என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன. இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்த குணமே சத்வகுணம். ரஜோ, தமோ குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை. காமம், கோபம், பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ரஜோ குணம் பொருந்தியவன். சோம்பல், தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் தாமச குணம் பொருந்தியவன். சிவராத்திரி விரதத்தின் மூலம் இவ்விருகுணங்களையும் போக்கிக் கொள்கிறோம். சோம்பல் தரும் தூக்கத்தை வெல்லவேண்டும் என்பதால், இந்நாளில் இரவு முழுவதும் விழிக்கவேண்டும் என்பதை விரத நியமமாக ஏற்படுத்தினர்.சிவனை அபிஷேகம் செய்வது புற வழிபாடு. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர். தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார். அவரிடம் நாம், இறைவா! பால் தண்ணீர், பால் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம். நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக. உமது அருளால் அநீதியும், அக்கிரமமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும். இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் என்று வழிபட வேண்டும்.

ஆன்மிக சாதகர்கள் அனைவருமே இருக்கவேண்டிய விரதம் சிவராத்திரி. தண்ணீரைக் கூட அருந்துவதைத் தவிர்ப்பது சிறப்பு. உலக அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவனுக்குரிய ஹோமம் செய்ய வேண்டும் அல்லது அதில் கலந்துகொள்ள வேண்டும்.  நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும்.  என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்,என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும். சிவபெருமானே! நீரே என் உயிர். என் மனமே பார்வதி. என் கருவி கரணங்களே உமது சேவகர்கள். என் உடலே உமது வீடு. என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு. என் உறக்கத்தில் உம்மோடு இரண்டற கலந்து விடுகிறேன். என் கால் நடக்கும் பாதை எல்லாம் உமது கோயில் பிரகாரம். என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை மொழி. இவ்விதம் என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்றும் பிரார்த்திக்கலாம். சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: