சனி, 12 அக்டோபர், 2013

படலம் 54: சரபேச பிரதிஷ்டை

54வது படலத்தில் சரபேச பிரதிஷ்டை கூறப்படுகிறது. இங்கே சரபேச மூர்த்தியின் உருவ அமைப்பை கூறுவதன் மூலம் பிரதிஷ்டை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கழுத்திலிருந்து மேற்பட்ட பாகத்தில் பட்சி உருவமாக ஸ்வர்ண காந்தியுடன் சிம்மபாதம் போல் நான்கு பாதத்தையும், மேல் பாகத்தில் நான்கு பாதம் இருப்பதாகவும் செய்து கழுத்திற்கு மேல் பாகத்தில் மனிதஉருவம், ஸிம்ம உருவமாகவும் பயங்கரமான தெத்திப்பல்லை உடையதாகவும் சிவந்த மூன்று கண்ணைஉடையாதகவும், கீழே இரண்டு பாதம், மேலே இரண்டு பாதம் வயிற்றில் இரண்டு பாதம் நரசிம்மரை ஸம்ஹாரம் செய்வதுபோல் சரபேச மூர்த்தியை அமைக்கவும். அஞ்சலி கையுடன் கூடியதும் சேஷ்டையின்றி பெரிய சரீரத்தை உடையதும் வணங்கிய தேகத்தை உடையதுமான நரசிம்ம மூர்த்தியை அமைக்கவும் என்று வெட்கம் அடைந்த நரசிம்மமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. கற்சிலை முதலான திரவ்யங்களுள் இஷ்டப்பட்ட திரவ்யங்களால் சரபேசரை அமைக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு உருவ அமைப்பை விளக்கி சரபேசமந்திரத்தை கூறி பூஜைகளில் இஷ்டசித்திக்காக இந்தமந்திரத்தை சரபேஸ்வரனின் பொருட்டு உபயோகிக்கவும் என கூறப்படுகிறது. வஜ்ரதேகன் முதலிய எட்டு மூர்த்திபர்களின் பெயர் கூறிய இவர்கள் பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக கிழக்கு முதலிய திசைகளில் ஸ்தாபிக்கபடுபவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு தன்னுடையபெயருடன் கூடிய அக்ஷரத்தினால் மந்திரம் உபயோகித்து செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு நல்ல லக்னத்தை உடைய தினத்தில் அங்குரார்பணம், நயனோன்மீலனம், ரத்தினநியாஸம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம் ஆகிய கிரியைகள் முறைப்படியே ஹரிக்கும் ஹரனுக்கும் தனித்தனியாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. அங்கு வேதிகை குண்டம் செய்முறை கூறப்பட பிறகு சில்பியை திருப்திசெய்து புண்யாகபிரோக்ஷணம் பிராம்மன போஜனம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் மண்டபத்தில் சயனம் அமைக்கவும், பிறகு முன்பு கூறியபடி ஜலத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து சுத்திசெய்து, சரபமூர்த்தி நரசிம்ம மூர்த்திக்கும் ரக்ஷõபந்தனம் செய்து கிழக்கு வடக்குமுகமான பாதத்தையும் வைத்து சயன அதிவாசம் செய்து நரசிம்மமூர்த்தி தனிபீடமாக இருந்தால் சரபமூர்த்தியின் இடது பாகத்தில் சயனாதிவாசம் செய்யவும், பிறகு சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தவும் என்று சயனஅதிவாச முறை கூறப்பட்டது. பிறகு சிவகும்பமும் விஷ்ணு கும்பமும் சிரோதேசத்தில் ஸ்தாபிக்கவும் சுற்றிலும் வஜ்ரதேகம் முதலான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு கூறப்பட்ட ஆசார்யன் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். மூர்த்திமூர்தீஸ்வரநியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்பட்டது. பிறகு திரவ்ய நிரூபணமுறையாக ஹோமமுறை கூறப்படுகிறது. பிறகு தட்சிணையால் சந்தோஷம் அடைந்த ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முறைப்படி மந்திர நியாசம் செய்யவும் என கூறி மந்திர நியாஸமுறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த கும்பதீர்த்தங்களால் அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனம் செய்து ஆசார்யன் அதிகமான நைவேத்யம் உத்ஸவம் செய்யவும் என்று கூறப்படுகிறது. பிரதிஷ்டா முறை கார்யத்தை குறிப்பிடும் அளவால் சொல்லப்படுகிறது இவ்வாறு சரபமூர்த்தியை பிரதிஷ்டைசெய்து பிரதிதினமும் பூஜிக்கும் முறை முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால் சரபேச மந்திரத்தினால் அர்ச்சனை செய்யவும் என கூறப்படுகிறது. ஸ்நபனோத்ஸவ கர்மாக்களை ஆசார்யன் சரபேஸ்வரனை பொருட்டு செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சரபமந்திரத்தினால் சத்துருவர்க்க நாசனமும், ஸர்வவ்யாதி நாசனமும், வஸ்ய ஆகர்ஷன வித்வேஷாதிகர்மாவும் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன முறைப்படிசெய்யவும் என கூறப்படுகிறது. எந்தமனிதன் சரபேஸ்வரமூர்த்தி பிரதிஷ்டையை பக்தியுடன் செய்கிறானோ அவன் இந்த ஜன்மாவில் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து மேல் உலகத்தில் ஈஸ்வரபதத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 54வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. சரபேச பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். பட்சியை போல் இரண்டு இறக்கைகளை உடையதாகவும் தங்க நிறமாகவும்

2. மேல் இறக்கைகளை உடையதாகவும், சிவந்த மூன்று கண்களை உடையதாகவும், சிங்கத்தை போன்ற நான்கு கால்களை உடையதாகவும்

3. கூறான நகங்களை கூடியதாகவும், மேல் நோக்கிய நான்கு பாதங்களை உடையதாகவும், விரிந்த சடையோடு கூடியதாகவும், தெய்வீகமான வாலை உடையதாயும்

4. கழுத்திற்குமேல் மனிதர்களை போலவும் தெய்வீக தலையை உடையதாயும், நீண்ட தெத்திப் பல்லும், பெரிய பராக்ரமத்தோடு கூடிய சிம்ம முகத்தோடும்

5. ஜகத்தை அழிப்பதற்கு தயாராக வரும் அஞ்ஜலி பந்தத்துடன் இருப்பவரும் அசைவற்ற பெரிய உடல் உள்ளவருமான நரசிம்ம மூர்த்தியை அபஹரிப்பவராயும்,

6. வணங்கின சரீரத்தோடு தாமரை இதழ் போன்ற கண்களை உடைய விஷ்ணுவை மேல்நோக்கிய முகத்தை உடையவராகவும், மேல்நோக்கிய 2 பாதத்தையும், நரஸிம்மரின் வயிற்றில் 2 பாதத்தை உடையவராகவும்

7. ஆகாசத்தை நோக்கிய முகத்தை உடையவராக சரபேஸ்வரரை செய்ய வேண்டும், இவ்வாறு அமைப்பு முறை கூறப்பட்டு அவரின் மந்திரம் கூறப்படுகிறது.

8. சவுச என்பதாக மந்திரத்தை (எட்டாவது எழுத்து வர்க்கத்தின் முதல் எழுத்தான சாவும். பதினான்காவது உயிரெழுத்தான அவும், ஆறாவது உயிர் எழுத்தான ஊவும் (ஊ) பிந்துவும் நாதமும் ஆகிய (ம்) சேர்ந்து சவும் என பொருள்படுகிறது.

9. இது சரபபீஜம் என்றும் சரபேஸ்வர என்று கூறப்பட்டுள்ளது. பிறகு ஹரிஹர என்ற பதத்தை நான்காம் வேற்றுமை உடையதாயும் கூறவும். (சரபேச்வராய ஹரிஹராய)

10. முதலில் பிரணவம் என்ற ஓம்காரத்தையும் மந்த்ர முடிவில் நம: என்ற பதத்தையும் கூடியதாக விருப்பப்பயனை அடைய சரபேஸ்வரனின் பூஜை முதலியவைகளில் சொல்ல வேண்டும்.

11. முதல் எழுத்தினால் (மந்திரத்தினுடைய) ப்ரும்ம மந்திரத்தையும் அங்க மந்திரத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வஜ்ரதேகர் என்பவர் முதலாவதாகவும், பிறகு காதகர், வியோஜகர்

12. மாரணர், தீர்க்க ஹஸ்த்தர், தீஷ்ண தம்ஷ்டரர், ஜடாதரர், பலிப்பிரியர், இவர்கள் எட்டு வித்யேஸ்வரர்கள் ஆவார். இவர்கள் கிழக்கு முதலான திசைகளில் இருக்கிறார்கள்.

13. பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவருடைய பெயர்க்கு உண்டான முதல் எழுத்தினாலே மந்திரங்களை கூறவேண்டும்.

14. கற்சிலை முதலான பொருள்களில் விருப்பப்பட்ட பொருளால் சரபேஸ்வரனை அமைக்கவும். பகலில் நல்ல லக்னம் இருக்கும் பொழுது பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

15. அங்குரார்பண கார்யமானது அதன் முறைப்படி செய்ய வேண்டும். நயனோன்மீலனம், ரத்னன், நியாஸம் செய்ய வேண்டும்.

16. மண் முதலியவைகளால் சுத்தி செய்தும், கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முதலியவைகளை முன்போல் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியாக செய்ய வேண்டும்.

17. மண்டபத்தை முன்பு போல் செய்து சதுரம் முதலான ஒன்பது குண்டங்களும் ஐந்து குண்டங்களோடு கூடியதாகவோ ஒரு குண்டத்தோடு கூடியதாகவோ செய்ய வேண்டும்.

18. ஸ்தபதியை அனுப்பி விட்டு புண்யாகவாசன ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து, அதனுடைய மீதியையும் வெளியே போட்டுவிட்டு மெழுக வேண்டும்.

19. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி, அதன் கார்யம் ஸ்தண்டிலத்தை செய்து, சயனாதி வாசம் செய்து முன்போல ஸ்நபனம், ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

20. தனித்தனியாக இரண்டு கார்யங்களும் செய்து, இரண்டு மூர்த்திக்கும் சயனா ரோகனத்தை நடத்த வேண்டும். தேவன் கிழக்கு திக்கில் தலையையும் வடக்கில் கால் இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும்.

21. தனியான பீடத்தில் விஷ்ணு இருந்தால் இடது பக்கத்தில் அவரை சயனாதிவாசம் செய்து சிகப்பு வஸ்திரம் போற்றி கும்பஸ்தாபநம் செய்ய வேண்டும்.

22. சிவகும்பத்தையும், விஷ்ணு கும்பத்தையும் வைக்க வேண்டும். நூல் சுத்தியதாகவும், மாவிலை, வஸ்திரங்களோடு கூடியதாக தலை பக்கத்தில் வைக்க வேண்டும்.

23. தங்கம் நல்ல வஸ்திரங்கள் இவற்றுடன் கூடியதாய் சுற்றிலும் எட்டு கடங்களை நியாஸம் செய்து நூல் சுற்றப்பட்டும் ஜலத்தோடு கூடியதும் வஜ்ர தேஹாதிகளை அதிஷ்டான முடியதாய்

24. முன் சொல்லப்பட்ட மந்த்ர சொரூபத்தை அறிந்தவரான ஆசார்யன், சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். ஸகலீகரணம் செய்து, ஹ்ருதயாதிகளிலிருந்து உண்டான மூர்த்திகளை அவைகளை ஆவாஹணம் செய்து அந்த மூர்த்தியை ஹ்ருதயத்திலிருந்து மூலத்தினால் ஆவாஹனம் செய்து சரபேச மந்திரத்தை நியாஸம் செய்து விஷ்ணுவினிடத்தில் அதற்கு கூறியபடி பூஜிக்க வேண்டும்.

25. ஹ்ருதய அஞ்சலியுடன் கூடியதாக மூல மந்திரத்தினால் சரபேச மந்திரத்தை ஆவாஹனம் செய்து, மஹா விஷ்ணுவையும் அவ்வாறே ஆவாஹநம் செய்ய வேண்டும்.

26. முன்போலவே மூர்த்தி, மூர்த்தீஸ்வரன், நியாஸத்தை செய்ய வேண்டும். மூர்த்திகள் வஜ்ரதேகன் முதலியவைகள் ஈசானன் என்று கூறப்படுகின்றன.

27. குண்டம், அக்னி, இவைகளுக்கு ஸம்ஸ்காரம் செய்து பிறகு ஹோமத்தை செய்ய வேண்டும். புரசு சமித்துகளினால் நெய்யினால் அன்னத்தினால்

28. எள்ளினால், பொரியினால், மருந்து வகையினால் மூர்த்தீச மந்திரங்களோடு கூட பூர்ணாஹீதி கொடுத்து இரண்டாவது நாள் அக்னி கும்பங்களில் தேவதா பூஜை செய்ய வேண்டும்.

29. ஆசார்யன் பூஜை செய்பவர்களோடு கூட கிடைத்த தட்சிணையால் சந்தோஷத்துடன் ரித்விக் முதலியவர்களோடு முறைப்படி மந்திரத்தின் நியாசம், ஆரம்பம் செய்ய வேண்டும்.

30. ஈஸ்வரனுடைய முன்னிலையில் ஆசார்யன் ஸ்தண்டிலத்தை செய்து கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சரபேச மூர்த்தியின் ஹ்ருதயத்தில் நியஸிக்க வேண்டும்.

31. விஷ்ணு மூலமந்திரத்தை எடுத்து நரசிம்ஹ ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்றவைகளின் மூலமந்திரங்களை எடுத்து பத்ம பீடத்தில் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

32. அந்தந்த கும்பங்களின் ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து நைவேத்யம் உத்ஸவங்களை நடத்த வேண்டும்.

33. இந்த மாதிரியாக பரமேஸ்வரனை பிரதிஷ்டை செய்து தினம்தோறும் நன்கு பூஜிக்க வேண்டும். முன் போலவே அர்ச்சனம் செய்து சரப சம்பந்தமான மந்திரங்களினால் அர்ச்சிக்க வேண்டும்.

34. ஸ்நபனம் உத்ஸவம் முதலிய கார்யங்கள் முறைப்படி செய்ய வேண்டும். தேசிகளும் அவருடைய மந்திரங்களினால் சத்ரு வர்க்கங்களை நாசம் செய்ய வேண்டும்.

35. எந்த வியாதி உண்டானாலும், இந்த மந்திரத்தினால் வியாதிகளை நாசம் செய்யவும், வச்யம், ஆகர்ஷணம், வித்வேஷணம் முதலியவைகளை இந்த முறையிலேயே நடத்த வேண்டும்.

36. இங்கு கூறப்படாததை சாதாரணமாக ஸ்தாபனத்தில் கூறப்பட்டபடி கிரஹித்துக் கொள்ள வேண்டும். எந்த மனுஷ்யன் சரபேஸ்வரனிடத்தில் இந்த முறைப்படி செய்கிறானோ

37. பக்தியினாலும் பாவனையோடு கூடியும் உள்ள அவனுக்கு பிராம்ணர்கள் இந்த மாதிரி செய்ய வேண்டும். புண்ய கூட்டங்களுடைய இந்த அளவு போகங்களையும் இந்த ஜன்மத்தில் அனுபவித்து

38. விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெற்று மேலுலகில் மேலான ஈஸ்வர பதத்தையும் அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சரபேச்வர பிரதிஷ்டையை கூறும் ஐம்பத்து நான்காவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: