சனி, 2 மே, 2020

#சேலம் பெரியவா இல்லம்
#SALEM PERIYAVA GRUHAM
   
சேலத்தில் தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி அதில் கடந்த மூப்பத்தி எட்டு ஆண்டுகளாக பல ரூபங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மஹா பெரியவா!
  
பெரியவாளின் பரம பக்தரான ராஜ கோபால் மாமா இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளை தான் காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதிகள் காஞ்சி மஹானிடம் பக்தி கொண்டு இருந்தார்களே தவிர அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் மஹானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்பு தான் இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது. உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால் மாமா சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப் பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் மாமா  சொன்னபோது ''சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா. சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது என்று ராஜகோபால் மாமா சொல்ல... ''சேலத்தில் வீடு இருக்கிறதா என்று தான் கேட்டேன்'' என்றார் மஹான் அழுத்தம் திருத்தமாக.

''இல்லை!'' என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது... சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று! சேலத்தில் அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர் மஹானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதி கொண்டார். எங்கெங்கோ தேடி கடைசியில் ஒரு நண்பர் மூலமாக ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். ''சொந்த வீடு இருக்கிறதா?'' என்று மஹான் கேட்டதை நிறை வேற்றி விட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால் மாமா மஹானின் முன்னால் போய் நின்றார். வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால் மாமா மஹானிடம் பவ்வியமாக ''ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்'' என்றார். மஹானின் அடுத்த கேள்வி ராஜகோபால் மாமாவை வியப்பில் ஆழ்த்தியது... ''வடக்குப் பார்த்த வீடு தானே? உடனே வாங்கிடு!'' வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மஹானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால் மாமா... ஆனால் அந்த மஹான் எப்படி கேட்டார்... ''வடக்குப் பார்த்த வீடுதானே?'' மஹானின் அடுத்த கேள்வி, ''என்ன விலை சொல்றான்?'' ''அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!'' என்று ஆசி வழங்கினார் மஹான். மஹான் சொன்னபடியே வீட்டின் சொந்தக்காரர் அதன் விலையில் மேலும் நாற்பதாயிரம் ரூபாய் குறைத்துத் தர முன் வந்தார். வீடும் கைமாறியது. அதை வாங்கும் பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டார்.

அதன் பின் காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்து விட்டார் ராஜகோபால் மாமா. ராஜகோபால்  மாமா தம்பதி மஹானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மஹானிடம் நீட்டும் போது தன்னை அறியாமல் ராஜகோபால் மாமா சொல்கிறார்...''மஹா பெரியவா அனுக்ரஹத்தில் மஹா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!''
'தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. 'பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
மஹான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன் பின் கேட்டார்... ''எனக்கே எனக்கா?'' ''பெரியவா அனுக்ரஹம்'' என்றார் ராஜ கோபால் மாமா... பத்திரத்தை மஹான் உடனே திருப்பித் தரவில்லை. சற்று நேரம் கழித்து அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார். வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மஹா பெரியவா சாவியை ராஜகோபால் மாமா  கையில் தந்து ''சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி'' என்றார்.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம்.......

''உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர்யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!'' இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! 'பெரியவாளை கீழே விட்டு விட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது. மஹானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா? ''நான் எல்லா இடத்திலும் இருப்பேன்'' என்பதைப் போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார். ''எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக் கொண்டது உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!'' என்ற பிரதோஷம் மாமா. அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினாராம். இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மஹா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மஹா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள். புதிதாக நான்கு அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப் போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. மஹானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும். சேலத்தில் உள்ள மஹா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒரு முறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து காஞ்சி மஹானின் பேரருளைப் பெறுங்கள்!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர!!! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

SRI SRI SRI MAHA PERIAVA GRAHAM
113, RAGHURAM COLONY
GANDHI ROAD
SALEM 636 007
PHONE:  +91 73977 99878

கருத்துகள் இல்லை: