சனி, 2 மே, 2020

தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்

இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்கனவே தெரிஞ்சதாக இருக்கும். ஆனால், எத்தனை தடவை படித்தாலும், கேட்டாலும் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் விடுவதை யாராலும் எப்போதும் கட்டுப் படுத்த முடியாது.

பல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமியில் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு மஹன்யாஸ ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் விமர்ஸையாக நடந்தது.

அதை நடத்தி வைத்தவர் திருவாரூர் மிராஸுதார் நாராயணஸ்வாமி ஐயர். பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மத்யான்னம் ருத்ராபிஷேகம் முடிந்ததும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொண்டு விடியற்காலம் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

கூட்டம் நெருக்கியடித்தது. பெரியவா பூஜையை முடித்து தர்ஶனம் குடுத்துக் கொண்டிருக்கும் போது, முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக பெரியவா முன்னால் ப்ரஸாதத்தோடு நின்றார்.

"இது எந்த க்ஷேத்ரப் ப்ரஸாதம்?"

ரொம்ப வினயத்தோடு.......

" பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹன்யாஸ ருத்ரஜபத்தோட பெரிய அபிஷேகம். பெரியவா ஸந்தோஷப்படுவேளே.... ன்னு எடுத்துண்டு ஓடி வந்தேன்"

பெரியவா அந்த மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்தார்!

"நாராயணஸ்வாமி.. நீ பெரிய மிராஸுதார்-ன்னாலும், செலவுக்கு இன்னும் யாரையாவது கூட்டு சேத்துண்டு ஸ்வாமிக்கு பண்ணினியோ?"

"இல்ல பெரியவா......! நானே.... என் ஸொந்த செலவுல பண்ணினேன்"..ன்னு அந்த "நானே"க்கு அழுத்தம் குடுத்தார்.

மனஸுக்குள் சிரித்துக் கொண்டார் பெரியவா.

"லோக க்ஷேமார்த்தம் பண்ணினியாக்கும்?"

"இல்ல....... வயல்ல ரெண்டு மூணு வருஷமா வெளச்சலே இல்லே. அதான்........."

குழைந்தார்.

பெரியவா இன்னும் ப்ரஸாதத்தை தொடவே இல்லை.

"ஆத்மார்த்தமாவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேன்னு தெரியறது"

கண்ணை மூடிக் கொண்டார். பதினைந்து நிமிஷம் கழித்து,

"ஸெரி..... ருத்ரஜபத்துக்கு எத்தனை வேதப்ராஹ்மணா வந்திருந்தா? வைதீகாள்ளாம் யாரு? எந்த ஊர்?"

"பதினோரு ப்ராஹ்மணா ஏற்பாடு பண்ணியிருந்தேன்......"

இடுப்பில் சொருகியிருந்த பேப்பரில் இருந்த பெயர்களை வரிஸையாக படிக்க ஆரம்பித்தார்.

கூட்டத்தில் ஒரே நிஶப்தம். பெரியவா ஏன் இவ்வளவு துருவி துருவி கேட்கிறார்? என்று எல்லாருக்கும் குழப்பம்.

அவர் சில வைதீகாளின் பெயர்களை படிக்க ஆரம்பித்ததும்,

"நல்ல அயனான வித்துக்களாத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே...... அது ஸெரி, ஒன் லிஸ்டுல தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள் பேர் இருக்கான்னு பாரு"

மகிழ்ச்சியுடன் "இருக்கு பெரியவா ! ஜபத்துக்கு அவரும் வந்திருந்தார்"

"பேஷ்! பேஷ்! வெங்கடேஶ கனபாடிகளையும் சொல்லியிருந்தியா.......! ரொம்ப நல்ல கார்யம்! மஹா வேத வித்து! இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயஸாயிடுத்து. கொரல் எழும்பறதுக்கே ரொம்ப ஶ்ரமப்படும். ஜபத்தை மூச்சடக்கி சொல்லறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்! ........."

பெரியவா முடிக்கவில்லை..... மிராஸுதார் உடனே.......

"ஆமா பெரியவா. நீங்க சொல்லறது ரொம்ப ஸெரி. அவர் ஸெரியாவே ருத்ரம் ஜபிக்கலே.! சில நேரம் வாயே தெறக்காம, கண்ண மூடிண்டு ஒக்காந்திருந்தார்.....! அடிக்கடி கொட்டாவி வேற விடறார்......! அதுனால, ஜப ஸங்க்யை [count] வேற கொறையறது......! நேத்திக்கி அவர் ரொம்ப ஶ்ரமம் குடுத்துட்டார்.! ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா...!"

மிராஸுதார், குற்றப்பத்திரிகை வாஸித்ததுதான் தாமதம், பெரியவா ப்ரளயகால ருத்ரனாக பொங்கி பொரிந்து தள்ளி விட்டார்! வார்த்தைகளில் அவ்வளவு கோவம்!

"என்ன சொன்னே நீ?.... பணம் இருந்தா, எத வேண்ணாலும் பேசலாங்கற திமிரோ? தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகளோட யோக்யதாம்ஸம் பத்தி ஒனக்கென்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால் தூஸு பெறுவியா நீ? அவரைப் பத்தி என்னமா அப்டி சொல்லலாம்?.....

......நேத்திக்கி மஹாலிங்க ஸ்வாமி ஸன்னதில என்ன நடந்ததுங்கறதை நா புரிஞ்சுண்டுட்டேன் ! நா.... கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு.!....

...... நேத்திக்கு ஜபம் பண்ணறப்போ, கனபாடிகள் முடியாம கண்ண மூடிண்டு ஒக்காந்தப்போ, நீ அவர்ட்ட போய் ரொம்ப கடுமையா "ஏங்காணும்! காஸு வாங்கலே நீர்? இப்படி ஜபம் பண்ணாம வாயடைச்சு ஒக்காந்திருக்கீரே!" ன்னு கத்தினியா? இல்லியா?"

எரிமலை குமுற ஆரம்பித்தது! மிராஸுவும், கூட்டமும் விக்கித்துப் போய் நின்றனர்!

நடுநடுங்கி ஸாஷ்டாங்கமாக பாதங்களில் விழுந்து

"தப்புத்தான் பெரியவா. வாஸ்தவம்தான். ஸ்வாமி ஸன்னதில அப்டி அவரைப் பாத்து சொன்னேன். மன்னிச்சுக்கணும் பெரியவா "

உதறலெடுக்க கெஞ்சினார்.

பெரியவா விடவில்லை.

"இரு....! இரு....! நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்லறேன் கேளு. எல்லார்க்கும் தக்ஷிணை குடுத்தேல்லியோ? ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு குடுத்தே?"

மென்று விழுங்கி ஈனஸ்வரத்தில் "தலைக்கு பத்து ரூவா குடுத்தேன் பெரியவா"

"ஸெரியா சொல்லு. எல்லா வைதீகாளுக்கும் ஸமமா பத்து பத்து ரூவாயா குடுத்தே? எனக்கு எல்லாம் தெரியும்!"

மடக்கினார்.

மிராஸு மெளனமாக இருந்தார்.

"ஒனக்கு சொல்ல வெக்கமாயிருக்கு போல இருக்கு. நா.... சொல்றேன் கேட்டுக்கோ! வைதீகாளை ஸன்னதில வரிஸையா ஒக்காரவெச்சு தலைக்கு பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே.....!

.....தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்ட வந்ததும், "இவர்தான் ஸெரியாவே ருத்ரம் சொல்லலியே......! அவருக்கு எதுக்கு மத்தவாளாட்டம் பத்து ரூவா குடுக்கணும்?.ன்னு நீயே தீர்மானிச்சு, ஏழே..... ஏழு ரூவா !!!ஸம்பாவனை பண்ணினே....!...

.....ஏதோ அவரைப் பழி வாங்கிட்டதா எண்ணம் ஒனக்கு.!! ஆனா, அவர் எதையாவது லக்ஷியம் பண்ணினாரா பாத்தியா? நீ குடுத்ததை வாங்கி அப்டியே துண்டுல முடிஞ்சுண்டார். என்ன? நா..... சொல்லறது ஸெரிதானே?"

எல்லாருக்கும் நேற்று நடந்ததை அப்படியே நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்லுவதை பார்த்து திகைப்பதா? அழுவதா? ஆஶ்சர்யப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.

"மன்னிச்சுடுங்கோ பெரியவா....! ஏதோ அஞ்ஞானத்தால அப்படி நடந்துண்டுட்டேன்...! இனிமே அப்டி நடக்கவே மாட்டேன். ...."

"இரு...! இரு.....! இதோட முடிஞ்சுட்டாத்தான் தேவலையே! ஜபம் பண்ணின ப்ராஹ்மணாளுக்கு மஹாதானத் தெரு ராமசந்த்ர ஐயரோட க்ருஹத்லதானே ஸாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே? ஸாப்பாடெல்லாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.......! பந்தில நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, த்ராக்ஷை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங்கையால நீயே பரிமாறினே..... ஸெரியா?"

வெலவெலத்துப் போனார் மிராஸு. உண்மைதான்!

"ஸெரி...... அப்டி சக்கரைப்பொங்கலை போடறச்சே பந்தி தர்மத்தோட பரிமாறினதா, ஒம்மனஸாக்ஷி சொல்றதா?........

.....நீ சொல்லவே வேணாம். நானே சொல்லறேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததுனால, வைதீகாள்ளாம் கேட்டு கேட்டு வாங்கி ஸாப்டா.....! நீயும் நெறைய போட்டே....! ஆனா, தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்..... வெக்கத்தை விட்டு, "சக்கரைப்பொங்கல் இன்னும் போடுடாப்பா......! ரொம்ப நன்னாருக்கு" ன்னு பல தடவை வாயைவிட்டு கேட்டும்கூட, நீ காதுல வாங்கிண்டு அவருக்கு போடாமலேயே போனியா இல்லியா?....

..... எத்தனை தடவை கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்பிட்டியே! இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவ இப்டி அவமானப்படுத்திட்டியே!....”

மிகுந்த துக்கத்தில் மௌனமாகிவிட்டார் பெரியவா.

கொஞ்ச நேரம் கழித்து ஸாக்ஷாத் மஹாலிங்கமான பெரியவா பேசினார்......

"மிராஸுதார்வாள்....! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எம்பத்தொறு வயஸாறது. தன்னோட பதினோராவது வயஸ்லேர்ந்து எத்தனையோ ஶிவ க்ஷேத்ரங்கள்ள ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஶ்வாஸத்லேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மஹான் அவர்! அவர்கிட்ட நீ நடந்துண்ட விதம்...... மஹா பாபமான கார்யம்"........

மேலே பேச முடியவில்லை பெரியவாளால்! கண்களைமூடிக் கொண்டு மெளனமாக அமர்ந்துவிட்டார். பிறகு மீண்டும்,

"நீ "பந்தி பேதம்" பண்ணின கார்யமிருக்கே....? அது கனபாடிகள் மனஸை ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன கார்யம் செஞ்சார் தெரியுமா? சொல்றேன் கேளு. நேத்திக்கு ஸாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலை.! நேரா, திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோவிலுக்கு போனார் "அஸ்மேத" [பெரிய பிராகாரம்] ப்ரதக்ஷிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன ப்ரார்த்திச்சார் தெரியுமா?........"

பெரியவாளால் மேலே பேசமுடியவில்லை.

தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு சொன்னார்

"கண்ணுலேர்ந்து தாரை தாரையா நீர் வழிய, "அப்பா ஜோதி மஹாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்துலேர்ந்து எத்தனையோ தடவை ஒன் ஸன்னதில மஹன்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்டுருக்கே. இப்போ நேக்கு எம்பத்தோறு வயஸாறது. மனஸ்ல பலமிருக்கே தவிர, வாக்குல அந்த பலம் போயிடுத்துப்பா!.....

.......இன்னிக்கு மத்யான்னம் ஸாப்டறச்சே நடந்தது. ஒனக்கு தெரியாம இருக்காது. அந்த சக்கரைப் பொங்கல் ரொம்ப ரொம்ப நன்னா இருந்ததேன்னு, "இன்னும் கொஞ்சம் போடுங்கோ" ன்னு வெக்கத்தை விட்டு அந்த மிராஸுதார்கிட்ட பல தடவை கேட்டேன். அவர் காதுல விழுந்தும், விழாத மாதிரி நகந்து போய்ட்டார்.....!

.......நேக்கு சக்கரைப் பொங்கல்-ன்னா உஸுருன்னு ஒனக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டு கேட்டும் அவர் போடலியேன்னு ரொம்ப அப்போ தாபப்பட்டேன். ஆனா, ஸாப்டுட்டு கையலம்பிண்டு வாஸத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறந்தான், "இப்பிடியொரு ஜிஹ்வா [நாக்கு] சபலம், இந்த வயஸ்ல நமக்கு இருக்கலாமான்னு தோணித்து..........

.........அப்பா மஹாலிங்கம்! இப்போ அதுக்குத்தான் ஒம்முன்னாடி நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்துலேர்ந்து ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக்கறேன்......

......எல்லாரும் காஶிக்கு போனா, பிடிச்ச பதார்த்தத்தை விடுவா.........! காஶிலயும் நீதான் இருக்கே! இங்கயும் நீதான்! அதுனால ஒனக்கு முன்னாலே, "இனிமே என் ஶரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும்.... சக்கரப் பொங்கலையோ, இல்லாட்டா, வேற எந்த தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன். இது ஸத்யம்டா..ப்பா மஹாலிங்கம்" ன்னு வைராக்ய ப்ரமாணம் பண்ணிண்டு "அப்பா ஜோதி மஹாலிங்கம்! ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்" ன்னு சொல்லி பன்னண்டு ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர்! ஊருக்கு பொறப்பட்டுட்டார்.......!....

....... இப்போ நீ சொல்லு! நீ பண்ணின கார்யம் தர்மமா? மஹாலிங்க ஸ்வாமி ஒப்புத்துப்பாரா?...”

பெரியவா முடிக்கும்போது மத்யான்னம் மூணு மணி! அன்னிக்கு பிக்ஷையே பண்ணலை! சுற்றி நின்ற அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்!

நேற்று மஹாலிங்க ஸ்வாமி முன்னால் நடந்தது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது! என்ற கேள்வியை விட ஸத்யப்ரமாணமாக "திருவிடைமரூதூரில் அருள் பாலிக்கும் மஹாலிங்கம் நானே !" என்று பெரியவா ப்ரத்யக்ஷமாக காட்டியதை கண்டு அத்தனை பேரும் ப்ரமித்தனர்.

இது ஒரு ஸாதாரண விஷயமா என்ன?

மிராஸுதார் கன்னத்தில் அறைந்து கொண்டு அலறினார்.

"பெரியவா, நா மஹா பாபம் பண்ணிட்டேன். அஹம்பாவத்ல அப்டி பண்ணிட்டேன். இனி என் ஜன்மாவுல அப்படி நடக்கவே மாட்டேன். ப்ரஸாதத்தை ஸ்வீகரிச்சுக்கோங்கோ! "

பெரியவா வாயை திறக்கவில்லை.

"இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே ப்ரஸாதம் அனுக்ரஹம் பண்ணுவார்." என்று அவர் முடிப்பதற்குள், ஒரு ப்ராஹ்மணர் கட்டு குடுமி, பஞ்சகச்சம், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையோடு, கையில் ப்ரஸாதத் தட்டோடு வந்து பெரியவாளை அணுகி,

"என் பேர் மஹாலிங்கம்! திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு நேத்திக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராஸுதார் நடத்தினார்..... இங்க என் அக்காவை பாக்க வந்தேன். பெரியவாளுக்கு ப்ரஸாதம் ஸமர்ப்பிச்சுடலான்னு வந்தேன்" என்று நமஸ்காரம் பண்ணப்போனவரை பெரியவா தடுத்து....

" நீங்கள்ளாம் ஶிவ தீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது" என்று சொல்லி அவருக்கு மரியாதை பண்ணச் சொன்னார்.

அவர் போனதும் மிராஸுதார் "திரும்ப திரும்ப ப்ரார்த்திக்கிறேன். பெரியவா! நா பண்ணினது ரொம்ப பாப கார்யம்தான். இதுக்கு நீங்கதான் ஒரு ப்ராயஶ்சித்தம் சொல்லணும்"

மன்றாடினார்.

விருட்டென்று எழுந்து விட்டார் பெரியவா

"இதுக்கு ப்ராயஶ்சித்தம்..... நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்தான் சொல்லணும்"

"இந்தப் பாவி பண்ணின கார்யத்துக்கு கனபாடிகள் ப்ராயஶ்சித்தம் சொல்லுவாரா பெரியவா?"

பெரியவா சற்று உரக்கச் சொன்னார்

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"

விடுவிடுவென்று உள்ளே போய் விட்டார்.

மிராஸுதார் உடனே தேப்பெருமாநல்லூர் நோக்கி நடையைக் கட்டினார்.

"பாப விமோசனம்" பெற வேண்டும், ப்ராயஶ்சித்தம் பண்ணிட வேண்டும்” என்ற வைராக்யம் இருந்தது.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்தில் நுழைந்து, எதிர்ப்பட்ட ஒருவரிடம் வெங்கடேஶ கனபாடிகள் க்ருஹம் எங்கே என்று விஜாரித்தார். அவர் ஒரு வீட்டை சுட்டிக் காட்டினார்....

"துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் கனபாடிகள் அஹம். இன்னிக்கு விடியக்காலமேதான் கனபாடிகள் "அனாயாஸேன மரணம்" ன்னு திடீர்னு காலமாயிட்டார்......! போய் பாத்துட்டு வாங்கோ!"

இடிவிழுந்தது போல் இருந்தது!

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"ன்னு பெரியவா சொன்னது இதுதானா?

ப்ராப்தம் இல்லேன்னு பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு!

ஓடிப்போய் வெங்கடேஶ கனபாடிகளுடைய பூத ஶரீரத்துக்கு (ருத்ரத்தால் நிறைந்து இருந்த ஶரீரம்) நமஸ்காரம் பண்ணி, மானஸீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு, ஓரிரு வருஷத்துக்குள் ஸொத்தெல்லாம் அழிந்து போய், வடக்கே பல ஶிவாலயங்களில் மடப்பள்ளியில் கைங்கர்யம் பண்ணிவிட்டு, கடைசியில் காஶி க்ஷேத்ரத்தில் காலகதி அடைந்தார்!

தன்னை நிந்தனை பண்ணினால்கூட பகவான் மன்னிப்பான். ஆனால் தன்னையே ஸதா ஆஶ்ரயித்து இருக்கும் ஸாதுக்களை யாராவது அவமதித்தால், பகவானால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! என்பதற்கு இது ஒரு நல்ல முன் உதாரணம்.

ஆனால், பகவான் கருணாமூர்த்தி! பாபம் பண்ணியிருந்தாலும், பண்ணின பாபத்துக்கு மனஸ் வருந்தி, தண்டனை அனுபவித்தாலும், கடைசியில் "காஶியில் மரித்தால் முக்தி" என்பதற்கேற்ப, அந்த மிராஸுதாரை காஶியில் இறக்க வைத்து மோக்ஷத்தை கொடுத்தது அவனுக்கே உரிய பெருங்கருணைl!

பந்தியில் பேதமே பார்க்கக்கூடாது, யாருடைய வயிற்றிலும் அடிக்கக்கூடாது, வயஸானவர்கள் யாராகயிருந்தாலும் நம் அஹங்காரத்தை அவர்களிடம் காட்டக்கூடாது. உடம்பில் ரத்தம் நன்றாக இருக்கும்வரை, ஆட்டம் போடுவோம். பகவான் ரத்தத்தை கொஞ்சம் சுண்டிவிட்டாலோ! போச்சு!

நாம் கற்று, கடைப்பிடிக்க நிறைய இருக்கிறது...

ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி 🙏🏻

கருத்துகள் இல்லை: