சனி, 2 மே, 2020

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!

கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு.திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள்.கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம்.இங்குதான் போதேந்திரர்.அதிஷ்டானம் கொண்டுள்ளார்.22-8-2008 வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது.காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.இவரது காலம் கி.பி. 1638-1692.அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது.நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்.கஷ்டங்களைப் போக்கலாம் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம்.நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.

நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள்.நாம சங்கீர்த்தனம் என்றால் இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள்.பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம்.கஞ்சிரா முதலான பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள்.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள்.பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும்.எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம்.இதற்கு கால நேரம் கிடையாது.என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார்.இதிலிருந்தே அவரது பக்தியின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம்.போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர்.கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர் ஷேத்ரக்ஞர்.மகாராஷ்டிரத்தில் துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர் நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர் துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ் ஸ்ரீவல்லபர் குருநானக் குருகோவிந்தசிங் மீரா போன்றோரும் அவதரித்தனர்.மொத்தத்தில் பார்த்தால்.இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள்.ஒரே காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்?புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர்.ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல்ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார்.குழந்தை பிறந்த வேளையை வைத்து அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார்.அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன்.ஒரு நாள் தந்தை மடத்துக்குப் புறப்படும்போது நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன் சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார்.பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும்.பக்தி உணர்வு மேலிட எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம் ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா?ஸ்வாமிகள் புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார்.ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை.பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது?என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால் இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார்.வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார்.இருந்தாலும் வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார்.ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள் நல்லது.இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான்.தைரியமாகச் செல்லுங்கள் என்றார்.கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை.பகவானின் விருப்பம் அதுவானால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன்.ஐந்து வயதில் அட்சர அப்பியாசம் ஏழு வயதில் உபநயனம் பதினாறு வயது முடிவதற்குள் வேதம் வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான்.சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான்.(அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது.ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர்.உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள்.அதற்குரிய வேளையும் வந்தது.ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார்.அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார்.காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே நீ இப்போது என்னுடன் வர வேண்டாம்.சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள்.புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார்.அப்போது ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.இருவரும் சந்தித்து உரையாடி ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர்.அப்போது நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார்.இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன்.அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள்.இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின் ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள்.அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே.போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று.நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர்.ஏராளமான கிரந்தங்களை இயற்றினார்.விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார்.விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள்.குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து போதேந்திரர் காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார்.வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள்.இதே காலத்தில்தான் போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர்.கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள்.ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர்.அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி.பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார்.அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார்.ஸ்ரீதர ஐயாவாளும் சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.அந்த அந்தணருக்கு ஒரே மகன்.சுமார் ஐந்து வயது இருக்கும்.ஊமை சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம்.அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்?எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை.ஆனால் அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை.விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார்.பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தார்.அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான்.அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன.அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம் மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான்.பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால் சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது.இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான்.வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர்.திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே!உனக்கு பேச்சு வந்துவிட்டது.அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.வெளியே வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே!பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா?ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா அந்தச் சிறுவன் பேசினான்!அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ?மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி!கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள்.சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார்.சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள்.இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்.காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும்.அவர்களுக்கு குஷி பிறந்துவிடும்.துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது.நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது.தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.
மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள்.தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள்.சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா!என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும்.வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது.நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன என்றார்.ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு.குழிக்குள் மணலை நிரப்பினார்கள்.ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது.வாங்கடா வீட்டுக்குப் போகலாம்.சாமீ ஜபம் பண்றாரு.இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர்.மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள்.ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர்.இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர்.அப்போதுதான் முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள்.சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள்.அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது.பக்தர்களே!நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால் நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம்.தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள்.ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல் ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது!இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள்.அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர்.இன்னும் சிலரோ நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து மகா அபிஷேகம் நடத்தி தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி.இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து.மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள்.ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார்.அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி.போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம்.ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள்.உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம் வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க ஆரம்பித்தார்கள்.அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது.இது ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால் ஆற்று மணல் ஆம்!மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார்.இந்த மகான் மருதாநல்லூர் ஸ்வாமிகள்(இவரது காலம் கி.பி 1777-1817 என்பர்)போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர்.ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.மகான்களைப் போற்றியவர்.மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில் கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால் இருந்து வந்தது.காரணம் அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும் முழ்கடித்துவிட்டது.எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை.இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல் தடுப்பு வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள்.மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும் மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான்.போதேந்திரரின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார்.என்று தகவல் சொல்வார்கள்.சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள்.மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன்.இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும் அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சியமாகக் கூறுகிறீர்கள்?ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள்.அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே!படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன்.இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது.எனவே இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார்.அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள் அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள்.அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.தற்போது நித்ய பூஜை அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை.தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி.ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்.பதினொரு மணிக்கு அதிஷ்டான பூஜை.அதன் பிறகு சமாராதனை அன்னதானம்.

இதேபோல் மாலை நான்கு மணிக்கு சம்பிரதாய பூஜை.

கருத்துகள் இல்லை: