செவ்வாய், 19 மே, 2020

#காமாக்ஷி_கடாக்ஷி 2

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.

ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.

அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.

காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.

'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,

'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.

வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.

ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.

மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம்.

கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர். 

வளரும்

இது மதுரையம்பதி இணையதள பதிவு 2011.

கருத்துகள் இல்லை: