சனி, 27 ஜூலை, 2019

சம்பாத்தியத்தில் எத்தனை பங்கை கடவுளுக்காக செலவழிக்க வேண்டும்?

சம்பாத்தியத்தை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கை அன்றாடச் செலவுக்கும், இரண்டாவது பங்கை கடவுள் வழிபாடு, தானதர்மம் ஆகியவற்றுக்கும், மூன்றாவது பங்கை எதிர்கால சேமிப்புக்காகவும் சேர்த்து வைப்பதே முறையானதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பவுர்ணமி நாளில் மட்டும் கிரிவலம் வந்தால் கடவுள் அருள்  கிடைக்குமா?

திதியில் பவுர்ணமியும், கிழமையில் திங்களும் (சோமவாரம்) நட்சத்திரத்தில் கார்த்திகையும் கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி நாளில் மனோகாரகனாகிய சந்திரன், பூரணக் கலைகளுடன் இருக்கிறார். அதன் கிரணங்கள்(ஒளிக் கதிர்கள்) நம் மேனி மீது படரும் விதத்தில் மாலைப் பொழுதில் வலம் வருவது நல்லது. பவுர்ணமி மட்டுமில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் வந்தாலும் கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------
தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருவது ஏன்?

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ""நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!
------------------------------------------------------------------------------------------------------------
சக்கரத்தாழ்வாருக்கு பின் நரசிம்மர் இருப்பது ஏன்?

பெருமாளின் கையில் இருக்கும் சக்கரத்தையே "சுதர்சன ஆழ்வார் என்று வழிபடுகிறோம். விஷ்ணுவின் கையிலுள்ள சக்கராயுதம் விரைந்து வந்து அடியவர் துன்பம் போக்கும் என்பது ஐதீகம். அதிலும், பிரகலாதனுக்காக ஓடோடி வந்த விஷ்ணுவின் அவசரத்திருக்கோலம் நரசிம்மர். "நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். அதனால், உடனடியாக அருள் வேண்டி நிற்போர் சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுகின்றனர்.

முதுமையில் வாடுபவர்களுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

முறையான மருத்துவம், இறைவனிடம் பிரார்த்தனை இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.
------------------------------------------------------------------------------------------------------------
உயிர் கொடுத்த நன்னாள்!

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண உற்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோயில்முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது, அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில் பாடல் ஒன்று அமைந்தது. பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய், என்ற வரிகள் அதில் அமைந்தன. இதுபோல், கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் பலவிழாக்கள் இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரத்தன்று என்னென்ன நடந்தது?

பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். அதேநாளில், மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்தாள். சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத் துணைவியராக ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்தததும் இந்த நாளில் தான். முருகப்பெருமானின் துணைவியான தெய்வானை, இந்திரனுக்கு வளர்ப்பு மகளான நாள் இன்று தான். இதேநாளில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நிகழ்ந்தது. பிரம்மா தன் மனைவி சரஸ்வதியை நாக்கில் வைத்துக் கொள்ளும் படியான வரத்தை இந்த நாளில் பெற்றார். தன் மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான். இதன் காரணமாக, இந்த நாளை தம்பதியர் தினம் என்று கூட சொல்லலாம். இந்த நாளில் தான் சிவனுக்கும் திருமாலின் அவதாரமான மோகினிக்கும் சாஸ்தா (ஐயப்பன்) அவதரித்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
பங்குனி உத்திரம் கொண்டாட காரணம்!

குழந்தைகளுக்குச் சோறூட்டக் கூட சந்திரனைத் தான் தாய்மார்கள் துணைக்கு அழைப்பர். அந்த சந்திரன், பவுர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாத பவுர்ணமியன்று, மீனராசியில் பூமியிருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமான கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். இத்தகைய களங்கம் இல்லாத ஒளி உடலுக்கும் மனதிற்கும் சுகத்தையும், நிம்மதியையும் தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். இதன் காரணமாகத்தான், சாஸ்தா கோயில்களில் விடிய விடிய பக்தர்கள் வெட்டவெளியில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.  சந்திரன் இந்த நாளில் மட்டும் ஏன் களங்கமற்று ஒளிர்கிறான் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. அது மட்டுமின்றி சந்திரன் 27 மனைவியரை இந்த நாளில் அடைந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் களங்கமற்று ஒளிர்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சாப்பிடும் போது எந்த திசை நோக்கி சாப்பிடுவது நன்மை தரும்?

வடக்கு தவிர்த்த மற்ற திசைகளில் சாப்பிடலாம் என்கிறார் வாரியார். அதற்குரிய பலன்களாக, கிழக்கு- ஆயுள், மேற்கு- செல்வம், தெற்கு- புகழ், வடக்கு- நோய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என் செயலால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் உன் செயலே என்று அடைக்கலமாவது சரணாகதி.  செய்யும் செயலின் பலன் அனைத்தையும் உன்னிடமே ஒப்படைத்து விட்டேன் என்று கடவுளிடம் ஒப்புவிப்பது சமர்ப்பணம். இந்த இரண்டும் கடவுளை முழுமையாகச் சார்ந்திருப்பதையே குறிக்கிறது. வார்த்தை வேறானாலும், நிலை என்னவோ ஒன்று தான்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயிலில் வெளியே தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாமா?

கதவு சாத்தியிருக்கும் போது வழிபாடு செய்வது கூடாது. கோயில் திறந்திருந்தாலும் திரை போட்டிருக்கும் நேரத்திலும் வழிபடக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமி பவனி வரும் போது, மாடியில் இருந்து தரிசனம் செய்யலாமா?

பக்திக்கு அடிப்படை பணிவு. சுவாமியை விட உயரமானஇடத்தில் இருந்து தரிசனம் செய்யக் கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: