சனி, 27 ஜூலை, 2019

2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
பூரியில் மெத்தைக்கு பூஜை!

பூரியில் ஆதி சங்கரர் நிறுவியது,  கோவர்த்தன பீடம். சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்படும் ஸ்வர்க்கதுவார் என்ற கடற்கரைப்பகுதியில் இப்பீடம் உள்ளது. இங்குள்ள உமாதேவி கோயிலிற்கு எதிரில் உள்ள கோயிலில் மிகவும் நைந்துபோன ஒரு பழைய மெத்தையை பட்டாடை போர்த்தி மலர்களைத் தூவி வைத்திருக்கின்றனர். இந்த மெத்தை மிகவும் புனிதம் வாய்ந்தது. காரணம், ஆதிசங்கரர் கோவர்த்தன பீடத்தை நிறுவியபோது இதில் அமர்ந்துதான் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, உபதேசமும் செய்தாராம். எனவே இப்படுக்கைக்கு இப்போதும் தினசரி பூஜையும் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணம் நடக்க மாங்கல்ய காணிக்கை!

உத்திரமேரூரில் உள்ள அனந்தவல்லித் தாயாரை வழிபட்டால் கல்யாணம் விரைவில் நடக்கும் என்பதுநம்பிக்கை.இக்கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் திருமாங்கல்யம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
பெரிய சப்தமாதர்கள் சிலை

ஒடிஸா,ஜாஜ்பூர் நகரில் வைதரணி நதிக்கரையில் பல கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓர் கோயிலில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராஹி, இந்திராணி, காளி எனப்படும் சப்த மாதர்களின் கரங்களில் தவழும் அழகிய குழந்தைகளுடன் சுமார் ஆறடி உயரத்தில் உருவச்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சப்தமாதர் சிலைகள் வேறெங்கும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------
பஞ்ச கங்கைகள் எவை?

காவேரி,துங்க பத்ரா,கிருஷ்ணவேணி,கோதாவரி,கங்கை ஆகிய ஐந்தையும் பஞ்ச கங்கைகள் என்று தர்மசாஸ்திர நூல்கள்
கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பத்தடியான் வழிபாடு!

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேலத் திருவேங்கட புரம் திருவேங்கடநாதன் கோயிலின் வெளியே கொடி மரம் இருப்பது விசேஷம். இதில் கம்பத்தடியன் என்ற தெய்வம் இருக்கிறது. உயரமான கட்டடங்களில் வேலை செய்பவர்கள் இந்த கம்பத் தடியனை வழிபட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
புரி ஜகந்நாதருக்கு அலங்காரம்!

புரி ஜகந்நாதருக்கு ஒரே நாளில் பலமுறை உடைகள் மாற்றப்படுகின்றன. மங்கள ஆரத்தி வேஷம் என்பது காலை உடை. அவகாச வேஷம் என்பது ஓய்வின் போது உடுத்தப்படும் உடை. பிரப வேஷம் என்பது பகல் உடை, படாசிருங்கார் வேஷம் என்பது, தர்பார் உடை. தாமோதர் வேஷம் என்பது, குழந்தை உடை. வாமன வேஷம் என்பது சிறிய உடை- - இப்படி நாள் முழுவதும் அவருக்குப் பலவித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
வடசாவித்ரி விரதம்

இங்கு காரடையான் நோன்பினை வடசாவித்ரி விரதம் என்ற பெயரில் வடநாட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். அன்றைய தினம் அரச மரத்தினை சுற்றி வந்து நூல்  சுற்றி வணங்குகின்றனர். காட்டில் மரம்வெட்டும்போது சத்தியவானின் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த மரத்தையே புனிதமாகக்கருதி வழிபடுகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனைக்கல்லுப்பாறை!

ராஜபாளையம் அருகே சஞ்சீவி மலையடிவாரம் உள்ளது. இங்குள்ள பாறை மிகப் பெரிய உருண்டை வடிவில், விரிசல் ஏற்பட்டு தனியாக உள்ளது. இதனை ஆனைக்கல்லு என்றழைப்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறையை உடைக்க ஆங்கிலேய அதிகாரி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது; இந்தப் பாறையை உடைக்கும்போது அதிலிருந்து ரத்தம், பால் வந்ததாகவும்;  இதனால் இதனை உடைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் செவி வழிச் செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது ஆனைக்கல்லுப் பாறையை மக்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டு, திருவிழா நடத்தி வருகின்றனர். சாதி, மத, இன வேறுபாடின்றி, இப்பாறையை மக்கள் இன்னமும் வழிபட்டு வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
நவநந்தி தரிசனம்!

பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவநந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரியநந்தி இவற்றையே நவநந்திகள் என்று அழைக்கிறோம். இந்த நவநந்திகள் ஆந்திர மாநிலம் நந்தியால் எனும் ஊருக்கு பத்து கி.மீ தூரத்தில் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையின் கதவுகள் திறக்கட்டும்!

* சில இடங்களில் கடல் அமைதியாய் ஆர்ப்பரிக்காமல் இருக்கிறது. அதற்காக அலை இல்லாமலா போய்விட்டது? அதுபோலஉழைத்துக் கொண்டும், இயங்கிக் கொண்டும்
இருங்கள்.

* காலைப் பொழுதில் தளிர்களும், இலைகளும் சூரியனின் ஒளியில் தலையசைப்பதுபோல, புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குங்கள்.

* அழகுணர்வும்,ஒழுக்கத்தின் மேன்மையும் நிறைந்த வாழ்வில் துயரம் என்பதற்கு சிறிதும் இடமில்லை. அமைதியும், மகிழ்ச்சியும் அப்போது ஆனந்தம் நர்த்தனமாடத் துவங்கிவிடும்.

* உண்மையை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி. ஆனால், அவ்வழி அதிக விலை உடையதாய் இருக்கிறது. தவறுகளை நாம் எப்போதும் மறைத்துவிட முயலக்கூடாது. அதனால், உண்மையின் கதவுகள் அடைபட்டுப் போய்விடும்.

* நாம் உண்மையாய்உழைக்கத் தொடங்கினால் இறைவன் வாழ்வளிப்பான். நாம் உள்ளம் கசிந்து பாடித் துதித்தால் இறைவன் நம்மை விரும்பத் தொடங்குவான்.

* அன்பு நம் அறிவை செம்மைப்படுத்தி விடுதலை அளிக்கும் ஆற்றல் கொண்டது. நாம் அனைவரும் அன்பினால் மட்டும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

* உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடுகிறதோ, அவனே பெருமைக்குரிய மனிதனாவான்.

* அடக்கத்தோடு இருக்கும் மனிதர்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை பலரும் புரிந்து
கொள்வதில்லை.
* இந்த உலகம் அழகுமயமாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் விளங்குவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்துதல் அவசியமானதாகும்.

* நேர்மை உள்ள மனிதன் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றிருப்பான். ஆனால், நேர்மையில்லாமல் வாழ்வில் தவறு செய்வது மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்கள்தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்.
------------------------------------------------------------------------------------------------------------
இரவு முழுவது திறந்திருக்கும் கோயில்!

மதுரை, சிலார்பட்டி கிராமத்தில் உள்ள காலதேவியம்மன் கோயில் கோபுரத்தில் நேரமே உலகம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த காலதேவியம்மனால் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியுமாம். 51 அடி உயரத்தில் முறம் போன்ற அமைப்பில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது கோயில் கோபுரம். அரிசியைப் புடைக்கும் போது, எப்படி தேவையில்லாத கல், குப்பை எல்லாம் வெளியே போகுதோ, அதேபோல் நம் கெட்ட நேரமும் வெளியே போகத்தான் இந்த வடிவமாம். மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை (இரவு நேரம் முழுவதும்) நடை திறந்தே உள்ள அபூர்வமாகக் கோயில் இது!
------------------------------------------------------------------------------------------------------------
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி!

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா, என்று உத்தரவிட்டார்.சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது? என்றாள் அவள். நீ யமுனையின் அருகில் போய், நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும், என்று பதிலளித்தார் கண்ணன். என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்? அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.  யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது, என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா!
------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களுக்கு ஞாபகசக்தி தேவை!

* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.

* நவீன வாழ்க்கை முறை மனிதனை நாகரிகம் என்றபெயரில் கட்டுப்பாடில்லாமல் வாழ வகுத்துவிட்டது. பண்பாடு என்பது காலத்திற்கு காலம் மாறுவதில்லை.

* வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டால் ஆன்மிக வாழ்விலும் சாதிக்க முடியும்.

* நம்முடைய உள்மனம் தான் ஞாபகசக்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களின் ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

* புலனடக்கத்தையும், உணவில் கட்டுப்பாட்டையும் பின் பற்றினால் நினைவாற்றல் பெருகும். ஆற்றலை வீணாக்கும் வேண்டாத பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது அவசியம்.

* நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் ஆர்வமுடன் பணியாற்றவேண்டும். தியானப்பயிற்சி, மவுனவிரதம் ஆகியவை ஞாபகத்திறனை மேம்படுத்தும்.

* நல்லவிஷயங்கள் எங்கிருந்தாலும் நாடிச் செல்லுங்கள். அவற்றை மனதில் நிலைநிறுத்துங்கள். இறையுணர்வில் ஈடுபாடு கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
காயசித்தி என்றால் என்ன?

காயம் என்பது உடலையும், சித்தி என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே காயசித்தி என்பர்.உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !
சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!அவர் மறைந்ததும் அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும் பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை…தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா

என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு அதுக்கு நா என்ன பண்ணறது?மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும் என்ன படிச்சிருக்கே?…சொன்னார்.இத்தனை படிச்சும் ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது

என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன் என்னை என்ன செய்ய சொல்றே?மனஸ் சாந்தி அடையணும்
நீ என்ன பூஜை பண்றே?
அம்பாளை படத்துலேயும் விக்ரஹத்துலேயும் யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்

ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?ஆமாம் அப்போ...இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம் விக்ரஹம் யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?மிகவும் சூடாக பதில் வந்ததும் உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

ரொம்ப கோவிச்சுண்டுட்டேன.! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!…ங்கறதாலதா கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே… என்ன கொறையானாலும் எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட அது அம்பாளோ சிவனோ விஷ்ணுவோ பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?...நம்பிக்கை தான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…க்ஷேமமா இரு! என்று அபயஹஸ்தம் கொடுத்தாள். இனி ?……எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: