ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

திவ்ய தேசங்கள் - 44

அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்    :     தேவாதிதேவன்
தாயார்    :     புண்டரீகவல்லி
தீர்த்தம்    :     12 தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை     :     வைகானஸம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     தில்லைவனம், திருச்சித்திரக்கூடம்
ஊர்    :     சிதம்பரம்
மாவட்டம்    :     கடலூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்

காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர் வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

விழா : சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.      
             
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று மகா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகா விஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு.      
             
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், திருச்சித்ரக்கூடம் -608 001, சிதம்பரம் (சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே) கடலூர் மாவட்டம். போன் : +91- 4144 - 222 552, 98940 69422.     
            
தகவல் : இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சாத்வீக விமானம் எனப்படும். உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக்கூடத்துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடி மரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.
            
பெருமை : மோட்ச தலம் கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி தில்லை நகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும் என்றாள். அதன் படி கவேரனும் அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார்.

சிறப்பு : மகா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்த போது அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகா விஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு.

பதஞ்சலி சன்னதி : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒரு சமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே மகா விஷ்ணு அவரை சிவனின் திரு நடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ரபாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திரு நடனக்கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்தராஜரை வணங்கி மோட்சம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.

சிறப்பு: அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம் தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும் அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும் என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள் புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் "தில்லை நகர்' எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். கஜேந்திரவரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.

ஸ்தல வரலாறு : கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடிய வில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும் படி மகா விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர். அவர் தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும் படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும் படி இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் போது சிவனின் காதில் உள்ள குன்டலம் கீழே விழுந்தது அதை தன் வலக்காலால் தூக்கி காதில் அணிந்து கொண்டார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகா விஷ்ணு. பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி மகா விஷ்ணுவையும் இங்கேயே தங்கும் படி கூறினார். விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.     

கருத்துகள் இல்லை: