ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  ஆபத்சகாயர்
அம்மன் :  பெரிய நாயகி
ஸ்தல விருட்சம் :  கதலி (வாழை), வில்வம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்து விட்டது), காவிரி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழனம்
ஊர் : திருப்பழனம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,தேவாரபதிகம்

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.-திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது ஸ்தலம்.
 
விழா : ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன் பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4362 326 668 
     
தகவல் : பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

ஸ்தல பெருமை : கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

ஸ்தல வரலாறு : அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த  இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும் போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்த போது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.

கருத்துகள் இல்லை: