செவ்வாய், 9 ஜூலை, 2019

நூத்திஎட்டு திவ்ய தேசங்கள்
அருள் மிகு கோவர்த்தநேசன் திருக்கோவில்.

மூலவர் : கோவர்த்தநேசன், பால கிருஷ்ணன்
தாயார் : சத்யபாமா நாச்சியார்
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதி
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : மதுரா
மாவட்டம் : மதுரா
மாநிலம் : உத்திர பிரதேசம்
பாடியவர்கள் : பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டது.

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய

என்று திருப்பாவையில் ஆண்டாள் அகம் மகிழ வாயார வாழ்த்திய வடமதுரைத் தலத்தை பார்த்தால் உடல் தானாகச் சிலர்க்கும்.
 
திருவிழா :  கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை கிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதைக் கண்டுகளிப்பார்களாம். 
     
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
விலாசம் : அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா. 
   
தகவல் :  மதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு 11 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மதுராவில் கோயில் முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் ஒன்று தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும் கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருக்கும் சிற்பம். ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது. சன்னதிக்கு வெளியே தசாவதாரக் காட்சிகளை வரைந்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அங்கே அழகுறக் காட்சி தருகிறது.
 
ஸ்தலபெருமை :  கண்ணன் அவதரித்த ஜென்ம ஸ்தலம் தான் மதுரா. விரஜ பூமி எனப்படும் புண்ணிய பூமியின் மையம் தான் இந்த நகரம். கண்ணன் பிறந்தது மதுரா நகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரமாகும். ஆழ்வார்களில் பாடல் பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள் தான் இருக்கின்றன. மதுராவை அரசாளும் கண்ணனை மனம் உருகிச் சேவித்தால் செய்த பாவம் எல்லாம் தீ முன் பஞ்சு போல் வெந்து போகும் என்ற மேற்படி பொருள் பொதிந்த திருப்பாவைப் பாடல் வரிகள் மனத்தில் ஒலித்த படி இருந்தன. மதுரா கோயிலில் அருளும் மூலவரின் திருநாமம் கோவர்த்தநேசன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடனுறைபவர் சத்யபாமா தாயார். இத்தலத்தில் உள்ள விமானம் கோவர்த்தன விமானம். கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்து விட்டும் வரலாம். சற்று உள்ளே போனால் கல் கோட்டை போன்ற ஒரு பகுதி. வலது புறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் அங்கேயே தியானம் செய்கிறார்கள். அந்த மேடை தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள் அந்த மேடைக்கு உயரமான மேற்கூரை அமைத்திருக்கிறார்கள். அந்த திவ்ய இடத்தை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கோயில் கட்டடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டடம் தென்படுகிறது. விலாசமான படிகளின் வழியாக ஏறினால். அதற்குள் செல்லலாம். எதரே மிகப் பெரிய ஹால் அங்கே எக்கச்சக்கமான தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டு இருக்கின்றன. சன்னிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள் காணப்படுகின்றன.
மதுராவின் சரித்திரத்தை புரட்டினால் பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
 
ஸ்தல வரலாறு :  கிருஷ்ணன் பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் ஏழாவது கர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற குழந்தைகளை எல்லாம் கொன்றது. கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல் சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர் பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்த கோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது. அங்கு லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து. அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள கிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.
மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத் தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் ஒன்று விட்ட தாய்மாமன். ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமன் யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டது தான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு 1600 களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர் பெற்றதாகச் சொல்வோரும் உண்டு. மெதோரா என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி மதுவனம் எனப்பட்டது. பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு அதுவே இப்போது மதுரா ஆனது. இந்த இடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம்.


கருத்துகள் இல்லை: